privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாசூது கவ்வும் - வடிவம் கொல்லும் !

சூது கவ்வும் – வடிவம் கொல்லும் !

-

தையை விட கதை கூறும் முறையை அடிநாதமாகக் கொண்டிருக்கும் சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஆச்சரியமல்ல. அதே நேரம் ஆரோக்கியமும் அல்ல.

சூது கவ்வும்விஜய் சேதுபதியின் தலைமையில் மூன்று வேலையிழந்த இளைஞர்கள் சேர்ந்து சின்ன சின்ன ஆள் கடத்தல் செய்து இறுதியில் அமைச்சர் மகனை கடத்துகிறார்கள். அமைச்சர் சிபாரிசில் வரும் என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டரை சமாளித்து வாழ்க்கையில் செட்டிலாவதை ‘நகைச்சுவை’ கலந்த விறுவிறுப்புடன் காட்டும் படம், காய்ந்திருக்கும் ரசிகர்களை குளிர வைக்கிறது. ஆனால் இந்த செயற்கை குளிரூட்டல் உடலுக்கு நல்லதா?

இந்தப் படத்தில் கவர்ச்சி இருப்பதாக கூறினால் அண்ணன் உண்மைத்தமிழனே சண்டைக்கு வந்துவிடுவார். அந்த அளவுக்கு நேற்றிருந்த ‘கவர்ச்சி’ குறித்த பார்வை இன்று மாறியிருக்கிறது. கொஞ்சம் லூசு போலத் தோற்றமளிக்கும் சேதுபதி கடவுளிடம் பேசும் இறைத்தூதர்கள் போல, இல்லாத காதலியுடன் எந்நேரமும் பேசுகிறார். அன்றைய கூத்தில், கதை மீதான எடுப்பு தொடுப்பு விமரிசனங்களை கட்டியங்காரன் செய்வதை இங்கு காதலி செய்கிறார். ரசிகர்கள் ஆடியோவில் சேதுபதியையும் விஷுவலில் காதலியையும் பின் தொடர்கிறார்கள். கட்டியங்காரன் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் கதையில் குறுக்கிடுகிறான் என்றால் இங்கு சஞ்சிதா ஷெட்டி எனும் கவர்ச்சி நடிகை ஆண் ரசிகர்களை வயப்படுத்துவதற்கு குறுக்கிடுகிறார்.

அரை லூசு தமிழ் மற்றும் அமெச்சூர் கிரிமினலுக்கு மும்பை மாடல் நடிகை காம்பினேஷனே தாங்க முடியவில்லை எனும் போது ஷெட்டி “மாமா” என்று விளிக்கும் போது சகிக்க முடியவில்லை. காதலியின் பின்பாட்டு வசனங்களை பார்க்கும் ரசிகர்கள் அத்தோடு நின்றுவிடக்கூடாது என்று எப்போதும் அரை நிக்கர் அல்லது அதற்கும் கம்மியான உடையுடன் காதலியை நடமாட விட்டிருக்கிறார் இயக்குநர். ரசிகர்களின் ஆசையை ஏமாற்ற விரும்பாத காதலியும் தீடீரென்று நீச்சல் உடையுடன் தோன்றுகிறார். கவர்ச்சியையே வித்தியாசமாக காட்டியிருக்கிறார் அல்லவா என்று வெரைட்டி பிராண்ட் ரசிகர்கள் வாதாடக்கூடும். பழைய சோறு எனும் அற்புதத்திற்கு பிசா ஊறுகாய்தான் தொட்டுக் கொள்வேன் என்று வெரைட்டியான காம்பினேஷன்களுக்கு அடம் பிடிப்பவர்களை என்ன செய்ய முடியும்?

சூது கவ்வும்படத்தில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழும் அமைச்சராக எம்.எஸ். பாஸ்கர் வருகிறார். கட்சிக்காக ஒரு வருடம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ய ஆணையிடும் தலைவரின் விருப்பத்திற்கு இணைங்க, ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மகன் அப்பாவை டம்மி பீசாக்கிவிட்டு அமைச்சராகிறான். சூரியனை கிழக்கே காண்பித்து விட்டு நிழலை ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் காண்பிப்பதாக லாஜிக் மீறலை கண்டுபிடிக்கும் விற்பன்னர்களுக்கு இந்த அமைச்சர் பாத்திரமே ஒரு அபாண்டம் என்று தோன்றவில்லை. கட்சிப் பணம் 2 கோடியை சுருட்ட நினைக்கும் மகனை எதிர்த்து போராடும் அப்பா அமைச்சர் 300 கோடியை வசூலிக்கச் சொல்லும் முதலமைச்சரை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை என்றாலும் அத்தகைய சுருட்டல் கட்சியில் சேர்ந்து எப்படி குப்பை கொட்டுகிறார்?

அதனால்தான் அப்பா பாத்திரத்தை லூசில் விடும் இரசிகர்கள் பிறகு மகன் அமைச்சராகி தேர்தல் பிரச்சாரம், வசூல் என்று பட்டையைக் கிளப்பும் போது மனம் ஒன்றி கைதட்டுகிறார்கள். நேர்மை யதார்த்தமில்லை, ஊழல் யதார்த்தமானது என்பதால் இங்கே இயக்குநரும் இரசிகர்களும் ஒன்றுகிறார்கள். நீதியும் நேர்மையும் விலகிச் செல்கின்றது.

இவையெல்லாம் காமடிக்குத்தானே சொல்லப்பட்டிருக்கின்றன என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு செண்டிமெண்டாக ஒரு கேள்வி. உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா? இதற்கு சற்றும் குறையாத பாத்திரம்தான் படத்தில் வரும் சைக்கோ இன்ஸ்பெக்டர் என்கவுண்டர் பிரம்மா.

தமிழக போலீஸ் போலி மோதலில் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் மாதந்தோறும் நடக்கின்றன. இது அரசு எந்திரம் சட்டம், நீதிமன்றங்களை சட்டபூர்வமாக ஏமாற்றிவிட்டு பாசிசமாகி வருகிறது என்பதற்குச் சான்று. கிரிமினல்களோடு பங்காளிச் சண்டை வலுத்த போதும், சில குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகவும் நடக்கும் என்கவுண்டர் இங்கே பாதிப்படம் முழுக்க சிரிப்பதற்காக இழுத்து வரப்படுகிறது.

வாய் பேசாமல் துப்பாக்கியுடன் மட்டும் கொடூரமாக பேசும் பிரம்மாவைக் கண்டு இரசிகர்கள் ஆரவாரத்துடன் சிரிக்கிறார்கள். இறுதிக் காட்சியில் ஓட்டைத் திருட்டுத் துப்பாக்கியை பின்புறம் சொருகும் போது தவறுதலாக அவர் சுட்டுக் கொள்கிறார். சேதுபதி கும்பல் என்கவுண்டரிலிருந்து தப்பிக்கிறது. ஒரு வேளை என்கவுண்டர் போலிஸை இப்படி ஒரு காமரா காமடி கவித்துவ நீதியில் காட்டியிருக்கிறார்கள் என்று பின் நவீனத்துவவாதிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் படம் பார்க்கும் இரசிகர்கள் ஏற்கனவே போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும் பாசிச மனோபாவத்தின் செல்வாக்கு கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் இந்த கிச்சு கிச்சு அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் குற்ற உணர்வையும் கொன்று விடுகிறது.

ஐ.டி துறையில் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும் இளைஞன் பின்னர் வேலை கிடைக்காமல் சேதுபதியிடம் சேருகிறான். இதற்கு காரணம் அவனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு ஐ.டி பெண் நிர்வாகத்திடம் தவறாக போட்டுக் கொடுத்து வேலையை விட்டு நீக்க வைக்கிறாள். இது பெண்களை இழிவு படுத்தும் மலிவான ஆணாதிக்கம் என்பது போக சுயமரியாதை, பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்கம், இன்னபிற உரிமைகள் இல்லாத ஐ.டி துறை முதலாளிகளது ஆதிக்கத்தை மறைத்து விட்டு அங்கே ஒரு பெண்ணை வில்லனாக காட்டுகிறார் இயக்குநர். ஆண்டான் ஓரத்தில் மமதையுடன் ஒயின் பருக நடுவில் அடிமைகள் தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.

நயன்தாராவுக்கு கோவில் கட்டியவனும் சரி, ஜாகுவார் காரை ஓட்டி வேலையிழந்தவனும் சரி, இருவரும் நாள் முழுவதும் குடிப்பதும் சரி, எல்லாம் நகைச்சுவைக்காக சாகாவரம் பெறுகின்றன. இவற்றின் உட்கிடையான நுகர்வு கலாச்சாரம், சினிமா மோகம், ஆடம்பர வாழ்வு நாட்டம், பிறர் காசில் வாழும் ஒட்டுண்ணித்தனம், பொறுப்பற்ற தனம், விட்டேத்தித்தனம் அனைத்தும் நகைச்சுவையோடு என்றாலும் கடிந்துரைக்கப்பட வேண்டும். ஏனெனினல் சமூகத்தில் ஹாயாக உட்கார்ந்து டிவியோ, சினிமாவோ பார்க்கக்கூட நேரமற்று உழைத்தும் அதற்காக குடித்தும் தன்னை அழித்தும் வாழும் பாமரர்களை பார்த்து யாருக்கும் சிரிக்கத் தோன்றுமா? முடியுமெனில் அவர்கள் குடிக்காமலேயே தங்களை அழிக்கும் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். இங்கே இயக்குநர் அதையே செய்கிறார்.

திருட்டையும் நகைச்சுவையையும் சேர்த்து புனையப்படும் ஒரு காட்சி ஒரு படத்தில், ஓரமாக வரும் வடிவேலு காமடியாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே முழுநேரக் கதையாக இருந்தால்? மிகுந்த பொறுப்புணர்வோடு கையாளப்படவேண்டியதை இங்கே இப்படத்தின் படைப்பாளிகள் மிகுந்த அலட்சியத்தோடு கையாண்டிருக்கிறார்கள்.

சார்லி சாப்ளின்யாருக்கும் ஆபத்தில்லாத வகையில், ஆயுதம் இல்லாமல், துன்புறுத்தல் இல்லாமல் ஆட்களைக் கடத்தி சம்பாதிக்கலாம் என்று சேதுபதி மற்ற மூவருக்கும் எடுக்கும் வகுப்பே யதார்த்தத்தின் நினைவுகளோடு எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து செலவுக்கு வழியில்லாக கல்லூரி இளைஞர்கள் காமடியாக ஆள்கடத்திலில் ஈடுபட்டு பின்னர் உண்மையான குற்றவாளிகளாக காலந்தள்ள நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள்தான் முதலில் அமெச்சூர் திருடர்களாக ஆரம்பிக்கிறார்கள். பின்னர் ஈவு இரக்கமற்ற பக்கா கிரிமினல்களாக மாறுகிறார்கள். சமயத்தில் கொலையும் செய்கிறார்கள். சென்னையிலேயே மேட்டுக்குடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டி முதல் முறையாக ஆள்கடத்தல் செய்த பல மாணவர்கள், இளைஞர்கள் கொலையே செய்திருக்கிறார்கள். அது குறித்து வினவிலும் நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன.

இத்தகைய சமூக விகாரங்களின் மத்தியில் காமடித் திருடர்கள் என்பது எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விசயம் என்று இயக்குநருக்குத் தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்ள விரும்பினால் நூறாண்டுகளுக்கு முந்தைய சார்லி சாப்ளினது படங்களை “பார்க்க” வேண்டும்.

இந்தப் படத்தில் வரும் சுய எள்ளல்கள் வெறுமனே சலிப்பூட்டும் சந்தானம் பாணியிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட வார்த்தை அலங்கார நகைச்சுவையாக மட்டும் இருக்கின்றன. உண்மையில் ஒரு சுய எள்ளல் என்பது ஒருவர் தன்னைக் குறித்த சுயவிமரிசனத்தின் நேர்மையில் நடக்கும் நகைச்சுவையாகும். அதனால் இங்கே நகைச்சுவை என்பது குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு வருகிறது. படத்தில் அத்தகைய சுயமோ இல்லை சுய விமரிசனமோ இல்லை என்பதோடு இருக்குமளவு அந்தப் பாத்திரங்களும் மண்ணில் நடமாடவில்லை.

ஒரு திரில்லர் வகைப்படங்களின் ஆன்மாவை கூரிய சமூக பார்வையோடு புரிந்து கொண்டவர்கள் இயக்கினால் அது பல்வேறு கணக்குகளோடு சேர்ந்தும், பிரிந்தும், மறுத்தும், தொடுத்தும், தவிர்த்தும் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப் பெருவெளியின் மர்மத்தை வியப்பூட்டும வகையில் இழுத்துக் கொண்டு வரும்.

ஸீக்ஃப்ரீட் லென்ஸ்
ஸீக்ஃப்ரீட் லென்ஸ்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ் எழுதிய “நிரபராதிகளின் காலம்” அத்தகையது. நாசிச ஜெர்மனியின் மக்கள் ஹிட்லரை கருத்து ரீதியாக ஆதரிக்கும் போக்கில் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். அதை ஒரு கற்பனைக் கதை மூலம் நிஜத்தின் விசாரணையோடு தம்மைத்தாமே மக்களை கேள்வி கேட்க வைக்கிறார் ஸீக்ஃப்ரீட். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருந்தாலும் இந்த இலக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. யார் கொலை செய்தார்கள் என்ற கேள்வியுடன் அதை கண்டு பிடித்தோ இல்லாமலோ போவதற்கு எதை இழந்தோம் என்று பாத்திரங்களின் விசாரணையில் விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நாடகம். ஒரு நேர்த்தியான த்ரில்லர் என்ற வகையிலும் பரந்து விரிந்த மனித குலப் போராட்டத்தின் உந்து விசையை குறிபார்த்தும் எழுதப்பட்ட இத்தகைய இலக்கியங்களை நமது நாளைய இயக்குநர்கள் படித்தார்களா தெரியவில்லை. படித்திருந்தாலும் அதில் அவர்களை எது ஈர்த்திருக்கும் என்று யூகம் செய்தால் விரக்தியே மிஞ்சுகிறது.

ஏதோ ஒரு கதையை எடுத்துக் கொண்டு எள்ளலான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முடிச்சுக்கள், வித்தியாசமான பாத்திரச் சித்தரிப்புகள், காட்சிக்கொரு மர்மம் என்பன போன்ற சமாச்சாரங்கள்தான் ஒரு சினிமாவிற்கு போதுமானது என்று இந்த இயக்குநரும் இவரைப் போன்றவர்களும் இத்தகைய படங்களை ரசிப்பவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைப் பெருவெளியில் மையம் கொள்ளாத இந்த அலங்காரங்கள் தோன்றும் போது வேண்டுமானால் கவரலாம். விரைவிலேயே இவையும் சலித்துப் போய்விடும். கதையை விட கதையை கூறும் முறை நேர்த்தியாக பின்னப்படுவதால் கிச்சு கிச்சு வேண்டுமானால் மூட்டலாமே தவிர சிந்திக்க வைக்க முடியாது. சிந்தனையில் தங்காத படைப்புகளால் ஒரு சமூகத்தை கிஞ்சித்தும் பண்படுத்த முடியாது.

எல்லாக் கதைகளும் சரியாகவோ தவறாகவோ சமூகக் களத்தை பிரதிபலிப்பதிலிருந்தே உதிக்கின்றன. காமடிக்கும் கவர்ச்சிக்கும் பாத்திரச் சித்தரிப்புக்கும் வேகத்திற்கும் எளிய முரண் உரையாடல்களுக்கும் அளவு கடந்து மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அவை இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப்பாத்திரத்தை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இது நமது நாளைய இயக்குநர்கள் அறியாதது, அறிய வேண்டியது.