privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதை21-ம் நூற்றாண்டிலா இப்படி?

21-ம் நூற்றாண்டிலா இப்படி?

-

பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு.
எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல.

”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?” – என்ற வியப்புக்குறி
இத்தகைய ரகம்.

சாதிப்படுகொலை மதக்கலவரம்
வரதட்சணைக் கொலை உடன்கட்டையேற்றம் –
போன்ற சமூக ஒடுக்குமுறைகளானாலும்…

நரபலி… தீமிதி, சோதிடம், வாஸ்து சாத்திரம்
சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற மூட நம்பிக்கைகளானாலும்…

கல்வியறிவின்மை மருத்துவ வசதியின்மை
குடிநீர்ப் பஞ்சம் பட்டினிச்சாவு
போன்ற வர்க்கச் சுரண்டல்களானாலும்…

மரண தண்டனை துப்பாக்கிச் சூடு காவல்நிலையக் கொலை
போன்ற அரசு ஒடுக்கு முறைகளானாலும்…

இதே கேள்வி: இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?

கேட்பவர்கள் பாதிரியார்களாகவும்
கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால்
கேள்வி நியாயம்தான்

கேட்பவர்கள் அறிவாளிகள்.
கேட்கப்படுவதோ – பாவம் நாட்காட்டி!

நாள் என் செயும்? நாட்காட்டி என் செயும்?

டிசம்பர்-31 இரவு
தனது கடைசி காகிதத்தையும் உதிர்த்த நாட்காட்டி
”யாமிருக்க பயமேன்” என்று
இரண்டு துருப்பிடித்த ஆணிகளை மட்டுமே
தனது பதிலாக நீட்டுகிறது.

2000 ஆண்டுகள் முடிந்து விட்டன, அதற்கென்ன?

தனது அநாகரிகக் கொள்ளைக்கு ’எத்தனை ஆண்டுகள்’ – என்று
எண்ண வேண்டிய ஜெயலலிதா
’இந்திய நாகரீகத்திற்கு 5000 ஆண்டு’ – என்று கணக்குச் சொல்கிறார்.

’கிளிண்டனே மீட்பன்’ என்று தேவ ஊழியஞ் செய்யும்
ஆர்.எஸ்.எஸ். அடிமைகளோ
பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவைக்
காலனியாதிக்கவாதியாக்குகிறார்கள்.

கலியுகத்திற்கு 501-ஆம் ஆண்டு என்று
பஞ்சாங்கத்தை நீட்டுகிறார்கள் –
அட்டையில் பார்ப்பனப் பாம்பு சீறுகிறது.

5000 ஆண்டுகளாகவே இருக்கட்டும். அதற்கென்ன?

பூச்சியங்கள் என்ன செய்யும்? பூச்சியங்களின் மாயக்கவர்ச்சியில்
கணிதம் மயங்கலாம்; வரலாறு மயங்குவதில்லை.

மனித குலத்தின் வரலாற்று நெடுஞ்சாலையில்
தப்பிப் பிழைத்த ஒரு மைல்கல் கிறிஸ்து சகாப்தம்.

சாலிவாகன சகாப்தம் விக்கிரம சகாப்தம் – எனத்
தங்கள் திருப்பெயரால் கல்லை நட்ட கோமாளிகளின்
நடுகற்களையும் காணவில்லை.

திருச்சபையின் ஆட்சியை முடித்து வைத்த மூலதனம்
ஆண்டவருக்கு வழங்கிய மானியம் ”கிறிஸ்து சகாப்தம்.”
*

கி.பி.2001 பூச்சியங்கள் கூடக்கூட
மனிதகுலத்தின் முன்னேற்றம் கூடுமெனில்
வயது கூடினால் மனிதனின் அறிவும் கூட வேண்டும்.

இருபதால் நூற்றாண்டிலா இப்படி
என்ற வியப்புக்கு விடை

அறிஞர் பெருமக்களே,
இருபதாம் நூற்றாண்டில்தான் இப்படி!

தங்கம், வெள்ளி, வைரம், இரும்பு, செம்பு, துத்தநாகம்,
யுரேனியம், கோபால்ட் – போன்ற அனைத்து உலோகங்களையும்
நெல், வாழை, கரும்பு, சோளம், காப்பி
என்றனைத்துப் பயிர்களையும் விளைவிக்கும் – சயர்*
பிச்சைக்கார நாடு!

இவையெதுவுமில்லாத ஜப்பான் பணக்கார நாடு.
இருபதாம் நூற்றாண்டில்தான் இது சாத்தியம்.

வானம் பொய்த்த போது மனிதர்கள்
பஞ்சத்தால் செத்திருக்கிறார்கள்.

கறந்த பாலைச் சாக்கடையிலும்
விளைந்த கோதுமையைக் கடலிலும் கொட்டிவிட்டு
ஆண்டுக்கு 150 லட்சம் மனிதர்களைப்
பட்டினி போட்டுச் சாகடிப்பது இருபதாம் நூற்றாண்டில்தான்.

கொள்ளை நோய்களுக்கு மருந்து தெரியாமல்
மக்கள் மடிந்த நூற்றாண்டுகளுண்டு.
மருந்து வியாபாரிகளின் கொள்ளையால்
மக்கள் மடிவது இருபதாம் நூற்றாண்டு.

துன்பத்தால் துடிக்கும் நோயாளியின் சட்டைப் பையைத்
துழாவியிருப்பாரா ஹெராக்ளிடஸ்?*
கையைப் பிடிக்குமுன் பையைப் பிடித்துப் பார்க்கிறார்கள்
அவரது இருபதாம் நூற்றாண்டு சீடர்கள்.
முன்னேற்றம் காலத்தால் அளவிடப்படுவதில்லை.

சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் –
ஆரியக் காட்டுமிராண்டிகள்.
காலத்தால் பிந்தையதென்பதால்
ஆரியம் – முன்னேற்றமலல.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளுக்குப்
பிந்தையதுதான் மனுநீதி.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்தான் லூயி போனபார்ட்.*
அக்டோபர் புரட்சிக்குப் பிந்தையதுதான்
எல்ட்சினின் ஆட்சிக் கவிழ்ப்பு.
முன்னேற்றம் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை.
காலம்தான் முன்னேற்றத்தால் அடையாளம் இடப்படுகிறது.

இயற்கையுடன் மனிதன் கொண்ட உறவினால்
காலத்தை அடையாளமிடுவதாயின்
அன்று கற்காலம்.
இன்று கணினிக் காலம்.

மனிதனுடன் மனிதன் கொண்ட உறவினால்
அடையாளமிடவதாயின்
இது முதலாளித்துவத்தின் காலம்; ஏகபோக மூலதனத்தின் காலம்.

இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர்
முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள்
– கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்.

அநீதியின் திரண்ட வடிவம் மூலதனம்
பாட்டாளி வர்க்கம் உழைக்க உழைக்க,
பாற்கடலைக் கடையைக் கடைய,
மூலதனம் எனும் ஆலகால விஷம்தான் திரண்டு வருகிறது.

கடலின் அடியாழத்தில் கிடந்த அனைத்துக் கசடுகளும்
புதிய வீரியத்துடன் மிதந்து எழும்புகின்றன.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்
இந்தியச் சாதிகள்
ஆப்கான் இனக்குழுக்கள்
எகிப்தி மம்மிகள்…
இறந்தகாலத்தின் ஆவிகளனைத்தும்
மூலதனத்தின் குரலில் அலறுகின்றன.

செவ்வாய் நோக்கிப் பாய்கிறது விஞ்ஞானம்.
தத்துவ ஞானமோ, நீட்சேயின் மீமனிதன்
கான்ட்டின் அறியொணாவாதம்
சங்கரனின் மாயாவாதம் – என
கி.மு-வை நோக்கித் திரும்புகிறது.

டோலி*யைப் படைக்கிறது விஞ்ஞானம்;
மேய்ப்பவனை நாடுகிறது மெய்ஞ்ஞானம்.
எல்லா உற்பத்திச் சக்திகளும் முன்நோக்கிப் பாய்கின்றன;
உற்பத்திச் சக்திகளில் தலையாய மனிதன்
பின்னிக்கிழுக்க்ப்படுகிறான்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பிறந்தார்.
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் அவதரித்தான் –
குரங்கிலிருந்து.

கற்காலத்தின் முதல் கல்லை
மனிதன் தீட்டத் துவங்கியதோ
ஒரு லட்சம் ஆண்டுகள் முன்.
கல்லையும் மரத்தையும் செதுக்கியபோதெல்லாம்
தானும் செதுக்கப்பட்டதை அறியாமல்.
மண்ணை உழுதபோதெல்லாம்
தானும் பண்படுத்தப்பட்டதை உணராமல்,
நூற்றாண்டுகள் பல போயின.

மார்க்ஸ் வந்தார்:
”இயற்கையை மாற்றியமைத்த போதே நீயும்
மாற்றியமைக்கப்பட்டாய்.
”இயற்கையுடனான உனது உறவு மாறியபோது
சக மனிதனுடனான உனது உறவும் மாறியதே.
உன் உடலின் மீதே உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்டபோது
நீ அடிமை;
நிலத்திலிருந்து அந்நியப்பட்டபோது பண்ணையடிமை.
இப்போது உன் உழைப்பிலிருந்தே
அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறாய், நீ பாட்டாளி”

”உழைப்பு – இயற்கையினால் சுமத்தப்பட்ட அவசியம்.”

”உழைப்பைச் சாபக் கேடாகவும்
ஓய்வைச் சுதந்திரமாகவும் உணர்தல்
மனிதத் தன்மையல்ல.”

”எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்குரியதாகியிருக்கிறது.”

”பாட்டாளி வர்க்கமே நீதான் இம்மனித குலத்தின் மீட்பன்”

”உன் பணி உலகை வியாக்கியானம் செய்வதன்று –
அதனை மாற்றியமைப்பது”
– என்று தத்துவ ஞானத்தைத் தரையிறக்கினார் மார்க்ஸ்.

சொல்லுங்கள்! மனித குலத்தின் வரலாற்றை
யாருக்குப் பின் – என்று கணக்கிடுவது பொருத்தம்?

மார்க்சுக்குப் பின் என்று கணக்கிட்டவர்கள்
சோசலிசம் படைத்தார்கள்.

கிறிஸ்துவுக்கு மறுவருகையில்லை; கிருதயுகம் எழுவதுமில்லை.

விலங்குத் தன்மையை இழந்தவன் மனிதன் –
எனக் குறிக்க வேண்டுமானால்
குரங்குக்குப் பின் என்று கணக்கிடலாம்.

மனிதத் தன்மையை உணர்ந்தவன் மனிதன் –
எனக் குறிக்க வேண்டுமானால்
மார்க்சுக்குப் பின் என்று கணக்கிடலாம்.

’21-ஆம் நூற்றாண்டிலா!’ என்ற
வியப்புக்குறியைக் கேள்விக்குறியாக்குங்கள்.

நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா?
குறளுக்குப் பின் மனுநீதியா?
சோசலிசத்திற்குப் பின் முதலாளித்துவமா?
– என்று கேட்டுப் பழகுங்கள்.

மனிதர்களின் வரலாற்றை
மார்க்சுக்கு முன்
மார்க்சுக்குப் பின் – என்று
திருத்தி எழுதுவோம்.
தேவனின் வரலாற்றையும்தான்.

குறிப்பு:
1. சயர்- மத்திய ஆப்பிரிக்காவின் மிகவும் பின்தங்கிய ஏழை நாடு.
2. ஹெராக்ளிடஸ்: கிரேக்க அறிஞர்; மருத்துவ உலகின் தந்தையெனக் கருததப்படுபவர்.
3. லூயி போனபார்ட்: மன்னராட்சியை ஒழித்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தன்னையே மன்னனாக முடிசூட்டிக் கொண்ட கழிசடைப் பேர்வழி.
4. டோலி: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் உருவாக்கிய ஆடு.

___________________________________________________________________

– மருதையன், புதிய கலாச்சாரம், ஜனவரி, 2000.

___________________________________________________________________

  1. 21-ம் நூற்றாண்டிலா இப்படி? – தோழர் மருதையன்…

    பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு. எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல. ”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?” – என்ற வியப்புக்குறி இத்தகைய ரகம்….

  2. //இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர்
    முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள்
    – கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்//

    அருமையான கவிதை…வினவு 2011 ஐ தோழர் மருதையனின் வீரியமான மக்கள் கவிதையுடன் துவக்கியிருக்கிறீர்கள். எப்போதும் போல உங்கள் பணி புதுவருடத்திலும் சிறக்கட்டும். தமிழ்மணம் traffic rank -ல் முதலிடம் வகிப்பதற்கும் வாழ்த்துக்கள்!

    • இந்த மொக்கை எல்லாம் சரி, சேர்மன் மாவும் தோழர் ஸ்டாலினும் கொன்றோழித்த எட்டு கோடி உயிர்களுக்கென்ன பதில் ? அதுவும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த அநியாயங்கள் தானே ? முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து ஒரு ‘கிவிதை’, அதுக்கு மொக்கையாக கமெண்டுகள் வேறு…வேலை இல்லாத யூனியன் பசங்க இவ்வளவு இருந்தால் நாடு அப்பிடி தான் நாசமாப் போகும்.

      • இந்த கோயபல்ஸ் புழுகு புதைத்த இடத்தில் மரம் முளைத்துள்ளது. ரசிய ஆவணக்காப்பகம் விரியத் திறந்து கிடக்கிறது. அவதூறு செய்யும் ‘ஆத்மாக்கள்’ தான் ஆதாரம் தரவேண்டும். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குதான் இதே பொய்யை வைத்து காலத்தை ஓட்டுவீர்கள்? நீ எழுப்பும் இந்த அரதப் பழசு அவதூறுக்கு ஆதாரம் கொடுத்து விட்டு யூனியன் பத்தி பேச வா.

        • when you read
          சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் –
          ஆரியக் காட்டுமிராண்டிகள்.

          You dont need evidence. You just like the story because it comforts you.But when others use the same trick you get angry …?

          Why not visit North Korea and identify how many peoples lost life because of Communism ?

  3. ஆம், 21ம் நூற்றாண்டில்தான் :

    இந்தியாவில் விதைத்த விதை
    அமெரிக்காவில் முளைகிறது –
    டாக்டர்களாகவும், எஞ்சினீயர்களாகவும்.
    இங்கு இந்தியாவின் மன்னர்களாய்
    மகுடம் சூட்டியிருந்தவர்கள்
    -ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான் –
    அமெரிக்காவின் அடிமையாகிப் போனார்கள்.

    விதையைத் திருடி
    விஷம் கலந்துவிட்டால் –
    விவசாய விஞ்சானி.
    ஆனால் உபரி விளைச்சல்
    மனித வயிற்றுக்கல்ல;
    பெருச்சாளிகளுக்கு!
    -ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான் –

    வரிசையில் காத்துக்கிடக்கும்
    வண்ண வண்ண ப்ளாஸ்டிக் குடங்களின்
    அழகியலும்;
    சச்சினின் குழந்தைத் தனமான
    ப்பெப்சி விளம்பபரத்தின் அழகியலும்
    ‘வைரமுத்து’ச் சமாசாரங்கள்.
    ஆனால் இங்கு கவனிக்கத்தக்கது :
    ‘தண்ணீர் மேடு நோக்கிப் பாய்கிறது…!’
    -ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான் –

    உணவு, நீர் – மேட்டுக்குடி வர்கத்துக்கு.
    மிச்சமிருப்பது சுவாசக் காற்று.
    அதையும் பையிலடைத்துவிட்டால்
    சுத்தமான சுதந்திரக் காற்றும்
    அவர்களுக்கே கிடைத்துவிடும்.
    21ம் நூற்றாண்டே, இதையும் சிந்தித்துவிடு!

    சுடுகாட்டுக் கொட்டகையிலும்,
    சுனாமியின் பிணங்களிலும்
    சுவைபார்த்த பரிசுத்தக் கைகள்
    ‘ஸ்பெக்ட் ரம்’ அலைவரிசையைத் திறுகியபோது
    கிடைத்த பல்லாயிரங்கோடிகள்.
    பிண நாற்றமடிக்காத விஞஞான ஊழல்;
    இந்த 21ம் நூற்றாண்டின்
    விஞஞான முன்னேற்றமில்லையா?

    காளஹஸ்திக் கடவுளுக்கும்
    க்ரையோஜெனிக் இயந்திரத்துக்கும்
    விஞ்ஞான முடிச்சிடலாம்.
    ரெண்டாகத் தேங்காய் பிளந்தால்
    ராக்கெட் விண்ணோக்கிப் பாயும்.
    ஆனால் விஞ்ஞானமும் பொய்க்கிறது –
    இந்த 21ம் நூற்றாண்டில்தான்!

    ***

    21ம் நூற்றாண்டின் விந்தைகள் தொடரும் :

    நம் வீட்டு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும்
    செல்போன் இருந்தும்
    அலுமினியத் தட்டுக்கள்
    உணவின்றி காய்ந்து கிடக்கும்போது…!

    தவணைமுறை ‘பல்சரில்’
    ப்ளாஸ்டிக் குடங்களைக் கட்டி
    குழாயடியிலிருந்து தண்ணீர் கொணரும்போது…!

    பன்னாட்டுக் கம்பெனிகளின்
    எலிப்பொறிக் காசில்
    காதலிக்கு கால்முழப் பூ வாங்க
    (கிலோ ஆயிரம் ரூபாய்)
    முடியாதென்று தெரியும்போது…!

    – பல்சர் அல்ல –
    சைக்கிளைக்கூட சீதனமாகக் கொடுக்கமுடியாது
    தட்டிக் கழியும் தங்கயின் மண நாளை நினைக்கும்போது…!

    அறுவைச் சிகிச்சைக்கு
    லட்சங்களைக் கேட்கும் அப்பொல்லோக்களால்
    அற்பாயுசில் மாளப்போகும் அம்மாவைப் பார்க்கும்போது…!

    அல்லது
    தன் சக அம்பிகாக்கள்
    தலை நசுங்கியிறக்கும்போது…!

  4. //”உழைப்பைச் சாபக் கேடாகவும்
    ஓய்வைச் சுதந்திரமாகவும் உணர்தல்
    மனிதத் தன்மையல்ல.”//

    உழைப்பு –

    அனைவருக்குமே தாரக மந்திரம்!
    பிறப்பு முதல் இறுதி வரை!

    உழைக்கச் சொல்லுபவனே நல்ல ஆசான்/நண்பன்!

    ஒவ்வொருவரும், ஒரு இலக்கை மையப்படுத்தி, தன்னால் முடியும் வரை உழைத்து, குறிக்கோளை அடைய வேண்டும்!

    முற்போக்கு சிந்தனையும், பாசிடிவ் எண்ணங்களும், உழைப்பும் வெற்றிக்கு வழிகாட்டிகள்!

  5. in general it is said : that as years go by human development will take place and hence a better system will prevail. for eg first it was slaces , then it was monarchy , then it is now democracy (fashionable word for capitalism).
    so we can say after sometine socialism.
    but vinavu s art says otherwise??
    any answers??
    s seshan

  6. தோழரின் கட்டுரை மிக அருமை.
    2000 ஜனவரியில் எழுதிய கட்டுரை இன்றும் உலகோடு பொருத்தி பார்க்க உதவும் கண்ணாடியாக கட்டுரை.

  7. சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் –
    ஆரியக் காட்டுமிராண்டிகள்.
    காலத்தால் பிந்தையதென்பதால்
    ஆரியம் – முன்னேற்றமலல.

    ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளுக்குப்
    பிந்தையதுதான் மனுநீதி.
    பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்தான் லூயி போனபார்ட்.*3
    அக்டோபர் புரட்சிக்குப் பிந்தையதுதான்
    எல்ட்சினின் ஆட்சிக் கவிழ்ப்பு.
    முன்னேற்றம் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை.
    காலம்தான் முன்னேற்றத்தால் அடையாளம் இடப்படுகிறது.

    இயற்கையுடன் மனிதன் கொண்ட உறவினால்
    காலத்தை அடையாளமிடுவதாயின்
    அன்று கற்காலம்.
    இன்று கணினிக் காலம்.

    மனிதனுடன் மனிதன் கொண்ட உறவினால்
    அடையாளமிடவதாயின்
    இது முதலாளித்துவத்தின் காலம்; ஏகபோக மூலதனத்தின் காலம்.

    இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர்
    முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள்
    – கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்.

  8. maruthaiyan…..

    Why are not against so much against Capital?
    why are you trying to create ‘capital’ as devil?

    Capital is just money….Only problem lies on Huiman being…
    I agree capital should be possessed by Human being including Communist….

    Person who shows hatred over Capitalist is not against Capitalism….It is beacause of jealosy over the person who possess the money…

    Ownership over money by single person is ugly,,,,it is harmfull…but,Ownership over money by Govt officials will be too harmful to human life…..

    all around the history ,we see the ugly things…..

    Society is not real..only Real is indivual…
    In the name of Religion,Politics,God…..Human beings should not be sacrificed….

    In the name of any ISM-either Capitalism,Hinduism,Mohammednism,Chritianism or Communism too….

  9. ஒரு தமிழ் வலதுசாரி
    //
    இந்த மொக்கை எல்லாம் சரி, சேர்மன் மாவும் தோழர் ஸ்டாலினும் கொன்றோழித்த எட்டு கோடி உயிர்களுக்கென்ன பதில் ? அதுவும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த அநியாயங்கள் தானே ? முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து ஒரு ‘கிவிதை’,//

    You are right ……People are hiding the real facts behind the beautiful things including ‘Maruthaiyan’ Kavithai too..

    Man who won the Power shows all his ugliness towards on People to whom he worked for long……

    Human should be changed…..His Awareness should go high like Buddha….

    Communism is Religion….even they denied GOD…
    Trinity of Communism :MARX,ENGLES and LENIN…..

    One should not be fanatic over any Ideology………….
    particularly….

  10. திருச்சபையின் ஆட்சியை முடித்து வைத்த மூலதனம்]]]]]]]]]

    மூலதனத்துக்கும் தான் கில்லாடி கொர்ப்பசோவ்வும் சங்கு ஊதிட்டாரே. இன்னுமா நம்புது இந்த ஊரு உங்க புரட்டை.

  11. நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா?
    குறளுக்குப் பின் மனுநீதியா?
    சோசலிசத்திற்குப் பின் முதலாளித்துவமா?
    – என்று கேட்டுப் பழகுங்கள்.மிக்க நன்றி வணக்கம். இருப்பினும் 2013 இதையே இன்று உலகின் பல மக்கள் ஏற்று கொண்டாடி மகிழ்கின்றனர்.சிந்திப்போம் நறுக்கென்ற ந்னாயமான கேள்விகள்.

  12. இன்று நாம் எப்படி உள்ளோம்?நமது படிப்பு,நமது பணிகள்,நமது பதவிகள்,நமது அமைதியான+ஒற்ருமையான சமூக பொருளாதார பணபலம்,அன்றாட சாப்பாடு,வீடு,மற்றவசதிகள் எப்படி உள்ளது? 20013இல் இருந்து மாற்றியமைப்போம்.சிந்திப்போம்.ஈழத்தில் நம்முறவுகள் படுகொலை செய்யப்பட்டது? மீன்பிடிப்பதற்க்காக கடலுக்கு சென்றவர் நம்மில் எத்தனைபேர்கள் திரும்பிவரவில்லை? கடற்கரையோர மணல் எடுப்பதில் எத்தனைபேர் கொல்லப்பட்டோம்?கூடங்குளத்தால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்? இதற்காக நாம் என்ன செய்தோம்?இனி என்ன செய்யவிருக்கின்றோம்.???நமது இடங்களை அன்னியர் வாங்குதல் முறையோ?அதனால் நச்சான தொழிற்கூடங்கள் அமைக்கப்படுவது நம் வாழ்வுக்குத்தகுந்தது அல்ல.நாம் நம்மை முதலில் உருவாக்குவோம்.பிறகு அடுத்தவரை உருவாக்குவோம்.ஒன்றுசேர்,கூட்டம்போடு,முடிவெடு,செயல்படு.

  13. தோழரின் கட்டுரை மிக அருமை. நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்! நன்றி! புதியபாமரன் அவர்களுக்கு!

  14. இது முற்போக்கா சிந்திக்க வைக்கும் ஒப்பீட்டு கவிதை வரிகள் மட்டுமல்ல.
    மனிதர்களின் வரலாற்றை மாற்றி அமைக்கும் கணைகள்.

    ///மனிதர்களின் வரலாற்றை
    மார்க்சுக்கு முன்
    மார்க்சுக்குப் பின் – என்று ///

    திருத்தி எழுதுவோம்.

    நன்றி – தோழர் மருதையன் அவர்களுக்கு.
    நினைவூட்டலுக்கு -நன்றி வினவு

  15. இஸ்லாமை கரையேற்ற முயற்சிபது போல் உள்ளது. இந்த கவிதை வரிகளில் வழக்கம் போல் இந்துக்களை திட்டியும் ஓரளவு கிறிஸ்துவத்தை சாடியும் உள்ளீர்கள்!!! ஆனால் இஸ்லாம் இந்த ஆண்டில் என்னவெல்லாம் மனித சமுதாயத்திற்கு கொடுமை செய்யப்போகிறதோ என்று நினைத்தால் பயமாக உள்ளது!!!!!! எங்கு மனித குண்டு வெடிக்குமோ என்று தெரிய வில்லை. தினசரி இஸ்லாமிய நாடுகளில் குண்டு வெடிப்புத்தான் வெற்றியாக உள்ளது!!!!

    அனைவரும் நலமாக வாழ அந்த அல்லாவை பிரார்த்திப்போம்!!!!!!

    “பெட்றோடாலருக்கு” மயங்கக்கூடாது!!!!!!

    • இந்த மதவெறிப்பேயை உடுக்கடித்து கிளப்பி விட்ட புஷ் சிடம் கேடக வேண்டிய கேள்வியை இஙகு கேட்பது பொறுத்தமற்றது.

  16. /// உன் உடலின் மீதே உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்டபோது நீ அடிமை;
    நிலத்திலிருந்து அந்நியப்பட்டபோது பண்ணையடிமை.
    இப்போது உன் உழைப்பிலிருந்தே
    அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறாய், நீ பாட்டாளி” ///

    அற்ப்புதமான கவிதை……
    நவீன அடிமபடுதுதலுக்கு எதிரான முழக்கம்….
    நாம் அடிமை படுதபடுகிறோம் என்ற சிந்தனையை தூண்ட நினைக்கும் உங்களுக்கு நன்றி….
    மார்க்சிய சிந்தனையுடன் புது வருட நல்வாழ்த்துக்கள்….

  17. ஆம்! இந்த ஆண்டின் காலத்தை முன்னேற்றத்தின் சுவடுகளால் குறிக வேண்டிய பிற்போக்கு அவலச் சூழலில் லகமும், நாடும், தமிழகச் சூழலும் உள்ளன. பார்ப்பனிய விழுமியங்கள் தலைதூக்கிய நிலையில், இந்நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் சாதிச் சமர் முடித்து வன்கொடுமை, தீண்டாமை, ஊரெரிப்பு வக்கிரங்கள் ஒலிக்கவும்; முதலாளித்துவ பன்னாட்டு மூலதனம் ஏவும் அரசு பயங்கரவாதம் வென்று, கூடங்குளத்தி தக்கவைத்துக் கொள்ள சமரசமற்றுப் போராடுவதற்கும், ஒடுக்குமுறையும், துப்பாக்கிச் சூடும் இன ஒலிப்பும், மண்ணைக் காக்கும் மக்கள் ஒலிப்பும் தங்கள் பிரதானக் கொள்கையெனக் கொண்ட இந்திய தமிழக அரசுகளை மக்கள் திரள் கொண்டு வென்று புதிய ஜனநாயகம் படைக்க்வவும் இந்த ஆண்டு பயன்படட்டும்.
    மருதைய்யனிடம் மார்க்சிய பாடம் கற்பது எப்போதுமே ஒரு பௌதீக மாற்றத்தை விளைவிக்கத்தான் செய்கிறது!

  18. சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் –
    ஆரியக் காட்டுமிராண்டிகள்.

    குத்து மதிப்பாக கதை விடுவது….இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. சிந்து சமவெளி எப்படி முடிவுக்கு வந்தது எனபது விடுபடாத புதிர் .
    சிந்து வெளியின் சாலையில் கிடந்த இரண்டு பிணங்களை கொண்டு , ஆரிய கதை கட்ட பட்டது.

    முனியப்பனும் கருப்பசாமியும் குதிரை வாகனம் கொண்டுள்ளதால் , அவரகளும் ஆரியரோ ?
    நான் ஆரியர்களின் ஆதரவாளன் அல்ல . ஆனால் ஆரிய பூச்சாண்டி காட்டி சமூகத்தை ஏய்க்கும் கூட்டத்தை வெறுக்கிறேன் உண்மையான பிரச்சினையை அது திசை திருப்புகிறது .

    பரத கண்டே பரத கண்டே என்று வேதம் எழுதினவன் வெளிநாட்டுகாரன் என்று கோரும் தமிழனிடம் என்ன இருக்கிறது ? இந்தியாவிலேயே உருவான மனித இனமோ ?
    அரிசி உண்ணும் தமிழா … அரிசி முதன் முதலில் எங்கு மனித இனம் சமைத்து பழகியது தெரியுமா ?

    இந்த இருபது ஓராம் நூற்றாண்டிலும் , உண்மை என்று தெரியாத நிலையில் , இட்டு கட்டி எழுதும் வினவுகள் இருக்கும் போது பாபாக்கள் இருப்பதில் வியப்பில்லை

Leave a Reply to thenmozhi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க