privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நெற்களஞ்சியத்தை ஒழிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !

நெற்களஞ்சியத்தை ஒழிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !

-

காவிரி படுகை மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டம் !
நெற்களஞ்சியத்தை கவ்வ வரும் பேரபாயம் ! பேரழிவு !!
மண்ணைக் காக்க கிளர்ந்தெழுவோம் !

புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மீத்தேன் ஆர்ப்பாட்டம்ஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சார்ந்த கும்பகோணம், பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட எட்டு வட்டங்களில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்து இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ள மைய-மாநில அரசுகளைக் கண்டித்து 15.7.2013 அன்று மன்னார்குடி பேருந்து நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள பெரியார் சிலை அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை ஒட்டி திருவாரூர், நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சை ஆகிய பகுதிகளில் பேருந்து பிரச்சாரங்களும், சுவரொட்டி பிரச்சாரமும் வீச்சாக மேற்கொள்ளப்பட்டன.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி – திருவாரூர் பகுதியைச் சேர்ந்த தோழர் கு மா  பொன்னுசாமி தனது உரையில், “ஓட்டுக் கட்சிகள் தங்களுக்குள் வேறுபாடு இருப்பது போல காட்டிக் கொண்டாலும் கொள்ளையடிப்பதிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதிலும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டு தேர்தல் ஓட்டுக் கட்சியினரின் அடையாளப் போராட்டங்களின் ஓட்டு வாங்கும் நோக்கத்தினை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அடுத்து கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் பட்டுக்கோட்டை வட்டார செயலாளர் தோழர் எம். மாரிமுத்து அவர்கள், “இந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தினை செயல்படுத்தும் இந்திய அரசு – மைய அரசு டெல்டா மாவட்ட மக்களை ஒழித்துக் கட்ட துணிந்து இருக்கிறார்கள்.  இதற்கு எதிராக ஆரம்பத்திலேயே நாம் போராட்ட கமிட்டிகள் அமைத்து போராடினால்தான் இந்த பேரழிவில் இருந்து நம் மண்ணையும் பாரம்பரியமிக்க விவசாயத்தினையும் காக்க முடியும். ஓட்டுக் கட்சிகள் நடத்தி வரும் சடங்குத் தனமான போராட்டத்தினால் இந்த அபாயத்தினை தடுத்து நிறுத்த முடியாது. உண்மையாக மக்கள் நலனுக்காக போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தி வரும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வோம்” என்று பேசினார்.

மீத்தேன் ஆர்ப்பாட்டம்அடுத்து கண்டன உரையாற்றிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் பகுதியைச் சேர்ந்த தோழர் ஆசாத், “டெல்டா மாவட்ட மக்களை சூழ்ந்து வரும் இந்த பேரழிவை நாம் புரிந்து கொள்ளத் தவறினால் நம் விவசாய நிலங்கள் தார்ப்பாலைவனமாக மாறும். இந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தினை எதிர்த்து மட்டுமின்றி, இந்த பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிற கட்சிகளின் கொடிகள்தான் வேறே தவிர கொள்ளை ஒன்றுதான், மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதிலும், டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கு சேவை செய்கின்ற கொள்கைதான்” என்று கூறினார்.

எழுச்சி உரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன், 80 சதவீத மக்களை பட்டினி போட்டு விட்டு, மீத்தேன் வாயுவை எடுத்து விற்று இந்தியாவை வல்லரசாக்க போகிறேன் என்று கூறும் மன்மோகன் கும்பலின் சதி நோக்கத்தினை அம்பலப்படுத்தியதோடு, ஜெயலலிதாவின் பாதந்தாங்கிகளாகச் செயல்படும் தா பாண்டியன், அவருடன் கூட்டணி போட்டுள்ள மார்க்சிஸ்ட் போலிகளும் ஜெயலலிதாவிடம் இந்தஅத் திட்டத்த நிறுத்து என்று கூறாத மர்மமென்ன? என்றும் என் எல் சி தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கிற கருணாநிதி ஏன் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்காத காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பி, டெல்டா மாவட்ட 10 இலட்சம் விவசாயிகளை மண்ணோ மண்ணாக்குவதற்காகவே இந்தத் திட்டம் என்றும், அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள், தரகு முதலாளிகள் அமைந்த இந்த தேச துரோக கூட்டணியை தேர்தலில் ஓட்டு போட்டு மட்டுமே ஒழிக்க முடியாது. நக்சல்பாரிகளின் நந்திகிராம வழியில் வீதியில் இறங்கி போராட அணி திரள்வோம் என்றும் அறை கூவல் விடுத்தார்.

பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இக்கண்டன ஆர்ப்பாட்டமானது மண்ணைக் காக்கும் போராட்ட உணர்வை மன்னை மக்களிடம் ஏற்படுத்தியது.

தகவல் : விவசாயிகள் விடுதலை முன்னணி, தஞ்சை-திருவாரூர்-நாகை மாவட்டங்கள்.