privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாரஜினி ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

ரஜினி ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

-

இணைப்பு:

ரஜினி-ரசிகர்கள்

விடலைப் பருவத்துக்கேயுரிய அறிவு வளர்ச்சியும் உதிரித்தனமும் கொண்ட உழைக்கும் வர்க்கத்து இளைஞர்கள்தான் ரஜினி ரசிகர்களில் ( எல்லா ரசிகர்களும்தான் ) முக்கியமானவர்கள். குழப்பமான, உதிரித்தனமான மனோபாவத்தில் வளரும் இவர்கள் ரஜினியைத் தலைவா என்றும் தெய்வமே என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விடலைத்தனம் இத்தோடு முடிந்து விடுவதில்லை. பிழைப்புவாத அரசியலின் சமூக அடித்தளமாக இவர்கள் மாறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கட்சி இதற்கொரு முன்னோடி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பாசிச சக்திகள் அதிகாரத்துக்கு வரும்போது இதே கூட்டம் அவர்களது குண்டர் படையாக மாறுகிறது. இந்தக் கொக்குகளின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்து விடலாம் என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளின் கனவு.

ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டபோது “தேவையில்லை சார், அவர் ஒரு பிசினஸ்மேன் “என்று திமிராகப் பதில் சொன்னார் ஒரு ரசிகர் மன்றத் தலைவர். “நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.

அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும். “தலைவா, காங்கிரசில் சேர்; தனிக்கட்சியாவது தொடங்கு” என்று 1995 இல் ரஜினிக்கு வேண்டுகோள் விட்டவர்கள் இந்த ரசிகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, பிராந்திக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நடத்தும் ரசிகர் மன்றத் தலைவர்கள், வட்டம் மாவட்டத்துக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் தலைவராக இருக்கின்றனர். பெயர்ப்பலகை மாற வேண்டியதுதான் பாக்கி.

இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாபா டிக்கெட் விற்பனை. பாபா படத்தை விநியோகஸ்தர்கள் மூலமாக விற்காமல் நேரடியாகத் திரையரங்குகளுக்கு விற்றிருக்கிறார் ரஜினி. பத்திரிகைகளின் கணிப்புப்படி மொத்த வருமானம் 70 கோடி. பன்மடங்கு தொகை கொடுத்து படத்தை வாங்கிய தியேட்டர் அதிபர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஏலம் விட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தின் நகரத் தலைவர்களுக்கு முதல் காட்சி. திருச்சியில் ஷாகுல் ஹமீதுக்கு 4 காட்சி; கலீலுக்கு 2 காட்சி. இதை ரசிகர்களிடமே பிளாக்கில் விற்று சில லட்சங்களை இவர்கள் சுருட்டிக் கொள்வார்கள்.

மற்ற காட்சிகளனைத்தும் பகிரங்க ஏலம். ரசிகர்கள், ரசிகரல்லாதவர்கள் எனப் பலரும் ஏலம் எடுத்துள்ளனர். 1000 இருக்கைகள் கொண்ட அரங்கில் ரூ. 50 ( சராசரி ) வீதம் ஒரு காட்சியின் உண்øமையான விலை 50,000. கேளிக்கை வரி இதற்கு மட்டும்தான். ஒரு காட்சி ஒரு லட்சம் முதல் ஒன்றேகால் லட்சம் வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் 100, 125க்கு வாங்கி 200, 250க்கு விற்று விடலாமென்றும் ஓரே நாளில் 50, 60 ஆயிரங்களைப் பார்த்துவிடலாம் என்றும் கனவு கண்டவர்கள் ஏலமெடுத்திருக்கிறார்கள். வீடு , நகையை அடமானம் வைத்து, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியும் பலர் முதலீடு செய்திருக்கின்றனர்.

படம் தோல்வியடைந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான பேர் தமிழகமெங்கும் திவாலாகியிருக்கின்றனர். மனைவிக்குத் தெரியாமல் நகையை வைத்து ஒரே நாளில் சம்பாதித்து மனைவியிடம் காட்டி அவளை ஆச்சரியத்திலாழ்த்த விரும்பியவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகச் சொன்னார் ஒரு திரையரங்க அதிபர்.

திருச்சி நகரில் ஒரே நாளில் இத்தகைய ‘ முதலீட்டாளர்கள் ‘ பத்துப் பேரைச் சந்தித்தோம். எல்லொரும் 40,000 முதல் 75,000 வரை இழந்தவர்கள். தீடீர்க் காசு பார்க்க விரும்பிய இந்தக் கூட்டம் ஏமாந்து விட்டது குறித்து நாம் வருந்தத் தேவையில்லை. ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த அர்சத் மேத்தாவின் பெயர் பாபா!

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________