privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?

ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?

-

ந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும், மற்ற மிக முக்கியமான நபர்களும் வசதியாக பயணம் செய்தவற்காக தலா ரூ 300 கோடி விலையில் 12 ஹெலிகாப்டர்களை மொத்தம் ரூ 3,600 கோடி செலவில் வாங்குவதற்கு ரூ 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான சில நபர்களையும் தனியார் நிறுவனங்களையும் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

இந்தியா வாங்கும் இந்த ஹெலிகாப்டர் இத்தாலிய-ஆங்கில கூட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பின்மெக்கானிக்கா என்ற இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமானது. பின் மெக்கானிக்காவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (CEO) கியூசெப் ஒர்சி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக இத்தாலிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தாலியில் மாஃபியா, பெருநிறுவனங்கள், அரசு அமைப்புகள் இவர்களுக்கிடையேயான தொடர்புகளை விசாரணை செய்த நேப்பிள்ஸ் நகரின் நீதித் துறை அதிகாரிகள் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் ‘நிறுவன தொடர்புகள்’ துறையின் தலைமை மேலாளர் லொரன்சோ பொர்கோகினி என்பவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து பல நாடுகளில் பல ஆண்டுகளாக பின்மெக்கானிக்காவின் நடவடிக்கைகள் பற்றிய பரவலான விசாரணையின் ஒரு பகுதியாக அதன் இந்தியக் கிளையின் செயல்பாடுகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டன.

2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை துனீசியாவைச் சேர்ந்த ஐ.டி.எஸ். என்ற நிறுவனத்துக்கு பின்மெக்கானிக்கா 51 மில்லியன் யூரோ (சுமார் ரூ 360 கோடி) பணத்தை அனுப்பியிருக்கிறது. துனீசிய ஐ.டி.எஸ். நிறுவனம் சண்டிகருக்கு அருகில் உள்ள மொகாலியைச் சேர்ந்த ஐ.டி.எஸ் என்ற அதே பெயருடைய நிறுவனத்துக்கு மென்பொருள் சேவை வழங்கியதற்காக ரூ 150 கோடி அனுப்பியிருக்கிறது.

ஐ.டி.எஸ் என்ற பெயருடைய மூன்றாவது நிறுவனம் மொரீஷியசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஐ.டி.எஸ் மொரீஷியஸ் ஏரோமேட்ரிக்ஸ் இன்போசொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை டெல்லியில் பதிவு செய்கிறது. சண்டிகரில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பூங்காவின் டி.எல்.எப் கட்டிடத்தில் செயல்படும் ஏரோமேட்ரிக்ஸின் இயக்குனர்களாக டெல்லி வழக்கறிஞர் கவுதம் கெய்த்தான், ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் குய்டோ ரால்ப் ஹஷ்கே, கார்லோ கெரோசா ஆகியோர் இருந்தார்கள்.

அகஸ்டா வெஸ்ட்லேண்டுக்கு மென்பொருள் செய்து கொடுக்கும் வேலை 2009ம் ஆண்டு ஐ.டி.எஸ். சண்டிகரிடமிருந்து ஏரோமேட்ரிக்ஸூக்கு மாற்றப்படுகிறது.

ரால்ப் ஹஷ்கே, கார்லோ கெரோசா இருவருக்கும் பின்மெக்கானிக்கா ரூ 2.8 கோடி கொடுத்திருக்கிறது. அவர்கள் ஹெலிகாப்டர்களை விற்றுத் தருவதற்காக நியமிக்கப்பட்ட இடைத்தரகர்கள். குய்டோ ஹஷ்கே பின்மெக்கானிக்காவின் இந்திய தலைமை அலுவலர் கிரசோலே பாவ்லோவை கைக்குள் வைத்துக் கொள்ள அவருக்கு மாதா மாதம் 10,000 யூரோ ‘ஊதியம்’ கொடுத்திருக்கிறார். ‘நான் கிரசோலேவுக்கு மொத்தம் 2 முதல் 2.2 லட்சம் யூரோ (சுமார் ரூ 1.5 கோடி) கொடுத்திருப்பேன்’ என்று இத்தாலிய அதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் ஹஷ்கே கூறியிருக்கிறார்.

அவர்கள் விமானப் படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகிக்கு அவரது உறவினர்கள் ஜூலி தியாகி, டோக்ஸா தியாகி, சந்தீப் தியாகி மூலமாக ரூ 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். இடைத்தரகர்கள் எஸ்.பி. தியாகியை 6 அல்லது 7 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான துறை சார்ந்த  தகவல்களை ஹேஸ்செக், ஹெரோஸா ஆகியோருக்கு அவ்வப்போது தியாகி தெரிவித்து வந்திருக்கிறார்

லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் என்ற ஆயுதத் தரகரையும் இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பதற்கான இடைத் தரகராக ஓர்சி சேர்த்திருக்கிறார். ‘கிறிஸ்டியன் மைக்கேலுடன் ஒன்று, ஹஷ்கேவுடன் ஒன்று என்று மொத்தம் 41 மில்லியன் யூரோவுக்கான இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன’ என்று போர்கோகினியின் வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது. கிறிஸ்டியன் மிஷெல் லண்டனில் செல்சீ பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு ஓடிப் போய் துபாயில் தலைமறைவாகியிருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக இராணுவத் தளவாடங்கள் இறக்குமதியில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கும் இந்திய பாதுகாப்புத் துறையை நூற்றுக் கணக்கான அன்னிய ஏஜெண்டுகள் மொய்க்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ரூ 2.5 லட்சம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்த இந்திய அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ 5 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதிக்குத் திட்டமிட்டிருக்கிறது.

வெளிநாட்டு ஆயுத நிறுவனங்களின் ஏஜென்டுகள் டெல்லியிலும் அதைச் சுற்றிய தொழில் நகரங்களிலும் அலுவலங்கள் திறந்து, இந்திய இராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்கள் யாருக்குப் போக வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றனர்.

“தவிர்க்க முடியாத இந்த ஏஜென்டுகள் அடிப்படையில் தொழில் முனைவர்கள். தேவையான தொடர்புகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆட்களை கையாள்வதிலும் திறமையாளவர்கள். இந்திய அரசு எந்திரத்தை சரிவர கையாண்டு ஒப்பந்தங்களை வெல்வதில் வித்தகர்கள்” என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் ராகுல் பேடி.

எஸ்.பி.தியாகிஇராணுவ மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை பணத்தாலும், நகைகள், சொத்துக்கள், விலை உயர்ந்த கார்கள், குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வி, ஆடம்பர விருந்துகள் என்று பல வகைகளிலும் ஏஜென்டுகள் குளிப்பாட்டுகிறார்கள். பாலியல் சேவைகள் ஏற்பாடு செய்து கொடுப்பது, விலை உயர்ந்த மதுபானங்களை பரிசு அளிப்பது, குடும்பத்துடன் வெளிநாட்டுக்குப் போக ஏற்பாடு செய்வது, கோல்ப் உபகரணங்கள் வாங்கி கொடுப்பது, அரிதான செல்லப் பிராணிகளை வாங்கி கொடுப்பது என்று அவர்களை மகிழ்விக்கிறார்கள்.

தமது பணிகளுக்கு ஊதியமாக வெளிநாட்டு இராணுவத் தளவாட நிறுவனங்களிடமிருந்து மாதா மாதம் கணிசமான தொகை ஊதியம், செலவுகளுக்கான பணம், கூடவே வெற்றிகரமாக ஒப்பந்தம் போட்டுக் கொடுத்தால் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனும் பெறுகின்றனர் இந்த ஏஜென்டுகள்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் விமானங்கள், பீரங்கிகள், வாகனங்கள் என்று அதிக விலையிலான தளவாடங்களில் ஆரம்பித்து இராணுவ வீரர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது, பாதுகாப்புத் துறை நிலங்களை தனியாருக்கு கொடுப்பது போன்ற பணிகளிலும் பனி மலைகளின் உச்சியில் பணி புரியும் போர் வீரர்களுக்குத் தேவையான குளிர் தடுப்பு சாதனங்கள் வழங்குவது, போரில் இறந்த வீரர்களுக்கான சவப்பெட்டி வாங்குவது என்று ஒவ்வொரு வாய்ப்பிலும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக இந்த உறவுகளை வளர்க்கின்றனர் இந்த இந்த இடைத்தரகர்கள்.

அதிகாரிகள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், இராணுவ தளபதிகள் இவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அடங்கிய கும்பல்கள் இந்த இடைத்தரகர் தொடர் சங்கிலியில் இடம் பெறுகின்றனர்.

வியாபாரப் போட்டி காரணமாகவோ பிற காரணங்களாலோ இந்த பரிமாற்றங்களில் சில சமயங்களில் வெளியில் வந்து கீழ்மட்டத்தில் உள்ள ஒரு சிலர் தண்டிக்கப்படுகின்றனர்.

  • 2012ம் ஆண்டு இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி கே சிங், ‘இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் தனக்கு ரூ 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக’ குற்றம் சாட்டியிருந்தார்.
  • ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டத்தில் இராணுவ உயர் அதிகாரிகளும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் தமது பதவிகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக வீடுகளை ஒதுக்கி ஆதாயம் தேடிக் கொண்டார்கள் என்பது அம்பலமானது.
  • சுக்னா இராணுவ தளத்துக்கு அருகில் இருக்கும் 70 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு கைமாற்றி விட்டதாக இராணுவத் தலைமைத் தளபதியின் உதவியாளர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷூம், 33வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி கே ரத்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
  • உயரமான மலைப் பகுதிகளில் பணி புரியும் படை வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் ஊழல் தொடர்பாக அப்போதைய இராணுவ சேவைப் பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே சஹானி 2011ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • லடாக் பகுதி படைவீரர்களுக்கு உறைய வைக்கப்பட்ட இறைச்சி வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே தாஹியா மீது விசாரணை நடந்தது.

ஆனால் ஆண்டு தோறும் பல லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் நடக்கும் ஊழல்களும் வரிப்பணக் கொள்ளையும் யாருக்கும் தெரியாத மர்மங்களாகவே நீடிக்கின்றன.

1987 போபர்ஸ் பீரங்கி ஊழல் வெளியான பிறகு இனிமேல் இடைத்தரகர்களே கூடாது என்று விதிமுறை ஏற்படுத்தப்பட்டது. 2005ம் ஆண்டில் உணவுக்காக பெட்ரோல் ஏற்றுமதி விவகாரத்தில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் குடும்பத்தினரின் ஊழல் வெளியானதும் நேர்மையான அமைச்சர்கள் மூலம் ஊழலை தவிர்க்கலாம் என்று தீர்வு முன் வைக்கப்பட்டது.

இடைத்தரகர்கள் வைத்துக் கொள்வதில்லை என்று வாக்களிக்கும் ஒப்பந்தம், சி.பி.ஐ. விசாரணை, உச்ச நீதி மன்ற கண்காணிப்பு, நேர்மையான அமைச்சர் என்று மாற்றி  மாற்றி மேக் அப் போட்டு விட முயற்சித்தாலும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை என்ற அழுகி வீச்சமடிக்கும் ஜந்து நாட்டு மக்களை கடுமையாகச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன் சார்ந்த, மக்கள் விரோத கொள்கைகளால் அண்டை நாடுகளுடனான பகை என்ற போர்வையில் பல லட்சம் கோடி ரூபாய் நாட்டின் பணத்தை வீணாக்கப்படுகிறது. அதிகாரிகளும், அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் இந்த சுரண்டல் அமைப்பில் ஒட்டிக் கொண்டு கொழுக்கின்றனர்.

தேசபக்திக்கு இலக்கணமாகத் திகழ்வதாக போற்றப்படும் இராணுவத்தின் இலட்சணம் இதுதான்.