நிறைய இரவுகள்
கடந்துவிட்டன இதுவரையில்
ஒரு சில இரவுகள் மட்டும்
மறக்க முடியாதவைகளாய்…
அப்படி ஒரு இரவுதான் அதுவும்
தூக்கம் வரவில்லை.
கண்களை மூடினால்
நீண்ட… இருட்டு.
மகிழ்ச்சி நிரம்பி வழியும்போது
தூக்கம் வருவது கடினம்தான்.
நான்தான்
முதலில் பார்த்தது
புது நோட்டுக்கள்
புதுப் புத்தகங்களை சுமந்துகொண்டு
சாயங்காலம் பள்ளிக்குள் நுழைந்த
பழைய லாரி ஒன்றை.
எப்படியும் வந்துவிடும்
புது நோட்டுக்களும்
புதுப் புத்தகங்களும்
நாளை என் கையில்.
வாங்கியவுடன்
முதல் பக்கங்களை பிரித்து
‘மோந்து’ பார்க்க வேண்டும்
அவ்வளவு வாசமாய் இருக்கும்.
சலவைக்கு போட்ட
சேலையொன்றை
எப்பொழுதாவது எடுத்து கட்டும்
அம்மாவிடமிருந்து
வருமே ஒரு வாசம்…
அதுபோல.
முடிந்தவரை
இந்த வருடம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
சித்திரத்தை போல
செதுக்க வேண்டும் புதுநோட்டில்.
ஆசிரியர் வாங்கி பார்த்தால்
ஆச்சரியத்தில்
திளைக்க வேண்டும்.
கையில் இருக்கும்
மயிலிறகுகளை
கணக்கு புத்தகத்தில்தான்
முதலில் வைக்க வேண்டும்.
நாளு நாட்கள் கூட
எடுத்துகொள்ளட்டும்
நல்லகுட்டி போட்டால் சரி.
பக்கத்து தெரு
பாண்டித்துரை வீட்டில்தான்
‘நியூஸ் பேப்பர்’ இருக்கும்.
அவனும் கூட
என் ‘சோடு’தான்
ஆனாலும் தைரியமாய்
என் அப்பாவை
பெயர் சொல்லியே அழைப்பான்.
அவன் கொஞ்சம்
கொடுத்தால் போதும்
அட்டைபோட்டு பெயரெழுதி
அழகாய் வைத்துக் கொள்வேன்.
இந்த உரச்சாக்கு பையை
கண்டால்தான் கடுங்கோபம்.
மாமா புதுப்பை ஒன்று
வாங்கி வரும்வரை,
இதிலேயே புத்தகங்கள்
இருந்து தொலைக்கட்டும்
……………………………..
இன்னும் தூக்கம் வரவில்லை.
நீண்ட விழிப்பிற்கு பிறகு
தூங்கிப் போனேன்.
‘பிரேயர்’
நத்தை வேகத்தில்
நகர்ந்து முடிந்தது.
‘‘ ஸ்காலர்சீப்
புத்தகம் வந்திருக்கு
பள்ளன், பறையன்,
சக்கிலியெனெல்லாம்
அப்படியே நில்லு !
மத்த எல்லோரும்
வகுப்புக்கு போ ’’
எரிச்சலும், கோபமும்
கலந்த குரலொன்று
செவிகளை துளைத்தது.
புதுநோட்டுகளும்
புதுப்புத்தகங்களும்
என் அருகில்தான் இருந்தன
ஆனால்,
முந்தைய இரவு போலவே
தூக்கம் மட்டும்
இன்னும் வரவில்லை.
– முகிலன்
————————————————————————–
குறிப்பு: தேனி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 80-களில் பணிபுரிந்த கிளார்க் ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிகக் கேவலமான முறையில் சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.
————————————————————————–
please write a respective poem for those people who suffered discrimination due to caste in 1600’s,1700’s,1800’s. If possible go to before BC also.
வால்ட்டர், வீ வான்ட் மோர் எமோஷன்…
கவிதையின் அனுபவம்
அனைவருக்கும் உள்ளதுபோலவே
அன்று எனக்கும் இருந்ததுதான்
அந்த 3 சொற்களின் அனுபவம் தவிர.
அன்று அந்த அழைப்புச் சொற்களின் உறவுகள்
என் அருகில் இருந்தும் அனுபவமின்மையால்
என் இதயம் கனக்கவில்லை.
இன்று அதன் வலி புரிந்து
என் இதயமெல்லாம் கனக்கிறது.
தோழர்கள் சொன்னது போலவே அழுக்கான உள்ளத்தை விட அழுக்கான உடையை வெளுத்து விடலாம். காசு உள்ளவனுக்கு உள்ள சாதி திமிர கூட ஓரளவுக்கு புரிஞ்சிக்கலாம். கஞ்சிக்கே தினம் ஓடுறவனுக்கும் இருக்கு. அதை உடைக்கனும், அதில் இருந்து வெளியே வரனும். அப்போதான் நம் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் புரியும், தீர்வு தெரியும்
jathi kurupidamal irunthu irunthal pinju manathu punakiirukkathu…..
மனிதநேயம் என்று யாருக்கெள்ளாம் இருக்கிறதோ அவர் சமாதானம் விரும்புகிறவராக இருந்தாலும்,சாதி திமிர் பிடித்தவராக இருந்தாலும் சரி அவர்களின் இதயத்தை இவ்வரிகள் குண்டூசியால் தொலைக்கும்.தொலைக்கட்டும்!
//‘ ஸ்காலர்சீப்
புத்தகம் வந்திருக்கு
பள்ளன், பறையன்,
சக்கிலியெனெல்லாம்
அப்படியே நில்லு !
மத்த எல்லோரும்
வகுப்புக்கு போ ’’
எரிச்சலும், கோபமும்
கலந்த குரலொன்று
செவிகளை துளைத்தது.//
இப்படி சொல்வதற்கு எந்த ஈயம் தூண்டுகிறது? அந்த ஈயத்தைப் பற்றி சொன்னால் சிலருக்கு உடம்பெல்லாம் வெடவெடக்கின்றதே ஏன்?
குழந்தைகள் மீதுகூட சாதிவெறி காட்டும் ஒரு மனிதனின் அநாகரிகத்துக்கு ஈய முலாம் பூசி தோற்றத்தை மாற்றாமல் அப்படியே பார்க்க விருப்பமில்லையா..
அநாகரிக காலகட்ட அந்த ஈயம் இன்றைய சமூகத்திலும் கோலோச்சுகிறது என்பதை ஏன் உங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை?
வரிக்கு வரி எவ்வித முரண்பாடுமின்றி அந்த ஈயத்தை நீங்கள் ஆதரிப்பது சிலசமயம் வெறுப்பாகவும் சிலசமயங்களில் எரிச்சலாகவும் இருக்கிறது அம்பி.
இன்றைய காலகட்டத்தில் அநாகரிகத்தை அநாகரிகம் என்று சுட்டித் திருத்துவதை விட்டு ஈய முலாம் பூசி ஒரே ஆதிக்கசாதியைச் சேர்ந்த நாகரிகமுள்ளவர்களையும், இல்லாதவர்களையும் ஏதோ ஒரு ஈய அமைப்புக்குள் ஒன்று சேர்த்து ஈயத்தை மட்டும் சுரண்டிக் கொண்டிருக்கலாம்.. ஆனால் அநாகரிகம் எது என்று உணர்த்தும் இது போன்ற கவிதைகள் சாதிப்பது உங்களைவிட மிக அதிகம்..
யாருடைய சாதியும் யாருக்கும் அதிகம் தெரிந்திராத நேரத்தில் அட்டெண்டர் கொண்டு வந்த சர்க்குலரை படித்து விட்டு ஸ்காலர்ஷிப்புக்கு அப்ளை பண்ணிய எஸ்சி எல்லாம் எழுந்து நின்று பெயர்களை சொல்லுங்கள் என்று எழுப்பிய பேராசிரியரையும் உடன்பயிலும் ஆண்கள் பெண்கள் அனைவரும் என்னை பார்த்த பார்வையும் இந்த பிறப்பு முழுவதும் மறக்க முடியாது.கருப்பன் வெள்ளையன் என்றால் பார்த்தாலே தெரிந்துவிடும் இங்கே சாதி என்னவென்று சொன்னால் தான் தெரிகிறது.அப்படி என்றால் அதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.சேர்க்கும் போதே சாதி சான்று வாங்கிக்கொண்டு அப்புறம் வகுப்பிலும் நிற்கச்சொல்லி அடையாளப்படுத்துவது மிகக்கடுமையான மன வக்கிரம் உள்ளவனின் செயல்.அதை செய்தவன் அடுத்த வாரமே செத்துவிட்டான்.