privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிஜய் : பிறந்தநாள் கொண்டாட முடியாத வீரம் !

விஜய் : பிறந்தநாள் கொண்டாட முடியாத வீரம் !

-

வுன்சிலரோ, கல்லூரி மாணவரோ, இலக்கிய குருஜியோ டீக்கடை சந்து முதல் டிவிட்டர் சந்து வரை பிறந்த நாளுக்கு பிளக்ஸ் வைப்பதில் உலக சாதனை படைத்திருக்கும் தமிழ் நாட்டில் நடிகர் விஜய் மட்டும் ஏன் பிறந்தேன் எனும் சோகத்தில் இருக்கிறார்.

வரும் ஜூன் 22 அவரது 39-வது பிறந்த நாளாம். இதற்காக தமிழகம், இல்லையில்லை தென்னிந்திய அளவில் ரசிகர்களை திரட்டி ஜூன் 8-ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்டமாக பிறந்த நாள் கொண்டாட இருந்தார் விஜய். அந்த விழாவில் 3,900 பேருக்கு ஒரு கோடியில் நலத்திட்ட உதவி, 39,000 பேருக்கு பந்தல், விருந்து என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.

'சுற்றுச் சூழல் காவலர்' விஜய்
‘சுற்றுச் சூழல் காவலர்’ விஜய்

இதில் ஏன் எல்லாம் 39 வருகிறது என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.அழகிரியோ இல்லை அம்மாவோ பிறந்த நாளன்று அவர்களது வயதுக்கேற்ற எண்ணிக்கையில்தான் ஏழைகளை தேர்ந்தெடுத்து உதவி செய்வார்கள். கூடுதலாக வருபவர்கள் அடுத்த ஆண்டு காத்திருக்க வேண்டும். தலைவர்கள், நட்சத்திரங்கள் கொண்டாடும் பிறந்த நாளில் பலனைடைவதற்கும் ஏழைகள் நட்சத்திர ஏழைகளாக இருக்க வேண்டும்.

அது கிடக்கட்டும். ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ஜூன் 7-மாலை மளிகைச் சாமான்கள் முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை ஜெயின் கல்லூரியில் வந்து இறங்க, ஒரு செய்தி இடியென தாக்குகிறது. அது அடுத்த நாள் விழாவுக்கு போலிஸ் பாதுகாப்பு இல்லை, எனவே விழாவை ரத்து செய்யுங்கள் என்று ஜெயின் கல்லூரி நிர்வாகம் கறாராகக் கூறி விட்டது. போலீசிடம் கேட்டால் அன்றைய தினம் சிஎம் கலந்து கொள்ளும் அதிமுக பொதுக்குழு கூட்டம் இருக்கிறது, பாதுகாப்பு தரமுடியாது என்று கைவிரித்து விட்டது.

அம்மா ஆட்சியில் ஊர் கூட்டி பொது இடத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அவரது அனுமதி இருந்தால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் கருணாநிதி கூட அறிவாலயத்தில் அடைந்து கொண்டுதான் கொண்டாடுகிறாரே அன்றி அண்ணா சாலையில் அல்ல. கூகிள் பிளஸ்ஸில் பிறந்த நாள் கொண்டாடும் அம்பிகள் அதையே கூவம் நதி சங்கமிக்கும் மெரினாக் கடற்கரையில் கொண்டாட முடியுமா என்ன?

அந்தபடிக்கு விஜய் பிறந்த நாள் ரத்து என்பது அம்மாவின் கண் அசைப்பில் மட்டுமே நடந்திருக்க முடியும். 3,900 ஏழைகளுக்கு தலா ரூ. 2564 மற்றும் பத்து காசு கொடுத்து, ஒட்டு மொத்தமாக ஒரு கோடி ரூபாய் நலத்திட்டம் வழங்கும் மாபெரும் தான நிகழ்ச்சிக்கு அம்மா ஏன் எரிச்சல் அடைய வேண்டும்?

கிராபிக்ஸ் மற்றும் டிடிஎஸ் உதவியுடன் வில்லன்களை பந்தாடும் நாயகர்கள் நிஜத்தில் அரசியல் குறித்தோ, மக்கள் குறித்தோ உளறினால் நமக்கும் பிடிக்காது, ஜெயலலிதாவுக்கும் பிடிக்காது. டாடா பை பை நடிப்பிற்கே பத்து டேக் வாங்கும் இந்த சிகாமணிகள் அரசியலில் வந்து அது செய்வேன், இது செய்வேன் என்று பீலா விடும் போது அவர்களை அற்பப் புழுக்கள் போல ஜெயா பார்க்கிறார். அதன் பலனைத்தான் இன்று விஜயகாந்த் அனுபவிக்கிறார்.

7 விக்கெட் அவுட்டாகி அடுத்த இன்னிங்சில் ஆல்அவுட்டாவதற்கு காத்திருக்கும் கேப்டன் எப்படியெல்லாம் முழங்கியிருக்கிறார்? உள்ளாட்சி தேர்தலில் கெட் அவுட் சொல்லப்பட்டு இன்று அரசியலை விட்டே ஒதுங்கலாமா, ஓடலாமா எனுமளவு துக்கத்தில் புரண்டு கொண்டிருக்கும் விஜயகாந்த் வாழும் நாட்டில் அடுத்த என்ட்ரியாக விஜய் வந்தால் அம்மா ஏன் பொங்கி எழ மாட்டார்?

ஏற்கனவே குருவி உள்ளிட்ட படங்களில் திமுகவிற்கு சலுகை காட்டியது, 2009-ம் ஆண்டு புதுதில்லியில் ராகுல் காந்தியை சந்தித்தது, அதே ஆண்டில் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது, அந்த இயக்கம் ஆரம்பித்த கையோடு “தவறு எங்கு நடந்தாலும் இயக்கம் மூலம் தட்டிக் கேட்பேன்” என்று முண்டா தட்டியது, இதெல்லாம் அம்மா வெறுப்படைய போதுமானதில்லையா?

பிறகுதான் டாடி எஸ்.ஏ சந்திரசேகருக்கு பொறி தட்டி உடனே அதாவது சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி ஓட்டலில் அம்மாவை சந்தித்து விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் என்று அறிவித்தார். ஆயினும் தம்பி விஜயை பிளாக் லிஸ்டிலிருந்து அம்மா எடுக்கவில்லை.

பலத்தைக் காட்ட விரும்பிய விஜய்
பலத்தைக் காட்ட விரும்பிய விஜய்

தற்போது இந்த 39-வது பிறந்தநாள் விழாவை வைத்து கூட்டம் கூட்டி தனது பலத்தை அதிமுக மற்றும் காங்கிரசிற்கு காட்டப்போகிறார் விஜய் என்று உளவு போலிசு அறிக்கை கொடுத்தும் அம்மா மனதறிந்து இடத்தைக் கொடுத்த ஜெயின் மடத்தைக் காலி செய் என்று விஜயை விரட்டி விட்டார். இவ்வளவிற்கும் இந்த கல்லூரி சேட்டுகளும், விஜய் நடித்த சில படங்களை தயாரித்த சேட்டுகளும் நண்பர்களாம். ஆளும் கட்சிகளை அண்டிப் பிழைக்கும் சேட்டுகளிடம் படம்தான் நடிக்கலாம், இடத்தை கேட்ககூடாது என்று இப்போது விஜய் & கோவிற்கு புரிந்திருக்கும்.

அம்மாவை மீறி கொண்டாட வேண்டுமென்றால் அதற்கு ஒரே பாதுகாப்பான இடம் அறிவாலயம்தான். ஆனால் அதிமுகவிலாவது அம்மாவிடம் மட்டும்தான் விழ வேண்டும், அறிவாலயம் என்றால் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ஆதித்யன் என்று ஏகப்பட்ட மூலவர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்களையெல்லாம் சமாளித்தாலும் பிறகு அம்மா நெற்றிக்கண் திறந்தால் இரண்டு ஆண்டுகள் நடிக்க முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்த வடிவேலு கதையாகிவிடும். ஆக அதுவும் முடியாது.

இந்த விழா ரத்தானது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விஜய், “இந்த நிகழ்ச்சி அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போடும் கூட்டம்னு சிலர் கிளம்பிவிட்டுட்டாங்க. அதை உண்மைன்னு நம்பி கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துட்டாங்க. காவல் துறையும் அப்படி நினைச்சுதான் அனுமதியை மறுத்துட்டாங்க போல இருக்கு. என்னோட தொழில் நடிக்கிறது. ஒரு படம் முடிச்சிட்டு அடுத்த படத்துக்கு இடையில ரெஸ்ட் இல்லாம ஓடிட்டு இருக்கேன். இப்போ அரசியலைப் பத்திப் பேசக்கூட எனக்கு நேரம் இல்லைங்கண்ணா” என்கிறார்.

ஒரு வேளை இந்த விழா அனுமதிக்கப்பட்டிருந்தால் வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்ற முழக்கத்தை மேடையில் இருந்து ரசித்திருப்பார். அனுமதி ரத்தானதும் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார். நமது ஹீரோக்கள்தான் எவ்வளவு பெரிய வீரர்கள் பாருங்கள்! தவறுகளை தட்டிக் கேட்பேன் என்று சவால் விட்ட விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சிலபல படங்களில் நடித்திருக்கிறாரே அன்றி எந்த தவறுகளையும் தட்டிக் கேட்கவில்லை. நான்கு அயர்ன் பாக்ஸ், ரெண்டு மூன்று சக்கர சைக்கிளைக் கொடுத்து விட்டு தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை சல்லிசாக பெற்றுவிடலாம் என்று இவர்கள் நம்புமளவுக்கு தமிழர்கள் இடம் கொடுத்திருக்கிறார்களே, அதுதான் பிரச்சினை!

3,900 பேருக்கு 2500 ரூபாயை தானம் செய்து விட்டு வருங்கால முதல்வர் என்று கூச்சல் போடும் இந்த பிழைப்புவாதிகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி எவ்வளவோ தேவலாம், இல்லையா?