privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்'மதச்சார்பற்ற' கட்சிகளின் கோழைத்தனமும், வாஜ்பாயி முகமூடியும்!

‘மதச்சார்பற்ற’ கட்சிகளின் கோழைத்தனமும், வாஜ்பாயி முகமூடியும்!

-

குஜராத் 2002  முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 3

முன்னுரை:

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்தவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம். 2002ஆம் ஆண்டு புதிய கலச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்!

– வினவு
__________________________________________
வாஜ்பாயி“சங்க பரிவாரத்தின் முகமூடிதான் வாஜ்பாய்” என்று ஒருமுறை சொன்னார் கோவிந்தாசார்யா. உண்மையில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பெர்னாண்டஸ் போன்ற “மதச்சார்பற்ற” கூட்டாளிகளின் பிழைப்பு வாதத்திற்கும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான “மதச்சார்பற்ற” எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்திற்கும்தான் திருவாளர் வாஜ்பாயி ஒரு முகமூடியாகப் பயன்பட்டு வருகிறார். சங்க பரிவாரத்திற்கும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் இடையிலிருக்கின்ற நடுநிலையாளராகவும் நல்லவராகவும் வாஜ்பாயியைச் சித்தரிக்கும் மோசடி வேலையை மேற்சொன்ன கட்சிகளுடன் தகவல் ஊடகங்களும் இடைவிடாது செய்து வருகின்றன. தன் உண்மையான முகத்தின் மீது வலுக்கட்டாயமாகப் பசை தடவி ஒட்டப்படும் இந்த ‘மதச்சார்பற்ற’ முகமூடியைப் பிரதமர் என்ற முறையிலேயே பலதடவை அவர் பிய்த்தெறிந்திருக்கிறார்.

இரண்டாண்டுகளுக்கு முன் கும்பமேளாவில் விசுவ இந்து பரிசத் சாமியார்கள் ராமன் கோயில் கட்டும் திட்டத்தைப் பிரகடனம் செய்தவுடன் “அயோத்தி கோயில் என்பது நிறைவேறாமலிருக்கின்ற தேசியக் கனவு” என்றார். கிறித்தவ தேவாலயங்களும் பாதிரியார்களும் தாக்கப்பட்டபோது “மதமாற்றம் குறித்த தேசிய விவாதம் தேவை” என்றார். பாடத்திட்டங்களில் பார்ப்பனப் புரட்டு நடந்தபோது “வரலாற்றில் தவறு இருந்தால் திருத்த வேண்டியதுதானே” என்றார். பிரதமர் என்ற முறையில் அமெரிக்கா சென்று அங்கே விசுவ இந்து பரிசத்தின் கூட்டத்தில் “நான் ஒரு சுயம் சேவக் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்றார். பாரதீய ஜனதாவின் தோல்விக்கான சகுனங்கள் தெரியத் தொடங்கவே, “நீங்கள் ஓட்டுப் போடாவிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி” என்று முசுலீம் மக்களை உ.பி.தேர்தல் பிரச்சாரத்திலேயே மிரட்டினார். இவை கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நல்லவர் வாஜ்பாயியின் சில நடவடிக்கைகள்.

பாப்ரி மசூதி இடிப்புவிஸ்வ இந்து பரிஷத் சாமியார்களின் ஆணைப்படி உச்ச நீதிமன்றம் கையகப்படுத்திய மசூதியைச் சுற்றியுள்ள நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கான வழிவகைகளை ஆராயுமாறு சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். இந்த ‘ஆராய்ச்சி’ நடக்கும்போதே கரசேவகர்கள் அயோத்தியில் குவிய அனுமதித்தார். “தாவாவுக்குரிய இடத்தில் நீதிமன்ற உத்திரவு பேணப்படும்” என்ற ஜனாதிபதிக்கு உரை எழுதிக் கொடுத்துவிட்டு, உத்திரவை மீறுவதற்கான கட்டைப் பஞ்சாயத்துக்கு சங்கராச்சாரியை வரவழைத்தார். “மசூதி இருந்த நிலப்பகுதியைச் சுற்றிக் கோயில் கட்டிக்கொள்வது, இறுதித் தீர்ப்பு முசுலீம்களுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் தீர்ப்புக்கு விசுவ இந்து பரிசத் கட்டுப்படுவது” என்ற சூழ்ச்சித் திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக சங்கராச்சாரியை அறிவிக்கச் செய்தார். ‘முரண்டு பிடிப்பவர்கள் முசுலீம்கள்தான்’ என்ற பொய்த் தோற்றத்தை சங்கராச்சாரியின் மூலம் உருவாக்கினார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது “மசூதி இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தூண் தானம் செய்யலாம்” என்று சோலி சோரப்ஜியைப் பேசவைத்து விட்டு, அது பற்றிக் கேள்வி எழுந்தபோது “அது அட்டார்னி ஜெனரலின் சொந்தக் கருத்து” என நாடகமாடினார். இறுதியில் பிரதமர் அலுவலகத்திலிருந்தே ஒரு அதிகாரியை அனுப்பி தூணைத் தானம் வாங்கி அரசாங்கக் கருவூலத்தில் பூட்டி வைத்து இராமன் கோயில் கட்டுமானப் பணியில் மத்திய அரசையும் சிக்க வைத்திருக்கிறார். இவை அயோத்தி பிரச்சினையில் யோக்கியர் வாஜ்பாயியின் தகிடுதத்தங்கள்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது ஐ.எஸ்.ஐ. சதி என்று நரேந்திர மோடி சொன்னதையும், அதை அத்வானி வழிமொழிந்ததையும், குஜராத் முசுலீம் படுகொலையை நியூட்டன் விதியைக் காட்டி மோடி நியாயப்படுத்தியதையும், 72 மணிநேரத்தில் ‘சகஜ நிலை’ திரும்பிவிட்டது என அத்வானியும் மோடியும் ஒத்துப் பாடியதையும் வாஜ்பாயி மறுக்கவில்லை; விளக்கம் கேட்கவில்லை. “கோத்ரா சம்பவம்தான் பயங்கரவாதம், அதன்பின் நடைபெற்ற முசுலீம் எரிப்பெல்லாம் பயங்கரவாதமல்ல” என்று அத்வானி சொன்னதையும், கோத்ராவுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது மட்டும் பொடா சட்டம் பாய்ந்ததையும் பின்னர் தந்திரமாக வாபஸ் பெறப்பட்டதையும் பற்றி வாஜ்பாயி அவர்களிடம் எந்த விளக்கமும் கோரவில்லை. பொடா சட்டம் நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருந்தார்.

மோடிபின்னர் மோடியை டெல்லிக்கு வரவழைத்தார். மோடிக்கு கசையடியும் கல்தாவும் உறுதி என்பதைப் போல பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன. ஆனால் மரபுக்கு விரோதமாக அதிகாரிகளைக் கூட வெளியே அனுப்பிவிட்டு மோடி, அத்வானி ஆகிய சுயம்சேவகர்களுடன் இரகசிய ஆலோசனை நடத்தினார். அதன்பின் குஜராத் பயணம். படுகொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற தேசிய மனித உரிமைக் கமிசனின் முடிவு, குஜராத் அரசும் விசுவ இந்து பரிசத்தும் இணைந்து நடத்திய இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்கள், மோடியை நீக்கக் கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகிய அனைத்தும் வாஜ்பாயியின் சட்டைப் பையில் இருந்தன. கண்முன்னே பாதிக்கப்பட்ட முசுலீம் மக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். ஆனால் பிரதமரோ முன்னரே தயாரிக்கப் பட்ட வசனத்தை ஒரு நடிகனுக்குரிய தேர்ச்சியுடன் பேசினார். “சொந்த நாட்டின் அகதிகளாகிவிட்டீர்களே” என்று முசுலீம்களைப் பார்த்து கண்கலங்கினார் – ஆனால் அவர்களைப் ‘பாகிஸ்தானுக்கு ஓடு’ என்று கூச்சலிடும் விசுவ இந்து பரிசத்தின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. “எந்த முகத்துடன் முசுலீம் நாடுகளுக்குச் செல்வேன்” என்று பக்கத்திலிருந்த கொலைகாரன் மோடியிடம் கோபமாகக் கேட்க வேண்டிய கேள்வியை முசுலீம்களிடம் கேட்டார். நடந்த படுகொலையையே தனக்கு நேர்ந்த அவலமாகச் சித்தரித்து அதையே முசுலீம் மக்களிடம் சொல்லி அனுதாபம் தேடினார்.

வாஜ்பாயி என்ற இந்த முகமூடிக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இரண்டிலொன்றைத் தெளிவாகப் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் உணர்ச்சிப் பசப்பலின் மூலம் பிரச்சினையையே திசை திருப்புகின்ற ஆற்றல் வாஜ்பாயி என்ற இந்த முகமூடிக்கு இருக்கிறது. “நீங்கள் அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவரா, சங்க பரிவாரத்துக்குக் கட்டுப்பட்டவரா என முடிவு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது” என்று பாராளுமன்றத்தில் சோனியா எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதைத் தவிர்த்து அதைத் தன்மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதலென்று திசை திருப்பினார் வாஜ்பாயி. “மரணத்தைக் கூடச் சந்திப்பேன் – களங்கத்தைச் சுமக்கமாட்டேன்” என்று சீறினார்; கற்பின் பெருமை குறித்து தமிழ் சினிமாக் கதாயாயகி பேசும் கிளைமாக்ஸ் வசனத்தைப் போன்ற சரக்கை அவிழ்த்து விட்டு கேள்வியையே வெற்றிகரமாகத் திசைதிருப்பினார். இதே பசப்பல்தான் குஜராத்திலும் நடந்திருக்கிறது. நான் மோடியல்ல என்று முசுலீம்களிடம் தெரிவித்திருக்கிறது இந்த முகமூடி.

கருணாநிதிதேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற கூட்டாளிகளின் நிர்ப்பந்தம் காரணமாக வாஜ்பாயி சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்றும், தங்கள் இந்துத்துவக் கொள்கைகள் எதையும் அமல்படுத்த முடியவில்லையென்றும் போலியாக அங்கலாய்த்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இந்தப் போலியான அங்கலாய்ப்பையே தங்களது கொள்கை உறுதிக்குச் சான்றாகக் காட்டி ஏய்க்கிறார்கள் கூட்டணிப் பிழைப்புவாதிகள். முகமூடி கழன்று விழும் தருணங்களில் இவர்களே முந்திக் கொண்டு முட்டுக் கொடுக்கிறார்கள். “சங்கராச்சாரி பஞ்சாயத்தில் தவறில்லை” என்கிறார் கருணாநிதி; “தூண் தானம் தவறில்லை” என்கிறார் பஸ்வான்; “குஜராத்தில் கலவரமில்லை” என்கிறார் பெர்னாண்டஸ். முகமூடி பேசவேண்டிய வசனங்களைத் தாங்களே பேசி முகமூடியின் கற்பை இவர்கள் காப்பாற்றுகிறார்கள்.

ஆர்.எஸ்.ஆஸ்.ஸின் நிர்ப்பந்தம் காரணமாக வாஜ்பாயி சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்று அனுதாபப்படுகிறார்கள் எதிர்க் கட்சிகள். “மார்ச் மாதத்திற்குள் அயோத்தி பிரச்சினை தீர்ந்து விடும் என்று வாஜ்பாயி நம்பிக் கொண்டிருந்தார்… நாம் வேறு அவருக்கு இன்னும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று எண்ணி எதிர்க்கட்சிகளாகிய நாங்களும் அவருக்கு நிர்பந்தம் கொடுக்கவில்லை” என்கிறார் மார்க்சிஸ்டு தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி (டைம்ஸ் ஆப் இந்தியா, 5.3.2002)

நிர்ப்பந்தம் கொடுத்தால் முகமூடி கிழியும். சங்க பரிவாரத்தின் ஆட்சி என்ற உண்மை வெளிப்பட்டால் அதைச் சந்திக்கத் தெருவில் இறங்க வேண்டியிருக்கும். பாராளுமன்ற அரட்டை மண்டபத்தில் அமர்ந்து “மோடியை நீக்குங்கள்” “ஆர்.எஸ்.எஸ்.ஸைக் கட்டுப்படுத்துங்கள்” என்று நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பமில்லாத நபரிடம் வைத்து எதிர்க்கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கும் நாடகம் முடிந்து அவர்களது கோழைத்தனம் அம்பலத்திற்கு வரும். கூட்டணிக் கட்சிக்காரர்களுக்கோ அவர்களது மந்திரிப் பதவியும் பிழைப்புவாதமும் வாஜ்பாயி என்ற முகமூடி கழன்ற மறுகணமே முடிவுக்கு வந்துவிடும். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்ட மதவெறியின் முகமூடி இப்போது ‘மதச்சார்பின்மையின்’ முகமூடியாகிவிட்டது.

________________________________________
புதிய கலாச்சாரம், ஏப்ரல் 2002.
________________________________________