கோவையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – தமிழ்நாடு சார்பில் அண்ணாமலை ஹோட்டலில் “நாடு மீண்டும் அடிமையாகுது … பகத்சிங் பாதை உன்னை தேடுது…” என்ற தலைப்பில் பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்துவரும் நிலையில் கோவையிலும் அரசு சட்டக்கல்லூரி, அரசு கலை-அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து கூட்டமைப்பினை உருவாக்கி உண்ணாவிரதம், சாலை மறியல், மத்திய-மாநில அலுவலகங்கள் முற்றுகை மற்றும் விமானநிலையம், இராணுவ ஆயுதக்கிடங்கு, விமான பயிற்சி பள்ளி முற்றுகை, மேலும் சட்டக்கல்லூரி மாணவிகள் மட்டுமே பங்கேற்ற போலீஸ் ஸ்டேசன் முற்றுகை, பள்ளி மாணவர்கள் மறியல், போராட்டம் செய்து கைதான மாணவர்களை பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உணவு வழங்குதல் என கோவை போராட்ட பூமியாக காட்சி தரும் நிலையில்…
மார்ச் 23 அன்று பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. பகத்சிங்கின் போராட்ட வரலாற்றை விளக்கி இன்றைய மாணவர்களின் போராட்டத்தில் என்ன கோரிக்கை வைப்பது? யாரிடம் கோரிக்கை வைப்பது? என்று கோரிக்கை வைப்பதில் உள்ள பிரச்சனைகளை விளக்கி இந்திய அரசும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் தங்களுடைய மேலாதிக்க வெறியுடன் செயல்படுவதையும் மக்கள் பங்கேற்புடன் எழுச்சிமிக்க போராட்டம்தான் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுத் தரும் என்றும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தால் போர் குற்றத்திலிருந்து இந்தியாவை தப்ப வைக்கும் முயற்சி என்றும் மாணவர்கள் ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளை புறக்கணித்ததை போன்று சரியான புரட்சிகர அரசியல் பாதையை தேர்ந்தெடுப்பதன் மூலம் இனவெறி அரசியலில் மாணவர்கள் பலியாகாமல் இருக்கலாம் என சுமார் ஒன்றே முக்கால் மணிநேரம் தங்களது சிறப்புரையின் மூலம் ம.க.இ.க.வை சேர்ந்த தோழர் துரைசண்முகம் விளக்கி பேசியதோடு, மாணவர்களுடன் விவாத நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு “ஆதலினால் காதல் செய்” கவிதை மற்றும் ஈழம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து ம.க.இ.க. வின் ஈழம் தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை விளக்கினார்.
தோழர் அலாவுதீன் தலைமையிலும், தோழர் வழக்குரைஞர் ஆனந்தகுமார் வரவேற்புரையுடனும் நடந்த அரங்க கூட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி, அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் கோவையை சுற்றியுள்ள அனைத்து தனியார் கல்லூரி மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் கோவை இசைக்கல்லூரி மாணவிகள் ம.க.இ.க. வின் புரட்சிகரமான பாடல்களை இரண்டு நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து கலைநிகழ்ச்சி வழங்கினர். இறுதியாக ம.க.இ.க. வின் கோவை பகுதியின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் சட்டக்கல்லூரி மாணவி உமா நன்றி கூறினார்.