privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !

திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !

-

திவ்யா
சென்னை உயர்நீதி மன்றத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் திவ்யா

திவ்யாவின் தாலியை இரக்கமின்றி அறுத்தெறிந்த பாமகவினர் இன்று காலையில் திவ்யாவையும், அவரது தாயாரையும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்தனர்.

மகளின் காதலை ஓரளவுக்கு ஏற்கும் மனநிலையில் இருந்த திவ்யாவின் தந்தை நாகராஜனின் தற்கொலையை தூண்டி விட்டதும் இதே பாமகவினர்தான். நாகராஜின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இந்த சாதி வெறியர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதும் உடன் திட்டமிட்டு தலித் மக்களின் ஊர்களை நாசமாக்கினர். அப்போதும் பாமகவின் சாதி வெறி அடங்கவில்லை. இவர்களை துணிவுடன் எதிர்த்து நின்று கணவன் இளவரசனுடன் வாழ்ந்து வந்த திவ்யாவை எப்படி பிரிப்பது என்று இரத்தவெறி பிடித்த ஓநாய் போலக் காத்திருந்தனர்.

பல மாதங்களுக்கு பிறகு திவ்யாவை தந்திரமாக ஊருக்கு வரவழைத்து தாய், தம்பிக்கு ஏதாவது ஏற்படும் என்று அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக அவரை இளவரசனிடமிருந்து பிரித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அழுதவாறே பேசும் திவ்யாவே இதற்கு சாட்சி. இதன் மூலம் வன்னிய மானம், கௌரவம் மீட்கப்பட்டதாக வெட்கமின்றியும், காட்டுமிராண்டித்தனமாகவும் பேசி வந்தனர் பாமக சாதி வெறியர்கள். அதன் ஆதாரங்களை ராமதாஸின் அடியாள் அருளின் பதிவுகளில் பார்க்கலாம்.

இந்நிலையில்தான் இளவரசனது மரணம் ஏற்படுகிறது. இது கொலையா, தற்கொலையா என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இரண்டுக்குமே இந்த சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இளவரசன் மரணத்திற்கு பிறகு திவ்யாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்பையும் பாமகவினர் வைத்திருந்தனர். ஏனெனில் திவ்யாவும், அவரது தாயார் தேன்மொழியும் அவர்களது சிறையில்தான் இருந்தார்கள். இளவரசன் மரணம் கண்டு கலங்கி, தான் எவ்வாறு பாமகவினரால் அச்சுறுத்தப்பட்டேன் என்று திவ்யா கூறிவிட்டால் பாமக தலைகளுக்கு ஆபத்து உறுதி. இதனாலும், திவ்யா ஏதும் மனம் மாறி தங்களது வன்னிய மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதாலும் அவருக்கு ஆபத்து என்பது நிச்சயமாகவே நிறையவே இருந்தது. மேலும் இந்த பாமக சாதி வெறியர்கள் எந்த கொலைபாதகத்திற்கும் அஞ்சாதவர்கள் என்பதும் கூடுதல் காரணம்.

இதை முன்யூகித்தே மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நேற்று தொடுத்த வழக்கில் திவ்யாவுக்கு கவுரவக் கொலை நிகழும் ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டியது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உடன் அரசு அதிகாரிகள், மனநல மருத்துவர்கள் திவ்யாவை பார்த்து அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இளவரசனது மறைவை அடுத்து ஊடகங்கள் மற்றும் இணையம், கள நிலவரப்படி தமிழக அரசியல் அரங்கில் பாமக சாதி வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இளவரசனது மரணம் சாதி வேறுபாடுகளின்றி தமிழக மக்கள் அனைவரையும் பாமகவை வெறுக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் திவ்யாவுக்கு ஏதாவது நேர்ந்தால் தமது தலை தப்பாது என்று பயந்து போயே இப்போது தாய், மகளை தருமபுரி போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இந்த ஒப்படைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பாமக தலைவர்களிடம் கேட்டால், “இல்லையே நாங்கள் ஒப்படைக்கவில்லையே, அவர்களாகத்தான் சென்று சேர்ந்திருக்கிறார்கள்” என்று பட்டுக் கொள்ளாமல் பேசுகிறார்களாம். ஆனால் திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது அவர் பேசும் போதும் கூட தீவட்டி தடியர்கள் போன்று நின்று கொண்டு போஸ் கொடுத்த போது இருந்த ‘வீரம்’ இப்போது எங்கே போனது? இல்லை இதுநாள் வரையிலும் திவ்யா பாமக கட்டுப்பாட்டில்தான் இருந்தார் என்பதற்கு இந்த கோர்ட் காட்சிகளும், அது வெளியான எல்லா டிவி காட்சிகளும் இருக்கிறது என்பது கூட இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ஆனால் பாமக தொண்டர்களிடம் கேட்டால், “எதுக்கு சார் பிரச்சினை, இனிமேலும் அந்த பெண்ணை வைத்திருந்தால் எங்களுக்குத்தான் பிரச்சினை அதான் கொண்டு விட்டுவிட்டோம்” என்று பட்டென்று பேசுகிறார்களாம். இதெல்லாம் நமது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்த செய்திகள். மேலும் இளவரசனது மறைவை ஒட்டி பத்திரிகையாளர்கள் திவ்யாவை சந்திப்பதற்கு பெரும் பிரயத்தனம் செய்தும் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் காத்ததும் இதே பாமக தலைவர்கள்தான்.

தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் திவ்யா என்ன பேச வேண்டும் என்று இவர்கள் மிரட்டியபடியே சொல்லிக் கொடுத்துதான் அனுப்பியிருப்பார்கள். ஆனால் திவ்யா அதை மறுத்து உண்மையை பேச வேண்டும். பேசினால் இளவரசனது மரணத்திற்கு இந்த பாமக சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதற்கு மற்றுமொரு சாட்சியமாக இருக்கும். இளவரசன் மறைவுக்காக கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் திவ்யா அதைச் செய்ய வேண்டும். தனது கணவனது மரணத்திற்கு காரணமாணவர்களை அப்படித்தான் தண்டிக்க முடியும். ஆனால் அப்படி திவ்யா பேசிவிடக்கூடாது என்பதில் அவரது தாயார் கூட இருந்து கவனிப்பார் என்பது பாமக சாதி வெறியர்களது எதிர்பார்ப்பு.

மகன் மறைவு குறித்து ஆரம்பத்தில் திவ்யாவை அழுது கொண்டே திட்டிய இளவரசனது தந்தை தற்போது பாசம் கொண்டு பேசுகிறார். இப்போதும் திவ்யா தனது வீட்டிற்கு மருமகளாக வந்தால் ஏற்றுக் கொள்வேன், அவளைப் படிக்க வைத்து மறுமணமும் செய்து வைப்பேன் என்று கூறுகிறார். எவ்வளவு துயரத்திலும் உழைக்கும் மக்களின் பண்பாடு எப்படி மேலானதாக இருக்கிறது என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்?

மறுபுறம் பாமக சாதிவெறியர்கள் ஒரு இளஞ்சோடியை பிரித்து கணவனை கொன்று அடையும் மகிழ்ச்சியின் வக்கிரத்தை இதோடு ஒப்பிட்டு பாருங்கள்!

பாமக சாதிவெறியர்களை ஒழிக்க வேண்டும் என்பதில் யாராவது மாறுபட முடியுமா?

இந்த நேரத்தில் வன்னிய இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் வெளிப்படையாக இந்த பாமக சாதிவெறியர்களை கண்டிக்க முன்வரவேண்டும். அது ஏதோ தலித் மக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நமது தமிழக மக்கள் அனைவருக்கும் செய்து கொள்ளும் உதவியாக இருக்கும். சாதி வேறுபாடு இன்றி வர்க்கமாக நாம் ஒன்றிணையும் போதுதான் நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட முடியும்.

பாமக எனும் நச்சும்பாம்பை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள்வோம்!