privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?

சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?

-

சூதாட்டத் தரகர்களிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்கள் சொன்னபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சாந்திலியா ஆகிய மூன்று பந்து வீச்சாளர்கள் மே 16-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸ் பின்னர் யோசித்து மகாராஷ்டிரா நிறுவனமாக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (MCOCA) கீழும் வழக்கு பதிவு செய்தது.

ஸ்ரீசாந்த்
சபரிமலையை நோக்கி பிஎம்டபிள்யூவில் ஸ்ரீசாந்த்

ஆனால், MCOCA-வின் கீழான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்வதற்கு போதுமான ஆதாரங்களை போலீஸ் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி கடந்த திங்கள் கிழமை (ஜூன் 11-ம் தேதி) நீதிமன்றம் ஸ்ரீசாந்தையும், அங்கித் சவானையும் பெயிலில் விடுவித்திருக்கிறது.

அஜித் சாந்திலியா மற்றும் ரமேஷ் வியாஸ், அஷ்வனி அகர்வால், தீபக் குமார், சுனில் பாட்டியா ஆகிய புக்கிகள் (சூதாட்டத் தரகர்கள்) மற்றும் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவ் ஆகியோரின் பெயில் மனு மீதான விசாரணை ஜூன் 17-க்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் வியாஸ் தென் இந்தியா முழுவதற்குமான சூதாட்டங்களுக்கும் அஷ்வனி அகர்வால் வட இந்தியாவுக்கும், தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோர் சார்பாக பொறுப்பாக இருந்தார்கள் என்றும் அஜித் சாந்திலியா, தாவூத் இப்ராஹிம் குழு நடத்தும் சூதாட்ட வளையத்தில் முக்கிய புள்ளி என்றும் கூறி டெல்லி போலீஸ் அவர்களது பெயில் மனுவை எதிர்க்கிறது.

சென்னையில் 3-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்த விக்ரம் அகர்வால் என்ற ஹோட்டல் முதலாளியும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் சென்ற வாரம் புதன் கிழமை பிணையில் விடப்பட்டார். அவர் பிணை கொடுக்கக் கூடாத குற்றம் செய்தார் என்பதை சுட்டிக் காட்டும் எந்த ஆவணமும் இல்லாத நிலையில், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்குவதாக நீதிபதி கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பனும், அவரது சூதாட்ட நண்பரான நடிகர் விண்டுவும் கூட பிணையில் வெளியே வந்துவிட்டார்கள்.

இதற்கிடையில், பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தன் டெல்லியிலிருந்து சொந்த ஊரான கொச்சிக்கு திரும்பினார். திரிப்புணித்துராவில் உள்ள விஷ்ணு கோவிலில் கதலி வாழை துலாபாரம் வழங்கினார். 85 கிலோ கதலிப் பழங்களை ஏற்பாடு செய்திருந்த நிலையில் திகார் சிறையில் இளைத்துப் போன ஸ்ரீசாந்த் 83 கிலோதான் இருந்திருக்கிறார். 2 கிலோ இளைத்தது குறித்து உற்றாரும் உறவினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கதலி எடைக்கு எடை
எடைக்கு எடை கதலி வாழை

அதைத் தொடர்ந்து மச்சான் திப்புசாந்த், அப்பா சாந்தகுமாரன், மாமா மது பாலகிருஷ்ணன், நண்பர் கோபகுமார் ஆகியோருடன் தனது பிஎம்டபிள்யூ காரில் சபரிமலைக்குப் போயிருக்கிறார் ஸ்ரீசாந்த். கடைசி 5 கிலோமீட்டர் தூரத்தை கொட்டும் மழையில் நடந்து கடந்த அவர் சனிக்கிழமை காலையில் கோயிலில் பிரார்த்தனை செலுத்தியிருக்கிறார். மாலையில் கோயில் வளாகத்தைச் சுற்றி சயன பிரதிட்சணம் (அங்க பிரதிட்சணம்) செய்தார். தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் ஏதோ சிறு தவறுகள் செய்திருக்கலாம் என்றும் தான் கிரிக்கெட் விளையாடுவது தடை செய்யப்படவில்லை என்றும் அய்யப்பன் அருளால் மீண்டும் விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஊழியர்களுக்கு சம்பளம் தராமல், ரூ 7,000 கோடி வங்கிக் கடன்களுக்கு டிமிக்கி கொடுத்த கிங்பிஷர் முதலாளி மல்லையா, சென்ற ஆண்டு டிசம்பர் 19ம் தேதி தன்னுடைய 58வது பிறந்தநாளுக்கு 3 கிலோ தங்க பிஸ்கட்களை திருமலை வெங்கடாசலபதிக்கு கொடுத்த ஆன்மீக வழியை பின்பற்றி ஸ்ரீசாந்த் இப்போது விஷ்ணுவுக்கு துலாபாரம், அய்யப்பனுக்கு அங்க பிரதட்சணம் என்று பகவான்களுக்கு சேர வேண்டிய ஷேரை கொடுத்திருக்கிறார்.

கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்து விட்டால் தொடர்ந்து தொழிலை செய்யலாம் என்பதுதான் உள்ளூர் பிக்பாக்கெட்-ஏட்டையா தொடங்கி, ஸ்ரீசாந்த் – அய்யப்பன் முதல், மல்லையா-ஏழுமலையான் வரையிலான டீலிங். இதே போன்று சிக்கலில் மாட்டியுள்ள இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் (முன்னாள்) நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் முதலாளி ராஜ் குந்த்ரா ஆகியோரும் இன்னபிற முதலாளிகளும் முறைப்படி பரிகாரம் செய்து தமது ‘பாவ’ மூட்டைகளை இறக்கி வைப்பார்கள் என்று நம்புவோம்.

எமது ஐபிஎல் தொடர் கட்டுரையின் இறுதியிலேயே இந்தக் ‘குற்றவாளிகளை’ சட்டப்படியே தண்டிக்க முடியாது என்றும் ஐபிஎல்லின் ஊழலையும், சூதாட்டத்தையும் யாரும் தடுக்க முடியாது, அவை கிரிக்கெட் விளையாட்டின் அங்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அனைவரும் பிணையில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.

அதனால், ஆண்டவன் நல்லாசிகளுடன் ஐபிஎல் பருவம் 7 நிச்சயம் தொடரும் என்று ரசிகர்களும் நிம்மதி அடையலாம்.

மேலும் படிக்க

  1. ஒரு விவசாயி தனது தக்காளியை ஐம்பது முதல் ஒரு ரூபாய் வரை “ஏமாற்றி” விக்க முடியும் …அல்லவா. அது போல இவர்கள் பெரிய வியாபாரம் செய்வதால் ஒரு கோடி முதல் தங்களது ஏமாற்றம் வித்தையை காட்டுகிறார்கள்.

    90 களில் மாடர்ன் உடை கவர்ச்சியை பார்க்காதே என்ற எனது சமூகம் “டைம் பாஸ்” நடத்துகிறது ., ஆகவே 2025 களில் வர இருக்கும் “முன்னேற்றங்களை ” இப்போதே நான் செய்தால் என்ன தப்பு ?

  2. //சென்னையில் தேதி கைது செய்யப்பட்டிருந்த விக்ரம் அகர்வால் என்ற ஹோட்டல் முதலாளியும் // date didnt mentioned

  3. அலகு காவடி எடுப்பதுநல்லது : காவடி எப்படி எடுப்பது என்று,கோபாலபுரம்(அ) தோட்டத்தில் ஆலோசனை பெறலாம்
    டெல்லியில் கேர ள பஜனை மடம்(வெளி விவகாரத் துறய்யில்) உள்ளது….னல்ல பலன் கிடைக்க இத்தாலி ஆத்தாளுக்கு “பிசா(சு”) வைத்து படைக்கவேண்டும்!

  4. வினவுக்கு அவர் வெளிய வந்தது பிரச்சனையா இல்ல அவர் கோவிலுக்கு போனதா? இதே அவர் மெக்கா யாத்திரை போயிருந்தா இதே தான் எழுதுவீங்களா? ஒரு தனி மனிதனுடைய நம்பிக்கையை எதற்காக விமர்சனம் செய்ய வேண்டும். ___________________

    அவரு என்ன பண்ணனும்னு சொல்றீங்க? இப்போ அவரு கோவிலுக்கு போனதால, ஐயப்பன் வந்து அவர தண்டிக்க கூடாதுன்னு சொல்லிடரா? அதுனால அவர வெளிய விட்டுடன்களா? என்னமோ கடவுள் நம்பிக்கை இருந்தா, கோவில்ல துலாபாரம் பண்ணா நம்ம சட்டம் உடனே அவர மன்னிச்சு விடற மாதிரி எழுதாதீங்க. துலாபாரம் பண்றது அவர் அவர் நம்பிக்கைய பொறுத்த விசயம். அதுக்கும் சட்டத்துக்கும் முடிச்சு போடதீங்க.

    விமர்சனம் பண்றதா இருந்தா, அவர வெளிய விட்ட தீர்ப்பு தப்புன்னு ஆதாரத்தோட எழுதுங்க. இல்ல இப்படி படிச்ச ஒருத்தர், கடவுள் நம்பிக்கை தப்புன்னு விமர்சனம் பண்ணுங்க. இப்படி எதுக்கு எடுத்தாலும் இந்து மத முடிச்சு போடதீங்க. எழுதுற உங்களுகும் அறிவில்லை, படிக்கிற எங்களுக்கும் அறிவில்லைன்னு சொல்றதுக்கு தான் இந்த மாதிரி எழுத்துக்கள் பயன்படும்.

Leave a Reply to ஃபெரோஸ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க