உலகளாவிய உணவுப் பொருள் ஊக வணிகத்தில் கோல்டமேன் சாக்ஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு $400 மில்லியன் (சுமார் ரூ 2,000 கோடி) லாபம் சம்பாதித்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் பணத்தை கோதுமை, மக்காச் சோளம், காபி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் மீதான ஊக வணிகத்தில் ஈடுபடுத்தியதாக கோல்ட்மேன் சாக்ஸின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
“போதுமான உணவு வாங்க முடியாமல் உலகெங்கிலும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியாக இருக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை மீது சூதாடி கோல்மேன் சாக்ஸ் அலுவலர்கள் தங்களது போனசை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் உலக முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டீன் ஹெய்க்.
1990களில் இறுதியில் தாராளமய கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொருட்கள் மீதான ஊக வணிகத்தில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் $200 பில்லியன் (சுமார் ரூ 10 லட்சம் கோடி) தொகையை கொட்டியுள்ளன. கோல்டமேன் சாக்ஸ் இந்த வணிகத்துக்கு தேவையான நிதி வர்த்தக கருவிகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தது. இப்போது அதற்கான லாபத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்காகியிருக்கின்றன. பெருமளவிலான ஊக வணிக சூதாட்டத்தினால் உணவுப் பொருட்களின் விலைகள் அடிக்கடி ஏறி இறங்குவதோடு திடீரென்று பெருமளவு அதிகரிக்கவும் செய்கின்றன. 2008ம் ஆண்டு உச்சத்தை தொட்ட உணவுப் பொருள் விலை குறியீட்டு எண் மீண்டும் 2011ல் மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டது.
உதாரணமாக வேலியிடப்பட்ட நிதிய நிறுவனமான அர்மஜாரோ ஜூலை 2010ல் உலகளாவிய கோக்கோ கையிருப்பில் 15 சதவீதத்தை வாங்கியதன் மூலம் அதன் விலையை 33 ஆண்டுகளில் அதிக அளவுக்கு ஏற்றி விட்டது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து மூன்றாம் உலக நாடுகளில் நிலம் வாங்குவதிலும் நிதி நிறுவனங்கள் தமது முதலீட்டை அதிகரித்திருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தினமும் பட்டினியாக இருக்கும் 100 கோடி மக்களுக்கு தேவையான உணவை விளைவிக்கும் அளவிலான நிலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் உலக உணவுப் பொருட்கள் விலை இது வரை இல்லாத அளவை தொட்டிருக்கும் போது, ஒரு நில அபகரிப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்பாம் என்ற தன்னார்வ நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மன்மோகன் சிங்-ப சிதம்பரம்- மான்டேன் சிங் அலுவாலியா முன் வைக்கும் இந்திய பொருளாதாரத்தை உலக சந்தையுடன் ஒருங்கிணைப்பது, இந்தியாவில் சில்லறை வணிகத்திலும், நிதித் துறையிலும் அன்னிய முதலீடுகளை கட்டுப்பாடின்றி அனுமதிப்பது, இந்திய விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பது என்ற பொருளாதார ‘வளர்ச்சி’ பாதை இத்தகைய படுகுழிக்குள்தான் நாட்டை இட்டுச் செல்லும். கண்ணை மூடிக் கொண்டு முழு வேகத்தில் தமது ஏகாதிபத்திய எஜமான்களுக்கு சேவை செய்வதுதான் இன்றைய ஆளும் வர்க்கத்தின் தேசப் பற்றின் வெளிப்பாடு.
மேலும் படிக்க :
முன்பு ஒருமுறை படித்ததான நினைவு. பேசியவர் எம்.ஆர்.ராதாவோ அல்லது பெரியாரோ என நினைக்கின்றேன், ஒரு மேடைப் பேச்சின் போது தமிழர்களை எவ்வளவு கேவலமாக பேசியும் பார்வையாளர்களிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லையாம். சாதிகளின் பெயரை குறிப்பிட்டு பேசும்போது செருப்புகள் வந்து விழுந்ததாம். அதுபோல அனைத்து மக்களையும் பாதிப்படையச் செய்யும் பொருட்களின் விலையேற்றத்தைப் பற்றிய இந்தப் பதிவிற்கு ஒரு மறுமொழியையும் காணோம். ஆனால், மதம், சாதி, நாயகர்கள் போன்ற பதிவிற்கு செருப்புகள் வந்து விழுவதுபோல மறுமொழிகள் விழுகின்றன. இது, இன்னும் நம் உணர்வுகள் மற்றமடையாததையே காட்டுகின்றன.
உண்மை தான்.
உண்மைதான்,
மறுமொழிகள் இல்லையென்றால் பதிவுக்கு மாற்றுக்கருத்துகள் இல்லையென்று கொள்ளவேண்டியதுதான்
வினவு ! ஏன் அந்த நிறுவனம் தடை செய்ய படவில்லை?
ஊக வணிகம் – விளக்குக? அது பங்கு சந்தை நிகரானதா?