privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிமுக விலகியதா, தப்பித்ததா?

திமுக விலகியதா, தப்பித்ததா?

-

கருணாநிதி

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து திமுக விலகி விட்டது” என்று கூறுவதைக் காட்டிலும், “விலகுவதைத் தவிர கருணாநிதிக்கு வேறு வழி இல்லை” என்றே கூறவேண்டும். இனிமேலும், வெளியேறவில்லையென்றால் தமிழக மக்களின் பொதுக்கருத்து தனக்கு எதிராகத் திரும்பிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக கருணாநிதி இந்த முடிவினை எடுத்திருக்கிறார் என்பது எல்லோரும் புரியக்கூடிய ஒரு விடயம்.

ராஜபக்சே அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தில், இனப்படுகொலை, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை போன்றவற்றை சேர்க்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலரும் கோரிக்கொண்டிருக்க, இதற்கு நேர் எதிரான வேலையை ஜெனிவாவில் டில்லி செய்திருக்கிறது.

“அமெரிக்க தீர்மானத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை இன்னும் கண்ணால் பார்க்கவில்லை” என்று நேற்று வரை கூசாமல் புளுகிக்கொண்டிருந்தார் ப.சிதம்பரம். ஆனால், அமெரிக்க தீர்மானத்தில், சர்வதேச விசாரணைக்கும் சோதனைக்கும் வாய்ப்பளிக்கின்ற எல்லா சொற்களையும் நீக்குவதில் இந்திய அரசுதான் ஜெனிவாவில் முனைந்து வேலை செய்திருக்கிறது.

இது ஊகமல்ல. அம்னஸ்டி இன்டர்நேசனல், இந்தியாவின், தலைமை எக்சிகியூடிவ், ஜி. அனந்த பத்மநாபன் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார். (first post.com, 19.3.2013)

“இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச சமூகத்தின் கவலைகள் பெரிதும் புறந்தள்ளப்பட்டுவிட்டன. இது மிகப்பெரிய பின்னடைவு. தற்போதைய நகல் தீர்மானம், நம்பகத்தன்மை வாய்ந்த, சுயேச்சையான விசாரணையை நடத்துவதற்கான அமைப்பை உருவாக்கும் பொறுப்பை இலங்கையிடமே விட்டிருக்கிறது’. திங்களன்று முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட நகல் பெரிதும் மென்மையாக்கப்பட்டு விட்டது. இந்த திருத்தங்களில் இந்தியத் தலையீட்டிற்கான தடயங்கள் ஏராளமாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

நாங்கள் அப்படியெல்லாம் திருத்தம் கொண்டு வரவே இல்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சாதித்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம். தாங்கள் கொண்டு வர விரும்பிய திருத்தத்தை “தடயம்” தெரியாத வகையில் வேறு நாட்டை வைத்து செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இப்போதும் திருத்தம் கொண்டுவர முயற்சிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பேசிக் கொண்டிருப்பதாகவும் சிதம்பரம் சொல்கிறார்.

இது எல்லாம் காக்கா நரி கதை. ஜெனிவாவில் எதுவும் நடக்காது. நாடாளுமன்றத்திலும் எதுவும் நடக்காது. இனப்படுகொலை, போர்க்குற்றம் என்று எழுதி ஒரு தீர்மானத்தை சுற்றுக்கு விட்டால், பாரதிய ஜனதா முதல் ஆளாக ஆட்சேபிக்கும். குறிப்பாக ஒரு நாட்டின் பெயர் சொல்லி எந்த தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்க முடியாது என்று ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டார் முரளி மனோகர் ஜோஷி. மேலும் நாளை ஒரு நாளுக்குள் நடக்கிற விவகாரம் அல்ல இது. நடந்தாலும் அந்த தீர்மானக் காகிதம் பீ துடைக்க கூட உதவாது.

நாம் கவனிக்க வேண்டிய விசயம் வேறு இருக்கிறது. முலாயம், மாயாவதி ஆதரவு தந்துவிட்ட பின்னரும் திமுகவை காங்கிரசு தாஜா செய்ய முயற்சிப்பது ஏன் என்பதுதான் அந்த விசயம். தமிழக மக்களின் பொதுக்கருத்து தனக்கு எதிராக திரும்பிவிடும் என்ற அஞ்சி காங்கிரசு இதை செய்யவில்லை. கருணாநிதியை கைக்குள் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு இருக்கிறது. அதேபோல தப்பித்து வெளியேற வேண்டிய தேவை கருணாநிதிக்கும் இருக்கிறது.

காரணம் 2 ஜி விவகாரம்

மன்மோகன் சிங், சோனியா, ப.சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் சம்மந்தப்பட்ட  கூட்டுக் களவாணித்தனமே 2 ஜி அலைக்கற்றை கொள்ளை. இந்த விவகாரத்தில் பரம்பரைக் கிரிமினல்களான காங்கிரசுக்காரர்கள், தாங்கள் தப்பித்துக் கொண்டு ஆ.ராசாவையும் திமுகவையும் மட்டும் காவு கொடுத்து விட்டார்கள். இதுநாள் வரை கசியாத இது தொடர்பான உண்மைகள் இப்போது  இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

அலைக்கற்றை ஊழலில் திமுகவை மட்டும் ஊழல் கும்பலாக காட்டி, உத்தம வேடம் போட்ட காங்கிரசின் இந்த களவாணித்தனத்துக்கு சுப்பிரமணியசாமி, பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பனத் அதிகாரத் தரகுக்கும்பல், ஜெயலலிதா, சோ உள்ளிட்ட அனைவரும் இந்த நிமிடம் வரை ஒத்துழைத்திருக்கின்றனர்.

“திராவிட வெறுப்பு, தமிழின வெறுப்பு, தமிழகத்திலிருந்து பார்ப்பன எதிர்ப்பை துடைத்தெறிய வேண்டும் என்ற வெறி” ஆகிய “கொள்கைகளில்” உடன்பாடு கொண்ட இவர்கள், சு.சாமியை முன்நிறுத்தி தங்கள் காரியத்தை நடத்தி முடித்து, ஜெயலலிதாவையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி விட்டனர்.

அலைக்கற்றை ஊழல் வெளிவந்த காலத்தில், மன்மோகன் சிங் கறை படாத சொக்கத்தங்கம் போலவும், அவர் மீது கடவுள் கூட குற்றம் சாட்ட முடியாது என்பது போலவும், அந்த அப்பிராணி மனிதருக்குத் தெரியாமல் ராசா கொள்ளையடித்து விட்டதைப் போலவும், அனைத்திந்திய ஊடகங்களும், உச்சநீதிமன்றமும் ஒரு பில்டப் கொடுத்து தூக்கி விட்டன. கல்லுளி மங்கன் மன்மோகன்சிங்கும், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு தெரியவே தெரியாது என்று கூசாமல் அடுக்கடுக்காக பொய்களை அவிழ்த்து விட்டார்.

“மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் இது நடக்கவில்லை. நீங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று ஊடகங்கள் சு.சாமியைக் கேட்டபோது, “என்னுடைய இலக்கு திமுக மட்டும்தான்” என்று பச்சையாக பதிலளித்தார் சு.சாமி.

இந்த ஊழலை விசாரிக்க “கூட்டு பாராளுமன்றக் குழு (JPC) அமைக்க வேண்டும்” என்று கோரி பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டபோது, யோக்கிய சிகாமணி மன்மோகன், “ நான் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்” என்று உருக்கமாக அறிக்கை விட்டார். உடனே காங்கிரசு களவாணிகள், “நாட்டாமை நீங்களா.. அந்த நதியே காஞ்சு போனா” என்ற ரேஞ்சுக்கு சீனைப் போட்டு கண்ணீர் வடித்தனர்.

இன்று நடப்பது என்ன?

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ராசா, “நான் கூட்டு பாராளுமன்றக் குழுவில் ஆஜராகி பேச வேண்டும்” என்று மன்றாடுகிறார். நான் கூப்பிட மாட்டேன் என்கிறார் குழவின் தலைவர் சாக்கோ. இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை யாராவது எங்காவது பார்த்திருக்க முடியுமா? எவன் எவனோ சாட்சியம் அளிக்கிறான். முதல் குற்றவாளியும் சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரும் பேசக்கூடாதாம்.

“ஆ.ராசாவை ஏன் அழைக்க மறுக்கிறீர்கள்?” என்று புரட்சித்தலைவியோ, சுப்பிரமணியசாமியோ கேட்கவில்லை என்பதுதான் இந்த மர்மக் கதையின் சிறப்பு.

கடந்த சில நாட்களாக இந்து நாளேட்டில் ஷாலினி சிங் எழுதி வரும் கட்டுரைகள், மன்மோகன் சிங்கிற்கு இந்த கொள்ளையில் நேரடியாக தொடர்பிருப்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றன. முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற கொள்கை விவகாரத்தில் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் தேதியை மாற்றியது என்ற முக்கியமான ஊழல் குற்றச்சாட்டிலும் மன்மோகன் நேரடியாகவே சம்பந்தப் பட்டிருக்கிறார் என்பது அம்பலமாகியிருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த ஊழல் விவகாரம் வெளிக்கிளம்பிய பின்னர் “இந்த விவகாரத்திலிருந்து என்னை பத்திரமாக கொஞ்சம் எட்டத்தில் வைப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள்” (keep me away at arms length) என்று மன்மோகன் சிங் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததும் வெளியில் வந்து விட்டது.

மன்மோகன் சிங்கை காப்பாற்றும் வகையில் துறை அதிகாரிகள் தமக்குள் பேசி வைத்துக்கொண்டு கூட்டு பாராளுமன்றக் குழுவில் பொய் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகிவிட்டது

இவ்வளவு விசயங்கள் இருந்தபோதிலும், பாஜக, அதிமுக ஆகிய யாரும் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடவில்லை.  மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்கவில்லை.

“ஈரத்துணியைப் போட்டு ராசாவின் கழுத்தை மட்டும் சத்தமில்லாமல் அறுத்துவிடலாம்” என்பதே இவர்களின் திட்டம். இப்போது கத்தவில்லை என்றால் திமுக எப்போதுமே கத்த முடியாது. அமைச்சரவைக்கு உள்ளே திமுகவை வைத்திருந்தால், எதையாவது சொல்லி, வாயை அடைத்து விடலாம் என்ற காரணத்தினால்தான், “ எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். உள்ள வாங்க” என்று நைச்சியமாக கருணாநிதியைக் கூப்பிடுகிறது காங்கிரசு.

இந்த விசயத்தில் திமுக காங்கிரசுடன் எந்த அளவுக்கு மோதப்போகிறது என்று நமக்கு தெரியாது. வேறு பல பிரச்சினைகள் சமன்பாடுகள் இருக்கலாம். ஆனால் உள்ளே இருக்கும் வரையில் பேசவே முடியாது. வெளியே வருவதற்கு அலைக்கற்றை ஊழலைக் காரணமாக காட்டுவதை விட, ஈழத்தமிழர் பிரச்சினையை காரணமாக காட்டுவது மதிப்பான விசயம் இல்லையா? அந்த வகையில் ஜெனிவா திமுகவுக்கு கை கொடுத்திருக்கிறது.

மன்மோகன் சிங் என்ற திருடனை (அதாவது சோனியாவை) திமுக சந்திக்கு இழுக்குமா?  ஒரு வகையில் பார்த்தால் இழுத்துத்தான் ஆக வேண்டும். இலங்கைப் பிரச்சினையைப் போலவே இதிலும் திமுகவிற்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.  அவ்வாறு இழுக்கும் பட்சத்தில் என்போர்ஸ்மென்ட் டைரக்டரேட் மூலம் கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துகளை முடக்குவது, கனிமொழியை மீண்டும் கைது செய்வது என்ற திட்டத்துடன் காங்கிரசு தயாராக இருப்பதாக சில பத்திரிகைகள் கூறுகின்றன.

திமுகவோ, காங்கிரசோ, ஜெயல்லிதாவோ அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று ஊகிப்பது நமக்கு தேவையில்லாத வேலை. அவர்கள் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அதன் பின்னால் இப்படியொரு பின்புலம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்திருப்பதுதான் அவசியம்.

தமிழ், திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு போன்ற அனைத்தின் மீதும் மாளா வெறுப்பு கொண்ட, காங்கிரசு, பாஜக, சு.சாமி, சோ, இந்து ராம், ஜெயலலிதா உள்ளிட்ட மெகா பார்ப்பனக் கூட்டணி ஒரு புறம்.

திராவிடம், தமிழ் என்று பேசிப் பிழைத்து, ஊழல், சந்தர்ப்பவாதத்தில் புழுத்து பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையின் கவுரவத்தையே குழி தோண்டிப் புதைத்த திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு புறம்.

திராவிட இயக்கத்தின் மீதான துவேசத்தையும், பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் மீதான தங்களது அபிமானத்தையும் மறைத்துக் கொண்டு, ஈழப்பிரச்சினையில் திமுகவின் துரோகத்தைக் காட்டி, அதன் மூலம் தங்களது ஆழ்வார் வேலையை நியாயப்படுத்தும் தமிழினவாதிகள் ஒருபுறம்.

லாவணி தொடங்க இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் பாடகர்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கச்சேரியை நாமே முடித்து வைக்க முடியும்.

– சூரியன்