privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆறாம் ஆண்டில் வினவு !

ஆறாம் ஆண்டில் வினவு !

-

ன்பார்ந்த நண்பர்களே,

இன்றோடு உங்களின் வினவு தளம் ஐந்தாண்டு பயணத்தை முடித்துக் கொண்டு ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஐந்தாண்டு அனுபவத்தை ஒரு வரியில் கூறுவதாக இருந்தால், ஆரம்பத்தில் தனிநபர் வலைப்பூவாக இருந்த வினவு பின்னர் ஒரு மக்கள் திரள் மாற்று ஊடகமாக பரிணமித்திருக்கிறது.

surat1

முதலில் புள்ளிவிவரங்கள்…..

பதிவுகள் : 2,517
மறுமொழிகள் : 77,142

பார்வையாளர்கள் : 1.04 கோடி
மின்னஞ்சல் சந்தாதாரர்கள் : 5,150
பேஸ்புக்  : 4,931 (முகநூல் சந்தாதாரர்கள் : 5,711)
பேஸ்புக் பக்கம் : 13,193
ட்விட்டர் : 4,586
கூகிள் பிளஸ் : 7,379

புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது ஆரம்ப கால நினைவுகள் வெட்கத்துடன் நகைக்கின்றன. முதல் ஆண்டில் ஆன்லைன் பார்வையாளருக்கான விட்ஜெட்டை தொழில்நுட்ப வேலை செய்து வந்த தோழர் போட்ட போது, ஒன்றிரண்டு பேர்கள் என்பதாக அது காட்டுவது நமக்கு குறையில்லையா என்ற போது அது கூட பலருக்கு இல்லையே என்றார் அந்த தோழர். பின்னர் ஒரு நாளில் பத்து, 100 என வரும் வாசகர் வருகையை எங்களுக்கிடையில் செல்பேசி குறுஞ்செய்தியில் பறிமாறியிருக்கிறோம். உண்மையைச் சொன்னால் வினவு இப்போது இருக்கும் நிலையை நாங்கள் கற்பனை கூட செய்ததில்லை. பதிவுலகில் காத்திரமான சில அரசியல் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போது வெளியிடுவோம் என்பதைத் தாண்டி பெரிய நோக்கமெல்லாம் அப்போது இருந்ததில்லை.

ஆனால் விரைவிலேயே வினவின் வளர்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை வாசகர்களின் ஆதரவு தீர்மானித்திருக்கிறது. அதற்கேற்ற முறையில் நாங்களும் ஒரு குழுவாக திட்டமிட்ட முறையில் வேலை செய்வதாக மாறியிருக்கிறோம்.

கூடங்குளம் போராட்டம், விஸ்வரூபம் பிரச்சினை, இளவரசன் மரணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் நமது கட்டுரைகள் வாசகர்களிடம் பெருவரவேற்பு பெற்றிருக்கின்றன.

இளவரசன் மரணத்தை ஒட்டி எமது விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் தருமபுரியில் நேரடி விசாரணைகள், விவரங்கள், புகைப்படங்களை உடனுக்குடன் அனுப்ப, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு போடும் வேலையினைச் செய்ய, நாங்கள் இவற்றினை இணையத்தில் வெளியிடும் வேலையினை செய்தோம்.

ஒரே நேரத்தில் களத்திலும், நீதிமன்றத்திலும், இணையத்திலும் தோழர்கள் செய்த வேலையின் தாக்கம் பெருமளவிலான வாசகர்கள் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அன்று மட்டும் வினவு தளத்திலிருந்து தகவல் தெரிந்து கொள்ள வருகை தரும் வாசகர் பார்வை 50,000-ஐ தாண்டியது. அன்று முழுவதும் 200, 300 என்ற அளவில் பார்வையாளர்கள் ஆன்லைனில் இருந்தார்கள். அதன்படி வினவின் சிறு வெற்றி என்பது இணையத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. தமிழகமெங்கம் அன்றாடம் களப்பணி செய்து வரும் எமது தோழர்களின் உற்சாகமும், எமது அமைப்புகளின் அரசியல் மேலாண்மையும்தான் இந்த இணையப் பாதையில் வினவு தடம் பதித்தவாறு ஓடுவதற்கு அடிப்படைக் காரணங்கள்.

இடையில் செய்திகளை அதிகம் தரவேண்டுமென்று முயன்றாலும் போதிய அளவில் வெற்றிகரமாக நடக்கவில்லை. தற்போது நான்கைந்து பதிவுகள் வெளியிடுகிறோம் என்பதைத் தாண்டி அன்றாடம் எழுத வேண்டிய செய்திகள் என்பது பல நாட்கள் இயலாததாகவே இருக்கிறது. அதை வரும் நாட்களில் களைந்து கொள்கிறோம்.

கேள்வி பதில் பகுதியும், மார்க்சிய கல்வியும் கூட வாக்களித்தபடி எழுத இயலவில்லை. நேரமின்மை, ஆள் பற்றாக்குறை காரணமாக இவற்றினை தொடர முடியவில்லை. இவற்றையும் சரி செய்து கொள்ள முயல்கிறோம்.

ஒரு வரிச் செய்திகள், சினிமா ஒரு வரிச் செய்திகள் எல்லாம் இன்னமும் சோதனை முயற்சியிலேயே இருக்கின்றன.

அரசியல் சித்தாந்த ரீதியில் முக்கியத்துவமுடைய கட்டுரைகள் அதிகம் எழுத வேண்டுமென்பதுதான் எமது விருப்பம். அதுவும் அன்றாட வேலைச்சுமையில் சாத்தியமில்லாமல் போகிறது. இதையும் சரி செய்ய வேண்டும்.

இவை எல்லாமும் வெற்றிகரமாக நடக்கவில்லை என்பதற்கு முக்கியமான காரணம் ஆள் பற்றாக்குறையே. வரும் நாட்களில் எழுதும் ஆற்றலும், விருப்பமும் உள்ள நண்பர்களை கண்டுபிடித்து எழுத பயிற்சி கொடுத்து தோழர்களாக உயர்த்துவதே இந்த சிக்கலை நீக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி சில தோழர்கள் உருவாகியிருந்தாலும் வினவின் வளர்ச்சிக்கு அது போதுமானதாயில்லை.

ஆங்கிலத்தில் வினவு, வீடியோ செய்திகள் போன்றவையும் கூட கனவாகவே நீடிக்கின்றன. இதற்கும் பொருத்தமான ஆட்களை நாம் இன்னும் பெற்றிருக்கவில்லை என்பதே காரணம். எனினும் வளர்ச்சிக்கும், தேவைக்குமான இந்த முரண்பாடு எப்போதும் இருந்தே தீரும். ஆளும் வர்க்கத்திற்கு எதிராக எழுந்து போராடும் அமைப்புகள், ஊடகங்கள் அனைத்திற்கும் இத்தகைய வசதிக்குறைவு என்பது இருக்கத்தான் செய்யும். அரசியல் ரீதியில் நமது வெற்றிகளும், சாதனைகளும் ஈட்டப்படுவதற்கேற்பவே இத்தகைய ஊடக முயற்சிகளும் இயங்கும்.

ஆதலால் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும் என்பதை வரையறுத்துக் கொண்டே செயல்படுகிறோம். அதே நேரம் அந்த வரையறையை விரிப்பதற்கு புதியவர்களை கண்டறியவும் முயல்கிறோம். அத்தகைய முயற்சிதான் இன்று நீங்கள் பார்க்கும் வினவின் இடத்தை கொண்டு வந்திருக்கிறது. அதை உங்கள் ஆதரவுடன் தொடருவோம்.

வினவுக்கு நன்கொடை தாருங்கள்!

வினவின் அடிப்படையான செலவுகளுக்கு ஒரு சில தோழர்கள், நண்பர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். எனினும் அது போதுமானதில்லை என்பதால் வாசகராகிய உங்களிடமும் கோரிக்கை வைக்கிறோம். எமக்கு பேபால் வசதி இருந்த போது நிறைய நண்பர்கள் கிரமமாக அனுப்பினார்கள். தற்போது சில பிரச்சினை காரணமாக பேபால் வசதி எமக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. இடையில் வினவின் புதிய வடிவமைப்பிற்கும் நிறைய செலவழித்துள்ளோம். எனவே நண்பர்கள் ஆன்லைன் மூலம், அல்லது டிடி, காசோலை, வெஸ்ட்ரன் யூனியன் மூலம் உங்களால் முடிந்த தொகையை அனுப்புமாறு கோருகிறோம். முக்கியமாக மாதந்தோறும் ஒரு தொகையை நீங்கள் தொடர்ந்து அனுப்பினால் பெரும் உதவியாக இருக்கும்.

விவரங்கள் கீழே :

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________
வெஸ்டர்ன் யூனியர்ன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
__________________________________

உங்கள் பார்வையில் வினவு

நண்பர்களே, இந்த ஐந்தாண்டு நிறைவில் வாசகர்களாகிய நீங்கள் வினவு குறித்து என்ன கருதுகிறீர்கள், உங்கள் விமரிசனங்கள், ஆலோசனைகள், கருத்துக்களை ஒரு கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பலாம். “என் பார்வையில் வினவு” என்ற வரிசையில் அவற்றினை இம்மாதம் முழுவதும் பிரசுரிக்கிறோம். இதன் மூலம் நாங்கள் மட்டுமல்ல, ஏனைய வாசகர்களும் பலரது கருத்துக்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும். இதை பதிவர்கள், சமூக வலைத்தளங்களில் இயங்குவோர், வாசகர்கள், தோழர்கள் யார் வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த கருத்து பரிமாற்றம் 5 ஆண்டு அனுபவத்தை தொகுத்துக் கொண்டு சரி, தவறுகளை திருத்திக் கொள்வதற்கும், இன்னும் பல்வேறு முறைகளிலும் பயன்படும். ஆகவே உங்கள் கருத்துக்களை எதிர்கொள்வதற்கும், வெளியிடுவதற்கும் ஆவலாய் காத்திருக்கிறோம்.

இளவரசன் மரணத்தினால் சோர்ந்து போயிருக்கும் சமூக ஆர்வலர்களை ஜெயங்கொண்டம் விமல்ராஜ், செந்தமிழ்ச் செல்வி தம்பதியினரின் போராட்ட மணவாழ்க்கை உற்சாகப்படுத்தியிருக்கும். பாமக மட்டுமல்ல, சமூகத்தை பின்னுக்கிழுக்கும் அனைத்து பிற்போக்கு சக்திகளும் எக்காலத்திலும் வெல்ல முடியாது என்பதை இந்த காதலர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். வினவின் ஆறாவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு இதை விட வேறு என்ன வேண்டும்?

வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எமது தோழமையான நன்றிகளும், வாழ்த்துக்களும்!

நட்புடன்,

வினவு

____________________

  1. வினவு குழுவிற்கு,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இப்பொழுது தான் வினவு துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன.

    தொடரட்டும் உங்கள் புரட்சிகர பயணம்!

    தோழமையுடன்,

    குருத்து

    • வாழ்த்துக்களோடு உற்சாகப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி !

  2. புரட்சிகர வாழ்த்துக்கள் வினவு !!!

    முன்பு போல், தோழர்களை வைத்து எழுதும் பதிவுகள் அதிகம் இடம்பெற்வேண்டும். உதாரணம் நிலா எழுதிய ஈழ பதிவுகள், கலையரசன் பதிவுகள், சந்தனமுல்லை முதலியன.

    பதிவுகளில் கொஞசம் ரசனையான நடை வேண்டும்.

    மீண்டும் புரட்சிகர வாழ்த்துக்கள் !!!

    • ரதி எழுதிய ஈழபதிவுகளைத்தானே நிலா என்று சொல்கிறீர்கள்! தோழர்களை வைத்து எழுதும் பதிவுகள் தற்போதும் இடம்பெறுகின்றன. ஒருவேளை அவர்கள் உங்களுக்கு அறிமுகமாகாதவர்கள் எனப்தால் நினைவில் இல்லையோ? பதிவுகளில் எப்போதும் ரசனையன நடை இருப்பது நல்லதில்லை அல்லவா? எனினும் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி

  3. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

    உங்களின் உழைப்பு பலருக்கு நல்ல கருத்துக்களை வழங்கி, இச்சமூகத்தை பற்றி சிந்திக்கவும் செய்துள்ளது.

    இணைய வானொலி சேவை ஒன்றை துவங்கி தோழர்களின் உரைகளையும், பாடல்களையும் ஒளிபரப்பவேண்டும் என்பது எனது விருப்பம்.

    உழைப்பு தொடர எனது நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  4. பலருக்கும் பதிலளிக்கும் வினவு.. எனக்கு மட்டும் பதில் தருவது இல்லை.

    பின்னூட்டத்தில் தொடர்பு கொண்டாலும் சரி,
    மெயிலில் தொடர்பு கொண்டாலும் சரி…

    என்னத்த சொல்ல…

    வாழ்த்துக்கள்..

    • மன்னிக்கவும் வினோத், சில கேள்விகள் பதிலளிக்கத் தேவையில்லை என்று விடுகிறோம். எல்லாவற்றையும் அப்படி கருதுவதில்லை. எனினும் உங்களது விடுபட்டிருக்கிறது. பொறுத்தருள்க!

  5. வினவு ஆறாவது வருடத்தில் நுழைகிறது என்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.மிகுந்த சந்தோஷம்!! நான் கடந்த ஓராண்டாகத்தான் வாசிக்கிறேன் அதன் விளைவு என் கருத்தோடு யாரும் ஒத்துப்போவதில்லை அலுவலகத்தில் 🙂 வினவு Effect என்பது இதுதான் போலும்.Mainstream Media’க்கள் சொல்லாத பல விஷயங்கள்,உலக நடப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு வினவால் கிடைத்திருக்கிறது. நிறைய யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.வினவின் அத்தனை பதிவுகளோடு உடன்பாடியில்லையென்றாலும் அதன் சமூக அக்கறையை,Daringness’ஐ பாராட்டாமல் இருக்க முடியவில்லை .இதுபோல் ஒரு Mainstream Newspaper,Magazine வராதா என்று ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.வாழ்த்துகள் வினவு.

    • வினவோடு நீங்கள் உடன்படாத கட்டுரைகள் குறித்தும் கருத்து தெரிவித்தல் மட்டுமே அதே ஏன் என்பது எங்களுக்குத் தெரியவரும்! நன்றி

  6. வினவு தளத்திற்கு என் வாழ்த்துக்கள்.வினவு தளத்தை நான் தொடர்ந்து அதிகம் வாசித்து வருவது கடந்த இரு மாதங்களாகத்தான்.வினவின் அரசியல்சார் கட்டுரைகளில் தொகுக்கப்பட்டுள்ள விவரங்கள் கண்டு பிரம்மித்து போனேன்.வினவின் சாதி ரீதியிலான மற்றும் மத ரீதியிலான கட்டுரைகள் எழுதும்போது சொல்ல வந்த விஷயத்தை மிகவும் அழுத்தமாக அதே நேரம் மற்றவர்கள் மனம் நோகா வண்ணம் எழுதவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.சமீப காலமாக இது போன்ற கட்டுரைகளுக்கு எதிட் கருத்துகள் அதிகம் வருவதாக உணர்வதால்தான் இதை நான் சொல்கிறேன்.

    பல புதிய மற்றும் மாற்றுக் கண்ணோட்ட சிந்தனைகளை வினவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    வினவின் பணி தொடரட்டும்.வாழ்க!! வளர்க!!

    • மற்றவர் குறிப்பாக சாதி மத தாக்கம் அதிகம் உள்ளோர் மனம் நோகாமல் எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் ஏற்கும் வண்ணம் வாதத்தில் கடுமை தவிர்த்து, வலிமை சேர்த்து எழுதுகிறோம். தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி

  7. அன்புள்ள வினவு.
    நானும் கொஞ்ச நாளா பாத்துகிட்டு தான் இருக்கேன். 2 வருசத்துக்கு முன்னாடி பாத்தத விட இப்ப பயங்கரமா கலக்கி கிட்டு இருக்குரீங்க. இன்னும் நிறைய எழுதுங்க.நன்றீ.

  8. நான்கு ஆண்டுகளாக வாசிக்கிறேன்…வினவு தளத்திற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!!!

  9. வினவின் ஆறாவது ஆண்டிற்கு வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி….:) உங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!.. மக்களுக்காக வினவின் குரல் இன்று போல் என்றும் ஓங்கி ஒலிக்கட்டும்….

  10. உடன்கட்டை ஏற்றுதல், குழந்தை திருமணம் மற்றும் தேவதாசி முறை போன்ற சமூக கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தானே நாம் ஒரு காலத்தில் வாழ்ந்தோம், ஆனால் இன்று அவற்றை நினைத்தாலே கூசுகிறதே அந்த சாதனை ஒரு தனி மனித முயற்சியில் தானே துவங்கியிருக்கும்.அதுபோல் வருங்காலத்தில் முதலாளித்துவ பயங்கரவாதம், சாதிவெறி, மற்றும் மதவெறி இல்லாத நாட்டில் அடுத்த தலைமுறைகள் வாழ்வதில் உங்கள் பங்கே முதலிடத்தில் இருக்கும்.புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்களே.

  11. Terrific Brothers, Make the English version as soon as possible. Do it in all regional languages. Keep going. Will surely support you. Thanks for the Account Number

  12. வினவுக்கு முதலில் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.நான் கடந்த மூன்று ஆண்டுகளாக வினாவை வாசித்து வருகிறேன்.எனது எண்ணங்களிலும், சமுதாய பார்வையிலும் நிறைய மாற்றங்களை வினவு ஏற்படுத்தியிருக்கிறது.ஒரு புரட்சியாளனாக மாறாவிட்டாலும் கருத்து சொல்லியாக மாறியிருக்கிறேன்.காதல் கவிதை மட்டுமே எழுதி வந்த என்னை சமுதாய கவிதைகளை எழுத வைத்ததற்கு வினவும் ஒரு காரணம். சமீபத்தில் நான் எழுதிய கவிதையை பதிய விட்டுருக்கிறேன்.உங்கள் பணி தொடர பாராட்டுக்கள்.

    பிரிந்து வாருங்கள். ஒன்று சேருவோம்!

    ஒரு நாள் விட்டு ஒரு நாள் கம்யூனிசம் பேசும்

    போலி பொதுவுடமைவாதிகளிடமிருந்து ……

    அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று ஓலமிட்டு ரஷ்யாவிற்கு

    அடிவருடியாய் வேலை செய்யும் தரகர்களிடமிருந்து…..

    கோ-கோ-கோலா விற்கு எதிரான பிரச்சார மேடையிலிருந்தே

    கோக் குடிக்கும் ஏமாற்றுகாரர்களிமிருந்து…..

    L-Board மாட்டிக்கொண்டு ரயில் வண்டி ஓட்டுவது போல்

    தொழிற்சங்கம் நடத்தும் வேடிக்கை காரர்களிடமிருந்து ……

    ஜெய்தாபுருக்கு ஓன்று, கூடங்குளதிற்கு ஓன்று என்ற

    கொள்ளை கொள்கைமுதல்வாதிகளிடமிருந்து……

    Share Market ஒழிக! என்று கோஷமிட்டுவிட்டு தொண்டர்களின்

    உண்டியல் காசையும் Share ல் ஏலம் விட்ட வித்தகர்களிடமிருந்து…..

    பிரிந்து வாருங்கள் தோழர்களே!!!ஒன்று சேருவோம்!!!

  13. வாழ்த்துக்கள்! புரட்சி வெடிக்கட்டும்! சாதி, வர்ணம், மதம், பெண்ணடிமை, பார்ப்பனீயம், வர்க்க வேறுபாடு மற்றும் சமத்துவமின்மை வேரோடு ஒழியட்டும்!

  14. வாறு வருசமா புரட்சியா எழுதியும் உங்களால ஊரை மாத்த முடியலை.பாமக இருக்கும் வரை,தலித் இருக்கும் வரை வினை(ன) எத்தனை பிறந்தநாள் கூட கொண்டாடலாம்..

  15. அன்பின் வினவு,

    கிட்டதட்ட கடந்த ஐந்தாண்டுகளாகவே நான் வினவின் எழுத்துக்களைப் படித்துக் கொண்டு வருகிறேன். விரல் விட்டு எண்ணக் கூடிய சில கட்டுரைகளைத் தவிர எனக்கு எதிர் விமர்சனம் எதுவும் இருந்ததில்லை.உங்கள் சேவை அளப்பெரியது.உண்மையைத் தேடும் பயணத்தில் வினவு ஒரு வழிகாட்டியாகவே இருந்து வந்துள்ளது.

    வாழ்த்துகள் ,நன்றிகள்..

    • நீங்கள் உடன்படாத கட்டுரைகள் குறித்தும் அவ்வப்போது கருத்து தெரிவியுங்கள், அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், நன்றி.

    • அம்பி உங்கள் மின்னஞ்சலை (இங்கே நீங்கள் தந்துள்ள) திறந்து பார்க்கவும், நன்றி

  16. வாழ்த்துக்கள் தோழர்களே. தொடரட்டும் உங்கள் உன்னத பணி. இப்பொழுது முன்போல கருத்துக்கள், பதிவுகளை இட முடிவதில்லை. பணிச்சுமை. ஆனாலும் ஒவ்வொரு மார்க்சியவாதியின் பார்வையை கூர்மையடைய செய்துள்ளது உங்கள் பதிவுகள். தொடர்ந்து வாசித்து வருகிறேன். நன்றிகள் பல தோழர்களே.

  17. Valthukal.. I came to vinavu first time few yr back when I read the artical on inter-caste marriage and issues happend some where in Maudrai region.. though I am strongly have my spiritual belief and follow, you guys gave me to think on social aspect aswell no one else does in this current time.. Good luck on your continous work and effort..

  18. வினவு தொடர்ந்து வெற்றிகளை அடைந்திட வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து தமிழ் அறிந்தவர்கள் மட்டுமே பார்த்து வந்த வினவின் செய்திகளை

    ஆங்கிலம் மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் பார்க்க,படிக்க ஏதுவாக வடிவமைப்பில்

    மாற்றம் வேண்டும்.மேலும் ஒலிவடிவமும்(பாடல்கள்,உரைகள்)வேண்டும்.வினவு! வினைசெய்!!!

  19. அட அதற்குள் ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டதா?
    அதிரடியான உங்கள் கட்டுரைகளுக்கு அதிரடியான வாழ்த்துக்கள் …

  20. புரட்சிகர வாழ்த்துக்கள் வினவு ………….!!!! களப்பணிகள் தொடரட்டும்

  21. வினவு தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள், தங்கள் போராட்டம் தொடரட்டும். வினவைப் பற்றிய விளம்பரங்கள், குறிப்பாக படியுப்க்கள் வினவு, http://WWW.வினவு.காம். என்பது போன்றவை பு.ஜ., பு.க., அமைப்பு சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் மூலம் பரவினால் மேலும் நன்றாக விரிவடையும் அல்லவா? மற்றபடி வினவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்…

  22. வினவு குழுவிர்க்கு,

    இனிய ஆறாம் ஆன்டு வாழ்த்துக்கள்.

    இந்த உன்னதமான பணி மேலும் சிறக்க எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

  23. வாழ்த்துக்கள்..

    பல முறை வடிக்கப்படும் கட்டுரைகள் ஒரு சார்புடைய கருத்துகள் என்று தோன்றினாலும், பொதுவான ஒரு விவாதத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் கருத்து சுதந்திரம் மிகவும் பாராட்டப்பட வேண்டியது..

    பல பிரபலமான வலைப்பூக்கள் எதிர்மறை மறுமொழிகளை அனுமதிப்பதில்லை என்பதை நாம் அறிவோம்… அவற்றின் மத்தியில் வினவு ஒரு விடிவெள்ளி…

    உங்களோடு கருத்து கொள்கை உண்டன்பாடு இல்லதா வாசகர் கூட காலையில் எழுந்து கண்விழித்து முதலில் பார்க்கும் தளம் உங்கள் தளம் தான்….

    சில நேரங்களில் கட்டுரைகள் எழுதப்படும் பாங்கில் ஒரு கடுமை, கையாளும் மொழிநடை, பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒரு காட்டம், ஆணவம் இருப்பது உண்மை தான்…. அதை குறைத்துகொள்வது உங்கள் விருப்பம்… ஒருவேளை கருத்துக்களின் புரிதலுக்கு இவை அவசியம் என நீங்கள் கருதினால் மறுப்பதற்கில்லை…

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்…

    • // கட்டுரைகள் எழுதப்படும் பாங்கில் ஒரு கடுமை, கையாளும் மொழிநடை, பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒரு காட்டம், ஆணவம் இருப்பது உண்மை தான்…. அதை குறைத்துகொள்வது உங்கள் விருப்பம்… ஒருவேளை கருத்துக்களின் புரிதலுக்கு இவை அவசியம் என நீங்கள் கருதினால் மறுப்பதற்கில்லை… “//
      கட்டுரையின் மொழிநடையை வலிந்து எழுதுவதில்லை. குறிப்பிட்ட உள்ளடகத்தின் தேவை குறித்து அப்படி எழுதப்படுகிறது. அதேநேரம் எதிர் கருத்து கொண்டிருப்போரையும் சிந்திக்கும் விதமாக நாங்கள் போதிய அளவில் எழுதவில்லை என்று உங்கள் விமரிசனைங்களை புரிந்து கொள்கிறோம்.

  24. வாழ்த்துக்கள். முகப்புத்தகத்தில் அடிக்கடி உங்கள் கட்டுரைகள் பகிரப்படுகின்றன. ஏதோ ஒரு பதிவில் யாரோ ஒருவர் வினவில் வந்த கட்டுரையின் ஒரு பகுதியை கமெண்டாக பகிர்ந்திருப்பார் , உங்கள் பேரை போட்டோ போடாமலோ… பிரமிக்கத்தக்க வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது. வினவோடு நாங்களும் வளர்கிறோம் என்பது தான் உண்மை.

  25. தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்! மென் மேலும் வளர என்னுடைய ஆதரவு இருக்கும். பொதுவாக நான் என்னுடைய அலுவலகத்திற்கு வந்ததும் முதலில் இணையதளத்தில் வாசிப்பது வினவு செய்திகளைத்தான். அதோடு மட்டுமின்றி மும்பையில் இருக்கும் என் நண்பர்களிடத்தில் வினவு செய்திகளை பார்க்க சொல்வேன். கூடிய விரைவில் நண்பர்கிளிடத்தில் விவாத கூட்டம் ஒன்றையும் நடுதுவதற்கு ஆலோசனை செய்து வருகிறோம்.

    • நன்றி நண்பரே, உங்கள் நண்பர்களின் விவாதக் கூட்டம் வெற்றிகரமாக நடப்பதற்கு வாழ்த்துக்கள்!

    • உங்களுக்கு சம்பளம் கொடுப்பது யார்? வேலையை செய்யுங்கள் பணியிடத்தில், வாழ்த்துக்களை வீட்டிலிருந்து சொல்லுங்கள் .வினவுக்கு வாழ்த்துக்கள்.JESUS COME SOON LIKE REVOLUTION.தமிழ் சமூகம் மிக தந்திரமாக முழு சுயநலமாக வாழ்கையை வாழ்ந்து நகர்த்தி கொண்டு இருக்கிறது .இங்கு மக்கள் ஏமாந்தவர்களாக நடித்துகொண்டு இருக்கிறார்கள்.அதாவது தூங்குவது போல.அதன் நீட்சியை நீங்கள் செய்கிறீர்கள் .ANYHOW GREAT WISHES.LET US SEE HOW TIME WORK IN COMING YEARS.

  26. வினவு செய்திகள் நன்று. எனினும், சில குறைகள் உள்ளன. நீங்கள் பின்னூட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள். இது தவறு. பின்னூட்டம் என்பது வெள்ளைக்காரர்களை அப்படியே பின்பற்றும் அடிமை மனோபாவம். கருத்து என்பதே feedback மற்றும் comment என்ற இரு ஆங்கில வார்த்தைகளுக்கும் பொதுவான தமிழ் வார்த்தையாகும். ஆங்கில வார்த்தைகள் அத்தனைக்கும் ஒரு தமிழ் வார்த்தை வேண்டும் என்று பொருத்தம் இல்லாத ஒரு தமிழ் வார்த்தையை திணிப்பது, வெள்ளைக்காரர்களை அப்படியே பின்பற்றும் அடிமை மனோபாவம் அன்றி வேறு இல்லை.

    அது போல பேஸ்புக் என்பதை முகநூல் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். இது மிகவும் தவறு. பேஸ்புக் என்பது ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் தன்னுடைய படைப்புக்கு வைத்துள்ள பெயர். அதை மாற்றுவது என்பது மிகவும் தவறு. வினவு என்பது அமெரிக்காகாரருக்கும், வினவு தானே தவிர ‘ask’ என்று ஆகாது. நாம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் – ஐ , நுண்மென்மை சன்னல் என்று சொல்வது இல்லை. சொன்னால் அது தவறு. கருப்புசாமி அமெரிக்கா சென்றாலும் கருப்புசாமி தானே தவிர, அவர் BlackGod என்று அழைக்கப்படுவது இல்லை. தமிழ் பற்று என்ற பெயரில் இனியாவது தமிழ் ஆர்வலர்கள் இந்த கோமாளித்தனங்களை நிறுத்துவார்கள் என்று நம்புவோம்.

  27. வாழ்த்துகள் வினவு.

    உங்கள் கருத்து எப்பொதும் தலித்,இருபான்மையினர் (இசுலாமியர்,கிருத்துவர்) ஆதரவாகவே உள்ளது. தப்பில்லை.

    தலித்கள் அல்லாத தலைவர்கள் போராடுவதில் சில நல்ல விடயங்களும் உண்டு அதை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும். மாறாக தலித் அல்லாத தலைவர் எதை செய்தாலும் இழித்து எழுதுவதில் தலித் அல்லாத இன மக்களை வினவு வஞ்சிப்பதே அற்த்தம் ஆகும்.

    உதாரணம்: பா.ம.க தலைவர் இராமதாசு வன்னியர் சாதிக்கு ஆதரவாக செயல்படுபவர்தான். அதற்காக இவரை எப்போதும் இழித்து எழுதுவது.
    அவர் மதுவிலக்கு, சமச்சீர் கல்வி, நுழைவுதேர்வு ரத்து போன்ற நல்ல திட்டத்துக்கான போராட்டத்தை வினவில் பாராட்டியதேயில்லை.

  28. வினவு ,
    வாழ்த்துக்கள் !!!

    எனக்கு சமூகத்தை பற்றிய ஒரு விழிப்புணர்வு தந்ததுக்கு நன்றிகள்.

    செல்வகுமார்

  29. ஒரு சின்ன சந்தேகம் 2009 தானே தொடக்கம். ஐந்தாம் ஆண்டு தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

    பதிவுலகில் வினவுக்கு கிடைத்த வாசிப்பாளர்கள் குறுகிய காலத்தில் இனி எவருக்கும் கிடைக்க வாய்ப்பிருக்காது என்றே நினைக்கின்றேன். இத்தனைக்கும் திரைப்படம் சம்மந்தப்பட்டு அதையே எழுதிக் கொண்டிருப்பவர்களையும் தாண்டி வினவு பெற்ற வளர்ச்சி மகத்தானது.

  30. வாழ்துக்கள் வினவு… இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பணி தொடர வேண்டும்

  31. ஒன்னில் மட்டுமா இரண்டில் மட்டுமா முக்கியமா அதிகாரப் பீடத்தில் மமதையுடன் அமர்ந்திருக்கும் பார்ப்பனீயத்தை சமரசமின்றி எதிர் தாக்குதல் தொடுக்கறீங்க பாருங்க அதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. வாழ்த்துகள்.

  32. வாழ்த்துக்கள், வினவு.

    நான் கடந்த ஒரு வருடமாக படித்து வருவதாக நினைவு. தமிழ் இணைய தளங்களில் சிறந்தவற்றுள் ஒன்றாகவும், சமூக-அரசியல் பேசும் தளங்களில் ஆகச் சிறந்ததாகவும் இதைக் கருதுகிறேன். புதிய கட்டுரைகள், மறுமொழிகள் ஆகியவற்றை படிக்க தினமும் இரு முறையாவது தளத்திற்கு வருகிறேன். Addictive! நான் படிப்பவற்றுள், என் தொழில் சம்பந்தமானவற்றை நீக்கிவிட்டால், வினவு கட்டுரைகள் அதிக பயன் தருவதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன . தொழிலாளர் நலம் போன்ற சில விஷயங்களில் சிந்தனை மாற்றத்தையும், பார்ப்பனீயம்-இந்து மதம் போன்ற மற்ற சில விஷயங்களில் மாறவேண்டுமோ என்ற எண்ணத்தையும், குறைந்த பட்சம் மேலும் படித்து சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்துள்ளன. நன்றி.

    எனக்கு வினவு கட்டுரைகள் மீது இரண்டு பொதுவான விமர்சனங்கள் உண்டு. முதலில், “நான் மட்டும் 100% நல்லவன், மற்றவர்கள் 100% கெட்டவர்கள்” என்ற ஒரு தோற்றத்தை தருகின்றன. “Shades of gray” என்ற இயற்கை நிலையை புறந்தள்ளுகின்றன. இந்த ஒரு வருடத்தில் உங்களை தவிர வேறு யாரையாவது பாராட்டி ஒரு வார்த்தை சொன்னதாய் நினைவில் இல்லை. உதாரணமாக, போலி கம்யூனிஸ்டுகளை அடிக்கடி தாக்கி எழுதுகிறீர்கள். அவர்களது இயக்கம் சமூகத்துக்கு நல்லது எதையுமே செய்யவில்லையா? இரண்டாவது, மேலே மற்ற சிலரும் சொன்ன விஷயம். கருத்துகளை மிகக் காட்டமாக முன்வைக்கும் போது, கருத்துகள் மீது கவனம் செல்லாமல், “இவன் என்ன பெரிய அப்பாடக்கரா? கூகுள்ள தேடியாவது ஏதாவது எதிர் பதில் போடணும்யா” என்ற எண்ணம் மேலுழுந்து கவனம் திசை திரும்புவதை தடுப்பது கடினமாய் இருக்கிறது. சமீபத்தில், முதல் முறையாக பார்ப்பன-இந்து-மதம் மீதான அம்பேத்கரின் விமர்சன எழுத்துகள் சிலவற்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் உள்ளிட்ட, பலரும் முன்வைக்கும் வழக்கமான கருத்துகள்தான். ஆனால், அவர் எழுத்தை படிக்கும் போது, கோவம் வரவில்லை. அவரது கருத்துகள் மிக நியாயமாக பட்டன. என் மதம் இத்தனை மோசமா என்ற வெட்கம் ஏற்பட்டது. அவர் பேசும் முறை அப்படி.

    “ஆறுவது சினம்” என்ற பரிந்துரையோடு, உங்கள் சிறந்த பணி தொடர மீண்டும் என் வாழ்த்துக்கள்!

  33. Dear Vinavu,

    தோழமை வாழ்த்துகள்.

    I am a regular readear since 3 years. Since then, except for few posts on Leena which were of very bad taste, I stand by your posts. I hope you have reviewed your views in that affair and you will not repeat it. (In ‘Tejaswini’, you have followed the right way in critiquing Leena.)

  34. Salute to vinavu.

    Have been reading vinavu for past 1 year. Vinavu stands unique among any other news media, whether it be online or newspapers. One can easily understand that the news published is not biased and true.

    Most of my feedback are already reported by fellow readers. Just like the others have already said, when an essay is strongly opposing a particular group, it must be told in a way that even the opposition must feel guilty, but must fuel them more and add to their hatred. This leads them to the wrong path instead of making them realize the truth. Vinavu must give an important care while writing towards this perspective.

    One more thing I would like to add is, in essays vinavu must give references as proofs by the end of that line or sentence. Like, if “some told something” is reported then its reference must be provided(Just like in Wikipedia)immediately in the same line by link. It ll make sure that vinavu’s idea in that stand is not biased even for those who are against the opinion. When such reference is lacking one can easily say “When it comes online anyone can write anything, this is not true”.

    English version on vinavu will create boom. Expecting that day.

    An online library with Thamizh as well as English version of various revolutionary books could be provided.

    More essays related to “How one can self analyse and make oneself a better socially responsible person” is needed. I can easily find mistakes in others, but need to know how I am wrong.

    Once again a warm Revolutionary Salute to vinavu.

  35. வாழ்த்துக்கள்

    நான் பல வருடங்களாக தினமலர் படிக்கும் வாசகன் . எப்போதுமே ஒரு அறிக்கையை அப்படியே போடுவார்கள் . அமைச்சர் சொன்னார் செய்தார் என்று மட்டுமே இருக்கும் . அதன் பின்னணி ஆய்வு கட்டுரைகள் இருக்காது . ஏதோ ஒரு தளத்தின் கமெண்டில் வினவு சவுக்கு என்று பார்த்து கடந்த ஆண்டு படிக்க வந்தேன் . ஆய்வு கட்டுரைகள் நன்றாக இருகின்றன .

    பின்னோட்டம் இட்டால் வினவு கொள்கைக்கு உடன்படாததாக இருந்தாலும் வெளியிடுகிறார்கள் . ஆனால் அப்படியே நீ யோக்கியமா என்று நக்கல் செய்வதை மட்டும் நிறுத்தினால் நன்றாக இருக்கும்

    • வினவின் கொள்கைகளும் கருத்துகளும் சில தளங்களில் இருந்து உர்ருவபட்ட்வை தான் .உதா . இனியொரு தளம்

  36. வினவின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்! மோடித்வ பாசிஸத்தின் நிழல் இந்திய மக்கள் மீது கவிந்துள்ளது; இன்னொரு பக்கம் மக்கள் வாழ்வில் நிச்சயமின்மையை விதைக்கும் உலக முதலாளித்துவம் என பேரபாயங்கள் நடுவே கையறு நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வினவு மற்றும் புரட்சிகர அமைப்புகளின் பணி பிரச்சினைகளின் பால் மிகவும் சமன்நிலையோடு இருப்பது சிறப்புக்குரியது. சிலர் ஈழத்திற்காக மட்டும் நேர்ந்து விட்டவர்கள் போல இருக்கிறார்கள்; வேறு எந்த பிரச்சினைகள் குறித்தும் உரையாட விருப்பமற்று போகிறார்கள். வினவு கட்டுரைகள் பிரச்சினைகள் மீது ஒருங்கிணைந்த பார்வையை கொண்டிருக்கின்றன.

    அதே நேரத்தில் வேறொரு வகையிலும் ஒரு ஒருங்கிணைவு தேவையாக இருக்கிறது. இந்திய அளவில் செயல்படும் ஜனநாயக சக்திகளுடன் ஒரு தொடர்புறுத்தலை மேம்படுத்த வேண்டியுள்ளது. இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் சிறப்பாகப் பணியாற்றி வரும் மனித உரிமைப் போராளிகள் முகுல் சின்கா, விருந்தா க்ரோவர் போன்றோரை குறித்து சமீபத்தில் பத்திரிகைகளில் படிக்க நேர்ந்தது. குறைந்தபட்சம் பெரியார் பிறந்த மண்ணில் வாழும் நாம் அவர்களை அழைத்து கவுரவப்படுத்த வேண்டும். முன்பு தஞ்சை மாநாட்டில் டீஸ்தா சேதல்வாட்– ஐ அழைத்தது போல சில முயற்சிகளை வினவு சார்பில் செய்ய முன்வரலாம். அது அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கும். அப்போது தான் ஈழம் போன்ற விஷயங்களிலும் அவர்கள் கவனத்தை ஈர்க்க முடியும்.

    • // அதே நேரத்தில் வேறொரு வகையிலும் ஒரு ஒருங்கிணைவு தேவையாக இருக்கிறது. இந்திய அளவில் செயல்படும் ஜனநாயக சக்திகளுடன் ஒரு தொடர்புறுத்தலை மேம்படுத்த வேண்டியுள்ளது. //

      சுகதேவ், மகஇகவிற்கு எப்படி புரட்சி நடத்தணும்னு சரியா தெரியல, அதனால உங்கள மாதிரி முற்றும் தெரிந்த அறிஞர் பெருமக்கள் மன்முவந்து தலைமை தாங்கினா புரட்சி ரொம்ப சீக்கிரம் வரும். கொஞ்சம் தயை செய்யுங்கள், ப்ளீஸ். 🙁

  37. வினவின் வளர்ச்சியை வாசகர்கள் திறந்த மனதுடன் கொண்டாடுகிறார்கள். ஒரு வளர்ச்சியின் திசையில் அடுத்தகட்ட நகர்வு என்பது முக்கியம். உலகமயம் திறந்துவிட்டுள்ள சந்தை வாய்ப்பில் பல தனிநபர் முற்போக்குவாதிகளும், எழுத்தாளர்களும் கூட தமது வளர்ச்சியை கொண்டாடுகின்றனர். இந்த தனிநபர் முற்போக்குவாதிகளுக்கும், காரியவாத எழுத்தாளர்களுக்கும் அடுத்தகட்ட நகர்வு என்பது எளிதாகியிருக்கிறது. இவர்கள் தமது முந்தைய அரைகுறையான செயல்பாடுகளை தமது பயோடேட்டாவில் கோர்த்து, காட்சி ஊடகங்களில் கிறக்கத்துடன் அமர்ந்து கதைக்கிறார்கள். இப்போது வினவின் வெற்றியை வினவு மட்டுமே உணர முடிகின்ற நிலையில் இருக்கிறது.

    ஒரு சிறிய அனுபவத்தை மட்டும் பகிர்கிறேன். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் முன்பு தமுமுகவில் செயல்பட்டார். ‘உணர்வு’ பத்திரிகை சார்பாக ஒரு நாள் மறைந்த தோழர் சீனிவாசனிடம் பேட்டி காண ‘புதிய கலாச்சாரம்’ அலுவலகம் வந்தார். ஹவாய் செருப்புடன் மிகவும் எளியவராக காட்சியளித்தார். பேட்டி முடிந்த பின்னர் அவருக்கு என்னிடம் புன்னகைக்க மட்டும் நேரம் இருந்தது. அதன் பிறகு பல்வேறு அரசியல், இலக்கிய கூட்டங்களுக்கு என்னை போன்றே செல்லும் பழக்கம் கொண்டிருந்தார். அப்போது அவருடன் உரையாடியதில் நட்பு உருவானது. மிகவும் சாதாரணமாக தான் அவரது கருத்துக்கள் இருந்தன. கால ஓட்டத்தில் அவர் விடுதலை சிறுத்தையில் ஐக்கியமாகி, விசிகவின் இசுலாமிய முகமாகியுள்ளார். முகநூலில் இருந்த அவரது எண்ணில் தொடர்பு கொண்ட போது அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் தடுமாறினார்.

    இருவரும் ஒரே மாவட்டம் என்றேன்; புரியவில்லை அவருக்கு. அரசியலை குறிப்பிட்டேன்; தவறான நபர்களை குறிப்பிட்டார். இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரை குறிப்பிட்டேன்; அவர் மேலும் குழப்பமடைந்தார். பிறகு சில கூட்டங்களில் பேசிய விவரங்களை வெளியிட்டு கேட்டேன்; ஒருவாறு அவரது ஞாபக இடுக்கில் இருந்து நான் மீண்டேன். இப்போது எனக்கு நிம்மதியை விடவும் சற்று அவமானமாக இருந்தது. இருந்தாலும் நான் நிம்மதியை அவருக்கு தெரிவித்தேன். நல்ல வேளையாக அவரது குரலில் அவசரம் தெறிக்கவில்லை. அவர் தொலைக்காட்சிகளில் மேடை ஏறுவதை குறிப்பிட்டார். நான் வினவை குறிபிட்டேன். வினவு கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு பேசுவதாகக் குறிப்பிட்டார். ஹெச். ராஜாவுடன் அவர் சன் நியூஸில் மோதியதை மிகவும் சிலாகித்து அவரது முகநூல் நண்பர்கள் பின்னூட்டம் போட்டுள்ளனர்.

    அனால், வினவு, வினவில் எழுதுவதை மட்டுமே சிந்திக்கிறது. திமுக மாதிரியான ஒரு பெரிய கட்சி தனது கட்சி ஊடகம் மட்டுமே போதுமானது என்று சிந்திப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால், வினவு, அதன் வீச்சை அகலப்படுத்த வேண்டும். மீடியா ஷைனஸ் வினவிற்கு தேவையில்லை என்பது எனது கருத்து.

    • சுக்தேவ்,
      வினவு, வினவு (அ) ம.க.இ.க. என்ற முகத்துடன் பிற தொலைக்காட்சிகளுக்கு விவாதங்களுக்கு செல்வதில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது காட்சி ஊடகத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?

      • ரிஷி,
        தொலைக்காட்சி விவாதங்களில் வினவு மற்றும் மகஇக தோழர்களின் பங்கேற்பு அவசியம் என்ற நோக்கத்திலே கருத்து தெரிவித்தேன். உங்கள் ஐயத்தின் இரண்டாம் கேள்வி நிறைவேறினாலும் மகிழ்ச்சி தான்.

        • பங்கேற்பு மகஇக முடிவிலா இருக்கிறது. பேட்டி எடுத்தாலே பேனர காண்பிக்க மாட்டேன்றான்க.

        • சுக்தேவ்,
          முன்னர் ஒருமுறை தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். ஒரு தோழர் துல்லியமான உச்சரிப்புடன் தெளிவான வார்த்தைக் கோர்வைகளுடன் அருமையாகப் பேசினார். அவர் கம்யூனிஸ்ட்தான். மனித உரிமை இயக்கம் சார்பாக பேசினாரா என்று நினைவிலில்லை. குறிப்பிட்ட பிரச்சினை சார்பாக பேசினாலும் முதலாளித்துவத்தை மிகச் சரியாக சாடினார். பிற கட்சி சார்பாக அவருக்கு எழுந்த எதிர்ப்பு வெறும் சொத்தை வாதமாக அமைந்திருந்தது. (தலைமை உத்தரவிடுகிறது.. நாங்க செய்றோம் என்பதுபோல மகா மொக்கையாக!)

          ஒருவேளை மகஇக தோழர்களை மீடியாவில் அழைப்பது அவர்களை இன்னும் விரிவடையச் செய்வது போல ஆகிவிடும் என்ற பயம் இருக்கலாம்.

        • சுகதேவ், நீங்க என்ன வேலை செய்யுறீங்க்னு தெரியலை.

          // தொலைக்காட்சி விவாதங்களில் வினவு மற்றும் மகஇக தோழர்களின் பங்கேற்பு அவசியம் என்ற நோக்கத்திலே கருத்து தெரிவித்தேன்.//

          ஆனா இதை பார்க்கும் போது தமிழ் உடகங்களின் யதார்த்த நிலை கொஞ்சம் கூட உங்களுக்குத் தெரியல. எனக்குத் தெரிஞ்சே பல மகஇக தோழருங்க பேட்டியை எடுத்துவிட்டு அதை காண்பிக்காமல் இருந்த சதியை கேள்விப்பட்டிருக்கேன். பல தினசரிகள் ம.க.இ.க அறிக்கைங்கள கூட போடுவதில்லை. இந்த சிஸ்ட்டத்தை ஏத்துக்கிட்டவங்களைத்தான் ஊடக முதலாளிங்க காண்பிப்பாங்க. எதிர்க்கிறவங்கள கண்டுக்கவே மாட்டாங்க. இதுல வினவுக்கு மீடியா ஷைனஸ் தேவையில்லைன்னு அட்வைசு வேற. முதல்ல நீங்க புரட்சிகர அமைப்புகளை சரியா தெரிஞ்சுக்கிட்டா இப்புடி அத்துப்பித்தா பேசவேண்டியதில்லை. இன்டலக்சுவல் ஃபோபியா இல்லேன்னா இதை நீங்களும் புரிஞ்சிக்கலாம். 💡

          • //உங்கள மாதிரி முற்றும் தெரிந்த அறிஞர் பெருமக்கள் மன்முவந்து தலைமை தாங்கினா புரட்சி ரொம்ப சீக்கிரம் வரும்.//

            உங்களை மாதிரியான நபர்கள் இந்த நக்கல் மற்றும் பூசல் விளைவிக்கும் பேச்சுக்கு அப்பால் மேலெழ முடியாதவர்கள். புரட்சிக்கு அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற பன்மை சமூக அமைப்பில் ஜனநாயக சக்திகள், ஜனநாயக அமைப்புகளுடனான உறவு ஒரு புரட்சிகர அமைப்புக்கு மிக அவசியம். தனித்து நின்று சாதிப்பதற்கு புரட்சி ஒன்றும் ரியல் எஸ்டேட் டீலிங் அல்ல.

            வானிலையின் பருவ மாற்றத்திற்கு ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்பு கூட உதவியாக இருப்பதை போல என்னுடைய பணியும் வினவில் இருந்ததுண்டு. வேண்டுமானால் தோழர்களை கேட்டு தெரிந்து கொள்ளவும்.

            • கோவிச்சுக்காதீங்க சுகதேவ், இப்பவும் நீங்க சொல்லியிருப்பது // இந்தியா போன்ற பன்மை சமூக அமைப்பில் ஜனநாயக சக்திகள், ஜனநாயக அமைப்புகளுடனான உறவு ஒரு புரட்சிகர அமைப்புக்கு மிக அவசியம். தனித்து நின்று சாதிப்பதற்கு புரட்சி ஒன்றும் ரியல் எஸ்டேட் டீலிங் அல்ல.// இந்த மாதிரி விசயமெல்லாம் புரட்சிகர அமைப்புகளுக்கு தெரியலை, உங்களை மாதிரி அறிஞர்களுக்கு தெரிஞ்சிருக்குங்கிறத நானும் ஒத்துக்கிறேன். அதுனாலதான் உங்கள மாதிரி ஆளுங்க புரட்சிக்கு தலைமை ஏற்றால் என்ன தப்புங்கிறதுதான் என்னுடைய கேள்வி!

              • ஓகே! வெற்றிவேல். உங்கள் ஆதரவுக்கு நன்றி. உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன்னை எனது உதவியாளராக நியமிக்க விருப்பப்படுகிறேன். (இப்போ நீங்க கோவிச்சுக்காதீங்க)
                லார்ட் முருகா! கலியுகத்துல உனக்கு அள்ளக்கை அவதாரமா? இப்படி சோதிக்கிறியே !

  38. வினவிற்கு நல்வாழ்த்துக்கள் . சில வருடங்களாக உங்களின் அனைத்து பதிவுகளையும் அதன் பின்னூடங்களையும் படித்து வருகிறேன் .ஒரு சில கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும் ஏனைய அனைத்து கருத்துக்களையும் என்மனம் ஆமோதித்து ஏற்றுகொள்கின்றன .
    நான் கண்ட ஒரு சிறந்த தளம் வினவு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.எழுதும் நடை , பயன்படுத்தும் வார்த்தைகள் , எள்ளலோடு சேர்ந்த ஒரு அழகு இவை எல்லாம் ஒரு தனி சிறப்பு . இதை எல்லாம் அப்படியே கடைபிடியுங்கள் (உ .ம் . தா . பாண்டியன் , அ தி மு க வின் கம்யூனிஸ்ட் பிரிவு செயலர் ). உங்களுடைய அரசியல் கட்டுரைகள் அனைத்தும் புதிய கோணத்திலும் சிந்திக்க தூண்ட கூடிய ஒரு உந்து சக்தியாக இருக்கிறது .
    சிலநேரம் தான் கொண்ட புரிதலில் விடாப்பிடியாக இருக்கிற மாதரி ஒரு தோற்றம் உருவாக்குகிறீர்கள் . வினவு என்பது தவறுகளுக்கு அப்பாற்பட்டது என்பது போன்று சிலநேரம் நீங்கள் விடாபிடியாக இருக்கிறமாதரி தெரியுது.மத்தபடி உங்களின் அரசியல் , சினிமா விமர்சனங்கள் நன்றாகவே உள்ளன.
    உங்களின் இந்த புரட்சிகர பணிகள் இன்னும் வீரியத்துடன் நடை போட வாழ்த்துக்கள் .
    தோழமையுடன்,
    Mak

  39. வினவின் வளர்ச்சி அவர்களின் ஊடக நேர்மைக்கான பலன். வாழ்த்துக்கள்.

    • அப்ப பதிவுகள் மொக்கை என்று சொல்ல வர்றீங்க இல்ல?

      • பரலோகத்தில் இருந்து தவறி பூலோகத்தில் விழுந்தவராயிருக்கும்! அடிபட்டவுடன் இவ்வாறு பேசுவது இயல்புதானே!

  40. ஒருவர் ஒரு செய்தியை தெரிந்து கொள்வதால் மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை. வேண்டுமானால் அவர் தன்னை ஒரு அறிவு ஜீவியாக காட்டிக் கொள்ளலாம். அதே சமயம் அவர் அச்செய்தியினால் உந்தப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வினையாற்றும் போதுதான் அச்செய்தியை தெரிந்து கொண்டதற்கு பலன் இருக்க முடியும்.

    “பிரச்சாரகன் – அமைப்பாளன் – கிளர்ச்சியான்” ஒரு பத்திரிக்கையின் நோக்கம் குறித்து தோழர் லெனின் கூறியது. வலைதள ஊடகமாக வினவு இதை நோக்கித்தான் பயணிக்கிறது. ஒரு மாபெரும் சக்தியாக வினவு உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

    பணி தொடர வாழ்த்துகள்.

    எனவு பார்வையில் வினவு பற்றி சற்று விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

  41. வினவு தளம் புதிய கலாச்சாரம்,புதிய ஜனநாயகம் ஏடுகளின் இணைய நீட்சியாக விளங்குவதாகவே நான் காண்கிறேன்.இணையம் அளிக்கும் வசதிகள் காரணமாக அந்த ஏடுகளை விட விரைவாகவும் கூடுதலாகவும் கட்டுரைகள் வருகின்றன.மகிழ்ச்சி.

    அதி தீவிர இடதுசாரி சந்தர்ப்பவாத நோயால் பீடிக்கப்பட்டு நக்சல்பாரி இயக்கம் பல குழுக்களாக சிதறுண்டபோது அவற்றுள் ஒன்றாக எழுந்த ம.க.இ.க.வின் இந்த அரசியல் கலாச்சார ஏடுகள் இடது சாரி கருத்துக்களின் பால் ஆர்வம் கொண்டிருந்த இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.மற்றொரு குழுவான ம.உ.க.வின் மனஓசை,கேடயம் ஏடுகள் எல்லாம் எண்பதுகளின் கடைசியில் நின்று போய் விட இவை இன்றளவும் வெற்றிகரமாக வெளிவருகின்றன.அரசுகளையும் ஆளும் வர்க்கத்தையும் கடுமையாக விமரிசிக்கும் கட்டுரைகளின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன.கலைஞரின் கொம்பூதிகள்,பார்ப்பன பாசிச ஜெயாவின் பாதந்தாங்கிகள்,நிலக்கொள்ளையன் மூப்பனார் போன்ற சொல்லாடல்கள் மற்றும் ராஜீவ் சாவு அவரது போர் குற்றங்களுக்கு அளிக்கப்பட தண்டனையே,அது பயங்கரவாத படுகொலையல்ல என மிகவும் ஆச்சரிய படத்தக்க வகையில் வெளிப்படையாக அந்த ஏடுகள் எழுதின.இந்த உண்மையை பலரும் உணர்ந்திருந்தாலும் அவர்கள் எல்லாம் பூட்டிய அறையின் கதவுகளுக்கு பின்னால் கிசுகிசுத்துக் கொண்டிருந்த போது ம.க.இ.க மட்டுமே இதனை வெளிப்படையாக எழுதியது.

    இந்த துணிவும் தைரியமும் அப்படியே இன்றும் வினவு தோழர்களிடம் வெளிப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சில ஆயிரம் பேர் படிக்கும் ஏடுகளில் எழுதுவதை விட கைப்பேசி எண்ணுடன் IP எண்ணை வைத்து எளிதாக கண்டுபிடிக்க கூடிய இணையத்தில் எழுதுவதற்கு கூடுதல் நெஞ்சுரம் தேவை அல்லவா.

    இளவரசன் சாவுக்கு சாதி வெறியே காரணம் என்று பொத்தாம்பொதுவாக தமிழகத்தின் அறிவாளிகள் புலம்பிக் கொண்டிருந்த போது வினவு மட்டுமே பா.ம.க.வை பேர் சொல்லி குறிப்பிட்டு குற்றம் சாட்டி எழுதி வருகிறது.

    இணைய அரசியல் அரங்கில் வினவு பெரும் வெற்றி பெற்றுள்ளது.இதற்கு சான்று தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.ஒவ்வொரு பதிவிலும் அதன் பின்னூட்டபெட்டியின் முகப்பிலேயே சான்றளிக்கப்படும்.ஆம்.நண்பர்களே எந்த ஒரு பதிவானாலும் அது வெளியான ஓரிரு மணி நேரத்திலேயே ”மொக்கை பதிவு”,”காசிருக்கிறவன் அப்படித்தான் செய்வான் உனக்கு ஏன் காண்டு” ”இதெல்லாம் ஒரு பொழப்பா ” ”சீனாவுக்கு போ” நீ இஸ்லாமிய அடிவருடி” பெட்ரோல் காசு வருதா உனக்கு” என்று அறிவான பின்னூட்டங்கள் உடனேயே வந்துவிடும்.பதிவை,பதிவின் கருத்தை எதிர்த்து முறியடிக்கிறார்களாம்.அதனால்தான் முதல் ஓரிரு பின்னூட்டங்களாக இந்த அறிவாளிகள் ”கருத்து” இட்டு விடுவார்கள்.இதே டவுசர்கள் இசுலாமை விமரிசிக்கும் பதிவு என்றால் 100 PERCENT TRUE என்று பின்னூட்டம் போடவும் தவறுவதில்லை.அப்புறம் அதே டவுசர்கள் பார்ப்பன இந்து மதத்தை விமர்சிக்கும் பதிவுகளில் வந்து இஸ்லாமையோ கிருத்துவத்தையோ நீ விமர்சிக்க மாட்டாய் நீ அவனுங்க அடிமை என புலம்பவும் தவறுவதில்லை.

    இதற்காக அந்த டவுசர் பாண்டிகள் வினவிலேயே வாடகை ஏதும் கொடுக்காமல் குடியிருக்கிறார்கள் போலும். இதையே வினவின் வெற்றிக்கான சான்றாக நான் காண்கிறேன்.

    தோழர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • எண் 50-இல் இருக்கும் வெங்கடேசன் அவர்களின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்…

      • நீங்கள் வெங்கடேசன் அவர்களை நையாண்டி செய்வது போல் உள்ளது.

        • பரலோக மற்றும் பூலோக பாண்டியரே, விவாதத்தில் கட்டுரை தொடர்பான பொருளில் விவாதியுங்கள், அர்த்தமற்ற, தொடர்பற்ற, மற்றும் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய பிளேடு காமடிகளை எழுதி எங்கள் நேரத்தை மட்டுமல்ல, உங்கள் நேரத்தையும் மற்ற வாசகர் நேரத்தையும் வீண்டிக்காதீர்கள். நன்றி

  42. எனது பார்வையில் வினவில் “வினவு”கிறேன்….கெளதம் தோழமையுடன்

    வினவை வாசிப்பவர்களுக்கு…………..!
    வினவு எல்லோரையும் வெறுக்க வேண்டும் அல்லது
    விரும்ப வேண்டும் என்று செய்திபோடும் ஊடகம் அல்ல….

    வினவு செய்திகளை அநேகமாக வெறுக்கின்றனர்…. என்ன செய்யமுடியும் உண்மையை நீங்கள் வெறுத்தால்….

    உங்களை வெறுக்க வேண்டும் என்று செய்திபோடுவதால் வினவுக்கு என்ன
    பயன் யோசியுங்கள்…

    இதற்காக என்ன விரும்பத்தக்க வகையில் பொய்யா கூற முடியும்……
    அப்படி கூறினால் பிறகு பிற்காலத்தில் பகுத்தறியும் தன்மை இல்லையென குறை கூறுவார்கள்…

    யார் என்னகூறினாலும்,செய்தாலும் வினவு தன் கருத்துகளை கூறிக்கொண்டே இருக்கட்டும்……
    சமீபகாலத்தில் தனிநபர் சாடுதல் பற்றிய விமர்சனத்துக்கு சொல்கிறேன்..
    ஒருவர் தெரியாமல் தவறு செய்தால் அவருக்கு இது தவறை உணர்த்தும்,தெரிந்து தவறு செய்தால் இந்த விமர்சனங்கள் உறுத்தும்…….இதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி விமர்சனத்துக்கு உட்படவே வேண்டும் ,அது வினவாக இருந்தாலும்கூட,, இதுதான் மனிதனை பகுத்தறிவுவாதியாக தவறுகள் செய்யாத மனிதனாக உருவாக்கும்….ஏனெனில் இந்த உலகில் மக்களுக்கு நண்பன் யார்? எதிரி யார்? துரோகி யார்? நயவஞ்சகன் யார் ? என பகுத்து அறியும் எண்ணம் வேண்டும் அதை தான் முதலில் கருத்து புரட்சியை மக்களுக்கு அளிக்க வேண்டும் எனவே வினவு செய்வது சரி எனது பார்வையில்…இது தொடரட்டும்…..
    பிறகு வினவுக்கு வேண்டுகோள்…..
    ஒரு போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்தால் அதை முன்னரே 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்…மேலும் விவசாயம் மற்றும் மருத்துவம் பற்றிய பங்களிப்பு இன்னும் தேவை எப்படிஎன்றால் சரியான விவசாயம் ,மருத்துவம் பெற என்ன செய்வது போன்ற விளக்கங்கள் அல்லது நூல்கள் அதிகமாக பகிரலாம்……….தினம் ஒரு புத்தகம் அறிமுகம் படுத்தலாம்….
    தற்பொழுது பொதுகூட்டத்தில் நடக்கும் பாடல்களை இசைகுறுந்தகடாக,வீடியோவாக உடனே வெளிவர வழி செய்யலாம்….மாதம் ஒரு முறை புதிய கலாசாரம் வெளியிடலாம்
    மேலும் கலாச்சார கலைபணியை தொடர வாழ்த்துக்கள்……….

  43. வினவு குழுவினருக்கு,

    எனது தோழமை வணக்கங்கள். ஆறாம் ஆண்டு வாழ்த்துக்கள். பல வாசகர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் தான் என்னையும் எழுத தூண்டின. அவர்களுக்கு எனது நன்றிகள்.

    புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எனக்கு அறிமுகமான பொழுது அதன் காத்திரமான கட்டுரைகள் எனக்கு நல்ல சமூக புரிதலையும், அரசியலையும் உருவாக்கின. ஆனால், பல நடைமுறை விசயங்கள் குறித்து அறிய வேண்டுமென்றால், ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் என்பது பெரிய குறையாக இருந்தது. அதன் பக்க வரம்புக்குள் அடைபடாத பொழுது, பல விசயங்கள் விடுபட்டும் போயின. வினவு அந்த குறையை தீர்த்தது. தினந்தினம் எழும் பல நடப்பு நிகழ்வுகள் குறித்து அரசியல் புரிதலை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வசதியாய் இருக்கிறது. நாளும் எனது அரசியல் அறிவை வளர்த்துகொள்ள வினவு உதவுகிறது.

    இணைய வெளியில் பெண்களின் செயல்பாடு ஒப்பீட்டளவில் குறைவு. அப்படி இயங்கும் பெண்கள் மீது ஆணாதிக்க தாக்குதல் நடக்கும் பொழுது வினவு தலையிட்டு அவர்களுக்கு ஆதரவாக உடன் நின்று இருக்கிறது. வினவின் பங்களிப்பில் இது முக்கியமானது என கருதுகிறேன்.

    நாம் பலரையும் சந்தித்து பேசும் பொழுது, நாம் எங்கோயோ ஒரு லெவலில் நின்று பேசுகிறோம். மக்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அதனால், நாம் எளிமையாக, பாலிஷாக பேசவேண்டும் என சிலர் சொல்லும் பொழுது, குழம்பி போயிருக்கிறேன். வினவு தனது கருத்துக்களை காத்திரமாக முன்வைத்து, இப்பொழுது எதிர்நிலையில் இருந்த பல வாசகர்களை வென்றெடுத்ததை பார்க்கும் பொழுது, எனக்கு இருந்த குழப்பம் நீங்கியுள்ளது. சமரசமற்றும், உண்மைகளை அழுத்தி சொல்லும் பொழுது அதி நிச்சயம் ஜெயிக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

    வினவு தளம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்து துறை சார்ந்த அளவில் கட்டுரைகள் வெளியிடுவது மிக சிறப்பு. நமக்கு எழும் எந்த கேள்வி என்றாலும், வினவில் கேட்டு ஒரு தெளிவை அடையலாம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.

    பெண்கள் சம்பந்தபட்ட கட்டுரைகள், கதைகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறீர்கள். பெண்களுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கி அதில் கவனம் கொடுத்து தொடர் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

    தோழமையுடன்,

    அமிர்தா.

  44. அன்பார்ந்த வினவு தோழர்களே!

    வீரவணக்கம். வினவு இணையம் துவங்கி ஐந்தாண்டுகள் முடிவடைந்து, ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைக்கின்றோம். இந்த ஐந்து ஆண்டுகளில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளான மும்பை தாக்குதல், உலக பொருளாதார நெருக்கடி, தற்போது இளவரசன் கொலை வரை சர்வதேசிய, தேசிய, வட்டாரம் வரை அனைத்து பிரச்சினைகளாலும் உழைக்கும் வர்க்க கண்ணோட்டத்துடன் கூடிய கட்டுரைகளை வெளியீட்டு எங்களது புரிதலை தெளிவுப்படுத்தியும், எமது பிரச்சாரத்துக்கு துணையாகவும் இருந்து வந்துள்ளது.

    குறிப்பாக நோக்கியாவின் லாபவெறிக்கு அம்பிகா பலியான போதும், பாக்ஸ்கான் ஆலையில் விஷ வாயுவு கசிவினால் மயக்கமடைந்த தொழிலாளர்களை சாதரண விசயமாக முதலாளித்துவ ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போது, இது முதலாளித்துவ லாப வெறிதான் அம்பலபடுத்தி எழுதிய கட்டுரைகள் இன்றளவும் வர்க்க உணர்வு ஊட்ட கூடியதாகவும், தொழிலாளர்கள் பிரச்சினைகளை எப்படி பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்படி இருந்தது. தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும மக்களுக்கும் உற்ற தோழனான வினவு குழுவினரின் புரட்சிகர பயணம் தொடர எமது காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பாக புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

    புரட்சிகர வாழ்த்துகளுடன்
    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
    காஞ்சிபுரம் மாவட்டம்.

Leave a Reply to ஃபெரோஸ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க