privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மனுஷ்யபுத்திரனின் ஊழல் தமிழ் உணர்வு !

மனுஷ்யபுத்திரனின் ஊழல் தமிழ் உணர்வு !

-

முதலில் சீனிவாச புராணம் – ஒரு மர்மக் கதை கட்டுரையை படித்து விடுங்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

க்கீரன் வார இதழில், எதிர்க்குரல் என்ற தொடரை கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதி வருகிறார். மே 29-31 தேதியிட்ட இதழில் ‘சூதாட்டமும் சகுனிகளும்’ என்ற தலைப்பில் ஐபிஎல் சூதாட்டப் பிரச்சினைகளை, ஸ்ரீசாந்திலிருந்து  குருநாத் மெய்யப்பன் வரை தொகுத்து எழுதியிருக்கிறார்.

அதில்

“குருநாத் மெய்யப்பன் சினிமாவையும் கிரிக்கெட்டையும் எப்படி அழகாக இணைத்தார் என்பது ஒரு சுவாரசியமான, கிளுகிளுப்பான கதை. பிரபல வீரர்களுடன் பிரபல நடிகைகள் நட்பு கொள்வதற்கான அற்புதமான சீதோஷ்ண நிலை சென்னையில் அமைந்தது”,

என்ற வரிகள் முக்கியமானது. நக்கீரனும் அதைத்தான் கொட்டை எழுத்தில் மேற்கொள் காண்பித்து வடிவமைத்திருந்தது.

இதனால் படிப்பவர்களுக்கு இந்த சமூக அமைப்பு, ஊழல் மீது கோபம் வருகிறதோ இல்லையோ  கிளுகிளுப்பு நிச்சயம் வர வேண்டும் என்று நினைத்திருப்பார் போலும். கழுதைக்கு வாக்கப்பட்டால் அம்மா என்று கத்த முடியாது. போகட்டும், இங்கே நாம் பேச வந்தது அவரது திடீர் தமிழ் உணர்வு குறித்து.

இந்த சூதாட்ட வலைப் பின்னலில் சென்னை அணியும், சீனிவாசனும் மட்டும் ஏன் குறி வைத்து தாக்கப்பட வேண்டும் என்பது அவரது  கேள்வி. சரத்பவாரும், லலித் மோடியும் தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு முயல்கிறார்கள் என்கிறார் மனுஷ்யபுத்திரன். கிரிக்கெட்டின் மையமாக முன்பு மும்பை இருந்தது, தற்போது அது சென்னைக்கு மாறியிருப்பதற்கு சீனிவாசன்தான் காரணமாம். இவ்வாறு தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு இந்திய கிரிக்கெட் அதிகாரம் உருவாவது குறித்து வட இந்திய கிரிக்கெட் அரசியல் சக்திகள் மிகுந்த எரிச்சல் அடைந்தனவாம். இப்படித்தான் கேரளாவின் ஸ்ரீசாந்த் பலியிடப்பட்டு அடுத்து சென்னை அணியும், சீனிவாசனும் குறிவைக்கப்படுகிறார்களாம்.

அருண் ஜேட்லி, ராஜீவ் சுக்லா போன்ற ‘வட இந்தியர்’களெல்லாம் ஆரம்பத்தில் ‘தமிழர்’ சீனிவாசனை ஆதரித்ததற்கும், சரத்பவாரும், லலித் மோடியும் சீனிவாசனை இப்போது எதிர்ப்பதற்கும்  தனிப்பட்ட உறவோ, தமிழர் மீதான நேசிப்போ  காரணம் அல்ல. இதுவும் முதலாளிகளுக்கிடையே நடக்கும் அணிச் சண்டை. குறிப்பிட்ட அணி போனால் மற்ற அணி பலம் பெறும். அந்த கணக்குதான் இவர்களை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ வைக்கிறது. இதிலெல்லாம் தமிழ் உணர்வுக்கு ஒரு வெங்காயமும் கிடையாது.

manushya-puthiran

திராவிட இயக்கம் சொன்ன “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற முழக்கத்தை, காங்கிரசோடு சேர்ந்து கிண்டல் செய்த சிறுபத்திரிகை உலகைச் சேர்ந்த எழுத்தாளரான மனுஷ்ய புத்திரன் இன்று அதே முழக்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பது பரிணாம வளர்ச்சியெல்லாம் இல்லை. தரகு முதலாளித்துவ கட்சியாக மாறி விட்ட திமுகவே அந்த முழக்கத்தை மறந்தும் பேசுவதில்லை. தனது பிரபலத்தை தக்க வைப்பதற்கு இத்தகைய உணர்ச்சி சார்ந்த அடையாளங்கள் சுலபமானது என்பதால் அவர் தெரிந்தே இந்த சந்தர்ப்பவாதத்தை மேற்கொள்கிறார். ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் போராட்டமெல்லாம் மெய் உலகத்திலும், இணையத்திலும் சூடுபிடித்துள்ள நிலையில் அவரது சிறுபத்திரிகை திராவிட இயக்க எதிர்ப்பு மரபு அவசியம் கருதி ஒளிந்து கொள்கிறது.

மனுஷ்யபுத்திரனது பார்வையை சுப்ரமணியம் சுவாமியும்  கூறியிருக்கிறார். இதன் பின்னே சீனிவாசனது ‘நண்பர்’ அருண் ஜேட்லி எனும் உண்மை இருக்கிறது, கூடவே சீனிவாசனது பூணூல் அழுக்கடைவது இவருக்கும் அழுக்காவது போல அலைக்கழித்திருக்கலாம். அதனால்தான் சுப்ரமணியம் சுவாமியும் ‘வட இந்திய ஊடகங்களின் சதி’யை எதிர்த்திருக்கிறார். ஆனால், ஈழம் குறித்து வட இந்திய ஊடகங்கள் காட்டிய வெறுப்பையும் பாரா முகத்தையும் இதே சு.சாமி ஆதரித்திருக்கிறார். எனவே, மாமா சாமியிடம் இருக்கும் தமிழ் உணர்வும் கவிஞரை போன்ற ஒரு சந்தர்ப்பவாத உணர்வுதான்.

இந்தியா சிமெண்ட்சின் சீனிவாசன் பிறப்பால் தமிழரென்றாலும் வாழ்க்கையால் ஒரு தரகு முதலாளி. அவரைப் போன்றவர்களுக்கு இன உணர்வோ, மொழி உணர்வோ ஏன் மத உணர்வு கூட பெருமளவுக்கு இருக்காது. ஏனெனில் அவர்களின் வர்த்தக உணர்வுக்கு இவை எதிரானவை. இதனால்தான், கலாநிதி மாறன் தன்னுடைய ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு சங்ககரா எனும் சிங்கள வீரரை தலைவராக்கினார். ஆனால், மேற்கண்ட மத, மொழி, இன உணர்வுகளை தேவை கருதி பயன்படுத்திக் கொள்வார்கள். அதுதான் கவிஞர் மற்றும் சில தமிழ் ஊடகங்களும்  சீனிவாசனை இப்போது தமிழராக காட்டும் காட்சிப் பிழைக்கு காரணம்.

தரகு முதலாளிகளின் வர்த்தகம் முழு இந்தியாவையும் கவ்வியிருப்பதால் அவர்கள் ஒரு தேசிய இனத்தோடு சுருங்கிக் கொள்ள முடியாது. இவர்களது மூலதனம் எந்தெந்த நிறுவனங்களில் மறைந்திருக்கிறது என்று பார்த்தால் அது பல மாநிலங்களின் தொழில்களுக்கும் இட்டுச் செல்லும். அதே போல இவர்களது தொழில்களிலும் தமிழ்நாட்டைத் தாண்டிய பல்வேறு மூலதனங்கள் இருக்கும்.

சான்றாக, இந்தியா சிமெண்ட்சில் இருக்கும் முப்பது சதவீத பங்குகள் பன்னாட்டு நிதி நிறுவனங்களுடையவை. இதனால் சீனிவாசன் தமிழ்ப் படையுடன் லண்டன், நியூயார்க் சென்று புலிக்கொடி நாட்டினார் என்று பொருளல்ல. தரகு முதலாளிகள் என்பவர்களே ஏகாதிபத்தியங்கள், பன்னாட்டு நிறுவனங்களது ஏஜெண்டுகள் என்பதால் இவர்கள் அவர்களுக்கு கப்பம் கட்டுவதும் இவர்களுடைய தொழில், மூலதனம், வர்த்தகம், இலாபம் அனைத்திலும் அவர்களுடைய பிடியும் கட்டுப்பாடும் இருக்கவே செய்யும்.

அடுத்து இந்தியா சிமெண்ட்சின் வர்த்தகம் இந்தியா முழுவதிலும் இருக்கிறது. மறைந்த ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டியுடன் சேர்ந்து ஆந்திரத்தில் பெரும் ஊழல் நடத்தியவர் இந்த சீனிவாசன். இதெல்லாம் உள்ளூரில் மட்டும் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு தமிழனால் சாத்தியமாவது அல்ல.

csk

அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியிருக்கும் சீனிவாசன் அதில் எந்த இடத்திலும் தமிழ் அடையாளத்தையோ, குறியீட்டையோ கொடுக்கவில்லை. அணித்தலைவர் தோனியிலிருந்து, நட்சத்திர ஆட்டக்காரர்களான சுரேஷ் ரெய்னா, ஹூஸ்ஸி, பிராவோ வரையிலான வீரர்கள் அனைவரும் வெளி மாநில மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள். கோச் பிளெம்மிங்கிலிருந்து, அணிக்கு புரவலர்களான 7 அப், ரீபோக், ஹெர்குலிஸ், உஷா, கல்ஃப் முதல் அதிகார பூர்வ ஆப்பிள் புரவலரான வாஷிங்டன் ஆப்பிள் வரை இங்கே சிஎஸ்கே அணிக்கு மம்மு கொடுப்பது அனைத்தும் தமிழ் முதலாளிகள் அல்ல.

இது நாள் வரை அணி பொறுப்பில் இருந்த குருநாத் மெய்யப்பனும் அக்மார்க் ‘தமிழர்’ கிடையாது. வெள்ளைப் பணியாரத்திற்கு புகழ் பெற்ற ‘செட்டி நாட்டை’ச் சேர்ந்த இந்த மைனர் வாங்கியிருக்கும் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுப் படகு ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கப்பட்டது. இதில் எங்கே இருக்கிறது வெள்ளைத் தமிழ் பணியாரம்?

srinivasan-cement

ஆகவே சீனிவாசன் தமிழர் என்பதால் வட இந்திய ஆதிக்க சக்திகள் அவரை ராஜினாமா செய்யச் சொல்கின்றன என்பது முழுப்பொய். அது உண்மை எனில் ஆரம்பத்தில் லலித் மோடி தவிர சுக்லா, அருண் ஜேட்லி, சரத் பவார் அனைவரும் சீனிவாசனை ஆதரித்ததற்கு என்ன காரணம்? இன்று வட இந்திய ஆதிக்கம் செய்பவர்கள், சீனிவாசனை விதிமுறைப்படி நீக்குவதற்கு பதில் ராஜினாமா செய்யச் சொல்லி கெஞ்சுவது ஏன்?

மேலும் சீனிவாசனுக்கு எதிராக முழுவீச்சுடன் இறங்கியிருக்கும் ஏசி முத்தையாவை தெலுங்கர் என்றா வரையறுப்பீர்கள் மனுஷ்யபுத்திரன்? இவரும் ஒரு அக்மார்க் தமிழ் செட்டியாரல்லவா! பிறகு ஹிந்து பேப்பர், தினமணி என்று ஏராளம் ‘தமிழ்’ நாட்டு சக்திகள் கூட சீனிவாசனை நீங்கச் சொல்லி மன்றாடுகின்றனவே, ஏன்? அதே போல சிஎஸ்கே மீடியா பார்ட்னரான தினத்தந்தியும், தந்தி டிவியும் இவரது ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு தமிழ் உணர்வா காரணம்!

அதே போல திமுக பிரமுகர்களும் குறிப்பாக அழகிரி மகன் தயாநிதியும் கூட சீனிவாசன் அருமையான மனிதர் என்று நற்பத்திரம் வழங்கியிருக்கிறார். திமுக ஆட்சியின் போது இந்தியா சிமெண்ட்சுக்கும் கலைஞர் குடும்பத்திற்கும் ஏகப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள்  நடைபெற்றிருக்கின்றன. அதன்றி இங்கே தமிழ் உணர்வுக்கு என்ன வேலை?

நடைபெறுவது முதலாளிகளுக்கிடையே நடக்கும் பங்குச் சண்டை. அதில் நடக்கும் போட்டியின் காரணமாகவே இந்த ஐபிஎல்லில் மங்காத்தா விளையாடிய சிலர் பிடிபட்டிருக்கின்றனர், பலர் பிடிபடவில்லை. ஸ்ரீசாந்த் மலையாளி என்பதற்காக பிடிபட்டார் என்றால் அவருடன் கூட பிடிபட்ட அங்கித் பட்டேலும், ரமேஷ் சந்தோலியாவும் தென்னிந்தியர்களா என்ன? மும்பை சூதாடிகள், தில்லி சூதாடிகள் கூட்டத்தில் மருந்துக்கு கூட தமிழ் இல்லையே? சென்னை சூதாடிகளிலும் கூட வட இந்திய கிரிமினல்களும் இருக்கிறார்கள். எனவே, இந்த பாரத ஒற்றுமையை தமிழர் உணர்வுக்கு வந்த இழுக்காக நினைப்பது மடமை மட்டுமல்ல பிரச்சினையை திசை திருப்பும் குற்றமும் ஆகும்.

புதிய தலைமுறை விவாதம் ஒன்றில் வெங்கடேசன் என்பவர் ஐபிஎல் என்பதே சூதாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்று வெளுத்து வாங்கும் போது, கிழக்கு பதிப்பகம் பத்ரி கூட பயந்தவாறு அத்தகைய சில கருத்துக்களை ஏற்றுக் கொண்டு பேசும் போது, மனுஷ்யபுத்திரன் மட்டும் முடிந்த அளவில் உளறினார்.

“அதாவது பெட்டிங் வேறு, பிக்சிங் வேறு, பிக்சிங் செய்வதால் பெட்டிங் கட்டுபவர்கள்தான் ஏமாற்றப்படுகிறார்கள், பெட்டிங் என்பது யார் வெற்றி பெறுவார் என்று ஆய்வு செய்து கட்டும் அறிவு, அதனால் அது உலகநாடுகளில் லீகல், இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும், பெட்டிங் என்பது மற்ற நாடுகளில் பல துறைகளில் உண்டு” என்றெல்லாம் பேசினார்.

ஒரு அணி விளையாடி வெற்றி பெறுவதை, விளையாட்டு உணர்வுடன் பார்ப்பதும், சூதாட்டம் கட்டி பார்ப்பதும் எப்படி ஒன்றாகும்? உழைப்பு இல்லாமல் இப்படி சூதாடி பணம் சேர்ப்பதும், இழப்பதும் லீகலோ இல்லையோ நிச்சயம் மோசடியில்லையா? லாட்டரி சீட்டையே இன்னும் கவர்ச்சியாக கொண்டு வரும் இத்தகைய சூதாட்டங்களை ஒட்டு மொத்தமாக தடை செய்வதை விடுத்து, அதை அனுமதிக்க வேண்டும் என்ற அளவுக்குத்தான் கவிமனம் சிந்திக்கிறது.

செய்திகளை நேர்த்தியாகவோ, விசயங்களுடனோ கொடுப்பதற்கு அறிவோ, ஆட்களோ இல்லாத தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் இத்தகைய கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகளை அமர்த்திக் கொள்கின்றன. மேலும் எல்லா பிரச்சினைகளுக்கான தீர்வையும் தனியொருவனாக தீர்க்க வேண்டிய சூப்பர் மேனாக இருக்க வேண்டியிருப்பதால், கவிமனம் போதையடிக்காமலேயே உளறுகிறது.

சன் டிவி பொறுக்கி ராஜாவை எதிர்த்து போராடும் அகிலாவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிக்கும் மனுஷ்ய புத்திரன், அந்த மௌனத்திற்கு சம்பளமாய் சன் டிவி கச்சேரிகளுக்கு செல்கிறார். அதே போல, சீனிவாசனை ஆதரிக்க வேண்டும் என்ற தந்தி டிவியின் பாட்டுக்கும் வாயசைக்கிறார். இப்படி கூலிக்கு மாரடிக்கும் இத்தகைய எழுத்தாளர்கள்தான் சாதாரண மக்களின் குரலை எதிரொலிக்கிறார்களாம்.

ஆகவே, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் கூட நமக்கு புரியவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. ஆனால், கருத்து கந்தசாமியாய் அவதாரம் எடுத்து கவிஞர் கூறும் அல்லது கூற மறுக்கும் கருத்துக்களின் அயோக்கியத்தனங்களை புரிந்து கொள்வது அவசியம் !