privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் - நூல் வெளியீடு!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!

-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம். கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் என்ற நூலை மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு பதிப்பித்துள்ளது. இந் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 14.03.13 வியாழன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமாகிய திரு மு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வழக்கறிஞர் மெல்ட்டியு நூலினை அறிமுகம் செய்து உரையாற்றினார். வழக்கறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், போராளி ஆகிய பன்முகத் தன்மை கொண்ட திரு தி லஜபதிராய் நூலை வெளியிட, எழுத்தாளர் சிந்தனையாளர் வழக்கறிஞர் க பிரபுராஜதுரை பெற்றுக் கொண்டார்.

தலைமையுரையாற்றிய வழக்கறிஞர் திருநாவுக்கரசு, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பல்வேறு போராட்டங்களையும் அதில் கண்ட வெற்றிகளையும் எடுத்துரைத்தார். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த கருணாநிதி இறுதிவரை உறுதியாக நின்று போராடவில்லை. இப்போது மனித உரிமை பாதுகாப்பு மையம் உறுதியாக நின்று போராடுகிறது. 206 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழும் பெற்றுள்ள சூழ்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் உள்ளனர். கிராமக் கோவில்களில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பூசை செய்யும் போது ஓடாத கடவுள் பெரிய கோவில்களில் பூசை செய்யும் போது மட்டும் ஓடிவிடுமா என்று கேள்வி எழுப்பினர்.

நூலின் உள்ளடக்கத்தை முழுமையாகப் படித்துத் தொகுத்துச் சொல்லிய வழக்கறிஞர் மெல்ட்டியூ, 1970-களில் பெரியார் தொடங்கிய போராட்டம் கடந்த 42 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்கிறவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்டார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையம் தான் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறது. அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் செய்வதறியாது நின்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையம் அந்த 206 மாணவர்களையும் சங்கமாகத் திரட்டி அரசுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் மாணவர் சங்கத்தையும் ஒரு தரப்பினராகச் சேர்த்தது. அரசியல் சாசனச் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிறது, ஆனால் கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஆகம விதிகள், மரபு, பழக்க வழக்கம் என்று சொல்லி அங்கீகரிக்கிறது. ஆனால் 2002ல் கேரளாவைச் சேர்ந்த ஆதித்தியன் தொடுத்த வழக்கில் பார்ப்பனர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஒழிக்கும் ம.உ.பா மையத்தின் முயற்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்றார். மெல்ட்டியு கத்தோலிக்க கிறித்தவ மத குருவாக இருந்து அங்கே நிலவிய சாதி ஆதிக்கம், தீண்டாமையை எதிர்த்து அப்பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வழக்கறிஞர்

அடுத்து நூலை வெளியிட்டு திரு லஜபதிராய் உரையாற்றினார். கோவில் அதிகார மையமாகத் திகழுகிறது. 2000 ஆண்டுகளாக அடிமைத்தனம் நிலவுகிறது. 7½ ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததனால் சென்னகரம்பட்டியில் 2 பேர் பட்டியல் இனத்தவர் கொலை செய்யப்பட்டனர். பூசை செய்யக் கூடியவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஆகம விதிகளின் படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகமம் என்றால் என்ன?

ஆகமம் எங்கிருந்து வந்தது. ஆகமம் எழுத்து வடிவத்தில் இல்லை. 36 ஆகமங் கள் இருந்த்தாகவும் அதில் காமிகாம ஆகமம். பைகான ஆகமம் ஆகிய இரண்டு ஆகமங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆகமத்தை எழுதியவர் யார்? பிரமன், நாரத னுக்குச் சொன்னான். நாரதன், யாதன வல்க்கியருக்குச் சொன்னான்-யாதன வல்க்கியர் மனுவுக்குச் சொன்னான்-மனு யாருக்குச் சொன்னான்-மனு வெங்காயத்துக்குச் சொன்னான் என்றார் பெரியார். கோவில்கள் எப்போது வந்தன. 9 ஆம் நுர்ற்றாண்டுக்கு முன்பு கோவில்கள் இல்லை. கோவில்கள் பௌத்தர்கள். சமணர்களால் உருவாக்கப் பட்டது. மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள் சமண, பௌத்தர்களை விரட்டி விட்டு கோவில்களைக் கைப்பற்றினர். காஞ்சி காமாட்சி, நாகை விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகிய கடவுள்கள் எல்லாம் பவுத்தக் கடவுள்களாக இருந்து இந்துக் கடவுளர் களாக மாற்றப்பட்டார்கள். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எழுதிய ராகுல்ஜி. அண்ணல் அம்பேத்கர், திலகர் போன்றவர்கள் எல்லாம் இதுபற்றி எழுதியுள்ளனர். ஆரியர்களின் சொத்து பசு. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்-இவை தான் உணவு. மூத்திரம் கிருமி நாசினி-சாணம் எரிபொருளாகப் பயன்பட்டது. அவர்கள் நாடோடிகளாக இருந்தனர். சூரியன் தான் அவர்களது கடவுள்-எனவே சூரிய நமஸ்காரம் அவர்களது வழிபாட்டு முறையில் முக்கியமானது. சங்கராச்சாரி கூட மாடு மேய்க்கிற அதே கோலத்தில் இப்போது கூட இருந்து வருகிறார்.

எனவே கோவில்கள் என்று எடுத்துக் கொண்டால் நாகமலை புதுக்கோட்டை, யானை மலை, பாண்டி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் மகா வீரர், புத்தர் சிலைகள் தான் உள்ளன. கோவில்களைக் கைப்பற்றிய பார்ப்பனர்களிடமிருந்து வழிபாட்டு உரிமைகளைப் பெறவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்த்து.

1969-ல் இளைய பெருமாள் கமிட்டி, 1972-ல் சேஷம்மாள் வழக்கு, ஆந்திராவில் நாராயண தீர்சிதர் வழக்கு, கேரளாவில் ஆதித்தியன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழக்கு என்று பல வழக்குகள் தொடுத்தும் ஆகம விதிகளை, பரம்பரை நியமனத்தை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை என்ற நிலை உள்ளது. தமிழக அரசு தொடுத்த வழக்கில் 55வது பிரிவு திருத்தத்தில் அரசு தரப்பில் சறுக்கல் ஏற்பட்டது. அர்ச்சகர் நியமனத்தின் போது ஆகம விதிகளைக் கடைபிடிப்போம் என்று அரசு ஒப்புக்கொண்டது, எனவே தான் பெரியார் “ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்” என்று இதைக் குறிப்பிட்டார்.

தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிற அரசியல் சட்டப் பிரிவு 13க்கு எதிராக உள்ளது ஆகம விதிகள், அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் பெரிதா? ஆகமங்கள் சொல்லுகின்ற வழக்கங்கள், வழக்காறுகள் பெரிதா? அப்படியானால் அரசியல் சட்டத்தை விட ஆகமங்கள் பெரிதா? என்று கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் லஜபதிராய். மேலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்துகின்ற இந்த சட்டப் போராட்டம் சரியான சிறந்த முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெறும்-ஆகமங்கள் குப்பை-சட்ட ரீதியாகப் போராடி வெல்லலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைக்கிளை துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அர்ச்சக மாணவர் சங்கம் அமைத்தது, சான்றிதழ் பெற்றுத் தந்தது, வழக்கில் தரப்பினராகச் சேர்த்தது, மதுரை, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியது, பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று கூறுகிறவர்களோ, நாமெல்லாம் இந்துக்கள் என்று இந்து ஒற்றுமைக்காக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ இந்தப் பிரச்சனைக்கு ஆதரவாக வரவில்லை. ம.உ.பா மையம் தான் இந்தப் பிரச்சனையில் முன்நின்று போராடுகிறது.

கடும் உழைப்பினாலும், பொருட் செலவிலும், தோழமை அமைப்புகளின் உதவியோடும் இந்த வழக்கினை நடத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் 4 வழக்கு களை நடத்தி வருகிறோம். படித்தவர்கள் விவரம் அறிந்தவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இது அர்ச்சகர் பணி என்கிற பிரச்சினை மட்டுமல்ல. தமிழனின் மானப் பிரச்சினை. கருவறைத் தீண்டாமை பிரச்சனை. இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் கலெக்டர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அர்ச்சகர் மட்டும் ஆக முடியாது. அது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரால் மட்டும் தான் முடியும் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

வழக்கறிஞர் ப.வெங்கடேசன் நன்றி கூறினார்.

விழாவில் 60 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தன. மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரைக்கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை.