privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎன்ன பிடுங்குகின்றன போலீசும் உளவுத்துறையும்? ...

என்ன பிடுங்குகின்றன போலீசும் உளவுத்துறையும்?

-

போலீஸ்-உளவுத்துறை

சென்னை சீயோன் பள்ளிப் பேருந்திலிருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி கொல்லப்பட்ட கொடுமைக்கு எதிராக உழைக்கும் மக்கள் குமுறி எழுந்ததும், துறைசார்ந்த அதிகாரிகளும் போலீசும் உளவுத்துறையும் நீதித்துறையும் அவசரமாக நடவடிக்கைகளை எடுப்பதாகக் காட்டின. விருதுநகர் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோர விபத்தில் 39 தொழிலாளர்கள் பலியாகிப் போன கொடூரத்தைத் தொடர்ந்து, இந்த ஆலையின் முதலாளியைக் கைது  செய்து, முறைகேடுகளை விசாரிப்பதாக அதிகாரிகளும் போலீசும் பரபரப்பூட்டினர். இப்படி எங்காவது கொலைகள் விபத்துகள், மோசடிகள் நடந்தால்தான், மக்களுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான், அங்கே அதிகார வர்க்கமும், போலீசும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்குகின்றன.

ஆனால், சிவில் நிர்வாகம் மற்றும் போலீசுத்துறையின் கடமையே இத்தகைய முறைகேடுகளையும் மோசடிகளையும் கொள்ளையையும் கண்டறிந்து தடுப்பதுதான். சிவில் நிர்வாகத்தில் கண்காணிப்புத் துறையும், போலீசில் உளவுத்துறையும் இந்த நோக்கத்துக்காகவே உருவாக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கடமையை அறவே தட்டிக்கழித்துவிட்டு கண்ணுக்குத் தெரியும்படியான பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர்தான், மோசடிகள்-முறைகேடுகள் அம்பலமான பின்னர்தான், தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டவனைப் போல  அதிகார வர்க்கமும் போலீசும் நடவடிக்கைகள் எடுப்பதாகப் பரபரப்பூட்டுகின்றன.

போலீஸ்-உளவுத்துறை
கோடிகோடியாய் மோசடி: பணத்தைப் பறிகொடுத்தவர்கள் சுசி ஈமு கோழிப்பண்ணை நிறுவனத்தை முற்றுகையிட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதாக நாடகமாடும் போலீசு

ஈரோடு மாவட்டத்தில் ஈமு பண்ணையாளர்கள் சிறுவீத முதலீட்டாளர்களை மோசடி செது ஏறத்தாழ ரூ.300 கோடி அளவுக்கு சுருட்டும்வரை காத்திருந்து விட்டு, இப்போது ஏதோ அதிரடியாக நடவடிக்கை எடுப்பதைப் போல காட்டுகிறது தமிழக போலீசு. ஈமு கோழிப்பண்ணைத் திட்டம் என்பதே மோசடியானது என்று போலீசின் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்குத் தெரியாதா? போர்டு போட்டுக் கொண்டு பட்டப்பகலில் பகிரங்கமாக இக்கொள்ளை நடந்துவந்த போதிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிவில் நிர்வாகமும் போலீசும் உளவுத்துறையும் கண்டு கொள்ளாதது ஏன்? யாரும் புகார் கொடுக்காத போதிலும், சில்லறை வியாபாரிகள் தெருவில் கடை போடுவதை சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டு மாமூல் வசூலிக்கும் போலீசு, மோசடிப் பண்ணைகள் குறித்து புகார்கள் வராததால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதாகக் கதையளக்கிறது.

திருப்பூர், அவிநாசி சாலையில், பாசி போரெக்ஸ் டிரேடிங்” எனும் நிதி நிறுவனம், முதலீடுகளுக்கு கூடுதல் போனசும் வட்டியும் தருவதாக ஏமாற்றி ஆயிரம் கோடிக்கு மேல் வாரிச் சுருட்டியுள்ளது. தோற்றத்திலேயே மோசடி என்று அறிந்திருந்த போதிலும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை காலமும் ஆதாயமடைந்து விட்டு, இப்போது இந்நிறுவனத்துக்கு போலீசார் சீல் வைத்து திடீரென சூரத்தனம் காட்டுகின்றர். இம்மோசடி நிதிநிறுவன இயக்குநர்களில் ஒருவரான கமலவள்ளியைக் கடத்தியதோடு, இதர இயக்குனர்களை மிரட்டி 3 கோடி ரூபா வரை பணம் பறித்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார், டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகிய போலீசு அதிகாரிகள் கைதாகினர். ஆனாலும், இக்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது போலீசு. முன்பு பயந்து நடுங்கிக் கொண்டிருந்த இந்நிறுவனத்தின்  இயக்குநர்கள் இப்போது போலீசு அதிகாரிகளிடம் சிரித்துப் பேசிக் குலாவுவதாகப் பார்ப்பன தினமலரே கிசுகிசு செதியாக எழுதுகிறது. இந்நிதி நிறுவனத்தின் மோசடிக்கு எதிராக போலீசு தனது சூரத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே, சென்னை-கொளத்தூரில் அப்ரோ நிறுவனத்தின் இயக்குனராக அறிவித்துக் கொண்ட யேசுதாஸ் என்பவன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தருவதாக கோடிக்கணக்கில் நடத்திய மோசடி அம்பலமானது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மலைகளையே விழுங்கிய கிரானைட் கொள்ளை நீண்டகாலமாக நடந்துவந்துள்ள போதிலும், அக்கொள்ளையர்களின் சம்பளப் பட்டியலில் இருந்துவந்த போலீசும் சிவில் நிர்வாகமும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. கிரானைட் கொள்ளை பற்றி முந்தைய மாவட்ட ஆட்சியர் சகாயம்தான் வெளிப்படுத்தினார். அவருக்கு முன் பணியாற்றிய ஆட்சியர்களும் அதிகாரிகளும் என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்? போலீசும் உளவுத்துறையும் சிவில் நிர்வாகமும் இத்தனை காலமும் எதைப் புடுங்கிக் கொண்டிருந்தது? தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வருவாத்துறை அதிகாரிகள் முதல் கிராம அதிகாரி வரை அனைவருமே ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் அல்லக்கைகளாகவே இருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், உளவுத்துறை இன்னமும் எதை நோண்டிக் கொண்டிருக்கிறது?

போலீஸ்-உளவுத்துறை
முறைகேடுகளைத் தடுக்காமல் ஆதாயமடைந்த போலீசு மற்றும் சிவில் நிர்வாகத்தின் அலட்சியம்: 39 பேரை பலிகொண்டு பலரைப் படுகாயப்படுத்திய முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தின் கோரம்

விருதுநகர் – முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோரவிபத்தில் 39 பேர் பலியாகிப் போனார்களே,  வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரிகள், வருவாதுறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், போலீசு, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலையின் முறைகேடுகளுக்கு எதிராக இத்தனை காலமும் என்னதான் செது கொண்டிருந்தார்கள்? தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணம் வரன்முறைப்படுத்தப்பட்ட பின்னரும், அதை ஏற்க மறுத்து பகற்கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி முதலாளிகளைக் கைது செது தண்டிக்காமல் சிவில் நிர்வாகமும் போலீசும் உளவுத்துறையும் எதைக் கிழித்துக் கொண்டிருக்கிறது? கடந்த ஆட்சியில் ஆற்றுப் படுகைகளில் நடந்து வந்த மணற்கொள்ளை இப்போது குளம், ஏரி, கண்மாய் – என விரிவடைந்துவிட்ட போதிலும் மணற்கொள்ளை மாஃபியாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிவில் நிர்வாகமும் போலீசும் என்னதான் செய்கிறது?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, நிர்வாகத்திலும் போலீசுத் துறையிலும் அரசியல் தலையீடு இருக்காது; அத்துறைகள் சுதந்திரமாகச் செயல்படும்” என்று பார்ப்பன பத்திரிகைகள் பிரமையூட்டின. ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார் என்றவுடனேயே போலீசுத் துறை தானாகவே மும்முரத்துடன் செயல்படத் தொடங்கிவிட்டது” என்று புளுகினார் துக்ளக் சோ. ஆனால், பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவின் ஆட்சியைத் தமது சோந்த ஆட்சியாகவே கருதிக்கொண்டு கேள்விமுறையின்றிக் கொட்டமடிக்கிறது போலீசு.

தனது கடமைகளை – குற்றங்கள், மோசடிகள், சமூக விரோதச் செயல்கள், முறைகேடுகளைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கைக் காப்பது – எனத் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அன்றாடப் பணிகளைக்கூடச் செயாமல் அலட்சியம் காட்டுவதோடு, அப்பாவி மக்கள் மீது தமிழக போலீசு பாய்ந்து குதறிக் கொண்டிருக்கிறது. கண்ணெதிரே நடக்கும் பகற்கொள்ளையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவது, கொள்ளையும் மோசடியும் அம்பலப்படும்போது, ஏதோ இப்போதுதான் தெரியவந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் சூரத்தனம் காட்டுவது, பின்னர் வழக்குகளை நீர்த்துப் போகச் செவது, பிற மாநிலங்களுக்குக் குற்றவாளியைத் தேடிச் செல்வதாகக் கணக்குக் காட்டி இன்பச் சுற்றுலா சென்று வருவது, மறுபுறம் சாதாரண சிறு குற்றங்களை பூதாகரமானதாக்கி, அதில் குற்றவாளிகளைப் பிடித்து விட்டதாக  ஊடகங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வது என்பதாகவே அதன் செயல்பாடுகள் உள்ளன.

தமிழகப் போலீசின் உளவுத்துறையானது எதிர்க்கட்சியினரை உளவுபார்த்து, அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் வேலையையும், ஆளுங்கட்சியின் அமைச்சர்களையும் பிரமுகர்களையும் உளவுபார்த்து மேலிடத்துக்குத் தகவல் சோல்வதையும்தான் முக்கியமாகச் செய்து கொண்டிருக்கிறது. இதுதான் அதற்கு ஒதுக்கப்பட்ட வேலையா? ஜெயா – சசியின் ஊடல்-கூடல் நாடகங்களில் போலீசு உளவுத்துறை கேடாகப் பயன்படுத்தப்பட்டதோடு, சசிகலா உறவினர்களிடமிருந்து இலஞ்ச -ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் குவிக்கப்பட்ட சொத்துகள்-செல்வங்களைக் கைப்பற்றுவதற்காகவும், அவர்களுடன் கட்சிக்காரர்கள்  கொண்டுள்ள இரகசிய உறவுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் பயன்படுத்தப்பட்டது.

இந்த நாடகத்தில், நடராஜன்(சசிகலா) மீது புகார் கொடுக்கப்பட்டதாகக் கூறி, பின்னர் அப்புகார்கள் திரும்பப் பெறப்பட்டன. புகார் கொடுத்தவர்கள் யார்? அந்தப் புகார் உண்மையானதா, இல்லையா என்று போலீசு முதல்நிலை விசாரணைகூட நடத்தவில்லை. ராவணன், திவாகரன், மிடாஸ் மோகன், நடராஜன் என்று பல புள்ளிகளின் மீது பாந்த வழக்குகள், சசிகலா மறுவீடு நுழைந்ததும் அப்படியே படுத்துக் கொண்டு விட்டன. எதற்காக இந்த வழக்குகள் பதியப்பட்டன, ஏன் இப்போது மந்தகதியில் உள்ளன என்பதெல்லாம் ஜெயலலிதாவுக்கும் உளவுத்துறைக்குமே வெளிச்சம்.

ஆளும் பாசிச ஜெயா கும்பலின் விசுவாச ஏவல்நாயாக இருப்பதோடு, கண்ணெதிரே கொள்ளையும் மோசடிகளும் நடந்த போதிலும் கண்டுகொள்ளாத போலீசும் உளவுத்துறையும், தாங்கள் துடிப்பாக செயல்படுவதாகக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பயங்கரவாதப் பீதியூட்டி ஒடுக்கும் வேலையை மட்டும் முறையாகச் செதுவருகிறது.

போலீஸ்-உளவுத்துறை
துடிப்பாகச் செயல்படுவதாக காட்டிக்கொள்ள போலீசு கிளப்பிய பயங்கரவாதப் பீதி : சென்னை-குன்றத்தூரில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளாகச் சித்தரித்துக் கைது செய்யப்பட்ட மக்கள் குடியரசுக் கட்சியினர்

இணையத்தைத் திறந்தால் குன்னூர் இராணுவக் கல்லூரி மற்றும் அணு மின் நிலையங்களின் படங்கள்  எளிதாகக் கிடைக்கும் நிலையில், அவற்றைப் புகைப்படம் எடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்த முயன்றதாகக்கூறி, வெங்காய வியாபாரியான தமீம் அன்சாரி என்ற இளைஞரை, கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். முஸ்லிம்கள் நாட்டுப்பற்றில்லாதவர்கள், பாகிஸ்தானின் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என்றெல்லாம் மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருப்பதால், ஒரே நாளில் தமீம் அன்சாரியைத் தீவிரவாதியாக்கி விட்டது தமிழக போலீசு.

கடந்த அக்டோபர் மாதத்தில், வழக்குரைஞர்களும் கல்வியாளர்களும் மாணவர்களும் கொண்ட உண்மையறியும் குழுவினர் 11 பேர்  கூடங்குளத்துக்குச் சென்றபோது, மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டி போலீசு கைது செய்ததோடு, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சதிகாரர்களாகவும் அவதூறு செய்தது. இதேபோல, கடந்த மாதத்தில் சென்னை புறநகர்ப் பகுதியான குன்றத்தூரிலுள்ள ஒரு பள்ளியில் கூடி விவாதித்துக் கொண்டிருந்த மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 13 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செயப்பட்டனர். முன்பு மாவோயிஸ்டு கட்சியில் இருந்த அவர்கள், அதிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பே விலகிவிட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ள போதிலும், அவர்களைப் பயங்கரவாதிகளாக போலீசும் ஊடகங்களும் அவதூறு செய்தன.

தமிழகத்தில் மின்வெட்டால் அவதிப்படும் உழைக்கும் மக்கள், மின்சாரம் கேட்டுப் போராடினால், மின்துறை அதிகாரிகள் வருவதில்லை, போலீசு வருகிறது. போராட்டத்தைச் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகக் காட்டி,  தடியடி நடத்தி மக்களை விரட்டுகிறது. இதேபோல குடிநீர், துப்புரவு, கல்வி வியாபாரிகளின் பகற்கொள்ளை, மணற்கொள்ளை முதலானவற்றுக்கு எதிராக மக்கள் போராடினால், துறைசார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. போலீசுதான் வருகிறது.

சீயோன் பள்ளிப் பேருந்திலிருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி கொல்லப்பட்டதைப் போல எங்காவது கொலைகள் விழுந்தால்தான் சிவில் நிர்வாகமும் போலீசும் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்கின்றனவே தவிர, மற்ற நேரங்களில் அவை வேறு எதையோ புடுங்கும் வேலைகளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதை மக்களுக்கு உணர்த்தவோ, போராடவோ ஓட்டுக்கட்சிகளும் தயாரில்லை. இதனால் மாஃபியாக்களும் கொள்ளையர்களும் கொட்டமடிப்பதும், அதிகாரவர்க்கமும் போலீசும் உளவுத்துறையும் இக்கொள்ளையர்களின் கூட்டாளிகளாகி விசுவாச சேவை செய்வதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் ஜெயலலிதா ஆட்சியின் நிர்வாகத் திறன்! தமிழக மக்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகியுள்ள இத்தகைய கேடுகெட்ட ஆட்சியை போலீசைக் கொண்டுதான் காத்துக் கொள்ள முடியும் என்பதால், தமிழக போலீசுக்கு தீனிக்கு மேல் தீனி போட்டு பங்களா நாய் போல வளர்த்து வருகிறது பாசிச ஜெயா கும்பல்.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
______________________________________________________

  1. ஆளுங்கட்சிக்கு கை அமுக்குவது, காலை நக்குவது, மக்களை அடக்கி ஒடுக்குவது போன்ற சீரிய பணிகளை செவ்வென செய்து கொண்டு இருக்கின்றன.

    • வினவு கும்பலை இம்புட்டு நாலு விட்டு வேச்சுதே?அதான் அவர்கள் செய்த மிக்கபெரிய தவறு

  2. அரசு நடத்தும் பல்வேறு துறைகள் நட்டம்,ரொம்ப கசுட்டம்,பணவீக்கம் என்றெல்லாம் சொல்லும் போது இந்த தமிழக காவல் துறையானது மிகசிறப்பாக செயல்படுகிறதா? என்ன? இதனை மூடிவிட்டு தனியார்[உள்] முதலாளிக்கோ அல்லது வெளிநாட்டு முதலாளிக்கோ வாடகைக்கு விட வேண்டியதுதானே? எதிர்காலத்தில் நாசா மாய்ப்போகிற ரேடார்,மொபைய்ல்,சாட்டிலைட்டு மூலமாக வேவு பார்த்துடலாம்?தான?

  3. கேள்விகள் பல, பதில் ஒன்று. அது கொள்ளை அடித்து கொண்டு, கொள்ளை அடிபவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருந்தது.

  4. கவுன்டமணி படத்துல வரமாதிரி வெளிநாட்டு அதிபர் வந்த எங்கயோ தின்னைல உக்காந்திருக் ஆட்கள கைது பண்னுறதுக்கு தான் உளவுத்துறை எல்லாம் இருக்கு. இந்த போலிஸ் எப்பவுமே அதிகாரவர்கத்தின் குண்டாந்தடிகளாக தான் செயல்பட்டுவருகிறது.சட்டம் ஒழுங்கு எல்லாம் போறாடும் மக்களை ஒடுக்க பயன்படும் முகமூடி மட்டும் தான்.இந்த லட்சனத்துல இன்னும் 6000 அ.தி.மு.க இலை(ளை)ஞர் பாசறை ஆட்களுக்கு சிறப்பு இளைஞர் காவல் பணி வழங்கப்பட இருக்கிறது அரசு.

  5. “சில்லறை வியாபாரிகள் தெருவில் கடை போடுவதை சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டு மாமூல் வசூலிக்கும் போலீசு,”

    என்ன இப்படிப் போட்டுத் தாக்கி விட்டீர்கள் எங்கள் போ(பூ)லிஸை. தேனெடுத்தவன் புறங்கையை நக்குவதில்லையா. அதைப் போல் பெட்டி பெட்டியாக வாங்கினாலும் பூ வாங்குவதற்கு சில்லறை வேண்டுமல்லவா?

  6. அரசு,தனியார் வேலைவாய்ப்புக்கு வேண்டியவர்,பணம் தருபவர்,நம் கட்சிக்காரர்.என்ற உயரியகோட்பாடுகள் இந்தியாவில் இருப்பது போல தமிழ் நாட்டில் காவலர் தேர்வும் தகுதியற்றவர்,பொது நலன் இல்லாதவர்,படிப்பறிவுவற்றவர்,உடலமைப்பற்றவர்,இவர்களைக்கொண்டு கட்டமைத்தால்? தான் நாளை வரும் மக்கள் எழுச்சியை மந்திரி&தந்திரிகள்,பணக்காரர்கள்,சுவாமியார்கள்,சமூகவிரோத கும்பல்களும் அவர்கள்வசதிக்கு,ஏய்ப்புக்கு உகந்தபடிக்கு நாட்டைசீரழித்துவிட்டு.பெ.மணியரசன் கட்சி,வை கொ கட்சி,சீமான் கட்சி,இன்னும் பல உணர்வு உள்ளவர்களை தீவிரவாதி,பயங்கரவாதி,என நக்கல் செய்து இவ்வகையான மாநில+மத்திய குண்டர்களை ஏவி கொல்வார்கள் எச்சரிக்கை இனிவரும் காலங்களில்…

  7. சில கேள்விகள் மட்டறுக்காமல் பதில் அளிக்க முனையுங்கள்.
    -உங்கள் கொள்கை என்ன?
    -அனைவரையும் வசை பாடுவதன் மூலம் சமூக மாற்றம் வந்து விடும் என்று நம்புரீங்களா?
    -நீங்கள் சிறந்த நாடு என தற்போது கருதுவது எந்த நாட்டை?
    -நீங்கள் சர்வதேசியவாதிகளா?அல்லது ஸ்டாலின் போல ஒரு நாட்டில் சோசியலிசம் வேண்டும் என நினைப்பவர்களா?
    -உங்கள் இலக்கு என்ன?
    பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்

    • உண்மையாகவெ நீங்கள் பதில் தெரிந்துகொள்வதற்காக கேட்பதாக இருந்தால் யேன்

      ‘வினவு கும்பலை இம்புட்டு நாலு விட்டு வேச்சுதே?அதான் அவர்கள் செய்த மிக்கபெரிய தவறு’

      போன்ற கமன்ட் எல்லாம் வருது

    • -மார்க்சிய லெனினியம்
      -வசை என நீங்கள் கருதும் வார்த்தைகளை டெலிட் பண்ணி விட்டு படித்துப் பாருங்கள். அப்போது புரியாமல் போனால் அது பற்றி அது ஏன் என பரிசீலித்துப் பாருங்கள்.
      -சிறந்த நாடு என கருதும் நாடு பற்றி ஏன் கேட்கிறீர்கள். அந்த சிறந்த நாடு போல மாறினால் போதும் என்பது தான் உங்களது இலக்கா?
      -பல நாடுகளிலும் ஓரே நேரத்தில் சோசலிசத்தை கொண்டு வந்தால் நல்லது தான். ஆனால் அதற்கு ஒரு சயின்டிபிக் பிளானைத் தர முடியுமானால் வரவேற்பேன்
      -இலக்கு என்னங்க•. சுரண்டப்படும் ஒடுக்கப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்து முன்னர் இருந்த இயல்பான வாழ்க்கைக்கு ஆனால் முன்னேறிய வாழ்க்கைக்கு போக வழி செய்ய வேண்டும். அதோட இலக்கு முடிந்து விடாது. இலக்கு முடிந்து விட்டால் நாம் ஏன் தொடர்ந்து இருக்கிறோம்.

      • சரி ஞானேஸ்வரி ரயிலை குண்டு வைத்து தகர்த்து பல நூறு மக்களை கொன்றது போல பல சம்பவங்களில் பல அப்பாவி மக்கள் பலி ஆகியுள்ளனர்.அப்பாவி பழங்குடிகளை பலி கொடுக்கும் பாஸிச இந்திய என நீங்கள் சொல்லும் அதே வேளையில் நீங்களும் அதே போல பல கொலைகளுக்கு காரணமாகி இருக்கிறீர்கள் என்பது நகைமுரண்.கொன்றுவிட்டு மன்னிப்பு கேட்டால் ஆச்சா?சல்மான் கானுக்கு தண்டனை கொடு அவன் அப்பாவி மக்களை கொன்றான் என்கிறீர்கள் உடன்படுகிறேன்..அதே வேளையில் பல அப்பாவி மக்களை கொன்ற உங்களுக்கு தண்டனை என்ன?நீங்கள் தண்டனைக்கு ஆளாக மறுத்து அதே நேரம் பிறருக்கு தண்டனை கொடு என சொல்லும் தார்மீக உரிமை எப்படி வரும்?

      • வசை என நீங்கள் கருதும் வார்த்தைகளை டெலிட் பண்ணி விட்டு படித்துப் பாருங்கள்///
        .
        .
        பொறுக்கி ,காலை நக்குகிறான்,அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!
        இதெல்லாம் வசை அல்லாமல் வேறென்ன?விமர்சிக்கலாம் நாகரீகமான வார்த்தைகளில்…இப்படி வரம்பு மீறிய வார்த்தைகளை வசை என்று சொல்லாமல் புரட்சி என்று சொல்லவா முடியும்?

      • அந்த சிறந்த நாடு போல மாறினால் போதும் என்பது தான் உங்களது இலக்கா?///…நீங்கள் பழங்கால சோசியலிச சோவியத் மற்றும் சீனாவை இலக்காக கொண்டுதானே செயல்படுகிறீர்கள்?

  8. e- nanbargale thayavu seithu vinavai ungalathu mudivaga etru manathil aala etra vendam..ingum ella idam pondru berangal iruppathaga kelvipatten..
    (sila vidayangalukku Ref , citation vendame..)
    enave elithaga moolai salaivayil aatpaduthum intha kumbalai (kolgaivatha payangaravathigalai) nambi emara vendam enbathu enathu karuthu…

    matrapadi enakku socialism pidikkum..

    1)sila vidayangalil ma ka ee ka vin indraya ilakku sc/st candidates…[supports even they mistake]

    2)aaramba kalangalil ivargal yokiyavangalaga irunthathaga kelvi

    3)ma ka ee ka theervaga solvathu poorattam (in the sense: vanmurai)
    entha oru nadavadikkayum munname irukkum nilayai seerkulaithuvida koodathu…
    aanal udanadi theervaga sollum porattam
    aanal athan pin ???

    5)ulagil ondru americavin ennaikana sathamana payangaravatham matrondru russiavin socialism, communisa, chinavin “mao” ism payangaravatham…ivargalukku pilaippe ulaga makkalai 1980 muthal 1990 varai iruthuruvamaga pirithu vaipathu…ippozhuthu 3 aga pirippathu [Russia,US,China]

    en tamilnatill podhuvudaimai karuthukkale thondravillaya…?

    intha kolkaivatham makkalukku vidivai thedi muthalil aarambikkapattalum pinnar athan vadivam pira nattavargalathu surandalai aatharikkavum,ottu porukkigalaga maravum than matramadainthullathu…

    …nan ketkindren ma ka ee ka vidapadiyaga irunthu sathithathu than enna…?
    24/7 pulambal , vasai ,thittal…evanavathu sikkinal avanai sinna pinnamaakuvathu…

    evanukkum 50% nalla putthiyum 50%ketta putthiyum undu…
    romba nallavargalaga irukka muyarchithal70% nallavanai irukkalam…atharkumel iyalave iyalathu…

    ivargal focus light adipathu ellam antha 30% mel than…

    ivargalin varthai pirayogangale mosamaga ullathu …appadi irukka ivargal yar karuthu pathivu seibavargalukku arivurutha…?

    • @shiva
      என் அறிவு கண்ணை திரந்து விட்டீர்கள்
      நான் கூட வினவின் கட்டுரைஐ படித்து கெட்டு போகப் பார்த்தேன்.

      அப்படியே

      //பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தமது மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்கு நம் மக்களைச் சோதனை எலிகளாக்கும் விசயம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலமாகி வந்தது. தற்போது உலகமயக் கொள்கையின் கீழ் இந்த அயோக்கியத்தனம் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டது.//
      //“எய்ம்ஸ்” மருத்துவமனையில் 49 பச்சிளங்குழந்தைகள் பலியான போதும் இச்சோதனைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தன.//
      பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!
      https://www.vinavu.com/2012/08/14/pharma-nazi/

      போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களும் 50 சதவிகித நல்லவர்கள் என்ற ஊங்களின் தத்துவங்களில் வருவார்களா?

      அது மட்டும் தெளிவு படுத்தி விட்டால் நாங்க்ளும் யோசிப்போம்.

  9. nagaraj thozhare …

    neengal koorum nazi kumbal manitha ragathil saeratha vilangugalae…

    matrapadi athuvum (athavathu keelmatta matra uruppinargalal pala baerangal nadappathe kidayaathu endru uruthiyaga koora iyaluma…?

  10. nagaraj thozhare … neengal koorum nazi kumbal manitha ragathil saeratha vilangugalae… matrapadi athuvum (athavathu keelmatta matra uruppinargalal pala baerangal nadappathe kidayaathu endru uruthiyaga koora iyaluma…?

    • சோசலிசம் பிடிக்கும் என்று சொல்லுரீங்க, நீங்க மட்டுமல்ல எல்லாரும் அதை தான் சொல்லுராங்க.
      ஆனால் எப்படி சோசலிசமாக மாற்றவது? அதற்கு என்ன செய்வது?
      அதில் அவருடைய பங்கு என்ன? என்பது தான் கேள்வி….

      சரி நீங்கள் சரியான வழிமுறை கொடுத்தால் இங்கு யாரும் ஏற்றுகொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லையே!

      பின்பு, கீழ்தரமான மனிதவிரோத செயலில் ஈடுபட்டவர்களை மனிதனாக கூட ஏற்கமாட்டேன் என்று சொல்லுரீங்க, அவர்களை ‘பொறுக்கிகள்’ என்று சொன்னால் தவறு என்று ஏன் சொல்லுரீங்க?

      இந்த போலீஸ் நாய்கள் செய்யும் அட்டூழிங்களை பார்த்து ‘பொறுக்கிகள்’ என்று சொல்லாமல் ‘மகாத்மாக்கள்’ என்று சொல்லலாமா?

      வினவு, நீங்கள் சொல்வதும் தப்பு. ‘பிடுங்கிகள் ‘என்று ஏன் சொல்லூரீங்க?
      எங்கள் மக்கள் சொல்வதை போல் சொல்லுங்கள் ”புடிங்கிகள்” என்று.
      இன்னும் மக்கள் போலீஸ்களை எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்று சொன்னால் தணிக்கைதான் செய்ய வேண்டும்.

  11. The function of police in Tamilnadu is not to protect civilians but to create fear in civilians so they will be always in terror. Tamilnadu people will be slaves forever. To keep the people in fear and make them slaves is what the British created police Force in India

Leave a Reply to Mamta பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க