பிப்ரவரி 3 ஆம் தேதி ஸ்ரீனிவாசலு என்பவரும் அவருடைய மனைவியும் திருப்பதிக்கு நடந்து செல்லும் வழியில், அவ்வாச்சாரி கோனே என்ற இடத்தில் உள்ள 100 அடி பள்ளத்தாக்கினுள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடனாக வாங்கிய ரூ 5,000க்கு ரூ 50,000 தர வேண்டும் என்று எழுதி வாங்கி மோசடி செய்த கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பித்தர முடியாமல் அவமானப்படுத்தப்பட்ட அவர்கள் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
‘உயிரோடு இருந்தவரை கடனை அடைக்க உதவாத ஏழுமலையானின் காலடியில் இறந்தால், இறந்த பிறகு வைகுண்டத்தில் இடம் பிடிக்க உதவுவார்’ என்ற நம்பிக்கையுடன் அவர்கள் தற்கொலைக்கான இடத்தை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
பணக்காரர்கள், தாங்கள் குவிக்கும் செல்வத்தின் ஒரு பகுதியை திருப்பதிக் கோயிலுக்கு காணிக்கையாக கொண்டு சேர்க்கிறார்கள். அதன்மூலம் இவ்வுலகில் தங்கள் வரிக்கணக்கை சீர் செய்து கொள்வதோடு தமது செயல்களுக்கான பொறுப்பை டம்மியாக இருக்கும் ஏழுமலையான் தலைமேல் ஏற்றிவைத்துவிட்டு, வைகுண்டத்தில் ஒரு இடத்தையும் ரிசர்வ் செய்து கொள்கிறார்கள். ராஜபக்சே போன்ற கொலைகாரர்களுக்கும் திருப்பதி ஒரு புண்ணியத் தலமாக அடைக்கலம் தருகிறது.
- ஊழியர்களுக்கு சம்பளம் தராமல், வங்கிக் கடன்களுக்கு டிமிக்கி கொடுக்கும் கிங்பிஷர் முதலாளி மல்லையா, சென்ற ஆண்டு டிசம்பர் 19ம் தேதி தன்னுடைய 58வது பிறந்தநாளுக்கு 3 கிலோ தங்க பிஸ்கட்களை திருமலை வெங்கடாசலபதிக்கு கொடுத்திருக்கிறார்.
- 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இது வரையில் இல்லாத அளவு அதிகபட்சமாக ரூ 5.73 கோடி ரூபாய் திருமலை உண்டியலில் போடப்பட்டது. தில்லியைச் சேர்ந்த ஒரு பக்தர் ரூ 2 கோடி போட்டதால் இந்த சாதனை சாத்தியமானது என்று தேவஸ்தானம் தெரிவித்தது.
இல்லாத வைகுண்டத்தில் இடத்தை பதிவுசெய்து கொள்ள மல்லையாக்கள் தங்கக் கட்டிகளை கொடுக்கின்றனர், ஏழைகளோ தமது உயிரையே கொடுக்கின்றனர். ‘ஏழைகள் தமது தற்கொலைகளால் திருமலைக்கு களங்கம் ஏற்படுத்தி பாபம் செய்கின்றனர்’ என்று பிரச்சாரம் செய்யும் கோவில் நிர்வாகிகள் மல்லையாவின் ‘பாப’ தங்கத்தை மட்டும் திருப்பித் தராமல் ஏழுமலையான் சார்பாக ஏற்றுக் கொண்டார்கள். பணக்காரர்கள் தமது வைகுண்ட பிராப்திக்காக ‘பாப’ வழிகளில் சம்பாதித்த பணத்தை ஏழுமலையானுக்கு பண மாலையாகவும், தங்க ஆபரணங்களாகவும், அணிகலன்களாகவும் கொண்டு போய் குவிப்பதை எதிர்த்து எந்த பிரச்சாரமும் நடப்பதில்லை.
சாதாரண பக்த கோடிகளை 4 மணி நேரம் முதல் 21 மணி நேரம் வரை காத்திருக்க வைக்கும் திருமலை பாலாஜி, காலையும் மாலையும் வி.ஐ.பிக் (பணம் படைத்தவர்)களை தடையின்றி, காத்திருக்க வைக்காமல் அருள் புரியும் விந்தையே கடவுள் என்ற நம்பிக்கை வியாபாரம், ஊழல், இருப்பவர், இல்லாதவர் என்ற அடிப்படைகளில்தான் இயங்குகிறது என்பதைக் காட்டுகிறது.
தனியார் முதலாளிகளின் லாப வேட்டையால் வாழ்வாதாரங்களை இழந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழில் நலிந்து போன நெசவாளிகளும், உதிரிப் பாட்டாளிகளாக சுரண்டப்படும் தொழிலாளர்களும் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரங்களை அழிக்கும் முதலாளிகள் திருப்பதி முதலான புனித தலங்களில் காணிக்கை செலுத்தி தமது ‘பாப’ மூட்டைகளை கரைத்துக் கொண்டு இன்னும் ஊக்கத்துடன் தமது வேலைகளை தொடர்கின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் கீழே விழுந்து விடாமல் வெற்றி பெறுவதற்கு திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். செயற்கைக் கோளை விழுந்து விடாமல் பூமியின் ஈர்ப்புக்கு வெளியில் செலுத்தத் தெரிந்த ஏழுமலையானுக்கு 100 அடி உயரத்திலிருந்து விழுந்து உடல் சிதறி தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்த பக்தர்களை கீழே விழாமல் காப்பாற்ற வக்கில்லை என்பதுதான் நிதர்சனம்.
மேலும் படிக்க