privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்அப்சல் குரு தூக்கு - HRPC கண்டன பிரச்சாரம்!

அப்சல் குரு தூக்கு – HRPC கண்டன பிரச்சாரம்!

-

அப்சல் குருவை தூக்கிலிட்ட இந்திய அரசின் பயங்கரவாதச் செயலை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளை சார்பாக 12.02.2013 காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2001 டிசம்பர் 13 அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவின் சட்டபூர்வமான உரிமைகளை மறுத்து ரகசியமாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் பேசும் போது, “அப்சல்குரு தூக்கிலிடப்பட்டது அநீதியானது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை. இருந்த போதும் `பாராளுமன்றம் தாக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவில்லையென்றால் தேசிய மனசாட்சி சாந்தமடையாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் இதனைக் கண்டித்து இந்து நாளிதழில் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ்-பி.ஜே.பி.,-உச்சநீதிமன்றம் சேர்ந்து செய்துள்ள இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து நாம் போரட வேண்டும். ஜனநாயகத்துக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம்” என்று பேசினார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு பேசும் போது “அப்சல்குருவுக்கு சட்டப்பூர்வமாக இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வாய்ப்புகள் எல்லாம் மறுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தாருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தார் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக அவர் தூக்கில் போடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளியே ஆனாலும் அவருக்கு உள்ள உரிமைகள் மறுக்கப்படக் கூடாது” என்ற அடிப்படையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசும்போது, “காஷ்மீர் மக்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார். அப்சல்குரு பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை. மூளையாகவும் செயல்படவுமில்லை. அதற்கு எந்த ஆதாரமோ, நேரடி சாட்சியங்களோ இல்லை. காவல்துறை, உளவுத்துறை அவரை மிரட்டி வாங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படை யிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட நடைமுறைகளுக்கு முரணானது. ஆனால் இதைத் தெரிந்தே உச்சநீதிமன்றம் செய்துள்ளது. அதற்கு காரணம் புனிதமான பாராளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படியொரு தண்டனை தரப்படுவதே சரியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த மனசாட்சி என்பது காஷ்மீர் மக்களுக்கு எதிரானது. இந்து, இந்திய தேசிய வெறி மனசாட்சி அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி., சங்க பரிவாரங்கள், இந்து பயங்கரவாதிகள் என்ற கருத்தை வெளியிட்டார்.”

இதை கடுமையாக எதிர்த்த இந்து பாசிஸ்டுகள் எதிர்வரும் நாடாளு மன்றக் கூட்டத்தை முடக்குவோம். ஷிண்டே பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டு வருகின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்து ஓட்டுக்களை மனதில் வைத்து அப்சல்குருவை அவசரமாகத் தூக்கில் போட்டுள்ளது மதசார்பின்மை மூகமூடி அணிந்த காங்கிரஸ்.

இசுலாமிய பயங்கரவாதம் என்ற பெயரால் இசுலாமிய மக்கள் அனைவருமே பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்பது போன்ற கருத்து இந்து தேசியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இசுலாமியர்கள் இந்த அநீதியை எதிர்த்துக்கூட பேச முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் பேச வேண்டும். மத அடிப்படை வாதம். பயங்கரவாதம் இவற்றைப் புறக்கணித்து ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும்.

ராஜீவ் கொலையில் தொடர்பு இல்லாத மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களது கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும் அவர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றுள்ளனர். ஆனால் காங்கிரசுக்கு ராஜீவ் கொலையை விட காஷ்மீரும் ஆட்சி அதிகாரமும் முக்கியமாக உள்ளது.

ராஜீவ் கொலைக்கான பின்னணி மர்மமாக உள்ளதைப் போலவே நாடாளுமன்றத் தாக்குதல் பின்னணியும் தெளிவுபடுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. அந்த வழக்கும் முற்றுப் பெறாத நிலையில் (குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை) இன்றும் பலரின் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருக்கிற நிலையில் அப்சல்குரு அவசர, ரகசியத் தூக்கு இசுலாமிய தீவிரவாதத்தை மேலும் தூண்டுகிற வகையிலே தான் உள்ளது.

இதையே காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா வேறு மொழிகளில் தெரிவித்து அப்சல்குரு தூக்கை கண்டித்துள்ளார்.

இப்படிப்பட்ட அநீதிகளை எதிர்த்து, மனித உரிமை மீறல்களை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.” என்று பேசினார்.

“சாட்சியமே இல்லாத வழக்கில்
தேசத்தின் மனசாட்சியை
இந்து வெறியின் மனசாட்சியை
திருப்திபடுத்தவே தூக்கு
நிரபராதி அப்சல் குருவுக்கு
அவசரமாகத் தூக்கு”

“குஜராத் மாநிலத்தில்
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள்
ஊனமுற்றோர் முதியோர் என
ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த
அத்வானிக்கும் மோடிக்கும்
தூக்கு எப்போ? தூக்கு எப்போ?”

“காஷ்மீர் மக்களின் உரிமைக்காக
தன்னுரிமை கோரிக்கைக்காக
குரல் கொடுப்போரும், கூட இருப்போம்!”

போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாகவே வந்திருந்து ஆதரவளித்த வழக்கறிஞர்கள் உள்பட சுமார் 80 பேர் வரை உற்சாகமாய் கலந்து கொண்டனர்.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை

2. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டிகள்
01-hrpc-banner-1

02-hrpc-banner-2

2. மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு – கடலூர் கிளையின் துண்டு பிரசுரம்
05-kadalur-notice-2
04-kadalur-notice-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  1. முஸ்லிம்கள் மத அடிப்படை வாதத்தை புறக்கனித்துவிட்டு ஜனநாயகத்துக்காக போரடவேன்டும் என்ரு முஸ்லிம்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம் முஸ்லிம்கள் மத அடிப்படையையும் முன்னிருத்திக்கொன்டு ஜனநாயக ரீதியில் போரடிக்கொன்டுதான் உள்ளோம்.
    நீதிமன்றங்கள் ஜனாதிபதியிடம் இருந்து கருனை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ரு கசாப்,அப்சல்குரு இருவரையும் தூக்கில் போட்டுவிட்டு செய்தியை வெளியிட்டு முஸ்லிகள் கண்ணில் சுண்ணப்பு தடவியது
    நீதிமன்றங்கள் மற்ற தூக்கு தன்டனை கைதிகளை ஒவ்வொன்றாக இப்பொழுது ஆரப்பித்து உள்ளது அதில் ஒரு தொடக்கம்தான் வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஜனாதிபதியிடம் இருந்து கருனை மனு நீரக்கரிக்கப்பட்டுவிட்ட செய்தியை கசியவிட்டு மற்றவர்கள் கண்ணில் நெய்யை தடவி விடுகிரது
    நீங்கள் உன்மையான ஜனநாயக வாதிகளாக இருந்தால்
    நீங்கள் உன்மையான தூக்குதண்டனை எதிர்பாளராக இருந்தால்
    கசாப் தூக்கில் போடும்போது மயுனமாக இருந்தது ஏன்?

  2. சமீபத்தில் https://www.vinavu.com/2013/02/12/hrpc-chennai-demo/ என்ற பதிவில் ‘கருத்து’ கூறி மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். இது விஷயமாக உருப்படியாக எதையாவது படிப்பதாக முடிவெடுத்து இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி வேங்கடரமண ரெட்டியின் தீர்ப்பை வாசித்தேன். விருப்பமுள்ளவர்கள் இங்கே படிக்கலாம் (http://www.scribd.com/doc/6494032/Afzals-Supreme-Court-Judgement). 140 பக்க நீண்ட தீர்ப்பு. இதைத் தவிர அருந்ததி ராய் எழுதிய சிறிய இந்து பத்திரிகை கட்டுரை ஒன்றும் (http://www.thehindu.com/news/national/a-perfect-day-for-democracy/article4397705.ece) அதற்கு பிரவீன் சுவாமி என்பவர் எழுதிய மறுவினையும் (http://www.thehindu.com/opinion/op-ed/the-vanity-of-1312-truthtelling/article4400821.ece?homepage=true) படித்தேன். அருந்ததி ராயின் ஔட்லூக் கட்டுரையை இன்னும் வாசிக்கவில்லை. நீண்ட தீர்ப்பில் சில சட்ட நுணுக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ள பக்கங்களை விட்டு விட்டு வழக்கிற்கு நேரடி சம்பந்தம் உள்ள பகுதிகள் அனைத்தையும் படித்தேன் (மூன்று மணி நேரம் ஆயிற்று!) அதே போல, குரு குற்றவாளிதான் என முடிவுக்கு வந்தபின் அவருக்கு மரண தண்டனை தருவதா, அல்லது சிறை தண்டனையா என்பதை விவாதிக்கும் பகுதியையும் படிக்கவில்லை. படித்து முடித்த பின், அப்சல் குரு குற்றவாளிதானா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. குழப்பமே மிஞ்சியது. எனக்கு புரிந்த விஷயங்களை பதிவு செய்ய விருப்பம்.

    காஷ்மீர் போராட்டம், பண்டிட்கள் நிலைமை, பாராளுமன்ற தாக்குதலின் பின் உள்ள நியாயம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு, குரு குற்றவாளிதானா என்பதை பற்றி மட்டுமே இந்த பதிவு.
    இந்த பின்னூட்டம் நீண்டு விட்டதால் பகுதிகளாக பிரித்து எழுதி உள்ளேன். இது நியாயமாக சொந்தமாக ஒரு ப்ளாக் தொடங்கி எழுத வேண்டிய விஷயம். அதை, இங்கே எழுதுவதற்காக வினவு மன்னிக்கவும்.

  3. அருந்ததி ராய் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு அப்சல் குருவுக்கு கோர்ட்டு நியமித்த ஒரு ஜூனியர் வக்கீலே ஆஜராகி உள்ளார், அவரும் திறம்பட செயல்படவில்லை என்பது. உச்சநீதிமன்ற தீர்ப்பு இதை தீவிரமாக ஆராய்ந்து இதனால் அப்சல் குருவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறது. இந்த கோர்ட்டின் கருத்தை நான் ஏற்கவில்லை. அதே சமயம், கீலானி, ஷௌகத் ஆகியோருக்கு ராம் ஜெத்மலானி, சாந்தி பூஷன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் (உச்சநீதிமன்ற நிலையில்) ஆஜராகி உள்ளனர். இதை அருந்ததி ராய் குறிப்பிடவில்லை! இவர்களில், கீலானி விடுவிக்கப் பட்டு, ஷௌகத் சிறை தண்டனை பெறுகிறார்.

    அப்சல் குரு விஷயத்தில் வேறொரு நெருடல் இது. தாக்குதல் நடந்த இரண்டாம் நாளே கைது செய்யப்படுகிறார்! அவருக்கும் இந்த தாக்குதலுக்கும் உள்ள தொடர்பை போலீஸ் எப்படி கண்டறிந்தது என்பது தெளிவாக இல்லை.

    மேலும், ராய் கூறுவது போல, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பற்றி விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இந்த தாக்குதலின் பின்னால் நடந்த சதித்திட்டம் பற்றி போலீஸ் கூறுவது குழந்தைக் கதை போல உள்ளது.

  4. அப்சல் குருவுக்கு எதிரான முக்கிய ஆவணம் அவரது வாக்குமூலம். இதில் சதித்திட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த அம்புலிமாமா கதையை படித்தபின், “தீவிரவாதம் செய்வது, குண்டு வைப்பது, இவ்வளவு எளிதானதா?” என்ற எண்ணமே மிஞ்சியது. இதை கோர்ட்டு கணக்கில் எடுக்கவில்லை. ஆனால், இந்த வாக்குமூலம் ஏற்கத்தக்கதா என்பது பற்றி தீர்ப்பு மிக விரிவாக பேசுகிறது. இது போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்து வாங்கப்பட்டதா என்பது குறித்து தீர்ப்பு இப்படி சொல்கிறது:

    பக்கம் 78: It is further pointed out that Afzal and the other accused were also got medically examined by the police and the Doctor found no traces of physical violence.

    ஆனால், குருவின் குடும்பத்தைக் காட்டி அச்சுறுத்தல் நடத்தப் பட்டதா என்பது குறித்து தீர்ப்பு ஏதும் பேசவில்லை. இங்கே தீர்ப்பு குறிப்பிடும் ஒரு விஷயம் குரு வழக்கு நடந்த பல காலத்திற்கு வாக்குமூலத்தை retract செய்யவில்லை என்பது.

  5. அடுத்து தீர்ப்பு கேட்கும் கேள்வி “இந்த வாக்குமூலத்தை முற்றிலும் ஒதுக்கி வைத்து விட்டால், வேறன்ன சாட்சியம் உள்ளது?” இந்த circumstantial evidence குறித்து பக்கம் பக்கமாக பேசுகிறது. சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

    பக்கம் 83: The first circumstance is that Afzal knew who the deceased terrorists were. He identified the dead bodies of the deceased terrorists. PW76(Inspector HS Gill) deposed that Afzal was taken to the mortuary of Lady Harding Medical College and he identified the five terrorists and gave their names.

    அடுத்தது, மூன்று விஷயங்கள்.

    முதலாவது தாக்குதலில் செத்துப்போன தீவிரவாதிகளுக்கும், அப்சல் குருவுக்கும் இருந்த செல்போன் தொடர்பு. இது குறித்து தீர்ப்பில் பல பக்கங்கள் செலவிடப்பட்டுள்ளன. பல செல்போன் எண்கள், SIM கார்டு எண்கள், call records என குழப்பிவிட்டு தீர்ப்பு அப்சல் குரு தீவிரவாதிகளோடு செல்போன் தொடர்பில் இருந்தார் என்ற முடிவுக்கு வருகிறது.

    இரண்டாவது லேப்டாப். தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய போலி ID கார்டுகளின் படங்கள் சேர்த்து வைக்கப் பட்டிருந்த லேப்டாப் குருவிடமிருந்து கைப்பற்றப்படுகிறது. இதையும், தீர்ப்பு விரிவாக பேசிவிட்டு கீழ்கண்ட முடிவுக்கு வருகிறது. இங்கே அருந்ததி ராயின் சந்தேகம் ஒன்று நியாயமாகப் படுகிறது. இந்த லேப்டாப்பில் மேற்சொன்ன படங்கள், மற்ற software தவிர வேறொன்றுமில்லை!

    பக்கம் 89 : The recovery of ‘laptop’ from the truck in which Afzal and Shaukat travelled on being pointed out by them is a highly incriminating circumstance against them. It is established from the evidence that the said laptop was used for the preparation of I.Cards and the I.Cards found at the spot on the dead bodies and the MHA sticker found on the car were those produced from the same laptop. It admits of no doubt that the laptop, which must have been with the deceased terrorist Mohammed and others came into the custody of Afzal (and Shaukat) soon after the incident on 13th December and such possession has not been accounted for.

  6. மூன்றாவது விஷயம் அப்சல் பல வீடுகளை தாக்குதலுக்கு சமீப காலத்தில் வாடகைக்கு எடுத்திருக்கிறார். இதைப் பற்றி அருந்ததி ராய் எதுவும் பேசவில்லை (நான் இன்னும் ஔட்லூக் கட்டுரை படிக்கவில்லை) அந்த வீடுகளின் உரிமையாளர்கள் அப்சல் குருவை அடையலாம் காட்டி இதற்கு சாட்சி அளித்துள்ளனர். இந்த வீடுகளில் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப் படுகின்றன. தாக்குதல் நடத்த ஒரு அம்பாசிடர் காரை பயன்படுத்தினர். ஒரு சாட்சி இப்படி சொல்கிறார்:

    பக்கம் 89: In addition, PW34 identified Afzal and Shaukat in the Court and stated the following facts:That Afzal had introduced himself under an assumed name of Maqsood and took the 2nd floor on rent in the first week of November, 2001. That Shaukat and three or four boys used to visit Afzal at that premises quite often and on the crucial day i.e. 13.12.2001, at 10 am, Afzal, Shaukat and four more persons left in an Ambassador car and Afzal had returned a short while later and then left the premises subsequently. That the deceased terrorist Mohammed, whose photograph he identified, was also residing with Afzal sometime after the premises was taken on rent.

    மேலும், அப்சல் குரு வெடிபொருட்கள் வாங்கியதாக கடைக்காரர்கள் சாட்சி சொல்கின்றனர். அதே போல, அவர் ஒரு மிக்சி வாங்கியதாக ஒரு கடைக்காரர் சாட்சி சொல்கிறார். இந்த மிக்சி அப்சல் குரு வாடகைக்கு எடுத்ததாக கூறப்படும் ஒரு வீட்டில் கைப்பற்றப்படுகிறது. மிக்சி வாங்குவதில் என்ன தவறு? இதோ:

    பக்கம் 93: The evidence of the report of the experts, namely PWs 22 & 24 establish, as held by the HighCourt, that the composition of chemicals found sticking to the jar of the mixer grinder and the chemicals in the bucket were of the same composition as was the composition of the chemicals in the explosives seized from the deceased terrorists at Parliament House

  7. மொத்தத்தில் குரு குற்றவாளிதான என்பதில் எனக்கு தெளிவு கிடைக்கவில்லை. வாக்குமூலத்தில் சொல்லப்படும் கதை நம்பும்படியாக இல்லை. மேலும், அதை மிரட்டியும் வாங்கியிருக்கலாம். செல்போன் சமாச்சாரம் எனக்கு சரியாக புரியவில்லை. லேப்டாப் பற்றி அருந்ததி ராய் கேட்கும் கேள்வி நியாயமானது. ஆனால், மூன்றாவதாக நான் கூறிய அப்சல் வாடகைக்கு எடுத்த வீட்டு முதலாளிகள், அவர் வெடி பொருள் வாங்கியதாக சாட்சி கூறும் கடைக்காரர்கள் ஆகியவர்களின் கூற்றுகள் அவர் குற்றவாளியாக இருக்கலாம் என்ற எண்ணத்தை தருகின்றன

    முடிவில், சில கருத்துக்கள்.

    (1) போலீஸ் அரசியல் காரணங்களுக்காக பொய் சாட்சிகளை செட்டப் செய்து இருக்கலாம். மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கலாம். இவற்றிற்கு, சாத்தியக் கூறுகள் உள்ளன. அருந்ததி ராய் கூறுவது போல இந்த தாக்குதலுக்கு பின்னால் நடந்த சதித்திட்டத்தை முழுதும் கண்டறிவதில் போலீஸ், அரசு அக்கறை காட்டியதாக தெரியவில்லை. கீலானி, ஷௌகத், அப்சல் ஆகியோரை மடக்கியதொடு அமைதி ஆகிவிட்டது சந்தேகத்தை கிளப்புகிறது.

    (2) உச்சநீதிமன்றம் தனக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளை விரிவாக, தீவிரமாக அலசி ஆராய்ந்து விட்டே குரு குற்றவாளி என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. போலீசார் பொய் சாட்சி செட்டப் செய்து, குருவை சதியில் வீழ்த்தினர் என்ற கருத்தை நீக்கி விட்டு பார்த்தால், நீதிமன்றம் சரியாக செயல் பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்த விஷயத்தில் சதி நடந்திருந்தால், அது போலீசாருடையதே. நீதிமன்றத்தை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.

    (3) “புனிதமான பாராளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படியொரு தண்டனை தரப்படுவதே சரியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது” இப்படி நீதிமன்றம் கூறியிருப்பதை பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால், இதை அவர்கள் தீர்ப்பில் இருந்து “out of context” இல் மேற்கோள் காட்டுகின்றனர். குரு குற்றவாளிதான் என முடிவு செய்த பின், அவருக்கு என்ன தண்டனை என்ற கேள்வி எழுகிறது. அப்போது, இது “rarest of the rare” குற்றம் என்பதை தீர்ப்பு நிருவுகிறது. இதற்கு மரண தண்டனையே சரியானது என கூறும் இடத்தில் இப்படி ஒரு வாசகமும் வருகிறது. அருந்ததி ராய் கூறுவது போல, “நாட்டின் மனசாட்சியை” திருப்தி படுத்துவது என்பதல்ல நீதிமன்றத்தின் நோக்கம்.

    (4) நான் வேறொரு பதிவில் கூறியது நியாமாகவே படுகிறது. குரு சரியான வழக்கறிஞர் கிடைக்காமல் திண்டாடும் பொது சும்மா இருந்து விட்டு இப்போது கூப்பாடு போடும் தமிழக வழக்கறிஞர்கள் “வாய்ச்சொல் வீரர்களே”.

  8. // நீதிமன்றம் சரியாக செயல் பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.// //“புனிதமான பாராளுமன்றம் //

    வெங்கடெசு அண்ணனின் தயவால் ஜனநாயகத்தின் இரண்டாவது தூண் காப்பாற்றபட்டு விட்டது. நீதிமன்றத்திற்கு நேர இருந்த இழுக்கும் அகன்றது. நன்றி வெங்கடேசு அண்ணே

  9. சந்தானம்,
    தீர்ப்பு பக்கம் 86-94 கூறியுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? விதண்டாவாதமாக கேட்கவில்லை. sincere ஆக கேட்கிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரைகளில் நான் படித்த எதிலும் இது குறித்து பேசப்படவில்லை. உங்களுக்கு ஏதாவது சுட்டி தெரிந்தால் தரவும்.

  10. Vinavu will tell that Afzal Guru and Ajmal kasab as a baby and they don’t know about how to bite the finger.The viewers please don’t waste the time

Leave a Reply to sathik dubai பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க