இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பொழுது, நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பது போன்ற வடிவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. சனவரி 1, 2005க்குள் புதிய வடிவுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட வேண்டும் என்றும் உலக வர்த்தகக் கழகம் காலக்கெடு விதித்திருந்தது.
நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், விதைகள் ஆகியவற்றின் மீது வடிவுரிமை கோர முடியாது.
மருந்துகள், இரசாயன உரங்களைத் தயாரிக்கும் செய்முறைக்கு மட்டும்தான் வடிவுரிமை வழங்கப்படும். ஒரு பொருளைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதற்கும் இந்தியச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் வடிவுரிமைச் சட்டமோ, பொருட்களின் மீதே வடிவுரிமை வழங்குவதோடு, வடிவுரிமை பெற்ற பொருட்களைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதைத் தடுத்து விடுகிறது.
உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, இந்திய வடிவுரிமைச் சட்டத்தில் ஏற்கெனவே இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய வடிவுரிமைச் சட்டத்தை முற்றிலுமாக அமெரிக்க பாணியில் மாற்றியமைக்கும் அரசாணையை, கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரியாமல் மைய அரசு அறிவித்தது. இப்பொழுது, மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் அந்த அரசாணையைச் சட்டமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்டத்திற்குப் பதில் இன்னொரு சட்டம் வருகிறது என இந்த மாற்றத்தை சாதாரணமாகப் பார்க்க முடியாது. இந்த மாற்றத்தின் மூலம் இந்திய மக்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் கிடையாது. அதைப் பன்னாட்டு மருந்து கம்பெனிகள்தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
உதாரணத்திற்குச் சொன்னால், தொற்று வியாதிக்குக் கொடுக்கப்படும் சிப்ரோஃபிளாக்சின் என்ற மருந்து இந்தியாவில் 29 ரூபாய்க்கு (500 மி.கி. கொண்ட 10 மாத்திரைகளின் விலை) விற்கப்படுகிறது. அமெரிக்காவிலோ இந்த 10 மாத்திரைகளின் விலை 2,352 ரூபாய். ‘எய்ட்ஸ்” நோயாளிகள் அமெரிக்க தயாரிப்பு மருந்துகளை வாங்க ஆண்டொன்றுக்கு 5,40,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்த பொழுது, இந்திய மருந்து நிறுவனங்கள் அதே மருந்தை 6,300 ரூபாய்க்குத் தயாரித்து விற்றன.
இந்தியாவில் பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட விலை மலிவாகக் கிடைத்ததற்கு 1970ஆம் ஆண்டு இந்திய வடிவுரிமைச் சட்டம்தான் காரணமாக இருந்தது. இச்சட்டத்தை மாற்றுவதன் மூலம் 1970க்கு முன்பிருந்த நிலையை மருந்துகளின் உற்பத்தியையும், விலையையும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள். “இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுள் ஏறத்தாழ 40 முதல் 60 சதவீத மருந்துகள் இப்புதிய வடிவுரிமை சட்டத்தின் கீழ் சென்று விடும்; சாதாரண தலைவலி, காய்ச்சல் மருந்துகள் கூட 300 சதவீதம் விலை உயரும்” என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு மருந்தை, பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் முறையை இப்புதிய வடிவுரிமைச் சட்டம் தடுத்துவிடுவதால், ஆயிரக்கணக்கான இந்திய மருந்து நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். “அறிவுசார் கண்டுபிடிப்புகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், அக்கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் முறைகேடாக ‘காப்பி’யடிப்பதைத் தடுக்கவும்தான் புதிய வடிவுரிமைச் சட்டம் கொண்டு வரப்படுவதாக” உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. மாறாக, இச்சட்டம் மருந்து தயாரிக்கும் செய்முறைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், புதிய பல்வேறு தரப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு தடை போடுகிறது; போட்டியாளர்களைச் சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் இலாபத்திற்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில், 5 சதவீதத்தைப் பொது சுகாதாரத்திற்கும், மக்களின் உடல் நலத்திற்கும் செலவழிக்க வேண்டும். ஆனால் இந்திய அரசோ, இதற்குத் தனது வருவாயில் 0.9 சதவீத நிதியைத்தான் ஒதுக்குகிறது. இந்த அற்பமான நிதியையும், இனி பன்னாட்டு மருந்து கம்பெனிகளே தின்று தீர்த்து விடும்.
உதாரணத்திற்குச் சொன்னால், வெறிநாய்க்கடிக்கு இந்தியாவிலேயே தயாராகும் நரம்புத் திசு தடுப்பு மருந்தின் விலை நான்கு ரூபாய்தான். இந்த ஊசி மருந்தைத் தடை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ‘அபய்ராப்” என்ற மருந்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்டது.
பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து விற்கும் ‘அபய்ராப்” மருந்தின் விலை ரூ. 350. சென்னை புறநகர் பகுதியில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இப்புதிய நாய்க்கடி மருந்தை வாங்க வேண்டும் என்றால், அதற்கு ஆண்டுக்கு நாற்பது இலட்சம் ரூபாய் தேவைப்படும். ஆனால், அம்மருத்துவமனைக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி ரூ. 25 இலட்சம்தான். இந்த நிதியை புதிய நாய்க்கடி மருந்து வாங்கவே செலவழித்து விட்டால், மற்ற நோய்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?
‘பல்வேறு விதமான மருந்துகளின் மீது வடிவுரிமை கேட்டு 5,636 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும்; இவற்றுள் 4,398 விண்ணப்பங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் அனுப்பியிருப்பதாகவும்” இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் எல்லாம் புதிய கண்டுபிடிப்புகளுக்குதான் வடிவுரிமை கோருகின்றன எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், புதிய வடிவுரிமைச் சட்டம் “கண்டுபிடிப்புகளுக்கு”ப் பல ஓட்டைகளைக் கொண்ட விளக்கத்தைத்தான் தருகிறது. இதனால், பழைய மருந்தைக் கூட புதிய நோய்க்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, வடிவுரிமையைப் பெற்று விடலாம் என இந்திய மருந்து நிறுவனங்களே உண்மையைப் புட்டு வைத்துள்ளன.
1970ஆம் ஆண்டு வடிவுரிமை சட்டத்தில் இப்படி முறைகேடாக வடிவுரிமை பெறுவதைத் தடுக்க வழி இருந்தது. அச்சட்டத்தின்படி, வடிவுரிமை கொடுப்பதற்கு முன்பே, அதனை எதிர்த்து வழக்கத் தொடுக்க முடியும். ஆனால், தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தில் இப்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வடிவுரிமை கொடுத்த பிறகு வழக்கு தொடரலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கச் சொல்லுகிறது, மைய அரசு.
இப்புதிய வடிவுரிமை சட்டத்தால், மருந்து மாத்திரைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும் என்பது ஒருபுறமிருக்கட்டும்; நமது நாட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசியமான உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றிக் கிடைக்கும் என்பதற்குக் கூட இனி எந்த உத்திரவாதமும் கிடையாது.
மலேரியா, காலரா, காச நோய், மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள்தான் அடித்தட்டு மக்களைத் தாக்குகின்றன. சாதாரண மலேரியா நோயோடு இப்பொழுது மனித மூளையைத் தாக்கும் புதுவகை மலேரியா நோய் கூட வந்துவிட்டது. இதற்குத் தேவையான சிகிச்சைக்கு, மருந்து மாத்திரைக்கு அடித்தட்டு மக்கள் அரசாங்க மருத்துவமனைகளை நோக்கிதான் ஓடுகிறார்கள். அரசாங்கமோ மருந்து மாத்திரைகளுக்கு பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்பியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் “வயாகரா”, “எய்ட்ஸ்” பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.
கொள்ளை நோய்கள் ஒரு நாட்டைத் தாக்கினால், அதற்குத் தேவையான மருந்து மாத்திரைகளுக்குப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்ப முடியாது என்பதை உலக வர்த்தகக் கழகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது. அதனால்தான், தொற்று நோய் தாக்கும் அவசர காலங்களில், வடிவுரிமைச் சட்டத்தை மீறி, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடே மருந்துகளைத் தயாரித்துக் கொள்ளலாம் என்ற சலுகையை உலக வர்த்தக கழகம் வழங்கியிருக்கிறது.
இந்தச் சலுகை நாயிடம் கிடைத்த தேங்காயைப் போன்றது. ஏனென்றால், ஒரு நாடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உலக வர்த்தகக் கழகம்தான் தீர்மானிக்கும். உலக வர்த்தகக் கழகம் தீர்மானித்த பிறகு, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடு இந்தச் சலுகையைப் பயன்படுத்தி மருந்துகளைத் தயாரித்து, நோயாளிக்குக் கொடுப்பதற்குள் நிலைமை கையை மீறிப் போய்விடும். எனவே, அடித்தட்டு மக்கள் தங்களை நோயிலிருந்து காத்துக் கொள்ள, பழைய காலம் போல மாந்தரீகம், நாட்டு வைத்தியத்திற்குத் திரும்ப வேண்டியதுதான்!
இப்புதிய வடிவுரிமைச் சட்டம் மக்களின் உயிரோடு மட்டும் விளையாடப் போவதில்லை; இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திலும் கைவைக்கப் போகிறது. இப்புதிய வடிவுரிமைச் சட்டத்தின்படி விதைகள், தாவரங்களை வடிவுரிமை செய்து கொள்வதற்கு இனி தடையேதும் கிடையாது. இதற்குத் தகுந்தாற்போல, இந்திய விதைகள் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
விவசாயிகள் விதைகளைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்; விதைகளை மறு உற்பத்தி செய்து கொள்ளவும்; விதைகளை சக விவசாயிகளுக்கு விற்கவும் (1966ஆம் ஆண்டு விதைகள்) சட்டம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தற்பொழுது இச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களின் பெயரைக் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதாவது, இனி விதை நெல்லைக் கூட தங்களின் இஷ்டத்திற்கு விவசாயிகள் சேமித்து வைக்கக் கூடாது; அப்படி எடுத்து வைத்தால் அது சட்டவிரோதம் என விவசாயிகளை மிரட்டுகிறது, மைய அரசு. இம்மிரட்டலின் மூலம் வடிவுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்க முயலுகிறது.
இந்திய மக்களின் உணவுத் தேவைக்கும், அவர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் ஏகாதிபத்தியங்களை நத்திப் பிழைக்க வேண்டும் என்றால், இந்திய சுதந்திரத்தின் பொருள்தான் என்ன?
– செல்வம்
__________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2005
__________________________________________________________________________
ithai sonnal nammai ilavasa thamizhan, nimirtha mudiyaatha naai vaal endrellam vasai paaduvaargal. paadattum. avargalukkum serthey intha porattam.
traditional medicines has solutions for many communicable disease.In the first era of colonisation the traditional medicines was eradicated by british government in well planned manner,traditional medicine was property of the people of soil,it reveals the scientific knowledge of tribals developed in copurse of time by their experience with nature,it was first stolen and named as ayurveda (vedam contain only small details about medicine) and all the traditional medicinal knowledge was recorded as ayurveda by bhramin dominance lobby.but those brahmins has no such knowledge but simply recorded the traditional knowledge of tribal people and exposed it as their own knowledge that god gave.later this too was eradicated by british entered for their trade benefits.the modern day ayurveda is designed to fulfill the need of globalisation. but siddha system of medicine from the soil of periyar retained its originality and remains as the monument of knowledge of people of son of soil withstanding the efforts of dominant brahminism as it evolved from the land of periyar and has own values of siddhars who was against caste system.it has all scientific and cultural qualification to fight as weapon against the outcomes of the privatisation and globalisation in the field of medicine.so comrades, please dont mix maanthrikam with naatu maruthuvam and it is superstitious, and dont say it is worse situation to depend on naatu maruthuvam.but only you comrades can develop these system of medicine uprooting its scientific values and fight against globalised and privatised pharma industry.
நோய்க்கு மருந்து இல்லை, கண்டுபிடிக்கும் மருந்தை வாங்க சக்தி இல்லை என்ன கொடுமை வினவு சார்.இந்த நாட்டில் இருக்கவே அவமானமாய் இருக்கு. 1970ல் இருந்த வடிவுரிமை சட்டம் திருத்தி யார் வாழ யார் யார் உரிமையை பரிப்பது.எழு ..எழு..வடிவுரிமை சட்டத்தை மாற்றும் அரசமைப்பையே மாற்று.புறப்படு…………………………புஜாதோமு தலமையில்.
வடிவுரிமை சட்டத்தை மாற்றும் அரசமைப்பையே மாற்று.புறப்படு…………………………புஜாதோமு தலமையில்.
Great joke