privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடெங்கு: கொசுவா, அரசா?

டெங்கு: கொசுவா, அரசா?

-

டெங்கு கொசு

டெங்கு காய்ச்சல் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கையில், “எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல; பொதுவாக நூறில் ஒருவருக்கு சாதாரணமாக காய்ச்சல் இருக்கும்; தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் இருவராக உயர்ந்துள்ளது” எனக் கூறி உள்ளார் ஜெயலலிதா. தமிழகத்தில் தற்போது 59 பேருக்குத்தான் டெங்கு உள்ளது என்று திங்களன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கூறியுள்ளார். ஆனால் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த எண்ணிக்கையை 180 எனக் கூறி உள்ளார்.

அத்துடன் சென்னையிலுள்ள புகழ்பெற்ற எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையிலேயே டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தும் எலிசா சோதனை செய்வதற்கான வசதிகள் இல்லை என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இம்மருத்துவமனைக்கு வட மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரத்தின் கடப்பா போன்ற பகுதியில் இருந்தெல்லாம் டெங்கு காய்ச்சலுக்காக நோயாளிகள் வந்த வண்ணமுள்ளனர். இரத்த தட்டுகளின் எண்ணிக்கை 15,000 க்கும் கீழே போனால் ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும். பலருக்கு ஆக்சிஜன் தந்துதான் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கும். இந்த நிலைமையில் சென்னை தொழிலாளர் நல மருத்துவமனை, கே.கே. நகரில் உள்ள பெரும்பான்மை மருத்துவர்கள் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலைமை என்றால் கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. நாகர்கோவில் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை சரிதா தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் எடுத்தும் பயனில்லாமல் நேற்று இறந்து விட்டாள்.

க‌டந்த மே மாதம் துவங்கி கடையநல்லூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தற்போதுதான் இதற்காக அரசு ரூ.2.49 கோடி ஒதுக்கி உள்ளது. சென்னையில் இருவர் சாவு, காஞ்சிபுரத்தில் 1 (பவுசியா, வயது 7), மதுரை பகுதியில் 4 என இந்த சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அரசு நிர்வாக எந்திரத்தால் இதனைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. ஜெயலலிதா சொல்வது போல எதாவது ஒரு பகுதியில் குறைந்தபட்சம் 3 பேராவது டெங்குவால் பாதிக்கப்பட்ட பிறகுதான் அரசு அப்பகுதியின் சுகாதாரத்தை ஆய்வு செய்யுமாம். சென்னை போன்ற பெரு நகரங்களில் அவ்வப்போது பெய்யும் மழைநீர் இன்னமும் பல நாட்களுக்கு சாலைகளில் தேங்கிதான் நிற்கிறது.

மழைநீர் வடிகால் வாரியத்தின் வேலைகள் எதுவும் மழைக்காலத்தை எதிர்பார்த்து திட்டமிடப்பட்டதாகத் தெரியவில்லை. ம‌க்க‌ள் குடியிருப்புக‌ளில் இந்த‌ வேலைக‌ள் ப‌ழுதான‌ மெயின் லைன்க‌ளில் ப‌ராம‌ரிப்பு செய்யாம‌ல் இருப்ப‌தாக‌த்தான் தொட‌ருகிற‌து. ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை த‌னியார் அர‌சு கூட்டுக்கு ஒப்ப‌டைப்ப‌த‌ன் ஒரு அங்க‌மாக‌ அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில்  அடிப்ப‌டை ம‌ருந்துக‌ளும் இல்லை, க‌ழிவுப்பொருட்க‌ளை அக‌ற்றும் ப‌ணியும் போதுமான‌தாக‌ இல்லை.

டெங்கு-காய்ச்சல்-அறிகுறிகள்
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

த‌ற்போதைய‌ டெங்குவுக்கு கார‌ண‌மான‌ ஏடிஸ் கொசு ந‌ன்னீரில் வாழும்   த‌ன்மை உடைய‌து. ப‌க‌லில் க‌டிக்கும் என்றெல்லாம் சொன்னாலும் ம‌ருந்துக‌ள் போதுமான‌ அள‌வுக்கு ஆங்கில‌ ம‌ருத்துவ‌த்தில் இன்ன‌மும் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட‌வில்லை என்கிறார்க‌ள். மாற்று ம‌ருத்துவ‌மான‌ சித்த‌ ம‌ருத்துவ‌த்தில் இத‌ற்கும் ம‌ருந்து இருப்ப‌தாக‌ சித்த‌ ம‌ருத்துவ‌ர் சிவ‌ராம‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் கூறுவ‌தை அர‌சு க‌ண்டுகொள்ள‌வே இல்லை.

ஜெயா மாமியின் பேச்சை யார் கேட்கிறார்க‌ளோ இல்லையோ? ச‌ன் டிவி   ப‌க்காவாக‌ கேட்கிற‌து. த‌மிழ‌க‌த்தில் யாராவ‌து டெங்கு காய்ச்ச‌லுக்கு ப‌லியானால் நேற்றிலிருந்து அத‌னை ம‌ர்ம‌க் காய்ச்ச‌ல் என‌ செய்திக‌ளில் சொல்ல‌த் துவ‌ங்கி இருக்கிறார்க‌ள். ம‌க்க‌ள் டெங்கு பெய‌ரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்க‌ளாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?

108 ஆம்புலன்ஸ் சேவை தனியாருக்கு, காப்பீட்டுத் திட்டம் தனியாருக்கு என்று பொது சுகாதாரத் துறையில் தனியார் மயம் திட்டமிட்டு புகுத்தப்பட்ட பிறகு, அரசு மருத்துவமனைகள் வேண்டுமென்றே நலிவடைய விடப்படுகின்றன. போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் இல்லாத நிலையில் மக்கள் வேறுவழியின்றி தனியார் மருத்தவமனைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இறுதியில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பலர் பலியாக வேண்டியிருக்கிறது. டெங்கு கொசுவை விட இந்த தனியார் மயமும் அதைக் கட்டிக் காப்பாற்றும் அரசுமே குற்றவாளிகள் என்பதை உணரும் போதுதான் டெங்குவை நாம் ஒழிக்க முடியும்.