privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கருப்பாயி !

-

நான் கண்ட பெண்களில் மிகவும் அழகானவள் இந்த ஆயி. பார்த்த உடன் பிடித்துப் போகுமளவு இலட்சணமாக இருப்பாள்.

பெண்

உழைத்துப் பிழைக்கும் ஒரு சிறு விவசாயி குடும்பத்தில் பிறந்தவள் இந்த ஆயி. (எங்க ஊரில் பெண் பிள்ளையை ஆயி என்று செல்லமாக அழைப்பார்கள்). ஆயியை சின்ன வயதிலிருந்தே எனக்கு தெரியும். மிகவும் கொழு கொழு குழந்தையாக, துறு துறுவென்று இருப்பாள். கருப்பா இருந்தாலும் களையாக இருக்கிறாள் என்று கிராமத்தில் ஆயியை தூக்கி கொஞ்சாதவர்கள் கிடையாது. ஆயியை கடந்து செல்லும் யாருக்கும், ஒரு நிமிசமாவது எடுத்து அணைக்கத் தூண்டும் வசீகரம் அவளிடம் இருக்கும்.

அவள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவள். ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு தட்டாமல் செய்வாள். அக்கம் பக்கத்து குழந்தைகளை பெற்றோர் இல்லாத நேரத்தில் மணிக்கணக்கில் பார்த்துக் கொள்வாள். தெருவோரத்தில் இருக்கும் வயதான பாட்டிக்கு குளிக்க கொள்ள தண்ணி எடுத்து கொடுப்பாள். தன் கூட பழகும் தோழிகளுக்கு கஷ்டம் என்றால் தான் வைத்திருக்கும் நகையை அம்மாவுக்குத் தெரியாமல் அடகு வைக்க கொடுப்பாள். தெருவில் நடமாடும் குழந்தைகளோ, பெரியவர்களோ பசியோடு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் சாப்பாடு போடாமல் விடமாட்டாள்.

ஒரு கிராமத்துப் பெண் என்ற முறையில் இந்த பண்புகளை எல்லாம் அங்கே பல பெண்களிடம் பார்க்கலாம் என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஆயியிடம் இந்த நேசம் அழகாக குடி கொண்டிருந்தது.

இருந்தாலும் இவையெல்லாம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தான் கருப்பாக இருக்கிறோம் என்ற உண்மை அவ்வப்போது அவளை கொஞ்சம் கலங்கடிக்கும். இல்லை அவளது ஆழ்மனதில் அது மாறாத வடுவாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுவும் மிகவும் சிறிய வயதிலேயே இந்தக் கவலை அவளிடம் இருந்தது.

இனி அவளது கதையை பேச்சு மொழியிலேயே சொல்கிறேன். அதுதான் எனக்கு இயல்பாக வரும்.

அவள் வீட்டருகில் மனிதர்கள் குளிக்காத, ஆட்டு, மாட்டுக்கு பயன்படுத்துற ஒரு குளம் இருந்துச்சு. அஞ்சு வயசுல எந்த நேரம் பார்த்தாலும் அந்த கொளத்துல தான் குளிச்சுகிட்டே இருப்பா. பார்க்கறவங்க எல்லாரும் அழச்சுட்டு வந்து வீட்டில விட்டு திட்டுவாங்க. தவறி விழுந்தா என்னாவது, பாத்துக்கங்க என்பார்கள். அவங்க விட்டுட்டு போன மறு நிமிசமே சோப்பையும், லோட்டாவையும் (சொம்பு) தூக்கிட்டு ஓடிருவா.

“ஒரு நாளைக்கு எத்தன தடவடி குளிப்ப” என்றதற்க்கு, “நான் செவப்பாகர வர குளிப்பேன்” என்று அஞ்சு வயசுல அவள் சொன்னது இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. இப்போது அவ வளந்து பெரியவளாயி கல்யாணமும் முடிஞ்சிருச்சு. இப்பயும் அப்படிதான் தன் கருப்பு கலருக்காக உள்ளுக்குள் வேதனையை வைச்சுக்கிட்டு வெளியில வேடிக்கையா பேசுவா.

திருமணத்துக்கு பிறகு ஊருக்கு வந்தவ என்னை பார்க்க வந்திருந்தாள். மத்தியான நேரம் இருக்கும். “என்ன செய்றக்கா” என்றபடி வந்தா. “வா, வா,” என்றபடியே, “பாப்பாவ குளிப்பாட்ட கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயறு, கடலப் பருப்பு, எல்லாத்தையும் சேத்து அரைச்சத சலிச்சுட்டு இருக்கேன்” என்றேன்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்க முகமெல்லாம் கருத்து போய் இருக்கு” என்றேன்.

“நீ வேற என் வேதனைய அதிகமாக்காத” என்றாள்.

“ஏன் என்ன ஆச்சு” என்றேன்.

“எங்கம்மா இப்படியெல்லாம் அரச்சு குளிப்பாட்டியிருந்தா நான் நல்ல கலரா வந்துருப்பேன்லே”அப்டின்னா.

“உனக்கு எப்பவும் விளயாட்டுதான். யாரு எப்படி கிண்டலடிச்சாலும் சிரிச்சுகிட்டே போற. எந்த நேரமும் உன் கலர பத்தி நீயே பேசி தானாகவே கிண்டலடிக்கிற. மத்தவங்க உண்னை கிண்டல் செஞ்சாலும அத இருக்கிறத்தான சொல்றாங்கன்னு சகஜமாக எடுத்துட்டு போற, ஆனா உள்ளுக்குள்ள கவலையும் படற. நல்ல பொண்ணுடி நீ” என்றேன்.

முகம்

“யார் சொன்னா நான் கவலைப்படலேன்னு. அதெல்லாம் மறக்கற மாதிரியா சொல்றாங்க, நான் என்ன நினைப்பேன், எப்படி வலிக்கும் என்பதெல்லாம் அவங்களுக்கு முக்கியமில்லை. நா சின்னப் புள்ளையா இருந்தப்ப கிண்டல் செய்யறதா நெனைச்சு சொன்னாங்க. நீ இந்த அளவு கருப்பா இருந்தா எவன்டி ஒன்ன கட்டிக்குவான்னு, இன்னைக்கு வரையும் சொல்லிட்டுதான் இருக்காங்க. கிண்டல் பண்றதா நெனச்சு மனசுல ஆணி தச்சா மாதிரி சொல்றாங்க. என்னோட கலர நெனச்சு வருத்தபடாத நாளே கெடையாது. கருப்பா இருப்பவங்க வாழவே தகுதி இல்லங்கர அளவுக்கு மனுசங்க படுத்தி வக்கிறாங்க.

கருப்பா இருக்குறேன்னு கவலப்படாத, அப்படின்னு ஆறுதல் சொல்றது போல என் கலர ஞாபகப்படுத்தி கிட்டேதான் இருப்பாங்க.

கருப்பா இருந்தாலும் களையா இருக்கா, கருப்பா இருந்தாலும் காலேஜ்ஜெல்லாம் படிச்சுல்ல இருக்கா, நீ கருப்பா இருந்தாலும் உன் வீட்டுக்காரரு நல்ல சிகப்பா இருக்காரு, பிள்ள ஒன்னப் போல கருப்பா பெத்துக்காம உன் வீட்டுக்காரர் போல செகப்பா பெத்துக்க.

இப்படி யார் எது சொன்னாலும் என் கலரோட சேத்துதான் சொல்றாங்க. என் வாழ்நாள் பூராவும் கலரப்பத்தி கவலப்பட வைச்சுகிட்டேதா இருப்பாங்க” என்றாள்.

“தெனதெனம் இத சந்திச்சுகிட்டுதானே இருக்கேன். நாந்தா உங்கிட்ட சொல்லியிருக்கேனே யாரெல்லாம் எப்படியெல்லாம் சொன்னாங்கன்னு” என்றாள்.

 

மா, ஆயி அப்பப்ப என்கிட்ட சொல்லியவற்றில் சிலதைத்தான் உங்ககிட்ட சொல்றேன். இனி வருவது ஆயி நேரடியாக பேசியவை:

“பள்ளியில் என் பேருல ஒரு பொண்ணு இருந்துச்சு. அந்த பொண்ணு செவப்பா இருக்கும். கூட படிக்குற பிள்ளைங்க, என் பேரோட சேத்து கருப்பையும், அவ பேரோட சேத்து சிவப்பையும் சொல்லுவாங்க, வாத்தியாரு மொதக் கொண்டு என்ன கருப்பாயின்னுதான் கூப்பிடுவாறு. ஏன்னு கேட்டா ” நீ நம்ம சாதிடி, எனக்கில்லாத உரிமையான்னு” சொல்லுவாறு.

“ஒருத்தர் கேட்டாரு நீ யாரோட பொண்ணு, உங்க அப்பா பேரு என்னா. நானும் சொன்னேன். அப்படியா நம்பவே முடியல, பறத்தெருல கொண்டு விட்டா நீ எங்க பிள்ளன்னு சத்தியம் செஞ்சுதான் அழச்சுட்டு வரணும் அப்டின்னாரு”. (கருப்புங்கரது கலரைத் தாண்டி தாழ்த்தப்பட்ட சாதியாவும் பாக்கப்படுது.)

”நானும் என் கூட்டாளியும் கல்லூரிக்கு போயிட்டு இருந்தோம். என் கூட்டாளி நல்ல சிகப்பா இருப்பா. நாலு பசங்க ஒக்காந்து அரட்டையடிச்சுட்டு இருந்தாங்க. நாங்க அவங்களை கடந்து போய்ட்டோம். உஸ்…. உஸ்…-இன்னு சத்தம் கொடுத்தானுங்க திரும்பி பாத்தேன். சைகையிலேயே உன்ன இல்லா அந்த பெண்ண கூப்பிடுன்னான். எனக்கு அவனுங்க அப்படி பெண்கள அசிங்க படுத்துறானுங்களேங்கர கோபம் வராம, கருப்புங்கரதால நம்மள வேண்டான்னுட்டு அவள கூப்பிட சொல்றானேன்னு கோபமும் சிரிப்பும் வந்தது”.

“பள்ளிக்கு, கல்லூரிக்கு போகும் போது எங்க மாமா வீட்ட கடந்துதான் போவேன். என்ன பாத்து, மாமா அவங்க பிள்ளைககிட்ட பூச்சாண்டி வருது பாரு என்பாரு. என்ன எங்க பாத்தாலும் மாமா பசங்க பூச்சாண்டின்னுதான் கூப்பிடுங்க. என் பேர் அவங்களுக்குத் தெரியாது. என் கல்யாணத்துக்கு வந்தப்ப கூட பூச்சாண்டி கல்யாணத்துக்கு நானும் வருவேன்னு அடம் பிடிச்சு வந்ததா சொல்லி எங்கிட்ட சந்தோச பட்டுக்குறாங்க.”

“ஒரு உறவினர் அவங்ளோட நாலு வயசு பையனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. முதலில் ஒதுங்கியே இருந்த அந்த பையன் பிறகு என் கூட விளையாடினான். வீட்டுக்கு போகும் போது அந்த அக்காவுக்கு முத்தம் கொடுத்துட்டு வா போவோம் என்றார்கள். நான் அந்த அக்காவுக்கு முத்தம் கொடுக்க மாட்டேன் அந்த அக்கா கருப்பா அசிங்கமா இருக்காங்க என்றான். மற்றவர்கள் கொல்லுன்னு சிரிச்சாங்க. நானும் சிரிச்சேன். ஆன என் கண்ணுல கண்ணீர் வந்ததை யாரும் பாக்கல.”

“ஒரு நாள் சுடிதார் எடுத்துட்டு வந்தேன். எங்க அம்மா சொல்லுது இது என்ன ஓங்கலருலேயே எடுத்துருக்க வேற கலரே கெடைக்கலயா”

முகம்

“வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். என் கல்யாண பேச்சு பத்தி பேசுணாங்க. ரெண்டு மூணு எடத்துல கேக்குறாங்க, நமக்கு சரிப்பட்டு வர்ற மாதிரியான எடத்துல குடுப்போம் அப்படின்னாங்க அம்மா. சாப்பிட்டுட்டு இருந்த அண்ணனுக்கு என்ன தோணுச்சோ. செவப்பா வர்றதுக்குன்னே என்னென்னமோ விக்கிறாய்ங்களே எதையாவது வாங்கி தடவி செவப்பா மாறு என்றான். சொன்னதோடு மட்டும் இல்லாம ஊட்டியிலேருந்து ஏதோ எண்ணையை வரவழச்சும் கொடுத்தான்.”

“நான் ஒருத்தர காதலிக்கிறேன்னு வீட்டுல சொன்னே. முதலில் மற்றவர்களை போலத்தான் ஒத்துக்கல. பிறகு அந்த பையன பாக்கணும்ன்னு சொன்னாங்க. பாத்துட்டு வந்து என் அக்கா சொன்னா அந்த பையன் செவப்பா அழகா இருக்கான். நீ கருப்பா அசிங்கமா இருக்க, இதல்லாம் நடக்காது. எங்களுக்கு நம்பிக்கை இல்ல. அவங்க வீட்டுலயும் ஒத்துக்க மாட்டாங்க. அவ்வளவு செவப்பா இருக்குற பையனுக்கு எப்படி ஒன்ன கட்டுவாங்க.”

“மாப்பிள்ள வீட்டுலேருந்து பொண்ணு பாக்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. வீடு கலகலப்பா இருந்துச்சு. என் தோழி ஒருத்தி வந்திருந்தா. என்னை கேலி செய்தா. தனுஷின் படிக்காதவன் படத்துல வர்ர ஆர்த்தியை பெண் பார்க்கும் சீனை வைத்து என்ன ஆர்த்தி கேரக்டரில் பொருத்தி நையாண்டி செய்தாள். (நான் சிரிச்சு சிரிச்சு பேசிட்டே இருப்பனா, அம்மாவும், அப்பாவும் ரசிச்சு ரசிச்சு கேட்டுட்டே இருப்பாங்க) இதை சொல்லிட்டு அவ விழுந்து விழுந்து சிரிச்சா. நானும் சிரிச்சுக்கிட்டே யோசிச்சேன். இந்த காமெடியில கருப்புங்குறது அசிங்கம்ணு எவ்வளவு கேவலமா சொல்லி இருக்காணுங்க.”

“கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்திருந்த சொந்தக்காரங்க எல்லாருமே, மாப்பிள்ள இவ்வளவு அழகா கலரா இருக்காரே பொண்ணு இப்படி கருப்பா இருக்கே எப்படி இந்த கல்யாணம் நடக்குது. வரதட்சண எதுவும் நெறைய செஞ்சாங்களா. இல்ல மாப்பிளய கட்டாய படுத்துனாய்ங்களான்னு பொலம்பி தீத்துட்டாங்க. மேல காலேஜ் தோழி பற்றி சொல்லியிருந்தேனே அவளும் கல்யாணத்துக்கு வந்திருந்தா. போட்டோ எடுத்திருந்தோம். அதை பார்த்த பக்கத்து வீட்டு அக்கா என் மொகத்த மறச்சு என் தோழியையும் அவரையும் பார்த்து நல்ல சோடி செவப்பா அழகா இருக்காங்க என்றாள்.”

“மறுவீட்டுக்கு வந்திருந்தோம். என் அப்பா வயல் வேலை முடிச்சுட்டு வந்தார். வந்தவர் பின்பக்கமாக வந்தார். என்னப்பா இப்படி வர்றீங்கன்னு கேட்டேன். ரொம்ப கருப்பா தெரியிரேன், அதனால குளிச்சுட்டு வாறேன் என்றார். என்னடா நம் வியாதி அப்பாவுக்கும் தொத்திகிச்சான்னு விழுந்து விழுந்து சிரிச்சேன்.”

“கல்யாணத்துக்கு மேக்கப் போட ஆள் வேண்டாம் அசிங்கமா தெரியும் என்றார்கள். நான் கேட்கவே இல்ல. எப்படியாவது கொஞ்சமாச்சும் கலரா தெரிய மாட்டோமா அப்டின்னு ஒரு ஆசையில 7000 ரூபாய் கொடுத்து பியூட்டி பார்லர்லேர்ந்து ஆள் வரவச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டேன். அதப் பாத்து அனைவரும் சொன்னது கரகாட்டகாரி மாதிரி இருந்துச்சுன்னுதான். கரகம் ஆடுற பெண்களும் நம்மள மாதிரி கருப்பா இருந்து மேக்கப் போடுறவங்களோன்னு நினைச்சேன். எண்ண வழிய, வழிய, முன்ன இருந்தத விட ரொம்ப கருப்பா இருந்துச்சு என்றார்கள். நாம கருப்பா பயங்கரமா இருக்கோன்னு நெனச்சேன், ஆனா மேக்கப் போட்டதுக்கு பிறகு பயங்கரமா கருப்பா இருப்போம் போல, சரி விடுங்க.”

“ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க. இன்னொரு நாள் சொன்னாங்க போற எடத்துலயெல்லாம் கேக்கறாங்க, கருப்பா இருக்குற அந்த பொண்ண எப்படி ஒம்மவனுக்கு கட்டுனேன்னு. நீங்க என்னா சொன்னிங்க என்றேன். அவன் தலையெழுத்து அப்டின்னு சொன்னே வேற என்ன சொல்ல என்று என் மாமியார் கூறியதும் என் உடல் கூசியது”.

“தோழர் ஒருத்தர சந்திச்சேன். அவர் சொன்னார் ஆயி நீங்க கருப்பா இருப்பதை அசிங்கமா நெனைக்கிறிங்க. அதுதான் நம்மோட திராவிட நிறம். செவப்புங்கறது எல்லாம் பின்னாடி கலந்து உருவானது. கருப்புதான் நம்ம ஒரிஜினல் கலரு, அதுதான் ஆரோக்கியம். எந்த வெய்யில்லயும் ஒண்ணும் செய்யாது. அதுவும் இல்லாம நீங்க ஒரு விவசாயி பொண்ணு, நீங்க இப்படிதான் இருப்பீங்க, அதுதான் பெருமையுங் கூட. திருமணத்துக்காக பியூட்டி பார்லர் போய் முகத்த பேசியல் பண்ணப் போறதா சொல்றீங்க அதெல்லாம் தேவையில்ல. கருப்புதான் உங்களுக்கு அழகு. ஒரு மனிதனுக்கு புற அழகு முக்கியமில்லை. அக அழகுதான் முக்கியம். அது உங்களுக்கு நிறைய இருக்கு. அழகுங்கிறது வயது ஆக ஆக அழிந்து போகும். நாம் செய்யும் நல்ல செயல் தான் நிலைத்து நிக்கும். நீங்க இப்படி கருப்பா இருப்பதுதான் உங்கள் அழகு என்று சொன்னவர் சொல்லிய சில மணி நேரத்துக்கெல்லாம் அவர் குழந்தையை பார்த்து மனைவியிடம் சொல்கிறார். வரவர பாப்பா ஆயி கலருக்கு வந்துரும் போலருக்கே என்றார். என்னதான் பேசினாலும் உங்களுக்குள்ளும் கலரப்பத்தின நெனப்பு இருப்பது தான் உண்மை. தனக்கு தனக்குன்னு வந்தா நெஞ்சு படக்கு படக்குன்னு அடிச்சுக்குன்னு சொல்வாங்க அது இதுதான் போலருக்குன்னு அவருகிட்ட சொன்னேன். அவரு சும்மா விளையாட்டுக்குன்னு மழுப்புனாரு.”

ஆயி சொன்ன கதைகளில் ஒரு சிலவற்றைத்தான் மேலே கூறினேன். சொல்லாத கதைகள் அதிகம் என்றாலும் கருப்பு பிரச்சினைகளை புரிந்து கொள்ள மேற்கண்ட கதைகளே போதுமானதுன்னு நினைக்கிறேன்.

ஆயி அப்பப்ப சொல்லி வருத்தப்பட்ட நினைவிலிருந்து வெளியே வந்த நான், “கவலைப்படாதே அவர்களெல்லாம் அறிவு கெட்டவர்கள், மற்றவர் மனம் புண்படாமல் பேச தெரியாதவர்கள். ஒங்கிட்ட இருக்குற நல்ல கொணந்தான் முக்கியம். மத்தவங்களுக்கு நீ செய்ற உதவிதான் ஒசந்தது. நீ நெனக்கிற மாதிரி கலருக்கு மதிப்பு கெடையாது. இதையெல்லாம் மனசுல போட்டு கொழப்பிக்காம வேலைய பாரு. கலரா நமக்கு சோறு போட போவுது” என்றேன்.

“நீ நெனைக்கிறா மாதிரி என்னோட கலர கிண்டல் பண்றவங்க மட்டும் காரணம் இல்ல. ஒன்னப்போல என்ன கிண்டல் பண்ணாதவங்களும், நான் வருத்தப்பட்றதுக்கு ஒரு காரணம். கலரு ஒரு மேட்டறே இல்லன்னு சொல்ற நீயே ஒம்பிள்ளைக்கு அமெரிக்க பௌடரு, அமெரிக்க சோப்பு  (ஜான்சன் அண்ட் ஜான்சன்), உள்ளூரு கஸ்தூரி மஞ்சள், பூலாங்கெழங்கு, பச்சபயிரு…-ன்னு போயிட்டே இருக்கியே நீ கலர பாக்கலயா? இல்ல இந்த சமூகம்தான் கலரை பாக்காம இருக்கா?” என்றாள் ஆயி.

என்னிடம் பதில் இல்லை.

 – வேணி.