புது வீடு வாங்க மனைவியை கொன்ற சௌத்ரி!

18
சித்தார்த் - ருச்சி
சித்தார்த் – ருச்சி

28 வயதான தன் மனைவி ருச்சி சௌத்ரியை அவளுடைய பெற்றோர் மற்றும் அவள் பெற்ற குழந்தை கண்முன்னே கத்தியால் குத்தி கொன்று இருக்கிறான் 32 வயதான சித்தார்த் சௌத்ரி. இது நடந்தது ஐ.டி துறையின் தலைநகரமான பெங்களூரில்.

தில்லியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள், கணிசமாக சம்பாதிப்பவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகின்றன. சித்தார்த் சில ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து இருக்கிறான். இறுதியில் இருவரும் பெங்களூரில் செட்டில் ஆகி உள்ளனர். சித்தார்த் அக்செஞ்சர் நிறுவனத்திலும் ருச்சி போட்டான் இன்போடெக் என்ற நிறுவனத்திலும் வேலை பார்த்திருக்கின்றனர்.

திருமணம் ஆன சில மாதங்களுக்குள்ளாகவே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஆரம்பித்திருக்கின்றன. காதல் வற்றிப் போய் விட்ட திருமண வாழ்க்கையில் கடந்த ஒரு ஆண்டாக சித்தார்த்துடனான உறவுகளை ருச்சி மறுக்க ஆரம்பித்திருக்கிறாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தார்த் மட்டும் டெல்லி குர்கானுக்கு வேலை மாற்றி போய் விட்டிருக்கிறான். பெங்களூரில் அவர்கள் குழந்தையுடன் வசித்த ருச்சியுடன் அவளது பெற்றோரும் தங்கியிருக்கின்றனர்.

கணவனும் மனைவியும் பிரிந்து இருந்தாலும், செல்போன் மூலம் சண்டை தொடர்ந்திருக்கிறது. சென்ற வாரம் தில்லியில் புதிதாக வீடு வாங்க விரும்பிய சித்தார்த், அதற்காக கடன் எடுத்து தருமாறு தொலைபேசி மூலம் ருச்சியை வற்புறுத்தியிருக்கிறான். ருச்சி அதை மறுத்திருக்கிறாள். இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை இரவு இரண்டு பேரும் தொலைபேசியில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக ருச்சியின் பெற்றோர் சொல்கின்றனர்.

கோபம் முற்றிய சித்தார்த் திங்கள் கிழமை டெல்லியில் இருந்து விமானத்தில் பயணித்து பெங்களூர் வீடு வந்து சேர்ந்து இருக்கிறான். ருச்சியை வலுக்கட்டாயமாக சண்டை இழுத்து, தடுக்க முற்பட்ட அவள் பெற்றோரையும், குழந்தையும் தள்ளிவிட்டு, கத்தியினால் ஆத்திரம் தீரும்வரை குத்தியிருக்கிறான்.

ருச்சி அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறாள். தன் கை மணிக்கட்டுகளை அறுத்துக் கொண்ட சித்தார்த் தன் மனைவியின் உயிரற்ற உடலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். குர்கானிலேயே கூர்மையான கத்தியை அவன் வாங்கியதாகவும் அதனால் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் போலீசார் சொல்கின்றனர்.

இப்படி ஒரு கொலையை ஐ.டி துறையில் பணியாற்றும், படித்த இளைஞன் செய்து உள்ளது ஆச்சரியமாக இருக்கலாம்.

ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு பெருமளவு சம்பளம் கிடைப்பதால்  நினைத்த பொருட்களை வாங்க முடிகிறது. ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது. ‘எது தேவையானது, எது தேவை அற்றது’ என்று பார்க்கும் கண்ணோட்டம் முற்றிலும் அகன்று ‘எனக்கு வேண்டும்’ என்ற விருப்பம் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

நினைத்ததை நினைத்த நொடியில் வாங்கமுடியும் என்ற எண்ணமே ஒரு வகை வெறியாக மாறுகிறது. ‘தமது விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் உடனேயே கிடைத்து விட வேண்டும்’ என்ற கருத்தும் ‘அதற்குத் தடையாக நிற்கும் யாரும் தனக்கு எதிரி’ என்ற எண்ணமும் வேரூன்றுகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் ஆகி விடுகிறது. பொறுப்புகள் அதிகமாகின்றன. ‘சொந்த வீடு வாங்கியாச்சா? யாரு பில்டர்?’ என்ற கேள்விக்கு சொல்லும் பதிலில் தமது ஸ்டேட்டஸை வரையறுத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது. ‘கார் இருக்கா? என்ன மாடல்?’ என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்கான ஓட்டம் ஆரம்பிக்கிறது.

சொந்த வீடு, அதுவும் உயர் நடுத்தர வர்க்க தரத்திலான வீடு, சொந்த கார், அதுவும் தனிச்சிறப்பான கார் என்று வாங்காமல் இருந்தால் உழைத்து முன்னேற வழி தெரியாதவன், பொறுப்புகளை சுமக்கும் தன்மை அற்றவன் என்ற இமேஜ் உருவாகி விடும். எப்படியும் கடன்பட்டாவது ஒரு கார், ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை ஊன்றப்படுகிறது.

‘எப்படியாவது வீடு வாங்கிவிட வேண்டும்’ என்று நினைத்து ருச்சியை கடன் வாங்கித் தர சித்தார்த் கேட்டிருக்கிறான். அதுவும் சண்டை போட்டு பிரிந்திருக்கும் நிலையிலும் மனைவி என்பவள் தனது சொத்து என்ற நோக்கில் அவளிடம் பணம் கேட்டிருக்கிறான். அதை ருச்சி மறுத்தது, அவனது ஏமாற்றங்களின் மீது கடைசித் துரும்பாக பழி வாங்கும் எண்ணத்தை விதைத்திருக்கிறது.

காதலித்து நடந்த திருமணம் இப்படி முடிந்துவிட்டதே என்று யோசிப்பவர்க்கு, ஐடி காதல் என்பது மனம், கொள்கை பொருத்தத்தின் அடிப்படையில் அரிதாகவே அமைகிறது என்பது நிதர்சனம். ஒவ்வொருவரின் சம்பாத்தியம், சேர்த்து வைத்துள்ள பொருட்கள், பரம்பரைச் சொத்து இவற்றின் அடிப்படையில் திருமண உறவுகள் முடிவெடுக்கப்படுகின்றன.

சண்டை என்று வந்தாலும், அதை விலக்கி தீர்த்துக் கொள்வதும், யாரிடம் தவறு நடந்துள்ளது என்பதை பேசி சரி செய்வதும், மன்னிப்பை மனதார கேட்பதும் ஆகிய நடைமுறைகள் பல கணவன் மனைவியரிடையே இருப்பதில்லை. பேருக்காக, ஊருக்காக, காத்திருக்கும் சினிமா டிக்கெட், போக வேண்டிய மால்கள், சேர்ந்து வாங்க வேண்டிய பொருட்களுக்காக, சுற்ற வேண்டிய ஊருக்காக, அன்றைய சண்டையை அப்படியே ஒதுக்கி, பிரச்சனைகளை புதைத்து விட்டு அடுத்த நுகர்வை நோக்கி போகிறார்கள். தீர்க்கப்படாத இந்த கோபங்கள் நாள்பட நாள்பட பகைமை வலுவாக வளர்கிறது.

இரு தரப்புமே பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் போது ‘எதற்காக விட்டுக் கொடுப்பது’ என்ற அடிப்படையில் முறுக்கிக் கொள்கின்றனர். இரு தரப்பு பெற்றோர்களும் மகனுக்கும் மகளுக்கும் தூபம் போட்டு தமது நலன்களை வலியுறுத்துவதும் நடக்கிறது.

என்னதான் பெண் ஐ.டி துறையில் ஆணுக்கு இணையாக பணம் சம்பாதித்தாலும் அவளுக்கு சுதந்திரம் என்பது வேலைக்குபோய் சம்பாதிப்பதோடு முடிந்து விடுகிறது. மனைவியின் ஏடிஎம் கார்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கணவர்களும் உண்டு.

சம்பாதிக்கும் பெண்ணின் சம்பாத்தியத்திற்கு கணவன் ஒரு பக்கம் உரிமை கொண்டாடினால், மற்றொரு புறம் அவளைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து, சம்பாதிக்க அனுப்பிய பெற்றோர் இன்று அந்த லட்சக்கணக்கான பணமும் எவனோ ஒருத்தன் கைக்கு போகிறதே என்று அங்கலாய்ப்பதும் நடக்கிறது. ஐ.டி வேலைக்கு போகும் பெணின் பெற்றோர்கள், ஏ.டி.எம். கார்டு அவள் கணவரிடம் இருப்பதை விரும்புவதும் இல்லை அதற்காக மகளை இடித்துரைக்காமல் விடுவதும் இல்லை.

கணவன், மனைவி ஷிப்ட் முறையில் வேலைக்குப் போகும் சூழலில் வீட்டில் அவர்கள் பெற்றோர்களை கொண்டு வந்து வைத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதும் பெருகியுள்ளது. தங்கள் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் பிள்ளைகளுடன் வார இறுதி சுற்றுலாக்கள், கடைத்தெரு உலாக்கள் போவதற்கும் அவர்கள் தயங்குவது இல்லை.

கணவன் மனைவிக்கிடையே சண்டை வரும் போது பெற்றோர்கள் தலையீட்டால் வெறுப்பு பலமடங்கு பெருகுகிறது.

இன்னோரு கோணத்தில் நிறுவனத்தில் தனது வேலையை காப்பாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு மேலாளரிடம் அடிமைகளாக குழையும் நபர்கள், வெளியுலகில் மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென வேண்டுகின்றனர். ஹோட்டலில் தோசை நடுவில் பிய்ந்திருந்தால் பரிமாறுபவரிடம் கோபப்படுவது, கார் பார்க் செய்ய இடமில்லா விட்டால் செக்யூரிட்டியை கோபிப்பது போன்றவை உதாரணங்கள். வீட்டில் மனைவியிடமும் அடிமை போன்ற பணிவை எதிர்பார்க்கிறார்கள்.

இந்தச் சூழல்களின் வெளிப்பாடுதான் திட்டம் தீட்டி, கத்தி வாங்கி வந்து தன் மனைவியை 11 முறை குத்தி கொலை செய்த சித்தார்த்தின் மனோபாவம். உறவுகளின் முக்கியத்துவத்தை உணராமல் ஒரு விலங்கைப் போல தன் குழந்தையின் கண்முன்னே, அதன் தாயை கொல்லும் அளவுக்கு கொடுமை வாய்ந்தவனாக உருவாக்கி இருக்கிறது அவனுடைய சமூகச் சூழல்.

படிக்க: