privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!

கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!

-

கோவை-ஈஷாதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என ஒரு காலத்தில் கோவை அழைக்கப்பட்டது. சிறு, குறு தொழிற்சாலைகள் அந்தளவுக்கு இம்மாவட்டத்தில் நிறைந்திருந்தன. நிலமற்ற கூலி விவசாயிகளும், பண்ணையடிமைகளும் ஒருவேளை உணவுக்காக தஞ்சம் அடைந்தது இங்குதான்.

அப்படிப்பட்ட கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நாளொன்றுக்கு இரண்டு முதல் 10 மணி நேரங்கள் வரை மின்வெட்டு தேவைக்கேற்ப அமலாக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களாக இந்த எண்ணிக்கை 14 மணிநேரம் வரை அதிகரித்திருக்கிறது.

இதனால் கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்களது குடும்பங்கள், இப்போது வாழவழியின்றி தவிக்கின்றன.

அறிவிக்கப்படாத இந்த மின்வெட்டால் 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கோவை தொழிற்துறையினர், உற்பத்தியை இழந்துள்ளனர். சிறுவாணியில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் குடிநீரை, மின்தடையால் உரிய நேரத்தில் மக்களுக்கு பிரித்து அந்தந்த குடிநீர் தொட்டிகளில் ஏற்றி விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் அனைத்து மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் கேட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான் அதிர்ச்சியளிக்கும் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கைக்குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் மின்வெட்டால் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் 19.02.2008 முதல் வழங்கப்பட்டு வருகிறது. அரசு விதிமுறைகளை மீறி இது நடந்திருக்கிறது என்பதுதான் முக்கியம்.

தோழர் சட்டமையத்தின் சார்பில் வழக்கறிஞர் ந.பன்னீர் செல்வம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக பெற்றிருக்கிறார். ‘கோவை மாவட்டத்தில் தடையில்லா மின்சாரம் பெறும் நிறுவனம் எது?’ என்று அவர் கேட்ட கேள்விக்கு கோவை மின் பகிர்மான வட்ட பொதுத்தகவல் அலுவலர் அளித்திருக்கும் விவரம்தான் இது.

முதலில் அரசு விதிமுறை என்ன என்று பார்ப்போம். அப்போதுதான் அரசு விதிமுறைகளை மீறி எப்படி தடையில்லா மின்சாரத்தை ஈஷா யோக மையம் பெற முடிந்தது என்பது விளங்கும்.

மின்வாரிய சட்டதிட்ட விதிமுறைகளின் படி, குடிமக்களுக்கு பயன்படும் நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகம் தடையின்றி வழங்கப்படும். அதற்காக தனியாக மின் பாதை அமைக்கப்படும். இந்த மின் பாதை, குடி மக்கள் நலன் சார்ந்து இருப்பதால் இதிலிருந்து பிரித்து வணிக நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ, தனி அமைப்புகளுக்கோ மின் பாதை ஏற்படுத்தி மின் இணைப்பு வழங்க இயலாது – முடியாது – என்பது விதி.

இந்த அடிப்படையில்தான் சிறுவாணி நீரேற்ற மின் பாதை அமைக்கப்பட்டது. கோவை மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதல் நிலையில் இருப்பது சிறுவாணி குடிநீர் திட்டம். இதற்கு சீரநாயக்கன்பாளையம் மின் கோட்டத்தில் இருந்து சிறுவாணி நீரேற்றம் நிலையத்துக்கு தனியாக மின்பாதை அமைக்கப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த மின் இணைப்பில் இருந்து அரசு விதிமுறைகளை மீறி செம்மேடு பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அனைந்துள்ள ஈஷா யோக மையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் 130 கிலோ வாட் மின்சாரம் தடையற்ற முறையில் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சிறுவாணி மின் இணைப்பு பாதையில் இருந்து ஈஷா யோக மையத்துக்கு தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதையின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

2003ம் ஆண்டு ஈஷா யோக மையத்தின் மூலம் இதே போன்று சிறுவாணி நீரேற்ற சிறப்பு மின் பாதையில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க விண்ணப்பித்தபோது, மின் வாரியம் அதை நிராகரித்திருக்கிறது. அரசு விதிமுறைகளை மீறி மின் இணைப்பு வழங்க முடியாது என அழுத்தம்திருத்தமாக தெரிவித்திருக்கிறது.

ஆனால், 30.10.2007ல் மீண்டும் ஈஷா யோக மையம் விண்ணப்பம் செய்த போது, மின் வாரியம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கு சொல்லப்பட்ட காரணம், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஈஷா யோக மையம் மாறியிருக்கிறதாம்! அதென்ன சர்வதேச முக்கியத்துவம் என்று குறிப்பாக மின் வாரியம் எதையும் தெரிவிக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்கள், அரசு அலுவலகங்கள், சிறு – குறு தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள்… என அனைத்தை காட்டிலும் ஈஷா யோக மையம்தான் முக்கியம் என அரசு சொல்லாமல் சொல்கிறது. சோற்றுக்கு வழியின்றி இறந்தாலும் பரவாயில்லை, யோகநிலைதான் முக்கியம் என பறைசாற்றியிருக்கிறது. இதன் மூலம் பார்ப்பனிய, மனுதர்ம ஆட்சியே எங்கள் வழிமுறை என்பதை உணர்த்தியிருக்கிறது.

இனியும் இதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? கோவை பகுதி வாழ் மக்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்?

( ‘தீக்கதிர்’ 01.10.2012இல் வந்த செய்தியை வைத்து எழுதப்பட்டது)