கொல்கத்தா என்னை கைவிட்டு விட்டது !

5

“கொல்கத்தா என்னை கை விட்டது, இப்போது கொல்கத்தாவின் நிலையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.” என்கிறார் பாலியல் தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

மும்பையில் வசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஹவுரா நிலையத்துக்கு அருகில் “வேடிக்கையை ரசிக்க” கூடியிருந்த பெரும் கும்பலுக்கு மத்தியில் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியவர்களுடன் போராடிய அந்த நடுங்க வைக்கும் இரவைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் விவரித்தார். தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் அவரும் அவரது நண்பரும் தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி அவர்களது பெயர்களை வெளியிடவில்லை.

பாலியல் தாக்குதல்

“நான் சில ஆண்டுகளாகவே மும்பையில் வசித்து வந்தாலும் கொல்கத்தா என் மனதில் எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது. “எங்க நகரத்தில் மக்கள் அவ்வளவு நட்பானவங்க” என்று எனது நண்பர்களிடம் பெருமை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால், திங்கள் கிழமை இரவு நடந்த சம்பவம் என்னை கொல்கத்தாவின் நிலையை எண்ணி வெட்கப்பட வைக்கிறது. கொல்கத்தா என்னை கை விட்டு விட்டது.

ஹவுரா ரயில் நிலையத்துக்கு ஓரிரு தெருக்கள் தாண்டிய பகுதியில் இரண்டு பெண்கள் ரவுடிகள் கும்பல் ஒன்றால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது கொல்கத்தாவின் நட்பான முகம் எல்லாம் எங்கே போயிருந்தது? மனிதர்களின் பெருந்திரள் எங்களை சூழ்ந்திருந்தது. ஆனால் எங்களுக்கு உதவி செய்ய ஒரு ஆண்மகன் கூட முன் வரவில்லை. எங்களை பாதுகாக்க முயற்சி செய்த 71 வயதான என் அப்பா தாக்கப்பட்டார். காலிகளை தட்டிக் கேட்ட எங்கள் நண்பர் சுப்ரதா கோஷை அவர்கள் கொடூரமாக அடித்து துவைத்தனர். கொல்கத்தா நகரம் எவ்வளவு இருதயமற்றதாக மாறி விட்டது என்பதை நினைத்து என் மனம் நடுங்குகிறது.

இது வரை மும்பையில் வசித்து வந்த என் அப்பா கொல்கத்தாவுக்கு திரும்பி விட விரும்பினார். அவர் இங்கு குடியேற உதவுவதற்காக நானும் அவருடன் வந்தேன். திங்கள் கிழமை காலை நாங்கள் இருவரும் ஹவுரா ரயில் நிலையத்தை வந்தடைந்தோம். சில பொருட்களை வாங்க வேண்டியிருந்ததால், நாங்கள் தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு உடனடியாக போகவில்லை. எங்கள் நண்பர்கள் ஹவுராவில் வசிப்பதால் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் நாங்கள் அறை எடுத்து தங்கினோம்.

நாள் முழுதும் கடைத் தெருவில் அலைந்து பொருட்கள் வாங்கினோம். மாலையில் அப்பாவை சினிமாவிற்கு கூட்டிப் போவதற்காக சிட்டி சென்டர் II-வுக்குச் சென்றோம். அதன் பிறகு ஹோட்டலுக்கு அருகில் நாங்கள் வந்த போது இரவு 11.30 ஆகி விட்டிருந்தது. நாங்கள் மூன்று பேரும் காருக்கு அருகில் காத்திருக்க, சுப்ரதா சாப்பிட ஏதாவது வாங்கி வரப் போயிருந்தார்.

அந்த நேரம் இந்த ஆள் (அவன் பெயர் ரத்தன் சாஹூ என்று பின்னர் தெரிய வந்தது) அங்கு வந்தான். எங்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தான். அவனை தட்டிக் கேட்ட என் தோழி தாக்கப்பட்டாள். பிறகு அவன் கவனம் என் அப்பாவின் மீது திரும்பியது. நான் போட்டிருந்த உயர் குதிகால் செருப்பை எடுத்து அவனை அடித்தேன். இதற்குள் ஏழெட்டு பேர் சேர்ந்து விட்டார்கள். குடிபோதையில் இருந்த அவர்கள் பச்சையான கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். “யே தோனோ கோ ரேப் கர்கே பேக் பி தேகா தோ கிஸீ கோ பதா பீ நஹீ சலேகா” (இவங்க ரெண்டு பேரையும் ரேப் செஞ்சு தூக்கி எறிஞ்சா கூட யாருக்கும் தெரியப் போவதில்லை) என்று அவர்கள் சொல்வதை நான் கேட்டேன்.

நடப்பதைப் பார்த்து வேகமாக ஓடி வந்த சுப்ரதாவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இன்னமும் கொல்கத்தாவை நான் நேசித்தாலும், கொல்கத்தா எவ்வளவு பாதுகாப்பான இடம் என்று எனது நண்பர்களிடம் இனிமேலும் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. கொல்கத்தாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைப் பற்றி செய்திகள் வெளியாகும் போதெல்லாம், “நீங்க நெனைப்பது போல கொல்கத்தா அவ்வளவு மோசமில்லை” என்றுதான் என் நண்பர்களிடம் சொல்வேன். தன் பெண் குடிமக்களை பாதுகாக்கத் தவறி விட்டதாக தோன்றிய கொல்கத்தாவின் பிம்பத்தை நான் கவனமாக தூக்கிப் பிடித்திருக்கிறேன்.

பாலியல் தாக்குதல்மும்பையில் எனது பணி தொடர்பாக நான் தாமதமாக பல முறை பயணித்திருக்கிறேன். ஆனால், இரவில் எவ்வளவு தாமதமானாலும் எந்த பயமும் இல்லாமல் நான் நடமாடலாம். ஆனால், கொல்கத்தாவில் 11.30 மணிக்கே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. ஆண்கள் ஏன் பெண்களின் வாழ்க்கையை இவ்வளவு நெருக்கடியானதாக மாற்றி விடுகிறார்கள்? படிப்பறிவில்லாததும், ஒழுக்கம் இல்லாததும்தான் காரணம் என்று நினைக்கிறேன். (படித்தவர்கள் பாலியல் வன்முறை செய்வதில்லையா?வினவு)

ஆனால், இந்த மிருகங்களை நினைத்து வீட்டிலேயே முடங்கி விடுவது தீர்வாகாது. நாம் தைரியமாக திருப்பிப் போராட வேண்டும். அப்போதுதான் ஆண்கள் திருந்துவார்கள்.  கொல்கத்தா நிர்வாகம் நகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதலமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெண் ஆன அவர், நாங்கள் தாக்கப்படும் போது பெண்கள் எப்படி அவதிப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நான் இன்னும் சில நாட்களில் இங்கிருந்து போய் விடுவேன். ஆனால் என் தோழியை நினைத்துதான் கவலையாக இருக்கிறது. என்னுடன் சேர்ந்து மொத்த சண்டையிலும் தைரியமாக எதிர் கொண்டாள். ஆனால், நான் போன பிறகு இதை எல்லாம் அவள் தனியாக சந்திக்க வேண்டியிருக்கும்.

கொல்கத்தா என்னை கை விட்டு விட்டது. மனம் நிறைய கசப்புடனும், வலியுடனும் நான் போவேன். இந்த நிகழ்வால் என் வாழ்க்கையை நான் விட்டுக் கொடுத்து விடப் போவதில்லை. ஆனால், இந்த கொடிய நிகழ்வைக் குறித்த முழுமையான புரிதலை அடைவதற்கு எனக்கு வெகு காலம் பிடிக்கும்.”

(சுமதி யெங்கோமுக்கு சொன்னது)

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழாக்கம்: அப்துல்.