privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதுவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!

புதுவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!

-

தனியார் மயம், தாராள மயத்தின் கொடூரத்தை மக்கள் மீது திணிக்கும் புதுச்சேரி அரசின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டுவோம்!
ஒரே ஆண்டில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மின்துறை அலுவலகம் முற்றுகை!

ந்தியாவிலேயே முதன்முறையாக புதுவையில் 87,000 வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பாக டாக்ஸ்போர்ஸ் என்ற நிறுவனம் அறிவித்திருந்தது. இதனையொட்டி புதுவையில் படிப்படியாக, சிறிது சிறிதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் புதுவையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கடந்த மாதம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

மேலும் புதுவையில் பெருமுதலாளிகளின் நகைக் கடைகளும் துணிக் கடைகளும் புற்றீசல் போல புதுவையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. பன்னாட்டு கம்பெனிகளின் வரிகளற்ற சொர்க்கம் என்று புகழப்படும் புதுச்சேரியில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கி வருகிறது புதுச்சேரி அரசு.

இதற்கு மாறாக சுழற்சி முறையில் மின் வெட்டு என்ற முறையில் தினசரி ஒன்றிரண்டு மணி நேரம் மின் தடை செய்து மக்களை வாட்டி வதைக்கிறது. இவற்றைக் கண்டித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் புஜதொமு அதன் ஒரு பகுதியாக மின் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 30-5-2013 மதியம் 2 மணிக்கு நடத்துவதாக அறிவித்திருந்தது.

திட்டமிட்டபடி முற்றுகை போராட்டத்திற்கு 2 மணி முதல் தொழிலாளிகள் மின்துறை அலுவலகத்தின் அருகில் வரத்துவங்கினர். அதே போல், போலீசும் 2 மணி முதல் மின்துறை அலுவலகத்திற்கு வரத் தொடங்கியது. மின்துறை அலுவலகத்தின் பாதுகாவலர்களிடம் சென்று மக்கள் யார் உள்ளே, வெளியே சென்றாலும் கண்காணித்து அனுப்பும்படி உத்தரவிட்டு கொண்டிருந்தது. அதன்படி யார் உள்ளே சென்றாலும் சோதித்த பின்பே அலுவலகத்திற்குள் அனுப்பினர்.

முற்றுகை போராட்டத்தை அறிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டியில் உள்ள தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு போராட்டம் நடக்குமா? நடக்காதா என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு கான்ஸ்டபிள் அருகில் இருந்த எஸ்.ஐ.யிடம் “இவர்கள் தீவிரவாதிகள் அய்யா, ஏற்கனெவே தொழிலாளர் அலுவலகத்திற்குள் உள்ளேயே சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இவர்கள் ஜனநாயக விரோதிகள், தீவிரவாதிகள்” என்று கூறிக்கொண்டு இருந்தார்.

அந்த எஸ்.ஐ. “சுவரொட்டியில் அரிவாள்சுத்தி படம் போடப்பட்டுள்ளதே இவர்கள் கம்யூனிஸ்டுகள் தானே, தீவிரவாதி என்கிறாயே” என்று கேட்டார்.

கான்ஸ்டபிள் “ஆமாம் சார் இவர்கள் தீவிர கம்யூனிஸ்டுகள்” என்று கூறிக் கொண்டிருந்தார். இதனால் பீதியடைந்த எஸ்.ஐ. கேட்ட அடிப்படையில் போலீசு குவிக்கப்பட்டது.

தோழர்கள் அனைவரும் வந்தவுடன், “இவர்கள் வெறும் முழக்கம் போட்டு விட்டு சென்று விடுபவர்கள்  அல்ல. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அவ்விடத்திற்கு புதிதாக வந்த மற்றொரு எஸ்.ஐ. சொன்னார்.

தோழர்கள் ஒன்று திரண்டு மின் கட்டணத்தை உயர்த்திய புதுவை அரசையும் அதற்கு அடிப்படையான தனியார் மயம், தாராள மயம் உலக மயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை எதிர்த்து முழக்கமிட்டபடியே அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். உடனே போலீசு தோழர்களை மறித்தது. தோழர்கள் போலீசின் தடையை மீறி தள்ளிக் கொண்டு முழக்கமிட்டபடியே முன்னேறி சென்றனர். தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டு முற்றுகை நடத்திக் கொண்டிருந்த போது, “இத்தோடு முடித்துக்கொள்ளுங்கள், மின்துறை அலுவலகத்தின் வாயிற்கதவை மறிக்காதீர்கள்” என்று கெஞ்சி மன்றாடினர்.

தோழர்கள் மின்துறை அலுவலகத்தின் வாயிற்கதவில் ஏறி நின்று கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்ததை கேட்ட மின்துறை ஊழியர்கள் வேலைகளை நிறுத்திவிட்டு கேட்டின் அருகே வந்து குவிந்தனர். மற்றொரு புறம் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை நிறுத்திவிட்டு குவியத் தொடங்கினர். அரைமணி நேரம் முழக்கமிட்டுக் கொண்டிருந்த தோழர்களை போலீசு கைது செய்யத் தொடங்கியது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி உடனடியாக கைதாக மறுத்து தரையில் படுத்தும், தங்களுக்குள் கட்டிப் பிடித்துக் கொண்டும், கைகளை சங்கிலிபோல் கோர்த்துக் கொண்டும் நடத்திய போராட்டத்தை மின்துறை ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த அக்கறையுடன் கவனித்தனர். போலீசால் தோழர்களிடம் இருந்த கொடிகளைக் கூட எவ்வளவு போராடியும் பறிக்க முடியவில்லை. ஒவ்வொரு தோழரும் போர்க் குணத்துடன் கைதை எதிர்த்து போராடத் தொடங்கினர்.  கைதாகாமல் போராடுவதைப் பார்த்தவுடன் போலீசு தனது எண்ணிக்கையை அதிகப்படுத்தி போராடியவர்களை பீதியுறுத்த முயற்சித்தது.

இறுதியில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் வந்து தீவிரவாதிகளை பிடிப்பது போல போக்கு காட்டியது. தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மேல் நடந்த இழுபறி தள்ளு முள்ளினால் ஒரு கட்டத்தில் கீழ்நிலை காவலர்கள் சோர்ந்து போயினர்.

அதைப் பார்த்த மேலதிகாரி ஒருவன், “என்னய்யா வேடிக்கை பார்க்கிறீர்கள் அலக்கா தூக்கி வேனில் ஏத்துங்க” என்று கத்திக் கொண்டு ஓடிவந்தான். போலீசு தோழர்களை ஒவ்வொருவராக இழுத்துச் சென்றும் தூக்கிக் கொண்டும் வேனில் ஏற்றினர். கடைசி தோழர் கைதாகும் வரை உறுதியாக நின்று போராடினார்கள்.

போலீசு கும்பலின் மூர்க்கத்தனமான கைது நடவடிக்கைக்கு எந்தத் தோழரும் உடனடியாக பணிந்து போகவில்லை. கடும் இழுபறி, தள்ளுமுள்ளு இவற்றுக்குப் பிறகே போலீசு தோழர்களை வேனில் ஏற்ற முடிந்தது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் “இவர்கள் என்ன அவர்கள் குடும்பத்திற்கா போராடுகிறார்கள், எல்லார் குடும்பத்திற்காகவும் தானே போராடுகிறார்கள். அவர்களை ஏன் நாயை ஏற்றுவது போல கைது செய்து ஏற்றுகிறீர்கள்” என் காவல் துறையிடம் கேட்டார்.

அதற்கு காவல்துறை “இதில் நீங்கள் தலையிடாமல் செல்லுங்கள்” எனக் கூறி பொதுமக்களின் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தது. ஆனால் மக்களோ இப்படி மக்களுக்காக போராடுபவர்களை இழுத்து சென்று வேனில் ஏற்றியதை சகிக்காத முடியாமல் இவர்களை ஸ்டேசனில் வைத்து அடிக்க முயற்சிப்பார்கள், அதை சென்று தடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் போலீசு வேனை பின் தொடர்ந்து காவல் நிலையம் வரை சென்றனர்.

போலீசில் கீழ்நிலை ஊழியர்கள் “எனது ஆயுசுக்கும் இது போல  போராட்டத்தை பார்த்ததே இல்லை” என்றும் ஒரு சிலர் “நீங்கள் மட்டும் கத்தி என்ன ஆகப்போகிறது என்று கேட்டால் உனக்கும் சேர்த்துதான் போராடுகிறோம் என்று என்வாயை அடைக்கிறீர்கள்” என்றும் தோழர்களிடம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஒருவழியாக வேனில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தனித்தனியாக அடையாளங்களை பதிவு செய்தும் மெமோவில் கையெழுத்து பெற்றும் மிரட்டிப் பார்த்தனர். தோழ்ர்களோ துப்பாக்கிச் சூடு நடந்தாலும் எங்களை அடக்க முடியாது என்று காவல் நிலையத்திலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போலீசு தள்ளு முள்ளு, தடியடி இவற்றில் காயமடைந்த பவர் சோப் கம்பெனியில் பணிபுரியும் அருண் என்ற தொழிலாளி நெஞ்சு வலியால் துடித்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போலீசு, “தயவு செய்து அட்மிசன் ஆகாதீங்க. உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறோம்” என்று பேரம் பேசியது.

“எங்களை கைது செய்து சிறையிலடை உனது வழக்கை எதிர்கொள்ள தயார்” என்று தோழர்கள் எதிர்த்து நின்றனர்.

அதற்குள் அனைத்து உள்ளூர் தொலைகாட்சி சேனல்களில், “மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி ஒருவர் மருத்துவமனையில் அனுமதி” என படத்துடன் செய்தியும் ஒளிபரபப்பட்டது. ஒருபுறம் தடியடி என்ற செய்தி பரவியதாலும் மறுபுறம் சிறைக்குச் செல்ல தோழர்கள் தயாராக நின்றதாலும் பீதியடைந்த காவல் துறை இறுதியில் என்ன செய்வது என்று விழி பிதுங்கியபடி 7 மணிக்கு தோழர்களை விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்ட இடத்தில் உள்ள தங்களது இரு சக்கர வாகனங்களை எடுக்கச் சென்ற போது இரண்டுபேர் தோழர்களிடம் வந்து இது போன்ற ஒரு போராட்டத்தினை இதுவரை பார்த்ததில்லை என்றும் இதற்கு முன் மின் கட்டணம் ரூபாய் 160/- கட்டினேன், தற்போது ரூபாய் 370/- வருகிறது, இது அநியாய பகல் கொள்ளை, இதற்கு எதிராக போராடியது சரி என்றும் பாராட்டிச்சென்றனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி