privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இலங்கை இராணுவத்தை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

இலங்கை இராணுவத்தை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

-

யாழ் மாணவர்கள் போராட்டம் 1யாழ்ப்பாணத்தில் ராணுவ அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பல்கலைக் கழக மாணவர்கள் ராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளாக நடந்த ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக மாவீரர் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 27-ம் தேதி விடுதலைப்புலி அமைப்பினராலும் ஈழ ஆர்வலர்களாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

2009-ம்- ஆண்டு மே மாதம் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரமான போரை நடத்தி முடித்த இலங்கை இராணுவம் தமிழர் வசிக்கும் பகுதிகளை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. போரினாலும் அடக்குமுறைகளாலும் மூன்று ஆண்டுகளாக தணிந்திருந்த மக்களின் உரிமைகளுக்கான அரசியல் நடவடிக்கைகளை மாணவர்கள் இந்த ஆண்டு உயிர்ப்பித்திருக்கிறார்கள். மாவீரர் தினமான செவ்வாய்க் கிழமை அன்று மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

யாழ் மாணவர்கள் போராட்டம் 2இதை அடுத்து ராணுவப் படையினர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் புகுந்து தங்கும் விடுதிகளை சுற்றி வளைத்து மாணவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.

இதற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வகுப்புகளை புறக்கணித்து புதன் கிழமை காலை 11 மணிக்கு பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்தனர். பல்கலைக்கழகத்தை விட்டு மாணவர்கள் அணிவகுத்து வெளியில் வந்ததும் ஆயுதப் படையினர் அவர்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். மாணவர்கள் பதிலடியாக கல் எறிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

சிவிலியன் உடையணிந்த ராணுவப் படையினர் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேமானந்தை சட்டையைப் பிடித்து சுவரில் பலமுறை மோதி காயப்படுத்தியிருக்கின்றனர். ராணுவத் தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.

ராணுவப் படையினர் நான்கு மாணவர்களை கைது செய்தனர். பல்கலைக் கழக பேராசிரியர்கள் தலையிட்ட பிறகு மூன்று பேரை விடுவித்த ராணுவம் நான்காவது நபரை பிடித்து வைத்திருக்கிறது. ‘அவர் மாணவர் இல்லை, பல்கலைக் கழகத்தில் செயல்படும் பத்திரிகையாளர்’ என்று காரணம் சொல்கிறது.

யாழ் மாணவர்கள் போராட்டம் 3வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கி, அடக்கி ஆளும் சர்வாதிகார ராணுவ ஆட்சியை இலங்கை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. பிராந்திய வல்லரசான இந்தியாவும் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈழத்தில் மக்களின் சொந்த பலத்தில் உருவாகும் போராட்டத்தை மாணவர்கள் ஆரம்பத்திருக்கின்றனர். எனினும் ஈழப் போராட்டத்தின் திசை விலகலையும், புலிகளின் பாரிய தவறுகளையும் மீளாய்வு செய்து ஏகாதிபத்திய எதிர்ப்புடன் கூடிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை உருவாக்குவது ஒன்றே கண் முன் உள்ள நம்பிக்கையான ஒரே  வழி. தமிழ்தேசிய வாதிகளால் புறக்கணிக்கப்பட்டிருந்த வர்க்க அரசியலை கையிலெடுப்பதன் மூலமே இலங்கை ஆளும் வர்க்கம், துணை போகும் இந்தியா முதலான சக்திகளை எதிர் கொள்ள முடியும்.

இலங்கை இராணுவத்தை எதிர்த்துக் கிளம்பியிருக்கும் மாணவர்களின் போராட்டம் அதற்கொரு துவக்கமாக இருக்குமா?

படிக்க: