privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

-

செத்த பின்னும் போராடியது சேரிப்பிணம்! பிணத்திடம் போய் வீரத்தைக் காட்டுவதா! ‘வீர’ வன்னியரின் கோழைத்தனம்!

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த உடல்நலக் குறைவால் இறந்து போன தெய்வநாயகத்தின் பிணம்தான் கடந்த 18ம் தேதி மாலை உண்ணாமலைச் செட்டி சாவடிக்கு அருகில் போராடியது.

சென்ற முறை சவ ஊர்வலத்தின் போது “எங்கள் தெருவழியாக உங்கள் சாவு வந்தால் பாடையில் உள்ள பூவையும் மாலையையும் எடுத்து எங்கள் கோயில் மீதும் பெண்கள் மீதும் வீசுகிறீர்கள். எனவே இனிமேல் பறையன் பொணம் இந்த வழியா வரக் கூடாது” என்றனர் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை. ‘மேளம் அடிக்கவோ, வெடி வெடிக்கவோ கூடாது’ என்று தடையும் விதித்தனர்.

இந்த முறை தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த சப்தமும் இன்றி அமைதியாகவே சென்றனர்.

04-malaimalar-photoவன்னியர்கள் வசிக்கும் பகுதியான சாவடி விளையாட்டுத் திடல் அருகே 30 பேர் கொண்ட வன்னிய சாதி வெறிக் கும்பல் ஒன்று கையில் உருட்டுக் கட்டை, இரும்பு பைப்புடன் சவ ஊர்வலத்தில் வந்தவர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது. திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலைக் கண்டு பதட்டமடைந்த மக்கள் அடிதாங்க முடியாமல் பதறிக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது பிணத்தைத் தூக்கிச் சென்ற வேலாயுதம், மணி பாலன், செந்தில் குமார், விமல், ஐயனார் ஆகியோர் தலையிலும் கையிலுமாக அடிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட  மயங்கி விழுந்தனர். ஆனாலும் அந்த குண்டர்களின் வெறி அடங்கவில்லை. பாடையை பிய்த்து எறிந்து, செத்த பிணத்தை காலால் எட்டி உதைத்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடு ரோட்டில் பிணம் மறியல் போராட்டம் நடத்தியது.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின் வந்திறங்கிய கடலூர் டி.எஸ்.பி. போலிஸ் சிலரை விரட்டிப் பிடித்து வேனில் ஏற்றியது. இதில் முக்கிய நபர்கள் ராஜேஷ், ராஜீவ் காந்தி, அருள், பாலமுருகன், திருமால் மோகன் ஆகியோரின் தலைமையில்தான் இந்தக் கொலைவெறியாட்டம் அரங்கேறியுள்ளது. பின்னர் 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு ஆயுதப் படை போலிசார் புடை சூழ அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் தெய்வநாயகம்.

கடந்த நவம்பர் 7ம் தேதி தர்மபுரி நத்தம் தாக்குதலைத் தொடர்ந்து பாச்சாரப் பாளையம், சேத்தியாத் தோப்பு, சென்னிநத்தம், பண்ருட்டி மேலிருப்பு, புதுச்சேரி காட்டேரிக்குப்பம், விழுப்புரம் அருகே கழுப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல்களை பத்திரிகைகள் இரு பிரிவினர் மோதல் என்றே செய்தி வெளியிட்டன.

இங்கு சாவடியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல் வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். பொறுக்கித் தின்ன அரசியல் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கியாள சாதி வெறி என்று இரட்டைத்தன்மையுடன் மீண்டும் புத்துருவாக்கம் செய்து கொண்டுள்ளனர் வன்னிய சாதி வெறியர்கள்.

இப்பகுதியில் வசிக்கும் வன்னிர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கட்டிட வேலை, சூளை வேலை, ஆட்டோ ஓட்டுவது, என எல்லா வேலைகளிலும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் எனப் பழகிக் கொண்டாலும் இடையிடையே நடக்கும் இந்தத் தாக்குதல்களினால் உழைப்பாளி மக்கள் சாதியாக பிளவுபட்டு விடுகின்றனர்.

ஒவ்வொரு தாக்குதலிலும் ஊர்த்தெருக்கள் பாதிப்பதில்லை. சேரிகள்தான் பெரும் இழப்பை சந்திக்கின்றன. வீடு எரிப்பு, உடைமைகள் சூறையாடப்படுதல், பெண்கள் மானபங்கம், உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்பு என்று மொத்த வாழ்க்கையுமே தொலைத்து நிற்பவர்கள் சேரிமக்கள்தான்.

நிலவுகின்ற இந்த சமூக அமைப்புக்குள், தேர்தல், இடஒதுக்கீடு, சலுகைகள், சீர்திருத்தங்கள் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில்  மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாது என்பதைத்தான் இத்தகைய சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாக உள்ளது. ஒவ்வொரு பிரச்சனையும் சமாதானக் கூட்டம், வாழக்கு வாபஸ், நட்ட ஈடு என்பதோடு முடிக்கப்படுகின்றது என்பதுதான் கடந்த கால அனுபவம்.

எனவே சாதிவெறியைக் கக்கும், கட்டி காக்கும் இந்த சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டுமானால் சாதி அடையாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு வெண்மணியின் திசை வழியில் வர்க்கமாய் போராடுவது ஒன்றே வழி.

எரியும் வீட்டுக்குள் இருந்து கொண்டே தீயை அணைக்க முடியாது.
சாதிக்குள் இருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாது.

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்