privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காSalt of the Earth (1954) - மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!

Salt of the Earth (1954) – மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!

-

சால்ட் ஆஃப் த எர்த் 1ருத்துச் சுதந்திரம் தழைத்தோங்கும் நாடு, பூவுலக சொர்க்கம், ஜனநாயகமே அதன் சுவாசம்  என்றெல்லாம் பீற்றிக்கொள்ளப்படும்  அமெரிக்காவில் 1954 இல் வெளிவந்த படம் கூடஞு The Salt of the Earth –  தி சால்ட் ஆஃப் த எர்த் (மண்ணின் உப்பு).

இதனை வெளிவராத படம் என்று கூறுவதே பொருத்தம். ஏனென்றால், அமெரிக்க அரசு பல ஆண்டுகள் இதனை  அதிகாரபூர்வமற்ற முறையில் தடை செய்திருந்தது. குப்பைகள் முதல் காமக் களியாட்ட வக்கிரங்கள் வரை சகலத்தையும் அனுமதித்து, கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன? அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருந்தது?

பதில் எளிமையானது – படத்தில் உண்மை இருந்தது.

000

மெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் டெலவேர் ஜின்க் கம்பெனி என்ற பெரும் நிறுவனத்தின் சுரங்கத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த மெக்சிகன் தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். வேலை நிலைமையைப் பொறுத்த வரையில் அமெரிக்கர்களுக்கும்  மெக்சிகர்களுக்கும்  எந்த வித்தியாசமுமில்லை. மிக மோசமான ஆபத்தான பணிச்சூழல், பாதுகாப்பு நடைமுறைகளைப் புறக்கணித்து அலட்சியப்படுத்தும் நிர்வாகம், எந்நேரமும் உயிர் போகலாம் என்ற நிலைமை, காயமடைந்தாலோ, இறந்தாலோ கேட்க யாருமில்லை என்பது தான் அங்கே நடைமுறை.

’உயிரைப் பணயம் வைத்து சுரங்கத்தில் உழைக்கும் அமெரிக்க மற்றும் மெக்சிகன் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடி விடக் கூடாது’ என்பதற்காக தந்திரமாகச் செயல்படுகிறது நிர்வாகம். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு மட்டும் சுகாதாரமான குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிறது. மெக்சிகர்களுக்கான குடியிருப்புப் பகுதிகளோ மிக மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன.

தமது பணிச் சூழலை மேம்படுத்திடப்  போராடுவதற்காக மெக்சிகன் தொழிலாளர்கள் தமக்குள் சங்கம் அமைக்கிறார்கள். ஆனால் அதில் அமெரிக்கத் தொழிலாளர்கள் கலந்து கொள்வதில்லை.  வேலை நேரத்துக்குப் பிறகு இரவெல்லாம் சங்கத்தில் கூடி,  தமது உரிமைகளுக்காகப் போராடுவதைப் பற்றி பேசுகிறார்கள் தொழிலாளிகள். அவர்களில் ஒரு தொழிலாளி  ரமோன்.

சங்கக் கூட்டம் முடிந்து வீட்டிற்கு வருகிறான் ரமோன். ‘ சுகாதாரமான குடியிருப்புகள் வேண்டும்,  கழிவு நீர் அகற்றும் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிலாளர் சங்கம் மூலம் முன் வைக்க வேண்டும்’ என்று ரமோனிடம் சொல்கிறாள் அவன் மனைவி எஸ்பிரன்சா.

இதையெல்லாம் கோரிக்கையாக வைக்க  முடியாது என்று அவளை ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் கேலி செய்கிறான் ரமோன்.  எஸ்பிரன்சா தன் இயலாமையை எண்ணி வேதனைப்படுகிறாள். ஆனால் வேறு வழியில்லாமல் அப்போது அடங்கிப் போகிறாள்.

ஒரு  நாள் தொழிலாளி ஒருவர் விபத்தில் சிக்கிக் காயமடைகிறார். தொழிலாளிகளிடையே அத்தனை நாள் மனதில் பொங்கிக் கொண்டிருந்த கோபம் வெடித்துக் கிளம்பி வேலை நிறுத்தமாக மாறுகிறது. ஆனால் ஆலையிலிருந்த அமெரிக்க வெள்ளைத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை. மெக்சிகன் தொழிலாளர்கள் மாத்திரம் தளராமல் போராட உறுதி ஏற்கிறார்கள்.

சுரங்கத்திற்குச் செல்லும் வழியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; பாடல்கள் பல பாடியும், முழக்கமிட்டும்  போராட ஆரம்பிக்கிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை நிர்வாகம் முதலில் கண்டுகொள்ள மறுக்கிறது. இந்தப் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு, வேறு பகுதிகளில் வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் பணம், உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்து உதவுகிறார்கள். போராடும் தொழிலாளர்கள் வரும் பொருட்களைத் தங்களுக்குள்  சமமாகப் பங்கிட்டுக் கொண்டு போராட்டத்தைத் தொடருகிறார்கள்.

நிறுவனம் காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து போராட்டத்தைக் கலைக்கச் சொல்லுகிறது. போலீசால் கலைக்க முடியவில்லை.  எனவே, போராட்டத்தின் முன்னணியாளர்களில் ஒருவரான ரமோனை, போலீசு  தந்திரமாக கைது செய்து சித்திரவதை செய்கிறது. ரமோன் சிறை சென்று திரும்புகிறான். பிறகு நடக்கும் தொழிற்சங்க கூட்டத்தில் போராட்டத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள் தொழிலாளர்கள்.

சால்ட் ஆஃப் த எர்த் 2அதே வேளையில் தொழிலாளிகளுடைய மனைவிமார்களும், வீட்டிலுள்ள பெண்களும் ஒன்றாக இணைகிறார்கள். ‘சுகாதாரமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறம்’ ஆகியவற்றையும் போராட்டத்தின் கோரிக்கைகளில் சேர்க்க  வேண்டும் என்று தொழிலாளர் சங்கத்தில் எடுத்துக் கூற முடிவு செய்கிறார்கள். ஆனால் அப் பெண்களுடன் சேருவதற்கு எஸ்பிரன்சா தயங்குகிறாள். ‘தான் ஒரு பெண்; வீட்டைப் பார்த்துக் கொள்வது, குழந்தைகளை வளர்ப்பது தான் தன்னுடைய வேலை; யூனியன் கூட்டத்திற்குத் தான் செல்வதை கணவர் ரமோன் விரும்ப மாட்டார். பிரச்சினைகள் வரும்’ எனப் பயப்படுகிறாள். ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலைத் தவிர்க்க முடியாமல் தொழிலாளர்களின் சங்கக் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறாள்.

சங்கத்தில் வேலை நிறுத்தத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். இதற்கிடையில் பெண்களின் வருகையும், அவர்கள் வைக்கின்ற  கோரிக்கைகளும்  ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது; எரிச்சல் அடைகிறார்கள். பெண்களோ விடாப்பிடியாக  தங்களது கருத்துக்களை தொழிலாளர்கள் சங்கத்தின் முன்பு வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. அன்றிரவு வீட்டில் எஸ்பிரன்சாவை ரமோன் கண்டிக்கிறான். ”வீட்டு வேலைகள் செய்தால் போதும், சங்கம் போராட்டம் எல்லாம் பெண்களின் வேலையல்ல” என அறிவுறுத்துகிறான்.

சுரங்கத் தொழிலாளிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்ட விரோதம் என நீதிமன்ற தீர்ப்பைப் பெறுகிறது நிர்வாகம். போராட்டம் தோல்வியை நோக்கிப் போகும் தருணத்தில் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் அடுத்த கட்டத்தைப் பற்றி விவாதிக்கிறது.

அந்தக் கூட்டத்திற்கு வந்து சேரும் பெண்கள் குழுவினர்  “சுரங்கத் தொழிலாளர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் கைது செய்யப்படுவீர்கள். ஆகவே நாளை முதல் நீங்கள் பின்னணியில் இருங்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்” என்கிறார்கள். இந்தக் கருத்தை தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். “முதலில் பெண்களுக்கும் ஓட்டுரிமை கொடுங்கள்” என்று கேட்கிறாள் எஸ்பிரன்சா. தொழிற்சங்கக் கூட்டம் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொண்ட சமூகக் கூட்டமாக மாற்றப்படுகிறது. இறுதியில், தீவிரமான எதிர்ப்புக்கிடையில்,  பெண்கள் முன்நின்று  போராட்டம் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

“பெண்கள் என்ன கிழித்து விடப் போகிறார்கள்” என ஆண்கள் நினைக்க, பெண்கள் உற்சாகமாகப் பாடல்கள் பாடியும், கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிக்கிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் அவர்களுக்கு தேநீர் கொடுத்து உதவுகிறாள். ஆனால் ரமோன் இதைக் கடுமையாக எதிர்க்கிறான். எனினும் உற்சாகம் பொங்கும்  எஸ்பிரன்சாவை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெண்களது  போராட்டம்  தீவிரமடையவே, போலீசார் அவர்களைப் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். போலீசு சுடுவேன் என்கிறது – முழக்கம்  உயருகிறது. போலீசு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுகின்றது. பெண்கள் சிறிது பின் நகர்ந்துவிட்டு, மீண்டும் போராட்டத்தைத் தொடருகிறார்கள். போராடும் பெண்கள் மீது போலீசார் கார் ஏற்றி காயமுறச் செய்கின்றனர். பதிலுக்கு பெண்கள் செருப்பால் அடித்துப்  போலீசைத் துரத்துகிறார்கள். போலீசின் துப்பாக்கி பயனற்றுப் போகிறது.

தொழிற்சங்கத்தில் ஒரு கருங்காலியை முதலாளிகள் விலைக்கு வாங்குகின்றனர். அவன் மூலம் முன்னணிப் பெண்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு  கைது செய்யப்படுகிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் சிறைக்குச் செல்கிறாள். வெளியில் இருக்கும் பெண்கள் போர்க்குணத்துடன் ஆர்ப்பாட்டத்தைத் தொடருகிறார்கள்.

சிறையிலும் பெண்கள் தொடர்ச்சியாகக் கோஷமிடுகிறார்கள். அவர்களின் விடாப்பிடியான போராட்டத்தைக் கண்டு அஞ்சிய போலீசு அவர்களை விடுவிக்கிறது. வீடுகளில் பெண்கள் ஒன்றாகக் கூடி, அடுத்து எப்படிப் போராடலாம் எனத் தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். மறுபுறம் ஆண்கள் இந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு, வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கின்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கும் போதுதான்,  பெண்கள் முன் வைத்த கோரிக்கைகளின் நியாயத்தை சொந்த முறையில் உணர்கிறார்கள். தொழிலாளர்களது  கோரிக்கைகளில் சுகாதாரமான குடியிருப்புகள், சுத்தமான தண்ணீர்  ஆகிய இரண்டும்  சேர்க்கப்படுகின்றன.

அதே நேரத்தில் பெண்களின் தலைமையில் நடக்கும் போராட்டம் கணவன்மார்களுக்கு  எரிச்சலூட்டுகிறது. ரமோன் எஸ்பிரன்சாவை கோபமாக த் திட்டுகிறான்.  அடங்கி இருக்குமாறு எச்சரிக்கிறான். எஸ்பிரன்சா அவன் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட மறுக்கிறாள்.  ரமோன் மனம் வெதும்பி வீட்டை விட்டுச் செல்கிறான்.

கம்பெனி நிர்வாகமும், போலீசும் ரமோன் வீட்டைத் தந்திரமாகக் காலி செய்யத் திட்டம் தீட்டுகின்றனர். சிலரை மாத்திரம் இப்படி விரட்டியடித்தால் உளவியல் ரீதியாக மற்றவர்கள் பயந்து போராட்டத்தைக் கைவிடுவார்கள் என நினைக்கின்றனர். ரமோன் வீடு காலி செய்யப்படுவதைக் கண்டு, எல்லாத் தொழிலாளர்களும்  அவன் வீட்டின் முன் கூடுகிறார்கள். சுரங்கத்தில் வேலை செய்யும் வெள்ளை அமெரிக்க தொழிலாளர்களும் ரமோன் வீட்டின் முன் குவிகிறார்கள்.

போலீசு வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைக்க, பெண்களும், சிறுவர்களும் அவர்களை எதிர்த்து அவற்றை வீட்டின் உள்ளே மீண்டும் வைக்கிறார்கள். சோர்ந்து போகும் போலீசார் மீது சிறுவன் ஒருவன் கல்லெறியத் துவங்க, கூடி நிற்கும் தொழிலாளர்கள் ஒற்றுமையைப் பார்த்து போலீசார் அஞ்சி ஓடுகின்றனர். இதைத் தொடர்ந்து நிறுவனமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யவே, போராட்டம் வெற்றியடைகிறது.

000

1950 களின் துவக்கம் என்பது இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்தி சோவியத் யூனியன் மீண்டெழுந்த காலம். ‘கம்யூனிச பூதம் அமெரிக்காவைப் பற்றி விடுமோ’ என அமெரிக்க முதலாளி வர்க்கம் அஞ்சியது. கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற  வெறியின் அதிகார வர்க்கப் பிரதிநிதியாக அப்போது வந்தவர் தான் மெக்கார்த்தி.

சால்ட் ஆஃப் த எர்த் 3அறிவுத்துறையினர், கலைஞர்கள் ஆகியோர் மத்தியிலிருந்து மட்டுமின்றி, மொத்த சமூகத்திலிருந்துமே கம்யூனிசத்தைக் களையெடுக்கவேண்டுமென வெறிகொண்டிருந்த து மெக்கார்த்தியிசம்.  அன்று தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, கலைஞர்கள் மத்தியிலும் கம்யூனிசம் செல்வாக்கு பெற்றிருந்தது.  சுதந்திரம், மக்கள் விடுதலை, மக்களுக்காகக் கலை என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்த காலம் அது.  உழைக்கும் மக்களின் பால் அன்பு கொண்ட கலைஞர்கள் கம்யூனிசத்தையும் நேசித்தனர்.

1947 முதல் 1975 வரை அமெரிக்கத்தன்மைக்கு முரணான நடவடிக்கைகளை ஆய்வதற்கான குழு, என்ற பெயரில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, கம்யூனிச ஆதரவாளர்களென்று சந்தேகப்படும் அனைவரையும் வேட்டையாடியது.  சார்லி சாப்லின் உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இந்த விசாரணைக்கு வரமறுத்த 10 கலைஞர்கள்  சிறைவைக்கப்பட்டனர்.  ‘ஹாலிவுட் டென்’ என்று அழைக்கப்பட்ட இவர்களில் ஒருவர்தான் இப்படத்தின் இயக்குநர் பிபர்மேன்.

கம்யூனிச ஆதரவுக் கலைஞர்களை யாரும் வேலைக்கு அமர்த்தக் கூடாது என  ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு அமெரிக்க அரசு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருந்ததால்,   இச்சவாலை எதிர்கொள்ள சுயேச்சையான தயாரிப்பாளர் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார்கள் இக்கலைஞர்கள். இக்கழக்த்தின் முதல் தயாரிப்புதான் சால்ட் ஆப் த எர்த்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில்  எம்பயர் சின்க் கார்ப்பரேசன் என்ற சுரங்க நிறுவனத்தில் நடைபெற்ற  நடந்த உண்மையான தொழிலாளர் போராட்டம்தான் இந்தத் திரைப்படத்தின் கதை. தொழிலாளர்களிடையே  நிறவெறி அடிப்படையில் பாகுபாடு காட்டியது, ஆண் தொழிலாளர்கள் பெண்களை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன் அலட்சியப்படுத்தியது, அதை எதிர்த்து வென்று பெண்களும் போராட்டத்தில ஈடுபட்டது ஆகிய அனைத்துமே உண்மையில் நடந்த நிகழ்வுகள்.

இப்போராட்டம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே திரைப்படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் இதன் இயக்குநர். ரசிய அரசின் நேரடி உத்தரவின் கீழ் ஹாலிவுட்டிலேயே ஒரு கம்யூனிசப் படம்  தயாராகிக் கொண்டிருப்பதாக பீதியைக் கிளப்பியது ஹாலிவுட் நியூஸ் என்ற செய்திப்பத்திரிகை.  இதன் படப்பிடிப்பையே ஹாலிவுட்டிற்கு  வெளியேதான் நடத்தினார் இயக்குநர் பெபர்மேன். படத்தில் நடித்த பெரும்பான்மையினர் தொழில்முறை நடிகர்களும் அல்லர். அவர்கள் போராட்டத்தில் உண்மையிலேயே பங்கு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் பெண்கள்.

படப்பிடிப்பையே ரகசியமாக நடத்த வேண்டியிருந்தது மட்டுமல்ல, படச்சுருள்கள் அழிக்கப்படலாம் என்பதால் அவற்றைப் பாதுகாப்பது கூட படக்குழுவினருக்கு பெரும் சிரமமாக இருந்தது. படம் வெளிவரத் தயாரான பிறகு படத்தைத்  திரையிட முனையும் திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் பறந்தன. படத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகப்பட்டவர்கள் மீது சோதனைகள் நடந்தன. படத்தில் எஸ்பிரன்சாவாக நடித்த மெக்சிகோ நடிகை ரோசாரா ரெவுல்டாஸ் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் அளவுக்கு வெறித்தனமாக நடந்து கொண்டது அமெரிக்க அரசு.

மொத்த அமெரிக்காவிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில திரையரங்குகள் மட்டும்தான் படத்தைத் திரையிட முன் வந்தன. படத்தை நியூ மெக்சிகோ சுரங்கத் தொழிலாளர்களும், பிற சுரங்கத் தொழிலாளர்களும் உச்சி மோந்து வரவேற்றனர். அமெரிக்கா முழுவதும் இருந்த பல தொழிலாளர்கள் இயக்கங்கள் இந்தப் படத்தை அப்படியே வாங்கிக் கொண்டன. அவற்றில் சில தமது பெயரையே ‘சால்ட் ஆப் த எர்த்’ என மாற்றிக் கொண்டன.

சமூகத்துக்கு ஆரவாரமின்றித் தொண்டாற்றும் எளிய மனிதர்களே ‘மண்ணின் உப்பு’ என்றழைக்கப்படுகிறார்கள். இம்மண்ணின் உப்பாகிய தொழிலாளி வர்க்கம்,  முதலாளி வர்க்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஊடாக,  தன்னிடம் நிலவிய ஆணாதிக்க கண்ணோட்டத்தையும், வெள்ளை நிற மேட்டிமைத்தனத்தையும் எப்படி களைந்து கொள்கிறது என்பதை அழகாக விளக்கிச் செல்கிறது இப்படம். பெண்விடுதலையும், நிறவெறி ஒழிப்பும் எங்ஙனம் தமது வெற்றிக்கு இன்றியமையாதவை என்று தொழிலாளி வர்க்கம் தனது சொந்த அனுபவத்தின் ஊடாகப் புரிந்து கொள்வதையும் வெற்றி காண்பதையும்   குறிப்பான நிகழ்ச்சிகள், சிக்கனமான வசனங்கள் மூலம் காட்சிப்படுத்துகிறது இந்தப் படம்.

இதன் காரணமாகத்தான் அன்று அமெரிக்க முதலாளி வர்க்கம் இப்படத்தைக் கண்டு அஞ்சியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இன்றும் இந்தப்படம் வெளியிடும் உண்மையின் அழகு நம்மை ஈர்க்கிறது.

_____________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
______________________________________________________

  1. Please let the world what u can do can’t do. Don’t always criticise western countries..if u give this an example these guys
    Will give thousands of movies banned in china

    • கட்டுரையின் இறுதியில் சால்ட் ஆஃப் தி எர்த் திரைப்படத்தின் யூ டியூப் இணைப்பு இணைக்கப்ப்ட்டுள்ளது. இதில் நீங்கள் முழுத் திரைப்படத்தையும் காணலாம்.நன்றி

  2. கம்யுனிச ரஸ்யாவில் தடைசெய்யப்பட்ட படங்கள் எத்தனை இருக்கும்?

  3. எப்போதோ ரஷ்யா-அமெரிக்கா cold war உச்சத்தில் இருந்தபோது தடை செய்யப்பட்ட ஒரு படத்தை வைத்துகொண்டு அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் இல்லை என்று கூறுவது சரி அல்ல.

    கம்யுனிச ரஷ்யா அளவிற்கு எல்லாரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாத நிலை இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் பெரும்பான்மை மக்கள் ஓரளவு சுபிக்ஷமாகவே வாழ்கிறார்கள். காபி கடை, மளிகை கடைகளில் வேலை செய்யும் தொழிலாளிக்கு கூட ஒரு மணி நேரத்துக்கு எட்டு டாலர் சம்பளம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் என்ற கணக்கில் வாரம் ஒரு முறை லீவு போக முன்னூறு நாள் வேலை செய்தால் வருடத்திற்கு இருபதினாயிரம் கிடைக்கும். இதில் வசதியாக வாழ முடியும். கல்வி உதவித்தொகை மூலம் சராசரியாக வருடம் பதினைந்தாயிரம் கிடைத்த பணத்தில் அங்கு ஆறு வருடம் வசதியாக வாழ்ந்தவன் என்ற வகையில் இதை கூறுகிறேன்.

    அமெரிக்காவில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று அரசுக் கல்லூரிகளில் கூட கல்விக் கட்டணம் மிக அதிகம். இதை கட்ட முடியாமல் தான் நீங்கள் வேறொரு கட்டுரையில் சொன்னது போல மாணவிகள் “கற்பை” விற்கும் நிலைக்கு உள்ளாகிறார்கள். இந்த அளவிற்கு நிலை மோசமாகவிட்டலும் சில மாணிவிகள் strip club போன்றவற்றில் நடனமாடி பணம் சேர்த்து கட்டணம் கட்டும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மிகச் சிறுபான்மையினரே. இரண்டாவது மருத்துவம். ஒரு பல் பிடுங்கக் கூட ரெண்டாயிரம் டாலர் செலவாகும். மெடிக்கல் இன்ஷுரன்ஸ் இல்லையென்றால் சமாளிக்கவே முடியாது. இந்த இன்ஷுரன்ஸ் கட்ட முடியாதவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

    • // கம்யுனிச ரஷ்யா அளவிற்கு எல்லாரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாத நிலை இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் பெரும்பான்மை மக்கள் ஓரளவு சுபிக்ஷமாகவே வாழ்கிறார்கள்.//

      அது கம்யூனிச ரஷ்யா அல்ல, சோஷலிச ரஷ்யா. கம்யூனிச சமுதாய முறைமை உலகில் எங்குமே இதுவரை ஏற்படவில்லை. கம்யூனிச சமுதாயம் என்பது வர்க்கங்களற்ற சமுதாயம். அரசு என்பது ஒரு வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி. ஆகவே கம்யூனிச சமுதாயத்தில் அரசு இருக்காது.

      சோஷலிசம் என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். ஆனால் ஜனநாயகத்தின் காவலர்கள் என்றும், அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று கூறிக்கொண்டு தொழிலாளி வர்க்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை எதிர்க்கும் முதலாளித்துவத்தின் இரட்டை வேடத்தை, உண்மை முகத்தை தோலுரிப்பதுதான் இக்கட்டுரை.

  4. கல்நெஞ்சம், karna, venkatesan

    //கருத்துச் சுதந்திரம் தழைத்தோங்கும் நாடு, பூவுலக சொர்க்கம், ஜனநாயகமே அதன் சுவாசம் என்றெல்லாம் பீற்றிக்கொள்ளப்படும் அமெரிக்காவில் 1954 இல் வெளிவந்த படம் கூடஞு The Salt of the Earth – தி சால்ட் ஆஃப் த எர்த் (மண்ணின் உப்பு).//

    அமெரிக்கா ஜனநாயகம், கருத்துரிமை என்று பீற்றிக் கொண்டாலும், *அங்கும்* ஒரு தரப்பு தனது ஆதிக்கத்தை மற்றொரு தரப்பின் மீது செலுத்துகிறது. அது சட்ட ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக அல்லது அதிகாரபூர்வமற்ற (சுய)தணிக்கை மூலமாக நடக்கிறது.

    ‘சோவியத் யூனியனிலும் செஞ்சீனாவிலும் உழைக்கும் மக்கள் (தொழிலாளர்கள் விவசாயிகள்), சுரண்டும் சக்திகள் மீது சர்வாதிகாரம் செலுத்துகிறார்கள்’ என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நலனுக்கு விரோதமான கருத்துக்களுக்கு சமூகத்தில் தடை உண்டு. அதை ‘கருத்துரிமை, தனிநபர் உரிமை பறிக்கப்படுகிறது’ என்று மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் பிரச்சாரம் செய்தன.

    ஆனால், அனைவருக்கும் சமத்துவம், கருத்துரிமை, வாழ்வுரிமை இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில், நடைமுறையில் காசு இல்லாதவருக்கு மருத்துவம் இல்லை, காசு இல்லாதவருக்கு கல்வி இல்லை, நிறைய காசு உள்ளவருக்குத்தான் பொருளாதார சுதந்திரம் என்ற சர்வாதிகாரம் பெரும்பான்மை மக்கள் மீது செலுத்தப்படுகிறது.

  5. 2009-ல் வெளியான 3D ஹாலிவுட் படமான ’அவதார்’ புவியின் வளங்களை ஆக்கிரமித்து சுரண்டும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கையை பூடகமாக, தெளிவாக சாடும் படம்.. உலகளாவிய கலெக்சன் தரும் இது போன்ற அமெரிக்க-எதிர்ப்பு படங்களைப் பற்றி அமெரிக்கா கவலை கொள்ளப் போவதில்லை.. ஆனால் Salt of the Earth போன்ற, ’அமெரிக்கத்தனம்’ இல்லாத, போராட்டக் கருவுள்ள திரைப்படம் அமெரிக்கத் தொழிலாளர்களிடையே ஏற்படுத்தக் கூடிய தாக்கம் முதலாளித்துவத்தின் கோட்டையான அமெரிக்காவின் அஸ்திவாரத்தையே அசைக்கும் என்றால் கருத்தாவது, சுதந்திரமாவது…

  6. செழியன் குமரன், மாணவன்,

    100% perfect ஆக ஒரு சமூகம் இருக்க முடியாது. ஒரு படத்தை தடை செய்ததை வைத்து கருத்து சுதந்திரம் இல்லை என்று கூற முடியாது. அங்குள்ள கருத்து சுதந்திரத்துக்கு உதாரணமாக Noam Chomsky பற்றி கூறலாம். அந்நாட்டு வெளிஉறவு கொள்கையை விமர்சித்து எவ்வளவு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

    அமெரிக்காவில் முதலாளி வர்க்கம் தொழிலாளிகள் மேல் ஆதிக்கம் செலுத்துவது உண்மை தான். ஆனால், தொழிலாளிகளின் நிலை இந்தியா அளவுக்கு மோசமாக இல்லை. உழைப்போர் பெரும்பான்மையாருக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைத்து வசதியாக வாழ்கின்றனர். இது என் அனுபவத்தில் கண்டது. உயர் கல்வி இலவசமாக இல்லாவிட்டாலும், வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, பகுதி நேர வேலை ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் சமாளிக்கிறார்கள்.

    எதிராளியிடம் இருக்கும் நல்ல பண்புகளை கூறாமல் குறைகளை மட்டுமே ஊதிப் பெரிசாக்குகிறது வினவு.

    • venkatesan,

      அம்பி சொல்வது போல அமெரிக்க கருத்துச் சுதந்திரம் ஏகாதிபத்திய நலன்களின் மூக்கில் இடிக்காதது வரை மட்டும்தான் (குவாண்டனாமோ சித்திரவதைக் கூடங்கள், DMCA, RIA, MPAA etc)

      அமெரிக்கா பெரும்பான்மையோருக்கு அடிப்படை வசதிகளை கொடுத்த வரலாற்றுச் சூழலையும் (1930களில் நலவாழ்வு அரசு 1980 வரை தொடர்ந்தது) அது படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் நிலவரத்தையும் கொஞ்சம் அலசிப் பாருங்க.

      அமெரிக்கா தனக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வசதிகளுக்கு மற்ற நாட்டு மக்கள் கொடுத்த என்ன விலை கொடுக்கிறாங்க என்றும் பாருங்க (வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம்).

      அப்போ புரியும் எதிராளியிடம் இருக்கும் நல்ல பண்பின் லச்சணம்.

  7. அமெரிக்கர்கள், தங்கள் ஜனநாயகத்தில் உள்ள சுதந்திரத்தின், கருத்து சுதந்திரம் உட்பட, எல்லையை வகுக்க “Your freedom ends where my nose begins” (உன் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைதான் வரமுடியும்) என்ற வாக்கியத்தைச் சொல்லி மகிழ்வார்கள்.. சொல்லாத விடயம் அமெரிக்க முதலாளிகளின் மூக்கு அவர்களது ஆலைவாசல்கள் வரை நீண்டது என்பதுதான்.. அதை திரையரங்குகள் வரை மட்டுமல்ல எங்கு வேண்டுமாயினும் நீட்டும் சுதந்திரத்தை அமெரிக்க அரசு மறைமுகமாக அளிக்கத் தயங்காது என்பதை தெளிவாக்குகிறது..

    இந்தியாவிலும் இதே போன்று ஜனநாயக கருத்து சுதந்திரம் படும்பாடு, ஜனநாயகத்தை மறுக்கவேண்டும் என்ற நிலைக்கு நம்மைத் தள்ளாமல், ஜனநாயக உரிமைகள் காக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்திக் கொண்டே இருக்கிறது..

    அமெரிக்க முதலாளிகளின் மூக்கு உலகமுழுதும் நீண்டு வளர்ந்து கொண்டிருக்கும் பொது, சீன அரசு தன் சப்பை மூக்கை ஆசியா முழுவதும் நீட்ட முயல்கிறது.. ஈழம், திபெத்து, தென் சீனக் கடல் மற்றும் பல பகுதிகள் அந்த மூக்கின் கீழ் வந்து விட்டன..

    • சப்பை மூக்கு என்று எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.. எனது இந்திய மூக்கையும் சப்பை மூக்காக கருதக் கூடிய நீள் மூக்கர்கள் உலகத்தில் இருப்பதை மறந்து உளறிவிட்டேன்..

    • //அமெரிக்க முதலாளிகளின் மூக்கு அவர்களது ஆலைவாசல்கள் வரை நீண்டது//
      சூப்பர் அம்பி!

  8. ஐயா, நான் அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வெளிநாட்டுக் கொள்கை பற்றி எல்லாம் பேசவில்லை. நான் கூறுவது இரண்டு. ஒன்று, அங்கு முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தினாலும், தொழிலாளிகள் வசதியாகவே வாழ்கிறார்கள். இரண்டு, அங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. இவ்விரண்டும் 100% perfect ஆக உள்ளதென்றும் நான் கூறவில்லை.

    கருத்து சுதந்திரம் என்பது பல்வேறு கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் இடம் உள்ளதா என்பதே. இது அங்கே உள்ளது என்பது என் கருத்து. கருத்து சுதந்திரத்தை அவர்கள் எவ்வளவு தீவிரமாக கருதுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கவும்:
    http://en.wikipedia.org/wiki/Freedom_of_speech_in_the_United_States

    Guantanamo தவறுதான். ஆனால், அதற்கு எதிராக அங்கே விமர்சனங்கள் உண்டு. இவை நசுக்கப்படவில்லை. copyright சட்டத்தை கருத்துரிமைக்கு எதிரானதாக காட்டுவது சரியல்ல.

    அங்கு கருத்து சுதந்திரம் இல்லை என்ற கூற்றை ஒரு திரைப்பட தடையைக் கொண்டு நிறுவ முடியாது. அங்கு தடை செய்யப்பட்ட புத்தகங்கள், திரைப்படங்கள், விமர்சனங்கள், இயக்கங்கள் போன்றவற்றை விலாவரியாக விளக்கி ஒரு கட்டுரை எழுதுவதே சரி.

    • வெங்கடேசன்,

      இந்தக் கட்டுரை அமெரிக்க கருத்து சுதந்திரத்தை உரசிப் பார்த்து அதன் எல்லைகளை, முட்டுச்சந்துகளை வெளிப்படுத்திய ஒரு திரைப்படத்தைப் பற்றியது என்பது எனது புரிதல்..

      அமெரிக்கத் தொழிலாளர்களின் நிலையையும், அமெரிக்கர்களின் கருத்து சுதந்திரத்தையும் பிற கட்டுப்படுத்தும் காரணிகளிலிருந்து தனித்து பார்க்க முடியுமா..?!

      தனது ஆதிக்க வலிமையால் சீனா, ரசியாவைத் தவிர உலகமுழுவதையும் ஏதோ ஒருவகையில் கட்டுப்படுத்தும் அமெரிக்காவுக்கு இப்பிரதேசங்களிலிருந்து கச்சாப் பொருள்களும், விற்பனைச் சந்தைகளும் குறைந்த செலவில் கிடைத்துக் கொண்டிருக்கும் வரையில் அமெரிக்கத் தொழிலாளர்களின் நிலை பிற அமெரிக்கர்களின் வசதிகளுக்கு ஒப்பிடும் வகையில் இருக்கலாம்.. ஆனால் அமெரிக்க முதலாளிகளின் லாபத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு கிட்டும் வசதிகள் சொற்பமே.. அமெரிக்க முதலாளிகளின் லாபம், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு கிட்டும் குறைந்தபட்ச வசதிகள் இரண்டுக்குமான விலையைக் கொடுப்பது, செழியன் குறிப்பிட்டதைப் போல், இந்த ஏகாதிபத்திய சுரண்டலால் பாதிக்கப்படும் உலகின் பிற பகுதிகளின் மக்கள்தானே.. ஏதேனும் ஒரு காரணத்தால் அமெரிக்க முதலாளிகளின் லாபம் குறையத் தொடங்கினால் முதலில் பலியாவது அமெரிக்க தொழிலாளர்களும், சாதாரண மக்களும் தான்.. அமெரிக்க சட்டங்களும், அரசின் சார்பும் யாருக்கு சாதகமாக இருக்கும், இருக்கிறது என்று அங்கே இருந்த நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

      நடைமுறையில் ஜனநாயத்தின் கருத்து சுதந்திரம் பணநாயகத்தின் நலன்களுக்கு எந்த வகையிலும் பலியாகாமல் இருக்க கண்டிப்புடன், நேர்மையுடன் நடைமுறைப்படுத்தப்படும் சட்டப் பாதுகாப்பு, முறை உலகின் ஏதேனும் ஜனநாயகத்தில் இருக்கிறதா.. ஜனங்கள், ஏற்கனவே இருப்பதாகக் கூறப்படும் ஜனநாயக உரிமைகளுக்காகக் கூட போராட வேண்டிய நிலையிருக்கிறதே.. நானும் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவன் என்றும் இறுதியாக குறிப்பிட விரும்புகிறேன்..

  9. எங்க அப்பா ரொம்ப நல்லவரு, தெனமும் வீட்டுக்கு மிட்டாய் வாங்கிக்கிட்டு வருவாரு, புதுப் புது துணி எடுத்து தருவாரு, தாராளமா எங்கள விளையாட அனுமதிப்பாரு.

    அவரு வெளியில சம்பாதிப்பது அடுத்தவங்களை அடிச்சுப் புடுங்கி, சின்னக் குழந்தைங்கள முடமாக்கி பிச்சை எடுக்க வச்சு, பெண்களை கடத்தி விற்பது மூலமா. அதப் பத்தி எல்லாம் நான் பேசல, வீட்டில எங்களை எப்படி நடத்துறாருன்னு மட்டும் பார்ப்போம்

    இப்படி ஒருத்தர் சொன்னா ஏத்துப்பீங்களா? அமெரிக்காவின் அரசியலை முழுமையிலிருந்து ஆராய வேண்டும். உள்நாட்டு பொருளாதார, பாதுகாப்பு கொள்கைகளும் வெளிநாட்டு அரசியல், ராணுவ நடவடிக்கைகளும் பிரிக்க முடியாதவை.

    எவ்வளவுக்கெவ்வளவு ராணுவ பலமும், ஆதிக்க கட்டமைப்பும் இருக்கோ அவ்வளவுக்கவ்வளவு நாட்டு மக்களை பேச விடலாம். அந்த பேச்சுரிமை அடிப்படை ஆதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் போது கழுத்தை நெறிப்பார்கள். (உதாரணம்: சால்ட் ஆப் த எர்த்)

    அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 150 ஆண்டு வரலாறு, இப்போதைய அரசியல், பொருளாதார, ஆதிக்க கொள்கைகள் அனைத்தையும் சேர்த்து அந்த contextல் கருத்துரிமையை ஆய்வு செய்யுங்கள்.

  10. அம்பியின் விளக்கமும், செழியன் குமரனின் உதாரணமும் அருமை.

    பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஓரளவு நல்ல சூழ்நிலையில் இருந்தாலும், அது மற்ற நாடுகளை சுரண்டி வருவது என்ற கூற்றை ஓரளவிற்கு ஒத்துக் கொள்கிறேன். உதாரணமாக, அவர்கள் உடுத்தும் ஆடைகள் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளில் உற்பத்தி ஆகின்றன. வீட்டு சாமான்கள் என பல பொருள்கள் சீனாவில் உருவாக்கப்படுகின்றன. இந்த பொருள்களை உருவாக்கும் மற்ற நாட்டு தொழிலாளர்கள் எந்த வசதியும் இன்றி இருக்கும் போது அமெரிக்கர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இது சுரண்டல் எனவும் புரிகிறது. மேலே “ஓரளவு” என சொன்னதற்கு காரணம் என் படிப்பறிவு, சிந்தனை குறைபாடே. அதாவது, “ஒரு நாடு எப்படி இன்னொரு நாட்டை சுரண்டிடமுடியும்” என்ற கேள்விக்கு சரியான புரிதல் என்னிடம் இல்லை. “இவன் ஒன்னும் தராம அவன் எப்படி எல்லாத்தையும் தருவான்” என்ற பாமரத்தனமான கேள்வி என்னிடம் தொக்கி நிற்கிறது. அமெரிக்கா உலகத்திற்கு தந்தது, தருவது என யோசித்தால் அறிவியல், தொழில்நுட்பம் என்ற ஒன்று மட்டுமே நினைவிற்கு வருகிறது. உதாரணமாக, நாம் இங்கே விவாதிக்க உதவும் கணிப்பொறி, இணையம், மென்பொருள்கள் எல்லாம் பெரும்பாலும் அமெரிக்காவில் கட்டமைக்கப் பட்டவை. ஆனால், இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் சொற்பமே. மற்றவர்களை அந்நாடு எப்படி கரை சேர்க்கிறது என்பது புரியவில்லை. சுரண்டல் எப்படி நடைபெறுகிறது என்பதும் முழுதும் புரியவில்லை. “ஒன்றும் உற்பத்தி செய்யாமல், ரியல் எஸ்டேட், பங்கு சந்தை போன்றவற்றில் பணம் சம்பாதித்தல்” போன்ற உதாரணங்கள் தோன்றினாலும் எனக்கு முழு புரிதல் ஏற்படவில்லை. இதெல்லாம் புரிய படிக்க வேண்டும் என்பது தெரிகிறது.

    // ஏதேனும் ஒரு காரணத்தால் அமெரிக்க முதலாளிகளின் லாபம் குறையத் தொடங்கினால் முதலில் பலியாவது
    // அமெரிக்க தொழிலாளர்களும், சாதாரண மக்களும் தான்
    .
    இது சரியான கணிப்பு என்றே நானும் நினைக்கிறேன்.

    // நடைமுறையில் ஜனநாயத்தின் கருத்து சுதந்திரம் பணநாயகத்தின் நலன்களுக்கு எந்த வகையிலும் பலியாகாமல்
    // இருக்க கண்டிப்புடன், நேர்மையுடன் நடைமுறைப்படுத்தப்படும் சட்டப் பாதுகாப்பு, முறை உலகின் ஏதேனும் ஜனநாயகத்தில் இருக்கிறதா

    இது “கருத்து சுதந்திரம்” என்பதை எப்படி வரையருக்கிறோம் என்பதை பொருத்தது. அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் உள்ளது, அது எதிர்காலத்திலும் இருக்கும் என்பது என் எண்ணம். அதாவது, ஒருவர் ஒரு கொள்கையையோ, விமர்சனத்தையோ முன் வைக்க அமெரிக்காவில் இடம் இருக்கும். அரசின் கொள்கைகளை எதிர்ப்பவனை முட்டிக்கு முட்டி தட்டுவது, தூக்கி உள்ளே வைப்பது ஆகியன நடக்காது (விகிலீக்ஸ் Julian Assange சம்பவம் ஒரு விதிவிலக்கு என்றே நினைக்கிறேன்). அதே சமயம் இது போன்ற கருத்துகள் வெளியே பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் இருக்கலாம். உதாரணமாக, செய்தி ஊடகங்களில் இருட்டடிப்பு போன்றவை. இந்த இணையதள கட்டுரை எனக்கு ஏற்புடையதே:
    http://www.bannedthought.net/USA/index.htm

    இவ்வளவு நேரம் இதை நான் விவாதிக்க வேறொரு காரணமும் உண்டு. அது வினவு கொள்கையை சார்ந்தது. நானும் என் கூட்டாளிகும் 100% நல்லவர்கள், நான் எதிரியாக நினைப்பவர் எல்லாம் 100% கெட்டவர்கள் என்ற தொனி பல கட்டுரைகளில் தென்படுகிறது. இதை என்னால் ஏற்க முடியவில்லை.

    குமரன் செழியனின் உதாரணத்தை இப்படி நீட்டிக்கிறேன் . “என் அப்பன் என்னை நன்றாக வைத்துக் கொள்கிறான், ஆனால் அதற்கான பணத்தை கெட்ட வழிகளில் சம்பாதிக்கிறான்” என்று சொல்வது வேறு. “என் அப்பன் என்னை நன்றாக வைத்துக் கொள்ளவே இல்லை” என்று ஒரே போடாக போடுவது வேறல்லவா?

    • மேலும் ஒரு உதாரணம். “தூரத்தில் ஒரு அருமையான ஒளி தெரிகிறது. அழகாக இருக்கிறது” என நான் சொல்கிறேன். நீங்கள் “டேய், அது குடிசை எரியுதடா” என சொல்கிறீர்கள். இந்த உதாரணத்தில் எனக்கு கிட்டத்தட்ட முழு உடன்பாடே. “கிட்டத்தட்ட” என சொல்ல காரணம் மேலே கூறியவை. ஒன்று, எனது குறைந்த படிப்பறிவு. இரண்டாவது, அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அந்நாடு காட்டும் அபாரமான ஈடுபாடு.

      • மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!
        https://www.vinavu.com/2012/10/26/welfare-state/

        வெங்கடேசன்,
        இக்கட்டுரையைப் படியுங்கள். மக்கள் நல அரசுகள் பற்றி அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்.

    • // “இவன் ஒன்னும் தராம அவன் எப்படி எல்லாத்தையும் தருவான்” என்ற பாமரத்தனமான கேள்வி என்னிடம் தொக்கி நிற்கிறது. //

      ஈராக்கிலும், ஆப்ரிக்க, அரபு அடிமைநாடுகளிலும் எதைக் கொடுத்து கச்சா எண்ணெயையும், கனிம வளங்களையும், அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் விலையில், அமெரிக்கா வாங்குகிறது..?! கிழக்கு ஐரோப்பிய,ஆசிய நாடுகள் அவற்றின் விற்பனைச் சந்தைகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு திறந்துவிடும் கட்டாயத்திற்கு உள்ளாக்கும் ஆற்றல் IMF,உலக வங்கி-துணையால் அமெரிக்காவுக்கு இருக்கும் போது நீங்கள் கூறும் நியாமான கொடுக்கல்-வாங்கல் இருக்கமுடியாது.. அப்படி இருப்பது போல் காட்டும் வேலையை திறமையாகச் செய்வதில் நம்மூர் மன்மோகன்சிங் & கோ வை யாரும் மிஞ்ச முடியாது..

  11. \\அமெரிக்கர்கள், தங்கள் ஜனநாயகத்தில் உள்ள சுதந்திரத்தின், கருத்து சுதந்திரம் உட்பட, எல்லையை வகுக்க “Your freedom ends where my nose begins” (உன் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைதான் வரமுடியும்) என்ற வாக்கியத்தைச் சொல்லி மகிழ்வார்கள்.. சொல்லாத விடயம் அமெரிக்க முதலாளிகளின் மூக்கு அவர்களது ஆலைவாசல்கள் வரை நீண்டது என்பதுதான்.. அதை திரையரங்குகள் வரை மட்டுமல்ல எங்கு வேண்டுமாயினும் நீட்டும் சுதந்திரத்தை அமெரிக்க அரசு மறைமுகமாக அளிக்கத் தயங்காது //

    அருமையாக சொன்னீர்கள் அம்பி.

    \\அமெரிக்க முதலாளிகளின் மூக்கு உலகமுழுதும் நீண்டு வளர்ந்து கொண்டிருக்கும் பொது, சீன அரசு தன் மூக்கை ஆசியா முழுவதும் நீட்ட முயல்கிறது.. ஈழம், திபெத்து, தென் சீனக் கடல் மற்றும் பல பகுதிகள் அந்த மூக்கின் கீழ் வந்து விட்டன.//

    இதே ஈழம், திபெத்து, தென் சீனக் கடல் பகுதிகளில் இந்திய அரசும் தன மூக்கை நீட்டியுள்ளதே. மட்டுமல்லாது சண்டைக்கும் அணியமாக இருப்பதாக தொடை தட்டுகிறதே அம்பி.அதையும் நாம் கண்டிக்கவேண்டுமல்லவா.

    http://www.thehindu.com/news/international/well-send-force-to-protect-our-interests-in-south-china-sea-says-navy-chief/article4160784.ece

    • // இதே ஈழம், திபெத்து, தென் சீனக் கடல் பகுதிகளில் இந்திய அரசும் தன மூக்கை நீட்டியுள்ளதே. மட்டுமல்லாது சண்டைக்கும் அணியமாக இருப்பதாக தொடை தட்டுகிறதே அம்பி.அதையும் நாம் கண்டிக்கவேண்டுமல்லவா. //

      ஈழத்திலும், திபெத்திலும் சீனாவை எதிர்த்து விரலைக் கூட அசைக்காத இந்திய அரசு, இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கடலில் வேட்டையாடுவதை தடுக்க இயலாத/விரும்பாத இந்திய கடற்படை, தென் சீனக் கடலில் சீனாவை எதிர்க்கப் போகிறதா..?!! வியட்நாமை நம்பி தென் சீனக் கடலில் எண்ணைவயல்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியிருக்கும் இந்திய அரசு, சீனாவை எதிர்த்து தொடை தட்டுகிறதே என்று சீனாவும், சிங்கள அரசும் சிரிக்கும் போது நீங்கள் ஏன் டென்சன் ஆகிறீர்கள்..!!!

      • \\ஈழத்திலும், திபெத்திலும் சீனாவை எதிர்த்து விரலைக் கூட அசைக்காத இந்திய அரசு,//

        ஈழத்தில் இரண்டுமே கள்ள மாடுகள்தான்.ஈழத்தின் வளங்களை கொள்ளையிடும் கூட்டுக் களவாணிகள்தான்.

        திபத்தை பொறுத்தவரை தலாய் லாமாவை அரை நூற்றாண்டு காலமாக சோறு போட்டு வளர்ப்பது விரலை அசைப்பது ஆகாது என்றால் நகத்தை அசைப்பது என்று வைத்துக் கொள்ளலாமா.

        \\ இந்திய அரசு, சீனாவை எதிர்த்து தொடை தட்டுகிறதே என்று சீனாவும், சிங்கள அரசும் சிரிக்கும் போது நீங்கள் ஏன் டென்சன் ஆகிறீர்கள்..//

        இந்திய அரசை ”காமடி பீசு”ன்னு சொல்கிறிர்களா

        • // ஈழத்தில் இரண்டுமே கள்ள மாடுகள்தான்.ஈழத்தின் வளங்களை கொள்ளையிடும் கூட்டுக் களவாணிகள்தான். //

          இன்றைய கூட்டுக் களவாணிகள் சீனாவும், சிங்கள அரசும் தான்.. இந்திய அரசு அந்த அந்தஸ்த்துக்கு மீண்டும் ஆசைப்படாமல் ஈழத் தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியது நமது கடமை..

          // திபத்தை பொறுத்தவரை தலாய் லாமாவை அரை நூற்றாண்டு காலமாக சோறு போட்டு வளர்ப்பது விரலை அசைப்பது ஆகாது என்றால் நகத்தை அசைப்பது என்று வைத்துக் கொள்ளலாமா. //

          வைத்துக் கொள்ளுங்கள்..

          இங்கே சோறு போட்டு வளர்ப்பதை வைத்து இந்தியா தன் ஏகாதிபத்திய (?!) மூக்கை திபெத்தில் நீட்டுவதாகக் குறை கூறி கண்டிக்க முடியாது..

          // இந்திய அரசை ”காமடி பீசு”ன்னு சொல்கிறிர்களா //

          அப்படித்தான் தோணுது.. உங்களுக்கு வேற எப்படி தோணுது..? ஏகாதிபத்தியம் என்றா..?

Leave a Reply to Maakkaan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க