privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?

வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?

-

டெல்லியில் துணை மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் சில கிரிமினல்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வும், அதற்கு எதிராக வெடித்த போராட்டமும் தோற்றுவித்திருக்கும் விவாதங்கள் பல தரப்பட்டவை. ஆனால், அநேகமாக இந்த விவாதங்கள் அனைத்திலும் சரடு போல ஒரு கருத்து இழையோடுகிறது.

“தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதுகாறும் அடுப்படியில் கட்டுண்டிருந்த பெண்களுக்கும் கூடச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் வழங்கியுள்ளன; ஆலைகள் முதல் ஐ.டி. துறை வரையிலான பல வேலைகளுக்குப் பெண்கள் போகத் தொடங்கிவிட்டார்கள். இரவுப் பணிகளுக்குப் போகக்கூடாது என்ற மனத்தடைகளையெல்லாம் களைந்து விட்டு, துணிச்சலாக இரவு நேரங்களில் வேலைக்குப் போகிறார்கள். திரைப்படங்களுக்குப் போகிறார்கள். இவ்வாறு தனியார்மயக் கொள்கைகளுக்குப் பின்னர் ஏற்பட்டு வரும் இந்த ‘முன்னேற்றம்’ டெல்லி சம்பவம் போன்றவற்றினால் அச்சுறுத்தப்படுகின்றது.”

சுமங்கலி திட்டம்
“சுமங்கலித் திட்டத்தின்” கீழ் கோயம்புத்தூர் மில்களில் பணியாற்றும் இளம் பெண்கள் தாராளமயத்தின் நவீன கொத்தடிமைகள்

“இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்ற கிரிமினல் சக்திகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கே கூடத் தடைக்கற்கள் தான். எனவே, பெண்களையும் அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற வகையில் சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்; இச்செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்ற கருத்து நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டுவரையுள்ள எல்லா அறிவுஜீவிகள் மற்றும் ஊடகங்களின் பொதுவான கருத்தாகப் பரவி நிற்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் கொண்டு வரும் முன்னேற்றத்தை ‘இலஞ்ச – ஊழல்’ தடுக்கிறது, அதிகார வர்க்கத்தில் அரசியல் குறுக்கீடு தடுக்கிறது, திறமையற்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கருதுபவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அவர்கள் கருதுவனவற்றின் பட்டியலில் இத்தகைய பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக முதலாளித்துவம் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் என்பதைப் போல, தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும் ஜனநாயகத்தைக் கொண்டு வந்து விடும் என்ற மயக்கம்தான் மேற்கண்ட கருத்தில் பிரதிபலிக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்குச் சான்றாக வானளாவிய கட்டிடங்களையும், ஷாப்பிங் மால்களையும், ஐ.டி. நிறுவனங்களையும், விதவிதமான கார்களையும், ஆறு வழிச்சாலைகளையும் காட்டுவது போல, பெண்களின் முன்னேற்றத்திற்குச் சான்றாக பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, டாஃபே நிறுவன இயக்குநர் மல்லிகா சீனிவாசன், பயோகானின் கிரன் மஜும்தார் போன்றோரைக் காட்டி, இவர்களைப் போல இன்று பல பெண்கள் தொழில்முனைவோராக, நிர்வாகியாக, ஆராய்ச்சியாளராக, கலைஞராக, அரசியல்வாதியாக பொதுவெளியில் உயரும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

இவர்கள் கூறுவது போல் தாராளமயமும் உலகமயமும் பெண்களுக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உண்மையிலேயே வழங்கியுள்ளதா?

இந்திய சமூகத்தில் பெண்கள் குடும்ப பராமரிப்பை செய்து கொண்டே, விவசாயம்,கட்டுமானத் தொழில்களில் தங்களது உழைப்பைச் செலுத்தி வந்திருப்பது காலம்காலமாக நடந்து வந்திருக்கிறது; எனினும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு துறைகளில் பெண் உழைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவருகிறது என்பது உண்மையே. இதற்குக் காரணமென்ன என்பதுதான் கேள்வியே.இரட்டை சுமை

முதற்காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக மிகக் கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி, அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினர் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையிலானோரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவேகமாக அரித்து வருகிறது. வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பால், மின்சாரம், போக்குவரத்துச் செலவுகள் போன்ற வழமையான செலவுகள் அதிகரித்திருக்கின்ற அதே நேரத்தில், கல்வி-மருத்துவத் துறைகளின் தனியார்மயத்தின் காரணமாகவும், அவர்களது கட்டணக் கொள்ளை காரணமாகவும் பல குடும்பங்கள் கடனாளி ஆக்கப்பட்டனர். இந்தக் கடுமையான விலைவாசி உயர்வும் நுகர்வுக் கலாச்சாரத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேவைகளும், கணவனின் ஒற்றை வருமானத்தில் குடும்பத்தைப் பராமரிப்பதை இயலாததாக்கியது. இதனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து உழைக்கும் மக்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களும் தங்கள் தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

குறைவான கூலி, சங்கமாகத் திரளமாட்டார்கள் போன்ற காரணங்களால் புதிய வகைப்பட்ட வேலைவாப்புகள் பெண்களுக்கென்றே வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வக் குழுக்களின் தீவிர பிரச்சாரத்தால் உணவு விடுதிகள், பட்டுநெசவு போன்றவற்றிலிருந்து அகற்றப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் வேலைகளும் பெண்களுக்குச் சென்றுள்ளன. விவசாயத்தின் வீழ்ச்சி காரணமாக, நகர்ப்புறங்களில் கட்டுமான வேலைகளுக்கு வரும் விவசாயக் குடும்பத்தின் பெண்கள், வீடற்றவர்களாக தெருவோரத்தையே வீடாக மாற்றி, அங்கேயே குளித்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து வேலைக்கும் செல்லவேண்டியவர்களாக உள்ளனர்.

பஞ்சாலைகளில் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடியதால் ஆண் தொழிலாளர்களைத் துரத்திவிட்டு, அவ்வேலைகளில் பெண்களை அமர்த்தி 10 முதல் 12 மணிநேரம் வரை சுரண்டுகின்றனர். நோக்கியா போன்ற மின்னணுத் தொழிலகங்களில் ஒப்பந்தக் கூலிகளாக, நகரங்களின் ஜவுளிக் கடல்களில் விற்பனையாளர்களாக, மென்பொருள் நிறுவனங்களில் துப்புரவு, எடுபிடி வேலைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும், தொழில் தேர்ச்சி பெற்ற வேலைகளிலும், பெண்கள் பலர் வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளின் பெண் நர்சுகள் ஊர்விட்டு ஊர் சென்று, இரவு நேரத்திலும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். கால் சென்டர்களில் இரவு முழுக்க அமெரிக்காவின் வங்கிகளுக்காவும், மருத்துவமனைகளுக்காகவும் பெண்கள் உழைக்கின்றனர். ஆயத்த ஆடை (கார்மென்ட்ஸ்) தொழிலாளர்களாக இன்று பெண்களே அதிக அளவில் வேலை செய்கின்றனர். ஒரே விதமான பட்டுச்சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட குமரிப் பெண்கள், பணக்காரர்களின் திருமண வரவேற்பில் பன்னீர் தெளிப்பது முதல் பந்தியில் தண்ணீர் வழங்குவதுவரை ஈடுபட்டு நள்ளிரவில் வீடு திரும்புகின்றனர்.

வ்வாறு பல்வேறு துறைகளில் தங்கள் உழைப்பை வழங்கும் இப்பெண்கள் வீட்டின் சமையலையும், குழந்தைப் பராமரிப்பையும் செய்து முடித்து விட்டு நிறுவன வேலைகளுக்கு விரைகின்றனர். கைக்குழந்தைகளை அண்டை வீட்டாரிடமோ, காப்பகத்திலோ விட்டுவிட்டு 10 மணி முதல் 12 மணிநேரம் வேலை செய்து விட்டு, குழந்தைகளை அவசரமாகக் கொஞ்சிவிட்டு அடுத்த நாளுக்கான சமையல் வேலையை மீண்டும் தொடங்குகின்றனர். இதுதான் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம்.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்
வீட்டு வேலை செய்யும் பெண்களையும் பாலியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

இதுவரை உற்பத்தியில் ஈடுபடாதவர்களாக இருந்த பெண்களைத் தற்போது பெருமளவில் ‘உற்பத்தியில் ஈடுபடுத்தியிருப்பதாக’ , பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் பற்றி ஆளும் வர்க்கங்கள் பெருமையுடன் கூறுகின்றன. பெண்கள் ஏற்கெனவே தத்தம் குடும்பங்களில் செலுத்தி வரும் உழைப்பின் மூலம் பராமரிக்கப்படுகின்ற ஆண்கள் மற்றும் அக்குடும்பத்தின் வாரிசுகள்தான் முதலாளித்துவத்தின் உற்பத்திக்கு உழைக்கிறார்கள். எனினும், தமது இலாபத்துக்குப் பயன்படுகின்ற, பெண்களின் இந்த மறைமுக உழைப்பை, முதலாளித்துவப் பொருளாதாரம் மதிப்பதில்லை. அதாவது, குடும்ப உழைப்பு மற்றும் புதிய உழைப்பாளிகளை உருவாக்கித் தரும் மறு உற்பத்தி, அவர்களுடைய பராமரிப்பு ஆகியவற்றுக்கு ஒரு பொருளாதார மதிப்பினை நிர்ணயித்து, அதனை நிகர உள்நாட்டு உற்பத்தியை நிர்ணயிக்கின்ற கணக்கில் சேர்ப்பதில்லை.

ஒரு உணவு விடுதியின் சமையல்காரர், குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் பெண், சலவைத் தொழிலாளி ஆகியோரது உழைப்பு கூலிக்கு விற்கப்படுவதால் அதற்குப் பொருளாதார மதிப்பு உள்ளதாகக் கணக்கில் கொள்ளும் முதலாளித்துவம், பெண்களுடைய குடும்ப உழைப்பின் மதிப்பை நிராகரிப்பதன் மூலம், அவர்கள் இதுவரை உழைப்பிலேயே ஈடுபடாதவர்கள் போலவும், முதன்முறையாகத் தற்போது உழைப்பில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது போலவுமான தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையில் பெண்களின் குடும்ப உழைப்பு மூலம் தான் பெறுகின்ற பொருளாதார ஆதாயத்தைச் சுரண்டிக் கொண்டே, கூடுதலாக, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக, உற்பத்தி சார்ந்த உழைப்பைக் கோரும் வேலைகளுக்குள் இழுத்திருக்கிறது. தனியார்மயக் கொள்கை, பெண்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் ‘வேலைவாய்ப்பு’ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரட்டைச் சுரண்டலுக்கு பெண்களை ஆட்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

*************

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகமாக்கியிருப்பது மட்டுமல்லாமல், மறுகாலனியாக்க கொள்கைகள் அவர்களுடைய உடலையும் முன்னெப்போதும் இல்லாத வடிவங்களிலெல்லாம் விற்பனைப் பண்டமாக்கியிருக்கின்றன.

சிவப்பழகு கிரீம்பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் நினைத்துக்கூட பார்த்திராத வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் .பெங்களூரு சாராய விடுதிகளில் மதுவைக் கலக்கித் தரும் “பார் டென்டர்” களாகவும், 20/20 கிரிக்கெட் போட்டிகளில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் “சியர் கேர்ல்ஸ்’’ களாகவும் பெண்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். விரைவில், அமெரிக்காவின் பாலியல் வக்கிர “பிளேபாய்” பத்திரிக்கை குழுமம், இந்தியாவில் தொடங்கவிருக்கும் “பிளேபாய் கிளப்புகளில்” ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பது, சிகெரெட் பற்றவைப்பது முதலான “சேவை’’களைச் செய்கின்ற வேலைகளில் இந்தியப் பெண்களை நியமிக்கவுள்ளது.

பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் ஆணாதிக்கச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஆண்கள் நுகரத்தக்க பண்டமாகச் சந்தைப்படுத்தியிருக்கின்றது மறுகாலனியாக்க கொள்கை. அதே நேரத்தில், அழகுணர்ச்சி என்ற பெயரில், தம்மை ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகத் தயாரித்துக் கொள்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ளும் அளவுக்கு பெண்களின் மனோபாவத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது.

அழகிப் போட்டிகளை அறிமுகம் செய்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் – என அடுத்தடுத்து இந்தியப் பெண்களை உலக அழகிகளாகத் தேர்ந்தெடுத்து, அவர்களையே அழகு சாதனப் பொருட்களின் “பிராண்ட் அம்பாசிடர்’’களாக்கியதன் மூலம், அவர்களைப் போல மெலிந்த சிவப்பான உடல்வாகுவைப் பெறுவதையே மாபெரும் இலட்சியமாகக் கொள்ளுமாறு பெண்களிடம் தொடர் மூளைச்சலவை செய்யப்படுகிறது. இன்று இதன் விளைவாக, இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதமில்லாத குக்கிராமங்கள் வரை சிவப்பழகு கிரீம்கள் உள்ளிட்ட பல்வேறு முகப்பூச்சு, அழகு சாதனப் பொருட்கள் எட்டியுள்ளன.

தெருவெங்கும் அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. அழகு நிலையங்களை எட்டிப்பார்க்காத பெண்களெல்லாம் ‘பத்தாம் பசலிகள்’, ‘கட்டுப்பெட்டிகள்’ போன்ற ‘கருத்து’களைப் பொதுப்புத்தியில் உறைய வைத்து, ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேல் அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் விற்று, வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக வெளியில் வேலைக்கு வந்த பெண்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்துகொண்டிருக்கிறது, தாராளமயம்.

இத்துடன் சினிமா குத்தாட்டத்திற்கென்றே வடிவமைக்கப்படும் ஆபாசமான உடைகளை நவீனம் எனக் கூறி சிறுமிகளுக்குக்கூட அறிமுகம் செய்துள்ளனர். எவ்வித நெறிமுறைகளும் இனி இருக்கக் கூடாது என்பதை ஒரு மோஸ்தராகவே உருவாக்கி, அதற்கென்றே ஆபாசமான ‘பேஷன் பரேட்’ களை நடத்துகின்றனர். அநாகரீகம் என்று இதுவரை கருதி வந்த அனைத்தையும் தலைகீழாக்கும் செயலை ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகப் புகுத்தியுள்ளனர். எழுபது-எண்பதுகளில் தடைசெய்யப்பட்ட ரிக்கார்டு டான்ஸ் எனும் பாலுணர்வு வெறி நடனங்களைத் தொலைக்காட்சிகளைப் பார்த்து தம் பிள்ளைகள் ஆடுவதைக் கண்டு பெருமைப்படும் அளவுக்கு பெற்றோர்கள் மூளைச்சலவைக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் எதிரொலியாக, மனைவி என்பவள் எல்லாவிதத்திலும் தனக்குக் கட்டுப்பட்டவளாகவும், மாடல் அழகிகளைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘கண்ணுக்குக் குளுமையாக’க் காட்சியளிப்பவளாகவும் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஆண்களிடம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

பாய் பிரண்ட்ஸ் இல்லாத இளம் பெண்கள், கல்லூரிகளிலும் பணியிடங்களிலும் “நீ வேஸ்ட்” என்று சக பெண்களால் ஏளனப்படுத்தப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் டேட்டிங் செல்வது, ரிசார்ட்டுகள், டிஸ்கோத்தேகளுக்குச் சென்று வார இறுதியைக் கொண்டாடுவது போன்ற கலாச்சாரங்கள் பெண்களைப் பலிகடாவாக்குகின்றன. பண்பலை வானொலியில் பெண்மருத்துவ திலகங்கள், பாடல்களுக்கு நடுவே “திருமணம் ஆகாத பெண்கள், பாதுகாப்பாக இருந்துக்கணும். ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் எல்லாம் இன்றைக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன” என ஆலோசனை வழங்குகின்றன.

“இந்தியா டுடே” “அவுட்லுக்” உள்ளிட்டுப் பல முதலாளித்துவ இதழ்கள் இந்தப் பாலியல் ‘புரட்சிக்கு’ தயங்கும் பெண்களை “இன்னமும் இப்படி ஹைதர்காலத்துப் பெண்களாக இருக்கிறீர்களே!” எனக் கடிந்துகொண்டு, பெரும்பாலான இந்தியப் பெண்கள் சோரம் போவதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வே எடுத்து இக்கலாச்சார ‘புரட்சியை’த் துரிதப்படுத்தி ‘முன்னேற’த் தூண்டுகின்றன. ஊடகங்கள்தான் இப்படி என்றால், அரசோ, அந்நியச் செலாவணிக்காக, கோவா, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில், வெளிநாட்டுப் பயணிகள் பாலியல் வக்கிரங்களைத் தணித்துக் கொள்வதற்காக, சிறுவர்-சிறுமிகளைப் பலிகடாவாக்குவதற்குத் துணைபோகிறது. இக்கொடூரம் பலமுறை அம்பலமான பின்னரும், அரசு இதுவரை இதனைக் கண்டுகொள்ளாமல், மறைமுகமாக ஆதரித்து வருகிறது.

ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகப் பெண்களைச் சித்தரிப்பதும், மாற்றுவதும் எந்த அளவுக்கு நடந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான வெறி பிடித்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பப் பரவலால் எளிதில் கிடைத்திருக்கும் செல்பேசி மூலம் பல பாலியல் வக்கிரங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. சிறுமிகள், இளம்பெண்களின் நிர்வாணப் படங்கள் சின்னஞ்சிறு மெமரி சிப்பில் ஏற்றப்பட்டு ஆண்களுக்காகச் சந்தையில் விற்கப்படுகின்றன.

தொலைபேசியில் சில குறிப்பிட்ட எண்களுடன் தொடர்பு கொண்டு பாலியல் சரச உரையாடல்களைப் பெண்களின் குரலில் கேட்டுக் கிளர்ச்சியடைய இளைஞர்கள் விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். வீடியோ கேம்களின் வழியாகவும் ஆண்கள் வக்கிரமாக்கப்படுகின்றனர். இதில் உச்சமாக ‘ரேப் சிமுலேசன்’ எனும் பெயரில் ஜப்பானிலிருந்து வந்துள்ள ‘மெநிகர் வன்புணர்ச்சி’ வீடியோ கேம் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து பிய்த்து எடுத்து திருப்பூர் போன்ற ஊர்களில் பதியனிட்டுள்ள வேலை வாய்ப்புகள், பன்னிரண்டு மணி நேரம் வரை தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்கின்றன. பெண்களுக்கும் இதே கதிதான். இரவு நேர ஷிப்ட்களில் வேலை அலுப்பு தெரியாமல் இருக்க ஆபாச உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஓட விடப்படுகின்றது.

குத்தாட்டம்
குத்தாட்டம்: கும்பல் பாலியல் வன்முறையின் கலை வடிவம்.

தமிழ் சினிமாவின் குத்துப்பாட்டு, இந்தி சினிமாவின் “ஐட்டம்” பாடல்கள் போன்றவை இதுவரை இலைமறை காயாக இருந்த பாலியல் உறவுக்காட்சிகளை அப்பட்டமான நடன அசைவுகளாக மாற்றி, பெண்களைச் சீண்டுவதற்குத் தோதான புது விதமான கழிசடை வார்த்தைகளையும் அறிமுகப்படுத்திச் சீரழிவையே கலாச்சாரமாக்குகின்றன. இந்த வகைப்பட்ட பாடல் காட்சிகளால் உசுப்பேற்றப்படும் ஆண், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் அனைவரையும் போகப்பொருளாகவே பார்க்கிறான். பேருந்துகள், திரையரங்குகள், வேலைசெய்யும் இடங்கள் என ஆண், பெண் இருபாலரும் புழங்கும் எல்லா வெளிகளிலும் ஆண்கள் பெண்களைச் சீண்டுவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தொழிற்கூடங்களில் சக தொழிலாளர்கள், மேலாளர்களின் பாலியல் வக்கிரங்களையும் அவமதிப்புகளையும் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியைகள் பள்ளித் தாளாளரை அனுசரித்து நடக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். பிராக்டிகல், இன்டர்னல் மதிப்பெண்களில் கைவைப்பேன் – என மிரட்டும் ஆசிரியர்களின் பாலியல் சுரண்டலுக்கு கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவிகள்கூடப் பலியாகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், இது குறித்து குடும்பத்தில் வெளிப்படுத்தவோ அல்லது போலீசு நிலையத்தில் முறையிடவோ செய்தால், நடந்த சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். “ஏன் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டும்?” என்கிற கேள்வி முதல், அவர்கள் அணியும் ஆடைகள் வரை அனைத்தையும் காட்டி, இந்தப் பிரச்சனையை அவளே வரவழைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிலவும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் என்பவள் ‘தூய்மையானவளாக’ இருக்க வேண்டும் என்பதும், தனது “கற்பை”ப் பேணிப் பாதுகாப்பதுதான் அவளது முழுநேர வேலை என்பதும் பொது விதியாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்துப் பேசுவதற்கே அஞ்சும் நிலை உள்ளது. பொது இடங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் ஏதாவதொரு பெண் அதற்கு எதிர்வினையாற்றினால், சுற்றியிருப்பவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். இந்த மவுனம், பெண்கள் மீது நடக்கும் தொடர் வன்முறைகளுக்குத் துணை நிற்கிறது

********

மொத்தத்தில், மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அமலாக்கம், ஏற்கெனவே ஆணாதிக்க அடிமைத்தனத்தில் உழலும் இந்தியப் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகரித்திருப்பதுடன், அவர்களைப் பாலுணர்வுப் பண்டமாகக் காட்டி வெறியூட்டுவதன் மூலம், அவர்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரிப்பதற்கும் வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமல்ல, மறுகாலனியாக்கம் திட்டமிட்டே பரப்புகின்ற, தன்னையும் தன் இன்பத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, விழுமியங்கள் ஏதுமற்ற நுகர்வு வெறி, மற்றவர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாத விலங்குகளாக மக்களைத் திட்டமிட்டே மாற்றி வருகிறது. வகை வகையாகவும் விதவிதமாகவும் உணவுப் பொருட்கள், ஆடைகள், பல வண்ணக் கைபேசிகள், ஊடகங்களில் சந்தைப்படுத்தப்படும் நுகர்பொருட்கள் போன்றவற்றை வாங்கி அனுபவிப்பது மட்டுமே நோக்கம் என்றும், இவற்றை அடையும்பொருட்டு எல்லா நெறிகளையும் கைவிடலாம் என்பதும் சகஜமாக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி வன்முறையாளர்கள் யாரோ அல்ல. ‘நாடு விலை போவதைப் பற்றியோ, சமூகம் அழுகி நாறுவதைப் பற்றியோ, அடுத்தவன் துன்பத்தால் துடிப்பதைப் பற்றியோ, தன்னுடைய வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியோ, தன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்தைப் பற்றியோ கூடக் கவலை இல்லாமல், இருக்கிற வரையில் அனுபவி‘ என்பதையே தம் விழுமியமாக வரித்துக் கொண்ட கிரிமினல்கள்.

டெல்லி வன்முறையைப் பாலியல் வெறி என்ற ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள இயலாது. நாடு முழுவதும் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏதோ சில கிரிமினல்களின் எதிர்பாராத நடவடிக்கைளும் அல்ல. அவை இந்தப் பண்பாடு தோற்றுவிக்கின்ற, எதிர்பார்க்கக்கூடிய விளைவுகளே!

– கதிர்
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________