privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !

பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !

-

எதிர்கொள்வோம் – 3 !

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப் பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரபூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

சமரன் வெளியீடு
சமரன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் என்ற நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (கோப்புப் படம்).

இக்கேள்வியில் குறிப்பிடப்படும் நூலுக்குப் பதில் சொல்ல அவசியம், அதிலுள்ள அரசியல் பாமரத்தனம். ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் இந்த அரசியல் பாமரத்தனம் காரணமாகவே எழுகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரிடமும் காணப்படும் இந்த அரசியல் பாமரத்தனத்தைச் சந்தைப் படுத்துகின்றன, ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற கிசுகிசு ஏடுகள். தமது அரசியல் பாமரத்தனத்தைக் கோட்பாடாக்குகின்றனர், சமரன் வெளியீட்டகத்தின் கட்டுரையாளர்கள். நம் மீதான விமர்சனங்கள் அனைத்துக்கும் ஏற்கெனவே பலமுறை நாம் பதில் சொல்லியாகிவிட்டது. நமது பதில்களும் நிலைப்பாடுகளும் எவ்வளவு சரியானவை என்று நடைமுறையும் நிரூபித்து விட்டது. ஆனாலும், புலிகளின் ஆதரவாளர்களில் பலரும் எப்போதும் போல உண்மையை எப்படி இடித்துரைத்தாலும் பொய்மைப் போதையிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் ஈழத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் வெளியிலுள்ள சமரன் கட்டுரையாளர்கள் போன்ற அறிவு நாணயமற்றவர்கள்.

“1983-ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து” (1983-இல் எத்தனை ஆண்டுகள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!) வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும்” என்று சொல்லிக் கொண்டு “ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற ஒரு நூலை விழா நடத்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதில் வறட்டுக் கோட்பாடுகளும் சுயமுரண்பாடுகளும் தவறான செய்திகளும் நிரம்பி வழிவது அவ்விழாவில் பங்கேற்றுப் பாராட்டியவர்களுக்கு ஏனோ தெரியாமல் போனது! ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்து எழுதிய சமரன் குழுவுக்கு ஈழத்தில் இறுதிக்கட்டப் போரும் ஈழ இனப் படுகொலையும் எப்போது நடந்தது என்பதுகூடத் தெரியவில்லை!

2005-ஆம் ஆண்டு நவம்பரில் இராஜபக்சே தலைமையிலான சிங்கள, பௌத்தப் பேரினவாத பாசிச அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்தது. 2006 ஜூலையில் “பேச்சுவார்த்தை எனும் பேரில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடும் யுத்தத்தை நடத்திவருகிறது” என்று சமரன் குழு எழுதியது. அதன்பிறகு, இராஜபக்சே – புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிந்து, இராஜபக்சேவின் பாசிச அரசு நடத்தி வந்த இனவெறிப் போர், முள்ளிவாய்க்கால் – நந்திக் கடலோரம் 2009 மே மாத மத்தியில் ஈழத் தமிழினப் படுகொலையோடு முடிவுக்கு வந்தது. ஈழ இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டு, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, விழித்துக் கொண்ட சமரன் குழு 2011 ஜூலையில் கீழ்க்கண்டவாறு (பக். 320) எழுதியது.

“2009-ஆம் ஆண்டு இறுதியிலும் 2010-மே மாதம் வரையிலும் நடைபெற்ற கடைசிக் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இனஅழிவு குறித்து உலகத் தமிழர்கள்……” என்று 2011-ஆம் ஆண்டு சமரன் குழுவினர் எழுதியிருந்ததாக “ஈழமும் தேசிய இனப் பிரச்சி னையும்” என்ற நூலில் (பக்.320) பதிவு செய்துள்ளார்கள். கடைசிக் கட்டப்போரும் இனப் படுகொலையும் ஈழத்தில் எப்போது நடந்தன என்றுகூடத் தெரியாத இவர்கள், ஈழத் தமிழர்க்கெதிராக சிங்கள இராணுவம் நடத்திய ஈழத் தமிழினப் படுகொலையை “ஏற்பட்ட இனஅழிவு” என்று தன்னியல்பான நிகழ்வைப் போலவும் சித்தரிக்கின்றனர்.

யாழ் நூலகம்
1981, ஜூன் மாதம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட படுகொலை மற்றும் கலவரத்தின் பொழுது எரிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட யாழ் நூலகம் (கோப்புப் படம்).
குறிப்பு : புதிய ஜனநாயகம் அச்சுப் பிரதியில் 1983 ஜூலை மாதம் என்று தவறுதலாக அச்சாகியுள்ளது.

2006 ஜூலை – 2011 ஜூலை ஆகிய இந்த ஐந்தாண்டு முக்கியக் காலகட்டத்தில், சமரன் குழு சொல்லுவதைப் போல “சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடும் யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த” போதும், அதிலும் குறிப்பாக 2009 மே மாதத்தில் ஈழத் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டபோதும் அதன்பிறகு இரண்டாண்டுகளாகவும், சமரன் குழு என்ன செய்தது என்பதற்கான பதிவு எதுவும் அந்நூலில் கிடையாது. ஈழத் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டபோதும் அதன் பிறகும் இவ்வாறுதான் பெரும்பங்கு தமிழகமும் வெறும் பார்வையாளனாக அமைதி காத்தது. ஒருசில தமிழினவாதக் குழுக்கள், ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அவற்றின் தலைமையிலிருந்த இருந்த மாணவர்கள், வழக்குரைஞர்கள் மட்டுமே ஈழத் தமிழருக்காக இங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முயற்சியால், ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கை, அமெரிக்கத் தீர்மானம் ஆகியன வந்தன; அதையொட்டி ஈழத்தின்பால் தமிழக மக்கள் கவனம் திரும்பிய பிறகுதான் சமரன் குழுவும் விழித்துக் கொண்டது. இதுதான் தமிழீழத்தின் மீதும், ஈழத் தமிழர்கள் மீதும் சமரன் குழுவுக்குள்ள அக்கறை. ஆனால், ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழீழத்துக்கு எதிரானவை போலவும் சமரன் குழுதான் தமிழீழ விடுதலைக்கு தத்துவார்த்தத் தலைமை அளித்து வந்ததாகவும் கூசாமல், வெட்கமின்றி அந்நூலில் புளுகப் பட்டிருக்கிறது. இதற்குத் தமிழினவாதக் குழுக்கள் வழக்கம்போல மழுப்பாமலும், ஈழத் தமிழர்கள் தவறாமலும் கருத்துக் கூறவேண்டும்.

மார்க்சியம்-லெனினியம்- மாவோ சிந்தனையைத் தனது சித்தாந்த வழிகாட்டியாக சமரன் குழு கூறிக்கொள்கிறது. “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்று மாவோ வலியுறுத்தினார். ஆனால், சமரன் குழு இவ்வாறு செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இலங்கை மற்றும் ஈழம் குறித்து சமரன் குழு முன்வைக்கும் அல்லது அறிந்துள்ள விவரங்களில் பலவும் உண்மையானவைகளே அல்ல என்பதற்கு அவர்களின் இந்த நூலே தக்க ஆதாரமாக விளங்குகிறது.

எடுத்துக்காட்டாக, “1947 போலிச் சுதந்திர அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின்………” (பக். viii) என்று குறிப்பிடுவதன் மூலம் 1947-ஆம் ஆண்டில் இலங்கையில் அதிகார மாற்றம் நடந்ததாக சமரன் குழு எழுதுகிறது. பிறகு அதே நூலில் 1948-ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது அமைந்த இலங்கை அரசு, இரு இனங்களுக்கும் சம உரிமையின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒன்றியம் அல்ல. (சிங்கள இன – தமிழின ஐக்கியம் மக்கள் விரும்பித் தாங்களாகவே முன்வந்து செய்து கொண்டதல்ல).” (பக்.37) இவ்வாறு இலங்கை எப்போது சுதந்திர நாடானதென்பதில் தெளிவற்ற சமரன் குழு, அந்நாட்டின் தேசிய இனப் பிரச்சினையை ஆதியிலிருந்து ஆய்வு செய்வதாகக் கருதிக் கொண்டு பிதற்றியுள்ளது.

இதோடு, இசுலாமிய வர்த்தகர்களுக்கு எதிராக 1915 -இல் தாக்குதல் நடத்திய சிங்களவர்களை ஆதரித்து பிரித்தானிய மகாராணியிடம் முறையீடு செய்த சர்.பொன் இராமநாதனை சிங்களவர்கள் தேரில் இழுத்து வந்து கௌரவித்ததை சமரன் குழு குறிப்பிடுகிறது. (பக்.vii)

காலனிய இந்தியாவில் நடந்ததைப் போலவே இலங்கையிலும் நடந்தது. ஆங்கிலக் கல்வி சட்டம் பயின்ற பார்ப்பன மற்றும் பிற மேல்சாதி, மேட்டுக்குடியினர் காலனிய அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு இங்கிலாந்து முடியரசுக்குச் சேவை செய்தனர். அதைப் போலவே, இலங்கையிலும் சிங்கள பௌத்த மேட்டுக் குடியினரும் யாழ்ப்பாண வேளாள சாதி மேட்டுக் குடியினரும் ஆங்கிலக் கல்வி சட்டம் பயின்று, காலனிய இலங்கையில் அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு இங்கிலாந்து முடியரசுக்குச் சேவை செய்தனர். இந்தவகையில் சிங்கள டான் சேனநாயகா, அவரது மகன் டட்லி சேனநாயகா குடும்பமும் ஈழத்தின் பொன்னம்பலம் அருணாச்சலம், அவரது மகன் பொன்னம்பலம் இராமநாதன் குடும்பமும் ஒன்றுபட்டுத் தலைமை வகித்தன. சிங்கள – ஈழத் தமிழ் சமூகங்களின் சார்பாக இவர்கள் ஒன்றுபட்டு நிறுவிக் கொண்டதுதான், அனைத்து இலங்கை தேசியக் காங்கிரசு கட்சி. இக்கட்சிக்கு தலைமையேற்றிருந்த பொன்னம்பலம் இராமநாதன் (இப்பெயர் சமரன் குழு சொல்வதைப்போல இராமநாதன், பொன்னம்பலம் என்ற இரண்டு நபர்களைக் குறிப்பதில்லை, ஒரே நபர்தான்) இசுலாமியர்கள் மீதான 1915 தாக்குதலில் சிங்களவருக்கு வக்காலத்து வாங்கியதில் சிறப்பு ஏதுமில்லை.

யாழ் மேட்டுக்குடி
யாழ்ப்பாண வேளாள சாதி மேட்டுக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலம் அருணாச்சலம் (இடது), இராமநாதன் பொன்னம்பலம்.

காலனிய காலத்திலிருந்தே தமிழீழத்துக்கான உணர்வும் முன்னெடுப்புக்கான முயற்சியும் நிலவியதாக வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடிப்பதில் சமரன் குழு இறங்கியுள்ளது. இதனால், “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது” என்ற பாட்டாளி வர்க்க நெறிமுறையைக் கைவிட்டு விட்டது.

இந்தியாவைப் போன்று காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக காந்தி-காங்கிரசு தலைமையிலான தரகு முதலாளிகளின் சமரசப் போராட்டங்களோ, உண்மையான விடுதலைக்கான மக்கள் போராட்டங்களோ இலங்கையில் நடைபெறவில்லை. காலனிய அரசு நிர்வாகத்தில் பங்கேற்று ஆதாயம் அடைவதற்கான போட்டிதான் சிங்கள மற்றும் ஈழ(உண்மையில் கொழும்பு/யாழ்ப்பாண)த் தரகு முதலாளிகளின் பிரதிநிதிகளிடையே நடந்தது.

“காலனித்துவ நாடாக இருந்த இலங்கை, ஒரு அரைக்காலனித்துவ நாடாக மாறியபோது அந்நாட்டின் அதிகாரம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சிங்கள-தமிழினத் தரகு முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவக் கூட்டுத் தலைமையிடம் மாறிற்று. பேரினமாகிய சிங்கள இனத்தின் அதிகார வர்க்கத் தரகு முதலாளித்துவமும் அரைநிலப்பிரபுத்துவச் சக்திகளும் அந்நாட்டின் (அரசு இயந்திரத்தை தமது பிடிக்குள் கொண்டுவர விரும்பி) அதிகாரத்தை முழுவதுமாக அபகரித்துக் கொள்ள விரும்பின. இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பல திட்டமிட்ட நடவடிக்கைகளை அவை மேற்கொண்டன” (பக்.37) என்கிறது, சமரன் குழு.

சரிதான்; இதன்படி சிங்கள-தமிழினத் தரகு முதலாளிகளுக்கிடையே அதிகாரப்போட்டியால்தான் ஈழ, மலையகத் தமிழர்களுக்கெதிரான குடியுரிமைப் பறிப்பு, மொழி உரிமைப் பறிப்பு, சிங்களக் குடியேற்றம் மூலம் வாழ்வாதாரப் பறிப்பு, கல்வி – மற்றும் அரசு வேலைவாய்ப்புப் பறிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஆளும் சிங்களத் தரகு முதலாளிகள் ஈடுபட்டது. அதே சமயம், தமிழினத் தரகு முதலாளிகளோ தமது அதிகாரத்தைத் தக்க வைத்து கொள்வதற்காகவே தமிழினப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கேடாகப் பயன்படுத்தினர்.

இலங்கையின் சுதந்திரப் பிரகடனத்தின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் ஈழப் போராளிக் குழுக்கள் தோன்றி, அவை ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்கும்வரை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு, இலங்கை அரசிடம் பேரங்கள் நடத்தி ஆதாயங்கள் அடைந்தவர்கள், ஆளும் சிங்கள இனவெறிக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டு, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள், இலண்டனில் சட்ட உயர்கல்வி பயின்ற, வடக்கின் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் கிழக்கின் மக்களையும் கீழானவர்களாகக் கருதிய யாழ் மையவாத, யாழ்ப்பாண ஆதிக்க வேளாள சாதித் தலைவர்கள்தாம்.

கிறித்தவத் தொண்டு நிறுவனங்களின் பலனாய் பெருமளவு கல்வி பயின்ற ஈழ நடுத்தர வர்க்கத்தினர் காலனிய காலத்திலிருந்தே உயர்கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் 60 விழுக்காடிற்கு மேல் பிடித்துக் கொண்டிருந்தனர். சிங்கள மக்கள் இதை ஈழத்தமிழர் ஆதிக்கமாகப் பார்த்தனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிங்களத் தரகு முதலாளிகளின் கட்சிகள் சிங்களப் பேரினவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டன. ஈழத் தமிழரின் நியாயமான பொருளாதார, அரசியல், பண்பாட்டு உரிமைகளைக்கூடப் பறிப்பதிலும், அவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதில் சிங்களத் தரகு முதலாளிகளின் கட்சிகள் போட்டிபோட்டன. அந்நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் கடுமையாகவே, அவை சிங்கள சமூகத்திற்கே எதிரான பாசிசக் கட்சிகளாக பரிணமித்தன. இனவாதத்தின் தீவிரவாதம் பாசிசம்!

50-க்கு 50 விழுக்காடு கோரிக்கை பிரபலம் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரசுக் கட்சி, கூட்டாட்சிக் கோரிக்கை பிரபலம் செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (தமிழில்தான் இந்தப் பெயர், ஆங்கிலத்தில் அதன் பெயர் கூட்டாட்சிக் கட்சி) ஆகிய இரண்டுமே வட்டுக்கோட்டை மாநாட்டு தனியரசுத் தீர்மானம் வரை இப்படித்தான் இருந்தன. அதன்பிறகும் ஈழத்தில் தனியரசு அமைப்பதற்கான திட்டமோ முயற்சியோ எதுவும் அவற்றிடம் கிடையாது.

வவுனியாவிற்குத் தெற்கே தமது வர்க்க நலன்களையும் தமது சொந்தத் தொழிலையும் கொழும்பில் குவித்திருந்த தலைமையினருக்கு செல்வத்தையும் பாதுகாக்க ஒரு அரசியலும், வவுனியாவிற்கு வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களிடம் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலும் தேவைப்பட்டன. அதற்கேற்பவே இவ்விரண்டு கட்சிகளும் தமிழீழச் சிக்கலைக் கையாண்டன.

சேனநாயகா
சிங்கள பௌத்த மேட்டுக் குடியைச் சேர்ந்த டான் சேனநாயகா (இடது) மற்றும் அவரது மகன் டட்லி சேனநாயகா.

ஆனால், காலனிய காலத்திலிருந்தே தமிழீழத்துக்கான உணர்வும் முன்னெடுப்புக்கான முயற்சியும் நிலவியதாக வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடிப்பதில் சமரன் குழு இறங்கியுள்ளது. இதனால், “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது” என்ற பாட்டாளி வர்க்க நெறிமுறையைக் கைவிட்டு விட்டது.

1958 முதல் 1983 வரை தமிழீழத் தேசத்தின் மீது 25 ஆண்டுகள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்ட ‘கலவரம்’ என்கிற ஆயுதத்தைப் பின்வருமாறு சமரன் குழு பட்டியலிடுகிறது.

“1961-இல் சிறீ எதிர்ப்புக் ‘கலவரம்’, 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான ‘கலவரம்’, 1981-இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை, 1983-இல் இலங்கை தழுவிய இனப் படுகொலை…….. ”

“இதனால் வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் சமரசவாதத் தலைவர்களான செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி, பின்னாளில் தமிழர் கூட்டணி, தனித் தமிழீழத் தீர்மானத்தை 1976-ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றியது; 1980 தேர்தலில் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது” (பக்.viiiix)

இங்கே பல தவறான விவரங்களை சமரன் குழு முன்வைக்கிறது:

(1)”1961-இல் சிறீ எதிர்ப்புக் ‘கலவரம்’” நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது. மோட்டார் வாகன இலக்கத் தகடுகளில் ‘சிறீ’ என்று ஆங்கிலத்தில் இருந்ததை சிங்களத்தில் எழுத வேண்டும் என 1958-ஆம் ஆண்டு புகுத்தப்பட்டது. இதை எதிர்த்து ‘சிறீ’ என்பதற்கான தமிழ் வடிவத்தைப் பயன்படுத்தும் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்தியது.

அதற்கு முன்னதாக வேலையை இழப்பதாக இருந்தாலும் அரசு ஊழியர்களாக உள்ள தமிழர்கள் சிங்களம் கற்கக் கூடாது; வடமாகாணப் பாடசாலைகளில் சிங்களத்தை விருப்பப் பாடமாகக் கற்பிப்பதை நிறுத்துமாறும் தமிழரசுக் கட்சி பிரச்சாரம்; இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தப்படி குடியேற்றத் திட்டங்களில் தமிழருக்கு உரிமை, மாவட்ட சபைகளில் சுயாட்சி உரிமை, சிங்களத்தோடு தமிழையும் அரச கரும மொழியாகக் கொள்வது ஆகிய ‘சலுகைகள்’ கிடைத்தன.

ஆனால், ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வாகன இலக்கத் தகடுகளில் மட்டுமல்ல; ஊர்கள், கடைகள், தெருக்களின் பெயர்ப் பலகைகளிலுள்ள தமிழ் எழுத்துக்களைத் தார்பூசி சிங்கள வெறியர்கள் அழிக்கும் இயக்கத்தைத் தொடங்கி முடிவில் 1958-இல் முதலாவது நாடளாவிய இனப் படுகொலையை நடத்தினர். ஏற்கெனவே, “தனி சிங்களச் சட்டம் – 1958 கலவரம்” என்று சொன்னதையே மீண்டும் 1961 – இல் சிறீ எதிர்ப்புக் கலவரம் என்று கணக்குக் காட்டுகிறது, சமரன் குழு.

(2) 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான கலவரம் நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது : 1977-இல் நடத்தப்பட்டது, சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான கலவரம் அல்ல. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனது 1976 வட்டுக்கோட்டை தனியரசு தீர்மானத்தை முன்வைத்து 1977-இல் நடந்த இலங்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டது. தேர்தலுக்கு முன்னதாக ஒரு வாரம் போலீசுக்கு விடுமுறை கொடுத்த ஜெயவர்த்தனே அரசு, குண்டர்களை ஏவி சிறீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் மீது கொலைவெறியாட்டம் போட்டது. லங்கா சம சமாஜக் கட்சியைச் சேர்ந்த 9000 குடும்பங்களை விரட்டி வீடுகளை அழித்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஈழத்தில் 35 விழுக்காடு வாக்குகள் பெற்று நியமன உறுப்பினர்களோடு 18 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சியானது. அதைத் தொடர்ந்து தனியரசு அமைக்கப் போவதாக வதந்தி பரப்பப்பட்டு ஈழத் தமிழர்கள் மீது கொலை வெறியாட்டம் நடந்தது.

பதவிக் காலம் முடியவிருந்த இலங்கை நாடாளுமன்றத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு 1982-இல்தான் நடந்தது. சர்வஜன வாக்கெடுப்பையும் அதில் ஜெயவர்த்தனே அரசின் தீர்மானத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உட்பட இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்தபோதும் கலவரம் எதுவும் இலங்கையில் நடைபெறவில்லை.

(3) “1981-இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை” நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது : முதலாவதாக 1981 -இல் மாகாண சபைத் தீர்வு எனும் ஒன்றை யாரும் வைக்கவேயில்லை. செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சனுக்கும் ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேரங்களின் விளைவாக உள்ளூராட்சிக்குரிய அதிகாரமே கொண்ட மாவட்ட அபிவிருத்தி சபைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மனமுவந்து ஏற்றுக்கொண்டது. ஆனால், விடுதலைப் புலிகள் போன்ற போராளிக் குழுக்கள் ஏற்கவில்லை. ஓரிரு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 1981-இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் அரசு அப்பட்டமான முறைகேடுகளிலும் மோசடிகளிலும் ஈடுபட்டது. யாழ்ப்பாணத்தில், 1981-மே 31 அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நடத்திய பேரணியின்போது சிங்களப் போலீசார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவர் படுகாயமுற்றார்.

அன்று இரவிலிருந்து மூன்று நாட்கள் சிங்களப் போலீசும் துணை ராணுவமும் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாட்டம் போட்டன. தமிழர் பலர் கொல்லப்பட்டனர்; த.ஐ.வி.கூ. தலைமையகம், அக்கட்சி எம்.பி. வீடு, ஒரு இந்துக் கோவில், ஈழநாடு பத்திரிகை அலுவலகம் ஆகியன தாக்கி அழிக்கப் பட்டன. ஜூன் 1 அன்று புகழ்பெற்ற யாழ் பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

(4) 1983-இல் இலங்கை தழுவிய இனப் படுகொலை என்று இங்கே குறிப்பிடும் நிகழ்வை “தன்னியல்பான தமிழீழ மக்களின் 1983 எழுச்சி” (பக். xxviii) என்றும் பீற்றிக் கொள்கிறது சமரன் குழு. ஈழத்தின் வரலாற்றில் “கறுப்பு ஜூலை” என்று முதலாளிய அறிவுஜீவிகளே குறிக்கும் கோரமான, துயரமான ஒரு நிகழ்வை எழுச்சி என்று எப்படி அதனால் கருத முடிகிறது?

(5) 1983 ஜூலை இனப்படுகொலை காரணமாக வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றியது; “1980 தேர்தலில் ஈழத்தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது” என்கிறது, சமரன் குழு. முதலாவதாக 1980 -இல் சமரன் குழு குறிப்பிடுவதைப் போலத் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. 1977-இல் தான் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடந்தன. 1982, 1983 ஆகிய பிற்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் முற்காலத்திலேயே செயல்படுவது (1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் வந்தது என்பது போன்ற) சிந்தனை சமரன் குழுவைப் போன்ற புரட்சிக் கோட்பாட்டாளர்களுக்குத்தான் தோன்றும்! வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை சமஷ்டிக் கட்சி என்ற ஒரு கட்சி மட்டுமே நிறைவேற்றியது; அதுவே அத்தீர்மானத்தை முன்வைத்து, அந்தத் தேர்தலில் 100 சதவீத இடங்களைப் பிடித்தது என்பதும் உண்மையல்ல. ஒரு கட்சி மட்டும் தமிழர் கூட்டணி ஆகிவிடுமா என்றுகூட சமரன் குழு சிந்திக்கவில்லை!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 100 விழுக்காடு ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்; அதுவே இப்போதும் தமிழீழத்தையும் புலிகளின் தலைமை யையும் ஒருமனதாக ஈழத் தமிழர்கள் ஏற்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்று புலிகளும் புலி ஆதரவாளர்களும் நீண்ட காலமாகக் கூறிவருகிறார்கள். இதுவும் உண்மையல்ல. வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களும் கிழக்கிலுள்ள திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களும் சேர்ந்தவைதாம் தமிழீழம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து த.ஐ.வி.கூட்டணி சந்தித்த 1977 பொதுத் தேர்தல்களில் மேற்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்கள் உத்தேசத் தமிழீழத்தில் மொத்தம் 23 தொகுதிகளைக் கொண்டவை. அவற்றில் த.ஐ.வி. கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களைக் கொண்ட வடக்கில் மட்டுமே 100 விழுக்காடு-அதாவது அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களைக் கொண்ட கிழக்கில் மொத்தம் 10-இல் 3 தொகுதிகளில், அதாவது 30 விழுக்காடு மட்டுமே த.ஐ.வி. கூட்டணி பெற்றது. வாக்கு எண்ணிக்கைப்படி பார்த்தால் வடக்கில் 41 விழுக்காடு, கிழக்கில் 26 விழுக்காடும் மொத்தமாகப் பார்த்தால் தமிழீழத்தில் 35 விழுக்காடும் வாக்குகள்தாம் த.ஐ.வி. கூட்டணி பெற்றது. ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஈழத் தமிழர் ஆதரவு குறித்து சமரன் குழு உட்பட புலிகளும் புலி ஆதரவாளர்களும் உரிமை பாராட்டி கொள்வது தவறான அடிப்படையிலானது.

இவ்வாறு இலங்கை மற்றும் ஈழத்தைப் பற்றிய உண்மை விவரங்களையே அறியாத சமரன் குழுதான், ஈழ விடுதலைக்குத் தத்துவார்த்தத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொண்டு வந்திருக்கிறது!

(தொடரும்)
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

  1. சமரன் வெளியீட்டில் உள்ள தத்துவ ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஆண்டு ,பெயர் தவறாக உள்ளது என்று சொல்கிறது பு ஜ .சரி அதை சரி செய்து விட்டால் தனி ஈழம் ,சரி என்று ஏற்று கொள்விர்களா?புலிகள் பாசிஸ்டுகள் அல்ல !போராளிகள் என்பதை ஏற்று கொள்விர்களா ?

    • //2009 மே மாதத்தில் ஈழத் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டபோதும் அதன்பிறகு இரண்டாண்டுகளாகவும், சமரன் குழு என்ன செய்தது//
      சேரன் அவர்களே,
      கட்டுரையில் வருடங்கள் மட்டும் சுட்டிக்காட்டப் படவில்லை(அதைக்கூட சரியா சொல்ல முடியவில்லை). மேலே சுட்டிக்காட்டிய எதுவும் உங்கள் கண்களில் படாது போலும்.
      ஆனால் இவ்வளவு வாங்கியும் சொம்பு இன்னும் நெளியவில்லைன்னு வந்து நிக்கிறீங்க பாருங்க. உண்மையிலேயே நீங்கள் வீரர்கள்தான்.

      • சுட்டி காட்டுவதை நான் மறுக்க வில்லை அதற்க்கு நன்றி .ஏதோ நீங்கள் தவறே செய்யாத மாதிரி பேசுவது வேடிக்கையாக உள்ளது .புலிகளும் பாசிஸ்டுகள் ராஜபசியும் பாசிஸ்டு என்பிர்கள் கடைசி கட்டத்தில் புலிகளின் பாசிசம் மட்டும்தான் உங்களுக்கு தெரியும் .

      • ஆமாம் நீங்க எல்லாம் சரியாய் பு ஜ வில் போடறிங்க சமரன் பற்றி கட்டுரை வந்து உள்ள பு ஜ வில் பா ம க வின் முன்னால் பாராளுமன்ற உறுபினர் செந்தில் என்பதற்கு பதில் சட்டமன்ற உறுபினர் என்று உள்ளது .இதை கூட ஒழுங்கா தெரியாத நீங்க பா ம க பற்றி பேசலாமா என்று நாங்கள் கேக்கவில்லை ?

    • புலிகள் பாசிசவாதிகள் இல்லையென்றால் அனுராதபுரத்தில் சிங்கள குடிமக்களை கொன்றதும்,காத்தான்குடியில் மூதூரில் முசுலிம் மக்களை வேட்டையாடி கொன்றதும்,மாத்தையாவை காணாமல் போக வைத்ததும் என்ன வகையில் சேரும்.

      இன்னொன்றும் தெரியுமா சேர மாமன்னர் அவர்களே, பாசிச பேய்களின் நெஞ்சறிய பொய் சொல்லும் பித்தலாட்டமும் புலிகளுக்கு கை வந்த கலையாக இருந்தது. இறுதி கட்ட போரின் போது கூட புலிகள் நிலப்பரப்புகளை மட்டுமே இழந்திருக்கிறார்கள்.கப்பல் கப்பலாக ஆயுதங்களும் அணி அணியாக வீரர்களும் பத்திரமாக இருப்பதாகவும் இழந்த பகுதிகளை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக் கொள்ளலாம் வீரர்களையும் ஆயுதங்களையும்தான் இழக்க கூடாது என தோல்வியால் துவளும் புலிகளுக்கு பிரபாகரன் ஆறுதல் சொல்வதாகவும் புளுகி வந்தனர்.

      முட்டுசந்தில் நாயிடம் சிக்கி கொண்ட பூனையாக முள்ளிவாய்க்காலில் முடங்கி கிடந்த போது கூட புலிகள் பொய் பரப்புரைகளை கைவிடவில்லை.

      • தரகுமுதலாளித்துவ மற்றும் திருத்தல்வாதிகளின் அணி வரிசையில் புரட்சி பேசும் புதிய ஜனநாயகம் மற்றும் ம.க.இ.க குழுவினர் இராஜபட்சே கும்பலுக்கு ஆதரவாக அணிவகுத்துள்ளனர். “இன்றைய ஈழம், இலங்கை மற்றும் அனைத்து நாட்டு அரசியல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. இன்றைய ஈழப்பிரச்சனையின் யதார்த்த நிலையில் உடனடியான, தற்காலிகத்தீர்வு எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் அரிச்சுவடியிலிருந்து தொடங்கி அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இனவாத நோக்கில் உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, சிறியவையானாலும் இராஜபட்சேக்களின் பாசிசத்திற்கு எதிராகப்போராடும்சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப்போராடுவதுதான்” தீர்வு என்று பு.ஜ. கூறுகிறது.

        அதாவது, ஈழம் புதிய சூழ்நிலை, புதிய பாதை என்று கூறி தனி ஈழம் சாத்தியமில்லை என்றும் அக்கோரிக்கையை கைவிடவேண்டும் என்றும் பு.ஜ. மற்றும் ம.க.இ.க குழுவினர் கூறுகின்றனர். அவர்கள் இன்று மட்டுமல்ல கடந்த 30 ஆண்டு காலமாகவே உதட்டில் ஈழத்தை உச்சரிப்பதும் உண்மையில் ஈழ கோரிக்கைக்கு குழிபறிக்கும் வேலையைத்தான் செய்துவருகின்றனர். தமிழீழத்தை ஆதரிப்பதுபோல் பேசுவது மறுபுறம் இலங்கை அரசின் பாசிசப்போக்கையும் விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கையும் சமப்படுத்தி பேசினர். இறுதியில் புலிகளின் பாசிசப்போக்கை எதிர்த்துப் போராடுவதையே முதன்மைப் பணியாகக் கொண்டனர். இவ்வாறு ஈழப்போராட்டத்துக்கு துரோகம் இழைத்து வந்தனர். அதையேதான் இன்றைய சூழலிலும் அவர்கள் தொடர்கின்றனர்.

        இராஜபட்சேவை போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. அவை மூலம் தண்டிக்கவேண்டும் என்று போராடும் மாணவர்களை எள்ளிநகையாடும் ம.க.இ.க.வினர், “நூரம்பர்க்” போன்ற விசாரணைமன்றம் தேவை என புரட்சி வேடம் போடும் ம.க.இ.க.வினர், ராஜபட்சேவை தண்டித்தால் ஈழத்தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகின்றனர்.

        “அப்படி ஒரு நடவடிக்கை வந்தால் இராஜபட்சேவை போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான் என்பதை நாம் பார்க்கவேண்டும். அதை இலங்கையின் இறையாண்மை மீது தாக்குதலாக, சிங்கள மக்களுடைய கவுரவத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக அதை ராஜபட்சே சித்தரிக்கப் போகிறார். அதையட்டி மீண்டும் தேசவெறியும், இனவெறியும் தூண்டப்படும். ஏற்கனவே இலங்கையின் இறையாண்மையில் இந்தியா அல்லது அமெரிக்கா தலையிடுகிறது என்ற கோணத்திலேதான் அங்கேயிருக்கிற சிங்கள இனவெறியர்கள் அதை எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.”என்று ம.க.இ.க.வினர் எழுதுகிறார்கள்.

        அதாவது ராஜபட்சேவை தண்டிப்பதுகூட தமிழர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதைவிட ராஜபட்சேவுக்கு ஆதரவாக யாராவது பேசமுடியுமா?

        அடுத்து ராஜபட்சேவின் இராணுவப் பாசிசத்திற்கு எதிராக சிங்களப்பகுதியில் ஒரு அமைப்பும் போராட முன்வராத ஒரு சூழலில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்துப் போராட அங்கே ஒரு அமைப்பும் முன்வராத ஒரு சூழலில், இரு இன மக்களும் ஒன்றுசேர்ந்து வர்க்கப்போராட்டம் நடத்தவேண்டும் என்று கூறுவது தமிழீழக் கோரிக்கையை கைவிடச்செய்வதற்கான தந்திரமின்றி வேறென்ன?

        இவ்வாறு பு.ஜ.குழு மற்றும் ம.க.இ.க.வினர் உருவாக்கியுள்ள ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பும் தமிழீழத்துக்கு துரோகம் செய்வதை மாணவர்கள் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும். அவர்கள் ராஜபட்சேவுக்கும் இந்திய அரசுக்கும் துணைபோகும் சந்தர்ப்பவாதத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டும்.
        samaran

        • அய்யா சேரன் அவர்களே

          ஒருவரின் கருத்தை மறுப்பதானால் அது குறித்து ஏதாவது எழுத வேண்டும்.அதை விடுத்து சமரன் கட்டுரையின் தொடர்பற்ற ஒரு பகுதியை நகல் எடுத்து ஒட்டி விடுவது எப்படி மறுப்பாகும்.புலிகள் பாசிசவாதிகளே என்ற எனது குற்றச்சாட்டுக்கு ஒரு வரி கூட மறுப்பு இல்லையே அதில்.

        • ராஜபக்சே அர்சிற்கெதிரான சிங்கள – தமிழ் மக்களின் போட்டங்களை தமிழினவாதிகள் திட்டமிட்டு மறைக்கிறார்கள்..

          தமிழனில்லை, சிங்களவனில்லை நாம் மனிதர்கள் என்று அவை மானுடத்தை பாடுகின்றன
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8806:2012-12-19-21-24-09&catid=336:2010-03-28-18-47-00

          இனவாதத்திற்கு எதிராக தென்னிலங்கை பல் கலைக்கழக மாணவர் சிலரின் சுயாதீன முன்னெடுப்பு
          http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/231-2013/1788-2013-02-25-07-46-07

          இனவாதத்தை தகர்த்தெறியப் போராடிய சிங்கள மாணவர்கள்
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8789:2012-12-02-223307&catid=359:2012

          யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான இனம் கடந்த போராட்டத்தை, மூடிமறைக்கும் இனவாத அரசியல்
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8784:2012-11-30-084420&catid=359:2012

          யாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்! (படங்கள்)
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8783:2012-11-29-17-49-17&catid=75:2008-05-01-11-45-16

          சிங்கள தமிழ் மொழி பேசும் தரப்புகள் கலந்து கொண்ட சமவுரிமைக்கான சுவிஸ் கூட்டம் பற்றி
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8836:2013-01-28-104138&catid=368:2013

          சம உரிமை இயக்கத்தின் கையெழுத்து – பிரச்சாரப் போராட்டம் கிழக்கில் தொடர்கிறது.. (படங்கள் இணைப்பு)
          http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/231-2013/1785-2013-02-23-14-57-55

          சிங்கள மக்களுடன் சேர்ந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோமா?
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8756:2012-10-20-084519&catid=359:2012

          சிங்கள மக்களுடன் இணைந்து போராடக் கூடாது என்று கூறும் குறுந்தேசியவாதிகள்
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8751:2012-10-14-141334&catid=359:2012

          மாணவர் தலைவன் சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய்
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8732:2012-09-23-21-10-48&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125

          ශ්‍රීලංකා ප්‍රජාතන්ත්‍රවාදය ප්‍රේම කිරිමත්, මානව අයිතිවාසිකම් ඉල්ලීමත් වැරදීද? ( இலங்கையில் ஜனநாயகத்தை நேசிப்பதும், மனிதவுரிமையைக் கோருவதும் குற்றமா!?)
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8268:2012-01-13-10-15-00&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125

          இலங்கையில் ஜனநாயகத்தை நேசிப்பதும், மனிதவுரிமையைக் கோருவதும் குற்றமா!?
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8099:2011-12-13-210722&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125

          இனவொடுக்குமுறைக்கு எதிரான குறைந்தபட்சத் திட்டத்தை மறுக்க முடியுமா?
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8861:2013-03-04-144958&catid=368:2013

          வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லையாம்!, இன ஐக்கியமும் சாத்தியமில்லையாம்!!
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8711:2012-08-25-192509&catid=359:2012

          ஐக்கியமும் போராட்டமும்
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8863:2013-03-06-213332&catid=368:2013

          போராட்டத்தில் மரணித்தவர்களை நினைவுகூற பொதுநாளும், விமர்சனம் சுயவிமர்சனம் செய்யும் சில நாட்களும் அவசியம் – சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்:17
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8788:2012-12-02-091211&catid=359:2012

          படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம் !
          http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6624:2010-01-08-19-46-27&catid=75:2008-05-01-11-45-16

          ஜே.வி.பி (சிங்கள இளைஞர்களை மட்டும் கொண்ட அமைப்பு) யின் ராணுவ எழுச்சி சிங்கள அரசால் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டது..
          சிங்களப் பேரினவாத அரசு சிங்கள இனவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் தனது வர்க்க ஒடுக்குமுறையை மறைக்கிறது..

          அதனால் தான் அரசுக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டங்களை ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவாக வென்றெடுக்க வேண்டும் என்று தோழர் கூறுகிறார்..

          இந்திய அரசுக்குத் துணைபோகும் சந்தர்ப்பவாதிகள் யார்? இந்திய அரசின் தயவில் ஈழம் பெறத்துடித்த தமிழினவாதிகளா? இல்லை இந்திய அரசைப் இனப்படுகொலைக் குற்றவாளி என்று போராடிய ம.க.இ.க தோழர்களா?

          சீன அபாயத்தைக் காரணம் காட்டி இந்தியாவில் மூலம் ஈழம் பெற்று விடலாம் என்று முட்டாள்தனமாகக் கூறிவருகிற பழநெடுமாறன், சீமான், வைகோ ஆகியோரெல்லாம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் இல்லையா?

          // அதாவது ராஜபட்சேவை தண்டிப்பதுகூட தமிழர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதைவிட ராஜபட்சேவுக்கு ஆதரவாக யாராவது பேசமுடியுமா?//

          நடைமுறை யதார்த்தத்தைக் காணமறுத்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசிப் பேசி தான் ஈழப்போராட்டத்தை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் தமிழினப் பிழைப்புவாதிகள்….

          குஜராத்தில் ஒரு மினி இனப்படுகொலையை நடத்திய நரவேட்டை மோடி அடுத்தெடுத்து இரண்டு முறை முதல்வராகிவிட்டான். அடுத்து பிரதம வேட்பாளர் வேறு.. என்ன புடுங்க முடிந்தது நம்மால்? இங்கேயே ஒன்றும் புடுங்க முடியவில்லை என்றால் வேறொரு நாட்டில் உள்ள இனப்படுகொலைக் குற்றவாளியான ராஜபக்சேவை எப்படித் தண்டிப்பது? அமெரிக்காவைக் கொண்டா? இல்லை சர்வதேச சமூகத்தைக் கொண்டா?

          அமெரிக்காவிற்கும், சர்வேதேசச் சமூகம் என்று கூறப்படும் மற்ற முதாலாளித்துவ நாடுகளுக்கும் இலங்கையோ இல்லை ராஜபக்சேவோ எதிரி அல்ல. மேலும் அமெரிக்காவே இலங்கையின் சீனச் சார்பை எதிர்த்துதான் இந்தத் தீர்மானத்தையே முன் மொழிந்தது. சர்வதேச சூழ்நிலைகள் இப்படி இருக்கையில் என்ன வழிமுறையைப் பயன்படுத்தி ராஜபக்சேவைத் தண்டிப்பது? மெரினாவில் மெழுவர்த்தியைக் கொழுத்தித் தண்டித்துவிடலாமா? எப்படித் தண்டிப்பது? இந்தக் கேள்விக்கு விடை தேடாமல் அவதூறு செய்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள் தமிழினவாதப் பிழைப்புவாதிகள்.

          அப்படியென்றால் இங்கு போராடவே கூடாதென்ற அர்த்தம் இல்லை. நமது போராட்டம் இந்திய அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும், இந்திய அரசை நமது கோரிக்கைக்குப் பணியவைப்பது என்பது போலவும் இருக்க வேண்டும். இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் போராட்டமாக இருக்கக் கூடாது. இந்திய அரசை எச்சரிக்கும் போராட்டமாக இருக்க வேண்டும்..

          அனைத்து சிங்கள மக்களும் ஈழப்படுகொலையை ஆதரிக்கவில்லை. மேலும் மறுகாலனியாக்கக் கொள்கைகளினால் சிங்கள மக்களும் பெரும் அவதிக்குள்ளாகுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ராஜபக்சேவின் குடும்ப ஆட்சியால் இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுறார்கள். அப்படி இருக்கையில் அந்த மக்களது போராட்டங்களை ஏன் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகத் திரட்ட முடியாது?

          குறுந்தேசியவாதமும், பிழைப்புவாதமும் தமிழினவாதிகளை இப்படி சிந்திக்கவைக்க மறுக்கின்றது. இன உணர்ச்சி, தொப்புள் கொடி உறவென்றால் எளிமையாக மக்களை உணச்சிவசப்படச் செய்து ஓட்டுப் பொறுக்கலாம் என்று எத்தனிக்கிறார்கள் இந்தப் பிழைப்புவாதிகள்..

      • //சேர மாமன்னர் அவர்களே//பெயரை வைத்து அரசியல் பண்ண உங்க மாதிரி போலி புரட்சி பேசுபவர்களுக்கு கை வந்த கலை ஆச்சே !

        • தமிழீழ சோசலிச குடியரசை அமைக்க புறப்பட்ட புலிகள் ஆயுத வலுவில் கொஞ்சம் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் சோழப்பேரரசின் வாரிசுகளாக கருதிக் கொண்டு சீரழிந்து போயினர்,அதன் தொடர்ச்சியாக இப்போது சேரன் வந்து குதித்துள்ளார்.[சேரன் எனபது உங்கள் புனைபெயர்தானே.ஏனென்றால் சாதாரணமாக சேரன் என பெயர் சூட்டப்படுவதில்லை].அவரைத்தான் சேர மாமன்னர் அவர்களே என விளிக்கிறேன்.

      • ஆமாம் சோ.cpm ,காங்கிரஸ் ,கூட இந்த மாதிரி சொல்லித்தான் ஈழ மக்களையும் புலிகளையும் ஒடுக்கினார்கள் .ராஜபசி தமிழக பிரதிநிதி போல் பேசுவது உங்கள் வழக்கம் இதில் ஆச்சிரிய பட ஒன்றும் இல்லை

      • திப்பு,

        பு.ஜ. – சமரன் விவாதத்தில் சந்தடி சாக்கில் நீங்களும் புலிகளை இன-மத வெறியர்களாகக் காட்டி பாசிஸ்டுகள் என்கிறீர்கள்..

        // புலிகள் பாசிசவாதிகள் இல்லையென்றால் அனுராதபுரத்தில் சிங்கள குடிமக்களை கொன்றதும்,காத்தான்குடியில் மூதூரில் முசுலிம் மக்களை வேட்டையாடி கொன்றதும்,மாத்தையாவை காணாமல் போக வைத்ததும் என்ன வகையில் சேரும். //

        புலிகள் இதையே கொள்கையாக வைத்து இருந்தால் அவர்களது 30 ஆண்டுகளுக்கும் மேலான போராட்ட வரலாற்றில் இது போன்ற ஒரு சில சம்பவங்களையே காட்டி அவர்களை இன-மத வெறியர்களாக காட்ட சிரமப்பட வேண்டியிருந்திருக்காது.. இனவெறி-மதவெறியையே அரசியல் கொள்கையாகக் கொண்ட ஒரு பாசிச அரசுக்கும், அதன் ராணுவத்துக்கு துணை போனவர்களுக்கும் எதிரான புலிகளின்( மேலே குறிப்பிட்டது போன்ற ) ஒரு சில வன்முறை நடவடிக்கைகளை ஆதரிக்க முடியாவிட்டாலும், அது ஒரு தன்னிச்சையான பாசிச வெறியாட்டமல்ல, மாறாக ஒரு உச்சகட்ட உணர்ச்சிப் பெருக்கில் சாதாரண சிங்கள,முஸ்லீம் மக்களின் மீது நடத்தப்பட்ட ஒரு பிழையான எதிர்வினை என்பதையும் உணர்வதுதான் நேர்மை..

        // பாசிச பேய்களின் நெஞ்சறிய பொய் சொல்லும் பித்தலாட்டமும் புலிகளுக்கு கை வந்த கலையாக இருந்தது. இறுதி கட்ட போரின் போது கூட புலிகள் நிலப்பரப்புகளை மட்டுமே இழந்திருக்கிறார்கள்.கப்பல் கப்பலாக ஆயுதங்களும் அணி அணியாக வீரர்களும் பத்திரமாக இருப்பதாகவும் இழந்த பகுதிகளை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக் கொள்ளலாம் வீரர்களையும் ஆயுதங்களையும்தான் இழக்க கூடாது என தோல்வியால் துவளும் புலிகளுக்கு பிரபாகரன் ஆறுதல் சொல்வதாகவும் புளுகி வந்தனர். //

        சர்வதேசத் தலையீடு என்ற ஒன்றை புலிகள் நம்பியதையும், இயக்கத்தை காக்கவும், நம்பிக்கையூட்டவும் செய்தவைகளை, சொன்னவைகளை பாசிசப் பேய்களின் பித்தலாட்டம் போன்றது என்பது சரியல்ல.. எந்த பாசிசப் பேயும் தன் குடும்பத்தை களத்தில் பலி கொடுக்காது.. அப்படி கொடுத்ததால்தான் புலிகளை எதிர்ப்பவர்கள் பலரது உள்ளங்களிலும்கூட பிராபாகரன் தேசிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.. புலிகளின் பிழைகளை நேர்மையாக விமரிசிப்பது வேறு, அவதூறு செய்வது வேறு..

        // முட்டுசந்தில் நாயிடம் சிக்கி கொண்ட பூனையாக முள்ளிவாய்க்காலில் முடங்கி கிடந்த போது கூட புலிகள் பொய் பரப்புரைகளை கைவிடவில்லை. //

        முட்டுசந்தில் பூனை சிக்கினால் அதுவும் புலியாகும், திப்பு.. புலி சிக்கியது முட்டுசந்தில் அல்ல, வல்லரசுகளின் வியூகத்தில்.. சர்வதேச நாடுகளின் மவுனம் என்ற புகைமூட்டத்தில்..

        • அம்பிக்கு தமிழ் சரியாக தெரியவில்லையே.இல்லாதவற்றை. நடக்காதவற்றை இட்டுக் கட்டி பிறர் மீது பழி போடுவதுதான் அவதூறு.நடந்த உண்மையை சொல்வது அவதூறு ஆகாது.நீங்களே அவற்றை பிழை என ஏற்கிறீர்கள்.ஆகவே நான் சொல்வது குற்றச்சாட்டு. அவதூறு அல்ல.

          பாசிச குற்றங்கள் என வகைப்படுத்தப்பட வேண்டிய அவற்றை உணர்ச்சி பெருக்கால் இழைக்கப்பட்ட பிழை என எளிதாக கடந்து செல்கிறீர்கள்.பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்திருந்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதை மரத்து போன உங்கள் மனசாட்சியிடம் கேட்டால் உண்மை வெளிவராது.காசுமீர் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள் பற்றி நீங்கள் எழுதியவற்றை புரட்டி பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

          புலிகளின் கள்ளப்பரப்புரைகளை ஏதோ மாபெரும் யுத்த தந்திர உத்தி போல் கதைத்த இன்றும் கதைக்கும் உங்களை போன்றவர்கள்தான் அந்த முட்டாள்தனமான பொய்களை நம்பி ஊர்களை காலி செய்து விட்டு புலிகளை முள்ளிவாய்க்கால் வரை பின்தொடர்ந்து சென்று உயிரிழந்த அப்பாவி மக்களின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள்.அப்படி வந்து மாட்டிக் கொண்ட மக்களை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்த புலிகள் பாசிசவாதிகளா சனநாயகவாதிகளா.

          பிரபாகரன் சரணடைந்து சிங்கள கயவர்களால் இழிவு படுத்தப்பட்டு கொல்லப்பட்ட அன்று கூட கள்ளப்பரப்புரை ஓயவில்லையே.முன்னூறு கரும்புலிகள் அலையலையாக சென்று சிங்கள ராணுவத்தை தாக்கி அவர்களின் பாதுகாப்பு வளையத்தை ஊடறுத்ததாகவும் அந்த அமளியை பயன்படுத்தி புலித்தலைமை ஒரு மருத்துவ அவசர ஊர்தியில் தப்பி சென்று கடற்கரையை அடைந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்லும் கண்ணாடி இழை படகொன்றில் வேறொரு நாட்டுக்கு போய் சேர்ந்து விட்டதாகவும் புளுகினார்கள்.இந்த கோயபல்சுதனம் உங்களுக்கு தந்திர உத்தியா.

          உண்மையில் நீங்கள்தான் அவதூறு சேற்றை பாதிக்கப்பட்ட மக்கள் மீதே அள்ளி வீசுகிறீர்கள்.

          \\ இனவெறி-மதவெறியையே அரசியல் கொள்கையாகக் கொண்ட ஒரு பாசிச அரசுக்கும், அதன் ராணுவத்துக்கு துணை போனவர்களுக்கும் எதிரான புலிகளின்( மேலே குறிப்பிட்டது போன்ற ) ஒரு சில வன்முறை நடவடிக்கைகளை//

          அனுராதபுரத்திலும் காத்தான்குடியிலும் மூதூரிலும் கொல்லப்பட்ட அந்த மக்கள் சிங்கள ராணுவத்துக்கு எந்த வகையில் துணை போனார்கள்.இது அப்பட்டமான அவதூறு.சிங்களவனுக்கு ஐந்தாம் படையாக சில முசுலிம்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டித்தான் அனைத்து முசுலிம் மக்களையும் யாழ் குடா பகுதியிலிருந்து புலிகள் 24 மணி நேர அவகாசம் கொடுத்து இருநூறு ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்ல அனுமதி மறுத்து வெளியேற்றினார்கள்.இந்த இனவாத தூய்மை [ethnic cleansing ] பாசிசம் இல்லையென்றால் என்ன வகை சனநாயகம்.ஐந்தாம் படை என்பதை வாதத்திற்காக உண்மை என கொண்டாலும் அந்த துரோகிகளை மட்டும்தானே தண்டிக்க வேண்டும்.ஒரு சிலரின் குற்றத்துக்காக ஒரு சமூகத்தையே கூட்டு தண்டனைக்கு உள்ளாக்குவது பாசிசம் அன்றி வேறென்ன.

          அப்புறம் புலிகள் பாசிசத்தையே கொள்கையாக கொண்டிருக்கவில்லை,அதனால்தான் ”பிழையான” செயல்கள் குறைவாக இருப்பதாகவும் கதைக்கிறீர்கள்.யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலையில் ஆரம்பித்து கோடம்பாக்கத்தில் பத்மநாபாவை போட்டது,சிறி சபாரத்தினத்தை போட்டது,அமிர்தலிங்ககத்தை போட்டது,நூற்றுக்கணக்கான சகோதர இயக்க போராளிகளை போட்டது,மாத்தையா உள்ளிட்ட புலிகள் பலரையும் போட்டது,என புலிகள் உண்மையான தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள் அனைத்தையும் அழித்தொழித்ததுடன், அகிம்சை வழியில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் மிதவாத தலைமையையும், தமிழ் அறிஞர் குழாமையும் அழித்தொழித்துள்ளனர்.முன்னர் படித்த ஒரு கணக்கு.

          83 ஜீலையில் சிங்கள பேரினவாதிகள் கொன்ற தமிழர் தொகை – 3,000.
          அதன் பின்னர் புலிப்பாசிசவாதிகள் கொன்ற தமிழர் தொகை – 30,000.

          அப்படியானால் புலிகள் சனநாயகவாதிகளா பாசிசவாதிகளா

          குடும்பத்தை களத்தில் பலி கொடுத்தால் அது பாசிசவாதிகளின் குற்றங்களை ரத்து செய்து விடாது.அது தன் வினை தன்னை சுடும் என்ற வகையில்தான் சேரும். சதாம் உசைனும் கடாபியும் கூடத்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் தமது குடும்பத்தை பலி கொடுத்துள்ளனர்.அதற்காக அவர்களது முந்தைய குற்றங்களும் அதன் பாதிப்புகளும் இல்லாமலே போய் விடுமா.

          • //இல்லாதவற்றை. நடக்காதவற்றை இட்டுக் கட்டி பிறர் மீது பழி போடுவதுதான் அவதூறு.நடந்த உண்மையை சொல்வது அவதூறு ஆகாது.நீங்களே அவற்றை பிழை என ஏற்கிறீர்கள்.ஆகவே நான் சொல்வது குற்றச்சாட்டு. அவதூறு அல்ல.//

            குற்றச்சாட்டு ஒருதலை பட்சமாக இருக்கிறதே..

            புலிகளின் ‘பாசிசத்தை’ பேசுமுன் இதையும் படியுங்கள்.. :

            http://archives.dailymirror.lk/2003/10/22/opinion/2.asp

            கிழக்குப் பகுதி தமிழ் மக்களின் மீது சிங்கள ராணுவத்துடன் இணைந்து முஸ்லீம் ஊர்காவல் படையும், மதவெறியர்களும் தொடர்ந்து நடத்திய படுகொலைத் தாக்குதல்களை ஒரு தமிழ் போராளி இயக்கம் கண்டும் காணாமல் இருந்திருக்க வேண்டுமோ..?!

            // அப்புறம் புலிகள் பாசிசத்தையே கொள்கையாக கொண்டிருக்கவில்லை,அதனால்தான் ”பிழையான” செயல்கள் குறைவாக இருப்பதாகவும் கதைக்கிறீர்கள்.யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலையில் ஆரம்பித்து கோடம்பாக்கத்தில் பத்மநாபாவை போட்டது,சிறி சபாரத்தினத்தை போட்டது,அமிர்தலிங்ககத்தை போட்டது,நூற்றுக்கணக்கான சகோதர இயக்க போராளிகளை போட்டது,மாத்தையா உள்ளிட்ட புலிகள் பலரையும் போட்டது,என புலிகள் உண்மையான தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள் அனைத்தையும் அழித்தொழித்ததுடன், அகிம்சை வழியில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் மிதவாத தலைமையையும், தமிழ் அறிஞர் குழாமையும் அழித்தொழித்துள்ளனர்.//

            உங்களது ஜனநாயகப் பற்றும், தமிழ் தேசியத்தின் மீதான அக்கறையும், அகிம்சை வழி மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையளிக்கிறது..!

            // புலிகளின் கள்ளப்பரப்புரைகளை ஏதோ மாபெரும் யுத்த தந்திர உத்தி போல் கதைத்த இன்றும் கதைக்கும் உங்களை போன்றவர்கள்தான் அந்த முட்டாள்தனமான பொய்களை நம்பி ஊர்களை காலி செய்து விட்டு புலிகளை முள்ளிவாய்க்கால் வரை பின்தொடர்ந்து சென்று உயிரிழந்த அப்பாவி மக்களின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள்.அப்படி வந்து மாட்டிக் கொண்ட மக்களை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்த புலிகள் பாசிசவாதிகளா சனநாயகவாதிகளா.//

            ’கள்ளப்பரப்புரைகளை’ நம்பியிருந்தாலும் நம்பாமலிருந்தாலும், சிங்கள படையினரிடம் சீரழிவதைவிட புலிளுடன் செல்வது என்ற முடிவுக்கு வந்த வன்னி மக்களுக்கு யார் பாசிஸ்டு எனபது உங்களை விட நன்றாகவே தெரிந்திருந்தது..

            //முன்னர் படித்த ஒரு கணக்கு.

            83 ஜீலையில் சிங்கள பேரினவாதிகள் கொன்ற தமிழர் தொகை – 3,000.
            அதன் பின்னர் புலிப்பாசிசவாதிகள் கொன்ற தமிழர் தொகை – 30,000.

            அப்படியானால் புலிகள் சனநாயகவாதிகளா பாசிசவாதிகளா //

            வெறும் 3000 தமிழர்களையே கொல்ல முடிந்தது என்பதால் சிங்கள பேரினவாதிகளை புலிகளைவிட சிறந்த சனநாயகவாதிகள் என்றும் கூறுவீர்கள் போல..

            // குடும்பத்தை களத்தில் பலி கொடுத்தால் அது பாசிசவாதிகளின் குற்றங்களை ரத்து செய்து விடாது.அது தன் வினை தன்னை சுடும் என்ற வகையில்தான் சேரும். சதாம் உசைனும் கடாபியும் கூடத்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் தமது குடும்பத்தை பலி கொடுத்துள்ளனர்.அதற்காக அவர்களது முந்தைய குற்றங்களும் அதன் பாதிப்புகளும் இல்லாமலே போய் விடுமா. //

            சதாம் ஹுசைனும், கடாபியும் எந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்..?

            • பிராபாகரனுடைய சக போராளியாய் இருந்த மூத்த போராளி கணேசன் ஐயர் அவர்களின் தொடர் பதிவில் இருந்து….

              // // அனைத்திற்கும் மேலாக ஹிட்லரின் இராணுவ ஒழுங்கு Hஇட்லெர்_ஸலுடிங்முறைகளாலும் இராணுவ வெற்றிகளாலும் ஆளுமை செலுத்தப்பட்டிருந்த பிரபாகரன், ஜேர்மனிய இராணுவத்தின் ஒழுங்கு முறைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சிகளில் புகுத்த முற்படுகிறார். ஹிட்லரின் இராணுவம் கட்டுக்கோப்பானதாகவும் உறுதியானதாகவும் அமைந்திருந்தமையால் மட்டும் தான் வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்கிறது என்று கூறுகிறார்.

              இராணுப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார். அதனை நானும் நிராகரிக்கவில்லை.// //

              கட்டுரை இணைப்பு:
              பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

              பிரபாகரன் தன்னுடைய இயக்கத்துக்கு ரோல் மாடலாக யாரைத் தெரிவு செய்திருக்கிறார் பார்த்தீர்களா?

              மேலும் அமைப்பிலும் ஜனநாயக மத்தியத்துவத்தைக் கோரிய போராளிகளிடம் தலைமையை எதிர்த்துக்கேட்கக் கேள்வி கூடாது என்று கூறியிருக்கிறார். இப்படிப்பட்டவரை பாசிஸ்டு என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்ல?

              பிரபாகரனுடைய(புலிகளுடைய) தவறான அரசியல் கண்ணோட்டமும், இராணுவவாதமும் தான் ஈழப்போராட்டத்தை இந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. ஈழத்திற்கு புலிகள் மட்டும்தான் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று அடம்பிடித்தார்கள்.

              இவற்றை இன்னும் உணராமல் வெற்று உணர்ச்சி வசப்படாமல் கடந்த காலத் தவறுகளை மறுபரிசீலனை செய்யாவிடில் மீண்டும் அதே தவறிழைக்க நேரிடும்..

              • முதல் உலகப் போரில் ஜெர்மனின் தோல்விக்குப் பின் தேசிய எழுச்சியுடன் ஜெர்மானியர்களால் கட்டியமைக்கப்பட்ட, தேசபக்தியும் திறமையும் மிகுந்த ஜெர்மன் ராணுவத்தை ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்தவுடன் தன் நாஜி கொள்கைக்கும், ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும் பயன்படுத்தி அதற்கு நாஜிப் படை என்ற அவப் பெயரை பெற்றுத் தந்தார்.. ஜெர்மன் ராணுவத்தின் மேல் உள்ள அச்சத்தால் கெஸ்டபோ, SS போன்ற நாஜி அமைப்புகளைக் கொண்டு அதைக் கட்டுப்படுத்தவும் செய்தார்.. ஹிட்லரின் நாஜிசத்தை ஏற்காதவரும் மதிக்காதவருமான – நேசப்படையினரால்கூட திறமைக்காகவும், தீரத்துக்காகவும் பெரிதும் மதிக்கப்பட்ட – மார்சல் ரோமல் போன்ற தளபதிகளை நேரடியாக பொய்குற்றம் சாட்டி கொலை செய்ய பயந்து தற்கொலை செய்ய வைத்தார் ஹிட்லர்.. உலகின் ராணுவங்கள் ஜெர்மன் ராணுவத்தின் திறமையை என்றும் குறைத்து மதிப்பிடவில்லை..

                நாஜி சல்யூட் ஹிட்லரின் கண்டுபிடிப்பல்ல.. கிரேக்க, ரோமானியப் பேரரசுகளின் காலத்திலிருந்தே நிலவிய ஒன்று.. இன்றைக்கும் உலகம் முழுதும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மேடையில் கிரேக்க மரபில் கையை நீட்டி இத்தகைய வணக்கத்தை அளிப்பதை அவதானிக்கலாம்..

                பிரபாகரனைப் போல ஒரு தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பும் எவருக்கும் ஜெர்மன் ராணுவத்தின் திறைமையை கைக்கொள்ளும் நோக்கம் இருப்பது குற்றமல்ல.. இதையே தவறாக, நாஜிக் கொள்கையையும் சேர்த்தே வரித்துக் கொள்கிறார்கள், ஹிட்லரை ரோல் மாடலாக கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்வது சரியல்ல..

                • பிரபாகரன் ரோல்மாடலாகக் கொண்டது ஜெர்மன் ராணுவத்தை அல்ல, ஹிட்லர் ராணுவத்தை தான்.நான் கொடுத்த இணைப்பில் உள்ள கட்டுரையைத் தாங்கள் படிக்கவில்லை போலும். நாஜிக் கொள்கையையோ அல்லது ஹிட்லரையோ வரித்துக் கொண்டதால் தான் பிரபாகரன் பாசிஸ்டு ஆனார் என்று கூறவில்லை. அவருடைய அரசியலற்ற ராணுவவாதம் அவருடைய பாசிசச் செயல்பாடுகளுக்குக் காராணமாக இருந்திருக்கலாம்.

                  கணேசன் ஐயரின் ஈழப் போராட்டம் பற்றிய தொடர் கட்டுரையைப் படியுங்கள்.

                  ஹிட்லர் பிரச்சனையை விடுங்கள். மற்ற விடயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

                  1. அமைப்பில் ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்தது.
                  2. சகோதர இயக்கங்களை துரோகிகள் (சில அமைப்புகள் துரோகம் செய்திருந்தாலும்) என்று அழித்தொழித்தது.
                  3. ஈழ மக்களின் பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூற்யது.
                  4. முன்னால் செய்த சகோதரப் படுகொலைகளுக்கு சுயவிமர்சனம் ஏற்க மறுத்து அதை நியாயப்படுத்தியது.
                  5. மக்கள் திரள் இயக்கங்களை முன்னெடுக்காமல் ராணுவவாதத்தை மட்டும் நம்பியது.

                  இது போல பல விடயங்களில் புலிகள் தவறிழைத்திருக்கிறார்கள். இப்போது நாம் கூறுவதெல்லாம் இத்தவறுகளுக்கு சுயவிமர்சனம் ஏற்று, அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மாற்று வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தான். ஆனால் தமிழகத்தில் இருக்கும் புலி ஆதரவு தமிழினப் பிழைப்புவாதிகள் புலிகள் மீது விமர்சனம் வைத்தாலே ஈழ எதிரி என்று முத்திரை குத்துகிறார்கள்.

                  • பகத்,

                    சிங்கள மொழி-இனவெறியும், பவுத்த-இசுலாமிய மதவெறியும் சர்வ சாதாரணமாக மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட ஒரு தீவில், சர்வதேசியவாதிகளான உங்கள் போராட்ட வழிமுறைகள் எத்தனை வெற்றிகரமாக இருக்கும் என்று தெரியவில்லை..

                    • அந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்திப் பார்த்தால்தானே தெரியும். அது வெற்றிகரமாக இருக்குமா இல்லையா என்று..

                      கடந்த முப்பது வருடங்களாக நீங்கள் ஆதரிக்கும் வழிமுறையைத்தானே புலிகள் பின்பற்றினார்கள். யார் எதிரி? யார் நண்பன்? என்ற தெளிவு புலிகளிடம் இல்லை. அப்பாவி சிங்கள மக்களையும், இஸ்லாமிய மக்களையும் கொன்றது எதற்காக? சரியான அரசியல் நடைமுறையைக் கைகொள்ளாமல், அமைச்சரையும், பிரதமரையும் கொன்றது எதற்காக? உலகம் அனைத்திலும் உள்ள தேச விடுதலை இயக்கங்களின், முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளின் ஆதரவைத் திரட்ட முயற்சிக்கவில்லை. வெறுமனே ராணுவத்தில் மட்டும் நம்பிக்கை வைத்தார்கள். இவையனைத்தும் சரியான நடைமுறையில்லை என்று புலிகளை பல அமைப்புகள் எச்சரித்துள்ளனர்; ஆனால் புலிகள் கேட்கவில்லை. அதன் விளைவு இன்று லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், அகதிகளாகவும் இருக்கின்றனர்.இப்படி விமர்சிப்பது எந்தவிதத்திலும், இந்தியா, அமெரிக்கா, சீனா, இலஙகையின் பங்கை மறுப்பதாகாது.

                      சிங்களப் பேரினவாத அரசின் ஆட்சியில் சிங்கள உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. சிங்கள ராணுவம் போராடும் சிங்கள மக்களையே கொடூரமாக ஒடுக்கத்தான் செய்கிறது. சிங்கள ராணுவமும், பேரினாவாத் சிங்கள அரசும் அனைத்து மக்களுக்கும் எத்ரி தான்.. இதை புரிந்து கொண்டு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு போராட்டத்தை முன்னெடுப்பதுதான் இன்று அவசியமானதாகும்.

                      கீழ்க்காணும் கட்டுரைகளைப் படித்து விட்டுக் கருத்துக் கூறுங்கள்.

                      சிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்
                      http://ndpfront.com/tamil/index.php/articles/articles/rayakaran/2046-2013-08-03-08-16-02

                      அரசபடைகள் மக்கள் சேவகர்கள் அல்ல… அரசின் காவல் நாய்கள்!
                      http://ndpfront.com/tamil/index.php/articles/articles/akilan/2057-2013-08-11-08-06-29

                      அரச படைகளின் அராஜகத்தின் மத்தியிலும் சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்!!
                      http://ndpfront.com/tamil/index.php/magazines/student-voice/voice-01/2044-2013-07-31-20-25-51

                • இந்தக் கட்டுரைகளையும் படியுங்கள்:

                  1. நாம் புலிகளிடம் கோரிய ஜனநாயகம் போராடுவதற்கே ஒழிய, போராட்டத்தை குழிபறிப்பதற்கல்ல
                  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5413:2009-03-10-21-39-08&catid=277:2009&Itemid=76

                  2. தமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது
                  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4272:2008-10-24-12-07-02&catid=74:2008&Itemid=76

              • 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பன பாசிச செயாவையையும், மதவெறிக் கும்பலான பா.ஜ.க வைவும் தமிழ் மக்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் நம்ப வைத்தர்கள். மேலும் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று பிரச்சாரம் செய்தார்கள். புலிகளையும் அவ்வாறு நம்பச் செய்தார்கள்; புலிகளும் நம்பினார்கள். அதனால் தான் எதிர் தாக்குதல் நடத்தாமல் பல்லாயிரம் மக்களோடு நந்திக கடலோரம் ஒதுங்கியிருக்கிறார்கள்.

                சரணடைந்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட போதிலும் தலைவர் வருவார், தமிழீழ யுத்தத்தைத் தொடர்வார் என்று இன்னும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழினவாதப் பிழைப்புவாதிகள்.

                தாங்கள் புலிகளுக்கு அளித்த தவறான நம்பிக்கைகளுக்கு என்றாவது சுய விமர்சனம் ஏற்றிருக்கிறார்களா இந்தத் தமிழினப் பிழைப்புவாதிகள்? மாறாக 80 முதல் புலிகள் இயக்கத்தையும், ஈழப் போராட்டத்தையும் சரியான முறையில் அவதானித்து ஆதரித்தும், விமர்சித்தும் வருகிற ம.க.இ.க வை ஈழ எதிரி என்று தூற்றுகிறார்கள்.

                இந்திய அமைதிப்படைக்காக பிரச்சாரம் செய்த, ஈழத்தமிழ் பிரச்சனையை மதப்பிரச்சனையாகத் திரித்துப் பேசிய இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத்தை தனது மேடையில் முழங்க வைத்த, இலங்கையில் இந்தியத் தலையீட்டை முழுமையாக எதிர்க்காமல் சீன அபாயத்தைக் காரணம் காட்டி இந்தியாவை ஈழத்துக்கு உதவ வைத்துவிடலாம் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கிற, மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிற பழ.நெடுமாறன் தமிழினத் தலைவராம்.

                புலிகளைக் கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று கூறிய, பிரபாகரனை இங்கு கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும் என்று கூறிய, போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று திமிராகக் கூறிய, தேர்தல் நோக்கத்துக்காக ஈழ ஆதரவு நிலை எடுத்த ஜெயலலிதா “ஈழத் தாயாம்”.

                ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி, மாற்றி கூட்டணி வைக்கும், ஈழத் துரோகி கருணாநிதியை மட்டும் விமர்சனம் செய்து, ஈழ எதிரி ஜெயாவில் காலடியில் விழும் ராமதாசு, வைகோ, சீமான் அவர்களெல்லாம் ஈழ ஆதர்வாளர்களாம்.

                ஆனால் தமிழினவாதிகளின் பிழைப்புவாதத்தை சமரசமற்று அம்பலப்படுத்தும், ஈழமக்கள் விடுதலைக்காக 30 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவரும் ம.க.இ.க மட்டும் ஈழ எதிரியாம்(!).

                • பகத் அவர்களுக்கு,
                  நீங்கள் தொடர்ச்சியாக இட்டுவரும் விமர்சனங்களை கவனித்துக்கொண்டு வருவதன் தொடர்ச்சியாகவே எனது கருத்தை இங்கு கூறுகிறேன். 30 ஆண்டுகளாக ஈழ மக்கள் விடுதலைக்கு குரல் கொடுத்து வரும் அமைப்பாக ம.க.இ.க.வை கூறியிருக்கிறீர்கள். அவ்வாறு குரல் கொடுத்து இருந்தால் சந்தோசமே. ஆனால் அப்படி ஒன்று நான் பார்த்திராத காரணத்தால் அதற்கான குறிப்பான இடத்தை இங்கு மேற்கோள் காட்டினால் நன்று. நான் இதுவரையில் தனி ஈழத்தை ம.க.இ.க ஆதரித்ததாகக் கூட எங்கும் படிக்கவில்லை. ஆகையால் நீங்கள் ஏதாவது ஒரு கட்டுரையின் அந்தப் பகுதியினை கோடிட்டால் நல்லது. ஈழ மக்களின் மனிதாபிமானத்தை எல்லோரும் கண்டிக்கிறார்கள். அவர்களின் அவல நிலையை எல்லோருமே கண்டிக்கிறார்கள் அல்லது அதைப் போல் நடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் விடுதலைக்கு எங்கு யார் குரல்கொடுக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளவே இதைக் கேட்கிறேன்.

                  கீழ்க்கண்ட நீண்டதொரு ஸ்டாலினின் கருத்தை இங்கு கொடுக்கிறேன்.
                  மார்க்சியத்தின் அடிப்படை பிரச்சனைகள்
                  – ஸ்டாலின்
                  தேசிய இனப் பிரச்சனை

                  “ஒரு நாட்டுக்கு உள்ளேயானதாகவும், குறிப்பிடதொன்றாகவும் இருந்த வந்த தேசிய(இன)ப் பிரச்சனையானது, இப்போது ஒரு பொதுப் பிரச்சினையாகவும் சர்வதேசப் பிரச்சனையாகவும் மாற்றப்பட்டது. இத்துடன், காலனிகளையும் சார்பு நாடுகளையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள், ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள நடத்தும் உலகப் பிரச்சினையாக மாற்றப்பட்டது”
                  “தேச விடுதலை இயக்கங்களில் புரட்சிகர ஆற்றல்கள் பொதிந்திருக்கிறது என்றும், பொது எதிரியான ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறிய இந்த ஆற்றல்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம் உள்ளது என்றும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கிறது லெனினியம்”
                  “… ஒவ்வொரு தேசவிடுதலை இயக்கத்தையும், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்காற்றிலும் பாட்டாளி வர்க்கம் ஆதரித்தே தீரவேண்டும் என்று இதற்குப் பொருள்படாது என்பது உறுதி. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப் படுத்துவதாக இருக்கக் கூடிய, தூக்கியெறிவதாக இருக்கக் கூடிய தேசவிடுதலை இயக்கங்களைத் தவறாமல் ஆதரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். அந்த விடுதலை இயக்கமானது, ஏகாதிபத்தியத்தை பலப்படுத்துவதாகவும் பேணிப் பாதுகாப்பதாகவும் இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள்.”

                  “தேச விடுதலை இயகங்களில் மிகப் பெரும்பாலானவை, கேள்விக்கிடமின்றி புரட்சிகரத் தன்மையுடையவையாக இருப்பது எப்படி பிற விசயங்களுடன் தொடர்புடையதாகவும் குறிப்பான இயல்புடையதாகவும் இருக்கிறதோ, அதேபோல குறிப்பிட்ட தேசவிடுதலை இயக்கங்கள் பிற்போக்குத்தன்மை கொண்டவையாக இருப்பதற்கும் சாத்தியம் உண்டு. ஏகாதிபத்திய ஒடுக்குமுறைச் சூழ்நிலையின் கீழ் உள்ள ஒரு தேசவிடுதலை இயக்கத்தின் புரட்சித் தன்மையை தீர்மானிக்க – இயக்கத்தில் பாட்டாளி வர்க்க சக்திகள் இருக்கவேண்டும் என்பதையோ, ஒரு புரட்சிகரமான அல்லது குடியரசுக்கான ஒரு வேலைத் திட்டத்தை அது கொண்டிருக்க வேண்டுமென்பதையோ, அந்த இயக்கம் ஜனநாயக அடிப்படையை உடையதாக இருக்க வேண்டுமென்பதையோ நாம் முன்னிபந்தனையாக்க வேண்டியதில்லை. அப்படிச் செய்வது அவசியமுமல்ல. ஆப்கானிஸ்தானுடைய சுதந்திரத்திற்காக அதன் மன்னர் (எமிர்) போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரும் அவருடைய துணைவர்களும் முடியாட்சிக் கோட்பாடுகளைத் தமது கண்ணோட்டமாகக் கொண்டிருந்த போதிலும், அப்போராட்டம் எதார்த்தத்தில் புரட்சிகரமான போராட்டமாகவே இருக்கிறது. ஏனென்றால் அது ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்துகிறது, உருக்குலைக்கிறது, அதற்குக் குழி பறிக்கிறது.”

                  “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கமானது தனது “சொந்த நாட்டைச்” சேர்ந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை இயக்கங்களுக்கு நேரடியானதும் தீர்மானகரமானதுமான ஆதரவை வழங்கினாலொழிய, ஒரு பொதுவான உலகப் புரட்சிகர முன்னணியை அமைப்பது சாத்தியமே இல்லை. ஏனெனில், “பிற தேசங்களை ஒடுக்கும் எந்த தேசமும் சுதந்திரமானதாக இருக்க முடியாது. (எங்கெல்ஸ்)
                  இந்த ஆதரவின் உள்ளார்ந்த பொருள் என்ன? தேசங்கள் பிரிந்துபோவதற்கான உரிமை வேண்டும். தேசங்கள் சுயேச்சையான அரசுகளாக நீடிக்கும் உரிமை வேண்டும் என்ற முழக்கங்களை உயர்த்திப்பிடிப்பது; அவற்றை ஆதரித்துப் பாதுகாப்பதுடன் நடைமுறைப்படுத்துவது என்பதே”.

                  “இது பற்றி லெனின் கூறுவதாவது “வளரும் முதலாளித்துவம் தேசிய(இன)ப் பிரச்சனையில் இரு போக்குகளை அறிந்திருக்கிறது. முதல் போக்கு: தேசிய வாழ்வில் விழிப்புணர்வு அடைதலும் தேசிய இயக்கங்கள் உருவாகி எழுதலும்; தேசிய ஒடுக்குமுறை அனைத்திற்கும் எதிராகப் போராடுதலும் தனி தேசிய அரசுகள் உருவாதலும். இரண்டாவது போக்கு: பொதுவாக பொருளாதார வாழ்வு அரசியல், விஞ்ஞானம், இன்னும் பிறவற்றில் உலகளாவிய ரீதியில் தேசங்களுக்கு இடையிலான எல்லா வகைகளிலுமான ஒன்று கலத்தல்கள் வளர்ச்சியுறுதலும் முடுக்கி விடப்படுதலும்; தேசிய எல்லைகள் நொறுங்கிப் போதல்; மூலதனம் சர்வதேச ரீதியில் ஐக்கியமடைவது உருவாதல்” … ஏகாதிபத்தியத்துக்கோ, இவ்விரு போக்குகளும் சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகளாக மலைபோல் முன்னிற்கின்றன. ஏனென்றால், காலனிகளைச் சுரண்டாமலும், “பிரிக்க முடியாத முழுமை” என்ற சிறைக்குள் காலனிகளை கட்டாயப்படுத்தி வைக்காமலும், ஏகாதிபத்தியம் நிலைத்திருக்கவோ உயிர்வாழவோ முடியாது. ஏனென்றால், பிரதேசக் கைப்பற்றல்களும் காலனிய ஆக்கிரமிப்புகளும் என்ற வழிமுறையைத் தவிர்த்து, வேறு முறைகளில் தேசங்களை ஒன்றுபடுத்துவதை ஏகாதிபத்தியத்தால் செய்யவே முடியாது. பொதுவாக கூறுவதனால், ஆக்கிரமிப்புகளில் ஈடுபடாத ஏகாதிபத்தியத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது.
                  இதற்கு நேர்மாறாக, கம்யூனிசத்தைப் பொறுத்தவரையில் இந்த இரு போக்குகளும் ஒரே நோக்கத்தின் இரு பக்கங்களே ஆகும். ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து ஒடுக்கப்படும் மக்களை விடுவிப்பது என்பதே அந்த ஒரே நோக்கம். ஏனென்றால், தேசங்கள் ஒன்றின் மீது ஒன்று கொள்ளும் நம்பிக்கை, தேசங்களுக்கு இடையிலான சுயவிருப்ப அடிப்படையிலான ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, ஒரே உலகப் பொருளாதாரக் கட்டமைவில் பல தேசங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமை சாத்தியமாகும் என்பதை கம்யூனிசம் நன்றாக அறிந்திருக்கிறது. “பிரிக்க முடியாத முழுமை” என்ற ஏகாதிபத்தியச் சட்டகத்திலிருந்து காலனிகளைப் பிரிப்பதன் வாயிலாகவும், காலனிகளை சுயேச்சனியான அரசுகளாக மாற்றுவதன் வாயிலாகவுமே, பல தேசங்களை சேர்ந்த மக்களின் சுயவிருப்ப அடிப்படையிலான ஒன்றிணைவை உருவாக்கும் பாதை சாத்தியம் என்பதை கம்யூனிசம் நன்றாக அறிந்திருக்கிறது.”

                  “ஒடுக்கும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேசியவாதக் கல்வியில், அழுத்தந்திருத்தமான வலியுறுத்தல் எதுவாக இருக்க வேண்டும்? ஒடுக்கப்படும் நாடுகள் பிரிந்து போவதற்கான உரிமையை அவர்கள் தவறாமல் ஆதரிப்பதாகவும் உயர்த்திப் பிடிப்பதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் போனால், சர்வதேசியம் என்பதே இருக்க முடியாது. இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தவறும் ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த சமூக – ஜனநாயகவாதிகளை, ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் கண்டனம் செய்வது நமது உரிமையும் கடமையும் ஆகும். சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கு முன்னரே, இவ்வாறு பிரிந்து செல்வதற்கான சாத்தியத்திற்கும் வசதிக்குமான வாய்ப்பு ஆயிரத்தில் ஒரு பங்காக இருந்தாலும்கூட. இது முற்றுமுழுதான ஒரு கோரிக்கையாகும்…”

                  மேற்கண்ட இந்த நீண்ட மேற்கோளை ஏன் இடவேண்டிய அவசியம் இருக்கிறது. புலிகள் அமைப்பு எவ்வளவு குறைபாடுகளை கொண்டிருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட திட்டத்தினை வைக்காது ஒரு குட்டிமுதலாளித்துவ மனோபாவத்துடன் தனது இயக்கத்தினை நடத்தினாலும் கூட அவர்கள் ஈழ விடுதலைக்கு உறுதியாக ஊன்றி நிற்கும்வரையில் என்ற நிபந்தனையடிப்படையில் அதை ஆதரிக்கத் தகுந்தது. அந்த உறுதிதான் அவர்கள் இந்திய அமைதிப்படையை வெளியேறும் வரை தனது போராட்டத்தை தொடர்ந்ததற்கான நிலைமைகளை உருவாக்கியது. அந்த நிலைமைகள் தான் நேபாளம் போல் தனது சுதந்திரத்தினை காட்டிக்கொடுக்காமல் இறுதிவரை போராடி அழிந்தது. ஆனால் அதற்கான சரியான வழிமுறையை அதனால் கண்டுபிடிக்காமல் போனது அதன் பலவீனம். அது அதன் குட்டிமுதலாளித்துவ மனோபாவத்தால் மடிந்தது. ஆனால் எங்கும் காட்டிக்கொடுத்து மடியவில்லை நேபாளம் போல். உலகம் முழுவதுமே இருந்த தேக்கம், ஏகாதிபத்தியத்தின் எதிர் முகாம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது அதை பயன்படுத்த முடியாத உலக சூழ்நிலைமை ஆகியவையே உலகத்தில் எல்லா புரட்சிகர அமைப்புகளும் புரட்சியை பெருமளவு சாதித்த நாடுகளில் சந்தித்த நெருக்கடி.

                  ஆனால் உண்மையிலேயே புலிகள் அமைப்பினை ம.க.இ.க. விற்கு பிடிக்காமல் போனது ஏதோ அது இது போன்ற நிலையை எடுத்தது என்பது அடிப்படையில் அல்ல. அதற்கு மாறாக அது தனி ஈழத்தைக் கோரியதே மிகவும் முதன்மையான முரண்பாடாக இருந்தது. அதுவே மற்ற விமர்சனங்களுக்கு தேடி அலையவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.

                  இன்று கூட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு போராட்டம் தோல்வி அடைந்ததால் அந்த கோரிக்கையே தவறு என்று அனுபவவாதம்தான் பேசுகிறதே ஒழிய, உண்மையில் மார்க்சிய லெனினிய நிலைபாட்டிலிருந்து இதை பேசவில்லை. அதனால்தான் அது தோல்வி அடைந்து விட்டது என்பதை திரும்பத் திரும்ப கூப்பாடு போட வேண்டிய நிலைக்கு தள்ளவேண்டியிருந்தது. 1905ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சி தோல்வி அடைந்த காரணத்தால் அதன் கோரிக்கையும், அதன் இலக்கும், அதன் திட்டம் தவறாகி விடவில்லை. அதை அடையும் வழிமுறை வேண்டுமானால் பல்வேறு மாற்றங்களுக்கும் பரிசீலனைக்கும் வழிவகுத்திருக்கலாம்.

                  அதேபோல் தான் ஈழத்தின் தோல்வியிலிருந்து அனுபவமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய வழிமுறையை நிச்சயம் எடுத்துக்கொள்ளும் அதே வேளையில், அதன் இலக்கை கொச்சை படுத்துவதையும் எதிர்த்துப் போராடுவது அவசியம். 5 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற நிலையை இன்று ஈழத்தில் இருக்கிறது. எங்கும் சிங்கள் குடியேற்றங்கள் இருக்கிறது. தமிழர்கள் சூல் கொண்டால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் சூல் கொள்ள முடியாது என்ற நிலைமை. இந்நிலைமையில் வன்புணர்ச்சி, இனக் கலப்பு, சிங்களக் குடியேற்றம், இராணுவ மயமாக்குதல் என்ற நிலைமையில் இன்னும் கூட அங்கு ஒன்று சேர்ந்து போராட முடியும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

                  இலங்கை மக்கள் சந்திக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் ஈழத் தமிழ்மக்களும் சந்திக்கிறார்கள் என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு ஈழத் தமிழ் மக்கள் கூடுதலாக இன அழிப்பு இன ஒடுக்குமுறை என்ற ஒடுக்குமுறையை கூடுதலாய் சந்திக்கிறார்கள். இது தன் இனத்தினை தற்காத்துக்கொள்ள வேண்டிய வேலையில் இன்று இருக்கிறது. அதனால்தான் முன்னிலும் அதிகமாக தனி ஈழத்திற்கான கோரிக்கை அதிகமாக இருக்கிறது.

                  மார்க்ஸ் எப்படி அயர்லாந்தை விட்டொழித்தால்தான் பிரிட்டனின் தொழிலாளிவர்க்கம் வர்க்க இன ஒடுக்குமுறை உணர்வை விட்டொழித்து உணர்வைப் பெறும் என்று கூறினாரோ அதோப் போல் இலங்கையின் இன்னொரு அயர்லாதாக ஈழம் மாறிப்போய் அதை விட்டொழிக்காத வரை சிங்களப் பாட்டாளிவர்க்கமே வர்க்க உணர்வைப் பெறாமல் இன ஒடுக்குமுறை உணர்வோடு அழிந்திக்கிடக்கும். இதையெல்லாம் உணர்ந்து நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள் என்றே நம்புகிறேன். இல்லையென்றால் அழிவிலிருந்து (மார்க்சிய லெனினியக் கட்சியாக இருப்பதிலிருந்து) காப்பாற்றவே முடியாத நிலையைத் தவிர வேறு எதையும் வரலாறு நமக்கு கொடுக்காது.

                  • // // ஆனால் அப்படி ஒன்று நான் பார்த்திராத காரணத்தால் அதற்கான குறிப்பான இடத்தை இங்கு மேற்கோள் காட்டினால் நன்று. நான் இதுவரையில் தனி ஈழத்தை ம.க.இ.க ஆதரித்ததாகக் கூட எங்கும் படிக்கவில்லை. ஆகையால் நீங்கள் ஏதாவது ஒரு கட்டுரையின் அந்தப் பகுதியினை கோடிட்டால் நல்லது. // //

                    நீங்கள் கேட்ட கேள்வியிலிருந்து நீங்கள் வினவு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து படிப்பவர் இல்லை என்பது தெரிகிறது.

                    கீழ்க்காணும் கட்டுரைகளைப் பொறுமையாகப் படியுங்கள்:

                    1.எதிர்கொள்வோம் !
                    https://www.vinavu.com/2013/06/27/response-to-criticisms/

                    2.தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள் !
                    https://www.vinavu.com/2013/07/26/eelam-answer-to-criticisms/

                    ஈழம் குறித்த வினவு, பு.ஜ, பு.க கட்டுரைகளின் தொகுப்பு
                    https://www.vinavu.com/category/tamil-eelam/

                    மேலும் ஈழப்பிரச்சனை குறித்து 4 நூல்கள் பு.ஜ, பு.க வெளியீடாக வெளிவந்துள்ளன.

                    1.ஈழம்: தேவை ஒரு நேர்மையான மீளாய்வு
                    2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
                    3.துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்
                    4.ஈழம்:வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ்த் தேசியர்களின் மறுப்புரை

                    இந்த நான்கு நூல்களும் இப்பொழுது ஒரே நூலாக “ஈழம்:தேவை ஒரு நேர்மையான மீளாய்வு” என்ற பெயரில் வெளி வந்துள்ளது.
                    இதில் மூன்று நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

                    1.ஈழம்: தேவை – ஒரு நேர்மையான மீளாய்வு
                    http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7593%3A2012-08-22-14-30-10&catid=522%3A2012-07-30-20-00-08&Itemid=142

                    2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
                    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=185:2008-09-04-19-46-03&id=6228:2009-09-13-10-03-12

                    http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7591:2012-08-22-14-24-25&catid=522:2012-07-30-20-00-08

                    3.துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்
                    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6691:2010-01-21-21-59-08&catid=325:20010

                    ”முள்வேலி” என்று ம.க.இ.க ஒரு ஒலிக்குறுந்தகடும் வெளியிட்டிருக்கிறது.
                    http://socratesjr2007.blogspot.in/2013/06/12.html

                    மேலும் புதிய கலாச்சாரம் ஆரம்பித்த 1983 ஆம் வருடத்தில் இருந்து ஈழத்தைப்பற்றி பல கட்டுரைகளை எழுதியது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களயும் நடத்தியுள்ளது.

                    // // ஆனால் உண்மையிலேயே புலிகள் அமைப்பினை ம.க.இ.க. விற்கு பிடிக்காமல் போனது ஏதோ அது இது போன்ற நிலையை எடுத்தது என்பது அடிப்படையில் அல்ல. அதற்கு மாறாக அது தனி ஈழத்தைக் கோரியதே மிகவும் முதன்மையான முரண்பாடாக இருந்தது. அதுவே மற்ற விமர்சனங்களுக்கு தேடி அலையவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.//

                    // இன்று கூட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு போராட்டம் தோல்வி அடைந்ததால் அந்த கோரிக்கையே தவறு என்று அனுபவவாதம்தான் பேசுகிறதே ஒழிய, உண்மையில் மார்க்சிய லெனினிய நிலைபாட்டிலிருந்து இதை பேசவில்லை. அதனால்தான் அது தோல்வி அடைந்து விட்டது என்பதை திரும்பத் திரும்ப கூப்பாடு போட வேண்டிய நிலைக்கு தள்ளவேண்டியிருந்தது. // //

                    மேற்கண்ட வரிகள் ம.க.இ.க வின் போராட்டங்கள் பற்றி எதுவுமே அறியாத ஒருவரின்(நேர்மையற்ற) அவதூறு தான். ஏதோ 2009 ஈழத்தில் இறுதிப் படுகொலைக்குப் பிறகுதான் ம.க.இ.க ஈழத்தையும், புலிகளையும் பற்றிப் பேசுகிறார்கள் என்பது போல் கூறிகிறீர்கள். இந்திய உளவுப்படையான ’ரா’ ஈழப்போராளி அமைப்புகளுக்கு பயிற்சி கொடுத்த நாளிலிருந்தே புலிகளையும், மற்ற போராளி இயக்கங்களையும் விமர்சித்து வந்துள்ளது ம.க.இ.க.

                    விடுதலைப் புலிகளைப் பிடிக்காத காரணத்தினால் தான் ம.க.இ.க அவர்களை விமர்சிக்கிறது என்று கூறுவது மிகவும் சிறு பிள்ளைத்தனமானது. உங்களுக்குத் தெரியுமா? 1991 ராஜீவ் கொல்லபபட்டபோது தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களெல்லாம் கொடூரமான ஒடுக்குமுறைக்குள்ளானார்கள். அப்போது தீவிரமான புலி ஆதரவாளர்களெல்லாம் ஓடி ஒளிந்த போது ராஜீவ் கொலை சரியானதுதான் என்ற முறையொல் ” இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்! “ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டனர் ம.க.இ.க வினர். வெளியிட்டதுமில்லாமல் அதை பேருந்து பேருந்தாக விற்பனையும் செய்தார்கள். அதற்காக பல அடக்குமுறையையும் சந்தித்தார்கள். அந்நேரத்தில் லண்டனில் இருந்து புலிகளின் தளபதி கிட்டு ராஜீவ் மரணம் குறித்த கேள்வி ஒன்றுக்கு ராஜீவ் கொலையை புதிய ஜனநாயகத்தினர் தான் செய்திருக்கக் கூடும் என்று கூறி ம.க.இ.க தோழர்களை பெரும் அடக்குள்ளாக வழி செய்தார். இதை என்னவென்று புரிந்து கொள்வீர்கள்?

                    ம.க.இ.க மட்டும் புலிகளை விமர்சிக்கவில்லை. ஈழத்தில் இருக்கின்ற பல போராளிக் குழுக்களும் புலிகளை விமர்சனம் செய்திருக்கின்றனர். இது இப்போதல்ல, புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே இருக்கிறது. நீங்கள் மேற்கண்ட கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் பொறுமையாக உணர்ச்சிவசப்படாமல் படித்தால் ம.க.இ.க வின் புலிகள் மீதான விமர்சனம் எதனடிப்படையினாலானது என்று புரிந்து கொள்வீர்கள். மார்க்சிய அடிப்படையினாலானதா அல்லது புலிகள் மீதான வெறுப்பினாலா? என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எதையும் படிக்காமல் மீண்டும் அவதூறில் இறங்காதீர்கள்.

                    • bagath@மேற்கண்ட கட்டுரை எதிலும் ம க இ க தனி ஈழத்தை ஆதரித்து எழுத படவில்லை .தனி ஈழத்தை ஆதரித்த அமைப்புகளை விமர்சனம் செய்து எழுத பட்டவை .ம க இ க தனி ஈழத்தை அதரிகிறதா? இல்லையா ?

                    • தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள் !
                      https://www.vinavu.com/2013/07/26/eelam-answer-to-criticisms/ என்ற கட்டுரையிலிருந்து

                      // // “தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு 60 ஆண்டு வரலாறு உண்டு; 30 ஆண்டுகள் ஈழத் தந்தை செல்வநாயகம், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையில் அமைதிவழிப் போராட்டம்; அதன் பிறகு தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம்” என்று வரலாறு சொல்லுகிறார்கள்.

                      இந்த 60 ஆண்டுகளிலும் தமிழீழம் என்ற கருத்தாக்கத்திற்கு அதன் மேற்படிக் கர்த்தாக்களுக்கே “தனித் தமிழீழம்தான்” என்ற ஒற்றையான பொருள் இருந்ததே கிடையாது.// //

                      // // 1986-ல் புலிகள் மற்றைய இயக்கங்களைத் தடை செய்து தலைவர்களைக் கொன்றொழித்ததுடன் தமிழீழக் கோரிக்கைக்குப் பாசிசப் பரிமாணத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். உரிமை கோரப்படாத கொலைகளும் இரகசியக் கொலைகளும் ஆயிரக்கணக்கில் புலிகளால் நிகழ்த்தப்பட்டன. தமிழீழம் என்ற முழக்கமானது பாசிசப் புலித் தலைமைகளைப் பாதுகாக்கும் கவசமாகக் கொள்ளப்பட்டது.

                      வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகவோ, புலிகளின் பாசிச அரசியலின் நீட்டிப்பாகவோ, எஞ்சியுள்ள புலிகளின் விருப்பங்களுக்காகவோ, தமிழ்நாட்டுத் தமிழ்தேசிய இனவாதிகளின் விருப்பங்களுக்காகவோ, அவர்களின் பாணியிலான தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்பது ஈழத் தமிழர்களுக்கே துரோகம் செய்வதாகும். ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது எப்படியாவது தனியரசை அமைத்துவிடுவது, ஏதாவது ஒரு இயக்கத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதல்ல; மாறாக, ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் நலனையும் ஜனநாயகத்தையும் அது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

                      எந்தவொரு தேசிய இனமும் வேறொரு இனத்தால், பேரினவாதத்தால், அந்நிய நாட்டால் அல்லது ஏகாதிபத்திய ஆதிக்கத்தால் ஒடுக்கப்படக்கூடாது. அதேசமயம், அதை முறியடிப்பது, விடுவிப்பது என்ற பெயரால் சொந்த தேசத்து அல்லது உள்நாட்டு பாசிச சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு கொடுங்கோலாட்சி செலுத்துவதையும் அனுமதிக்க முடியாது. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம்.// //

                      மேற்கண்ட வரிகளில் புலிகளும், தமிழகத் தமிழ்த் தேசியவாதிகளும் முன்வைக்கும் தமிழீழத்தைப் பற்றியும் அவற்றின் பாசிச உள்ளடக்கத்தைப் பற்றியும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். புலிகளின் பாசிசத் தமிழீழத்தைத் தான் ம.க.இ.க விமர்சிக்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாக தமிழீழத்தை நிராகரிக்கவில்லை.

                      // // 1985 திம்புப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் உட்பட ஐந்து போராளி அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளில் “தமிழீழம்” கிடையாது! “இலங்கையில் வாழும் தமிழர்களை ஒரு தனி தேசிய இனமாக அங்கீகரிப்பது; அவர்களுக்குத் தாய்நாடு ஒன்றை அங்கீகரிப்பது; தமிழ் தேசத் தன்னுரிமையை அங்கீகரிப்பது; இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையையும் அடிப்படை உரிமையையும் அங்கீகரிப்பது” ஆகிய ஐந்து கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. இந்த ஐந்து கோரிக்கைகளையும் எமது அமைப்புகள் எப்போதும் உறுதியாக ஆதரித்து வந்திருக்கின்றன.// //

                      இதுதான் ம.க.இ.க முன் வைக்கும் சுய நிர்ணய உரிமை அல்லது தன்னுரிமை என்ற முழக்கத்தின் சாரம். சுயநிர்ணய உரிமை என்பது ஈழமக்கள் இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா? இல்லை பிரிந்து போவதா? என்பதைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை. இது எந்த வகையில் தமிழீழத்திற்கு எதிரானது அல்லது குறைவானது? மேலும் இது புலிகள் முன்வைத்த தமிழீழத்தைக் காட்டிலும் ஜனநாயகமானது.

                      கட்டுரையின் கடைசிப் பகுதியில்
                      // // ஆஃப்கானின் தாலிபான்கள், ஈராக்கின் பாசிச சதாம் உசைன் அமெரிக்க ஆக்கரமிப்பையும், பஞ்சாபின் காலிஸ்தானிகள் இந்தியாவின் ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தமது “தேசிய உரிமை”க்காகப் போராடினாலும், தம் மக்கள் மீதே பாசிச பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினார்கள்; அவர் தம் ஜனநாயக உரிமைகளைக் காலில்போட்டு மிதித்தார்கள். ஆகவே, எல்லாத் தேசியப் போர்களையும் நிபந்தனையின்றி ஆதரித்துவிட முடியாது. புலிகளின் தமிழீழமும் இவ்வாறான பாசிச உள்ளடக்கத்தையும் வழிமுறையையும் கொண்டது.

                      தேசிய இன ஒடுக்குமுறைக்குத் தேசிய இனத் தன்னுரிமைதான் சரியான, அவசியமான தீர்வு என்றாலும், தனியரசு அமைவது உள்நாட்டு மற்றும் உலக அரசியல் சூழ்நிலைமைகளைச் சார்ந்துள்ளது. வெறும் இராணுவவாத நோக்கில் தனியரசுதான் ஒரே தீர்வு என்று கொள்ளவும் முடியாது. தமிழீழத்துக்கும் இது பொருந்தும்.

                      இத்தகைய புரிதலோடு தமிழீழத்தை ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. முதலிய அமைப்புகள் எப்போதும் சமரசமின்றி, உறுதியாக ஆதரித்து வந்திருக்கின்றன. தமிழீழத்தை ஒருபோதும் ஏற்காத போலிக் கம்யூனிஸ்டு, காங்கிரசு, பா.ஜ.க., போன்றவற்றின் தா.பாண்டியன், இல.கணேசன், குமரி அனந்தன் போன்ற உள்ளூர்த் தலைவர்களையும் கூட ஈழ ஆதரவாளர்களாகக் கொண்டு உறவாடும் தமிழின வாதிகளோ, இதை ஏற்க மறுத்து புரட்சிகர அமைப்புகளுக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள்.// //

                      புலிகள் மற்றும் தமிழகத் தமிழினப் பிழைப்புவாதிகளின் தமிழீழத்தை ம.க.இ.க ஏன் மறுக்கிறது என்பதையும், எந்தப் புரிதலின் அடிப்படையில் ம.க.இ.க தமீழத்தை ஆதரிக்கின்றது என்பதையும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றது.

                      // // “தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே” என்று பிரபாகரனே வன்னி பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார். பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சோழப் பேரரசும் புலிக்கொடியும் கனவாகக் கொண்ட குறுந்தேசிய, வலதுசாரித் தமிழீழம்தான் இலக்காக இருந்தது.// //

                      திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இருக்கும் தெற்கு சூடானும், கொசாவோவும் என்று எகாதிபத்தியங்களால் எப்படிச் சுரண்டப்படுகின்றன என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கும் போது புலிகளின் தமிழீழத்தை எப்படி ஆதரிப்பது? மேலும் புலிகளின் தமிழ்த் தேசியமும், ஈழ மக்களின் உண்மையான தமிழ்த் தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது என்று தோழர்.ரயாகரன் கீழ்க்கண்ட கட்டுரையில் நிறுவுகிறார்.

                      தமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது
                      http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4272:2008-10-24-12-07-02&catid=74:2008&Itemid=76

                      கொசோவோ மற்றும் தெற்கு சூடான் பற்றிய பற்றிய கலையரசனின் கட்டுரைகள்:
                      கொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதை
                      http://kalaiy.blogspot.in/2010/04/blog-post_27.html

                      தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்
                      http://kalaiy.blogspot.in/2011/01/blog-post_10.html

                      மூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்!
                      http://kalaiy.blogspot.in/2013/07/blog-post_29.html

                      ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் தமிழீழம் என்ற பார்வையில் நீங்கள்( நீங்கள் மட்டுமல்ல ஈழத்திற்காகப் போராடும் பெரும்பானமையான மாணவர்களும், மக்களும் தான்.) இவ்விசயங்களைப் பார்த்துப் பழகியதால்தான் மேற்கண்ட விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதற்கு உங்கள் மனம் மறுக்கிறது என்று நினைக்கின்றேன். இதற்கு முதன்மையான காரணம் தமிழகத்தில் ஈழத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் நெடுமா, சீமான், வைகோ, பெ.ம்ணியரசன், திருமா, த.தே.வி.இ தியாகு ஆகியோர்கள் தான்(ஏதேனும் பெயர் விடுபட்டால் மன்னிக்கவும்).. விமர்சன நோக்கோடு இப்பிரச்சனையை அணுக முயற்சி செய்யுங்கள்..

                      போலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே!
                      http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=341&Itemid=139

                    • “கோட்பாடில்லாமல் பாமரத்தனத்தை வெளிப்படுத்தும் பு.ஜ. குழு”

                      தமிழீழத்தை ஆதரிப்பது என்பது அந்த இனத்தை தனி இனமாக அங்கீகரிப்பது ஆகாது. அது தனித் தமிழீழத்தை ஆதரிப்பதுவே. ஏனென்றால் அந்தப் பொருளிலேயே எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சி.பி.எம். உட்பட அனைத்து தேசியக் கட்சிகளும் தமிழீழத்தை ஆதரிக்கிறோம் ஆனால் அது இலங்கை என்ற ஒரே நாட்டிற்குள் என்ற நிபந்தனையடிப்படையிலேயே என்கிறார்கள். அதில் அளவு வேறுபாடுகள் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. அதேப் போல்தான் பு.ஜ.வும் தமிழீழம் என்பதை இலங்கை என்ற நாட்டிற்குள்ளே மட்டுமே வைத்துப் பார்க்கவேண்டும் என்கிறார்.

                      தனி நாட்டினை ஆதரிப்பது எந்த அடிப்படையில் என்று லெனினியும் கூறுகிறது என்பதாவது அறிந்துக்கொண்டிருக்கிறீர்களா. எந்த பொது வாக்கெடுப்பு எடுத்து காஷ்மீர் தனி நாட்டுக்கு ஆதரவளிக்கிறது பு.ஜ..

                      அடுத்ததாக மேலே தனி ஈழத்தை ஆதரிப்பதாக பல்வேறு மேற்கோள்கள் கூறியிருக்கிறீர்கள். அவையெல்லாம் ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு இனமாக அங்கீகரிப்பது என்ற அளவில் மட்டுமே. அதற்கு மேல் அங்கு ஜனநாயக நிலைநாட்டப்படுகிறதா இல்லையா என்றெல்லாம் கேள்வி இல்லை. அவை தனி ஈழத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்ற தெளிவான கருத்தையாவது இதுவரையில் தனது அணிகளுக்கு தெளிவாக கூறியிருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். பல்வேறு நபர்களிடம் நீங்கள் உரையாடினால் இதை எல்லோருமே தெரிந்துக்கொள்ளலாம். அதுதான் இந்த விமர்சனத்தின் பதிலிலும் இருக்கிறது.

                      பு.ஜ. தனித் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்பதற்கான சமீபகால மேற்கோள்களும், பழைய மேற்கோள்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
                      // பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பாசிஸ்டுகள் என்று மதிப்பிடுவதாலும் ஈழச் சிக்கலுக்குப் “பொதுவாக்கெடுப்பு” என்று ஒருபுறம் முழுங்கிக் கொண்டே, “தனி ஈழம்தான் ஒரே தீர்வு” என்பதை இப்பொழுதே முடிந்த முடிவாகக் கூறாதவர்களை, ஈழப் போராட்ட ஆதரவுக்கு எதிர்நிலைக்குத் தள்ளுகின்றனர்.// https://www.vinavu.com/2013/06/27/response-to-criticisms/ எதிர்கொள்வோம் !

                      //தேசிய இன ஒடுக்குமுறைக்குத் தேசிய இனத் தன்னுரிமைதான் சரியான, அவசியமான தீர்வு என்றாலும், தனியரசு அமைவது உள்நாட்டு மற்றும் உலக அரசியல் சூழ்நிலைமைகளைச் சார்ந்துள்ளது. வெறும் இராணுவவாத நோக்கில் தனியரசுதான் ஒரே தீர்வு என்று கொள்ளவும் முடியாது. தமிழீழத்துக்கும் இது பொருந்தும்// https://www.vinavu.com/2013/07/26/eelam-answer-to-criticisms/ எதிர்கொள்வோம் ! -2

                      9) தேசிய இனப் பிரச்சினையில் ம.க.இ.க. எடுத்த நிலைபாடு
                      சமரன் பக்கம் 218
                      1. “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
                      2. ஒரு தேசத்துக்கொ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் ‘நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக்கொள்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
                      3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 10)

                      தற்போது நான் படித்த இதழில் ஆகஸ்டு 2013 இதழில் பக்கம் 20
                      1. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம் (என்று பொது நிலைபாடு எடுத்தது)

                      //“ஆனால் சில மாணவர் குழுக்களின் தலைமை புலிகளும் புலி ஆதரவாளர்களும் செய்த அதே வகையிலான தவறுகளைச் செய்கின்றனர். இப்போது முன்வைக்கப்படும் இரண்டு கோரிக்கைகளை எவ்வாறு, எந்த வழிகளில் நிறைவேற்ற முடியும் என்பதை ஆழமாகப் பார்க்க மறுக்கின்றனர். இரண்டு கோரிக்கைகளில் ஒன்றான “பொது வாக்கெடுப்பு” என்பதைத் தமது குறுங்குழுவாத அகநிலைப் பார்வையைத் திணித்தும் திரித்தும் வியாக்கியானம் செய்து மாற்றி அமைத்துக்கொண்டு ஈழ ஆதரவு சக்திகளைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்களும் புலி விசுவாசிகளைப் போலவே “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றி அமைத்து ஈழ ஆதரவாளர்களைப் பிளவுப்படுத்தவும் செய்கிறார்கள்.”// பு.ஜ மார்ச் 2013 பக்கம் 7

                      //”ஆனால், “ஈழத் தமிழர்க்கு தன்னுரிமை” என்பது “மழுப்புவது, தனித் தமிழீழத்தை மறுப்பது, எதிர்ப்பது; அதை மூடிமறைக்கும் தந்திரம்” என்று சொல்லிக்கொண்டு சில மாணவர் குழுக்கள், “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றியும், குறுக்கியும் வியாக்கியானம் செய்கின்றனர். “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை இவ்வாறு திரிப்பது, “பொது வாக்கெடுப்பு”க்கான உரிமையைப் பெறுவதற்கு முன்பே மாற்றுக் கருத்துக்கான உரிமையை மறுக்கும் சர்வாதிகாரமாகும்….”// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 7

                      //தனித் தமிழீழம்தான் ஒரே முடிவு என்றால் அப்புறம் எதற்குப் “பொதுவாக்கெடுப்பு”?//
                      “பொதுவாக்கெடுப்பு” உரிமையைப் பெற்ற பிறகு நடைமுறைக்கு வரக்கூடியதே தன்னுரைமை. வாக்கெடுப்புக்கு முன்னரே முடிவைச் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் எதற்கு அக்கோரிக்கை, போராட்டம் எல்லாம்?// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 8

                      // ஒன்று, சர்வதேச சமூகம் எனப்படும் உலக நாடுகள் இலங்கைக்கு வெளியிலிருந்து சிங்கள் இனவெறி, கொலைவெறி பாசிச ராஜபக்சே கும்பலின் அதிகாரக் கோரப்பிடியிலிருந்து இலங்கையையும் ஈழத் தமிழர்களையும் மீட்கவேண்டும்; ஈழத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை ஏற்கும் ஜனநாயக அரசை இலங்கையில் நிறுவி இதைச் செய்யவேண்டும்.// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 8

                      //ஆக இராஜபக்சே மீது போர்க்குற்றவாளி, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு – ஆகிய இரண்டையும் நிறைவேற்ற வேண்டுமானால், இலங்கையில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தவிர்க்கவியலாத அவசியம்.// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 8

                      2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
                      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=185:2008-09-04-19-46-03&id=6228:2009-09-13-10-03-12
                      இதில் பு.ஜ. குழு தனி ஈழத்தை ஆதரிக்கிறோம் என்றோ ஆதரிக்கவில்லை என்றோ எங்குமே கூறவில்லை. இது எவ்வகையான சந்தர்ப்பவாதம் என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்.
                      //தனி ஈழம்தான் தீர்வு என்பது வரலாற்றால் தீர்மானிக்கப்படவேண்டியது. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு ஒடுக்கப்படும் வர்க்கம், இனம் இராணுவ ரீதியாக பலம் பெற்ரு அறிவித்துக்கொள்வது மட்டும் இல்லை, ஒரு இனம் இராணுவ ரீதியாக பலம் பெறுவதன் மூலம் மட்டும் ஒரு தனிதேசம், சுதந்திரமான ஒரு தேசம் என்று சொல்வது இன்றைய சர்வதேச நிலையிலே சாத்தியமில்லை. அதற்கு சர்வதேச சமூகத்தில் குறைந்தபட்சம் எல்லா நாடுகளின் அரசுகள் இல்லாவிட்டாலும், அந்தந்த நாட்டு மக்கள் மத்தியிலே நெருக்குதல் தரக் கூடிய அளவுக்கு ஆதரவு இருக்க வேண்டும்// ஈழம்: தேவை – ஒரு நேர்மையான மீளாய்வு! ((புதிய ஜனநாயகம் வேளியீடு)) பக்கம் 78

                      இப்படி மேற்கண்ட மேற்கோளில் தனி நாட்டினை அங்கீகரிக்க அந்த நாடு சோசலிச நாடாக மலர வேண்டும் என்று நிபந்தனை வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி ஒரு நிலைபாடு லெனினியம் வைத்திருப்பதாக அறியமுடியவில்லை. மீண்டும் இங்கு நினைவு படுத்த விரும்புவது. லெனினிசத்தின் அடிப்படைகள் என்ற ஸ்டாலின் நூலில் தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனினியம் என்ன கூறுகிறது என்பதற்கான அடிப்படையை வழங்கியிருப்பார். அதையாவது அறியுங்கள். அதிலிலிருந்து அதை ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்பதையாவது தெளிவுப் படுத்துங்கள்.

                      புலிகளை வைத்து தனி ஈழம் என்று எந்த லெனினியவாதிகளும் முடிவு செய்யவில்லை. அங்கு தனி ஈழம் என்பது அங்குள்ள சமூக ஆய்வையே முதன்மையாக கொண்டு கூறுகிறது. இன முரண்பாடு பிரதான முரண்பாடாக அங்கு இங்கிலாந்துக்கு அயர்லாந்து போக் முன்நிற்கிறது. இந்த முரண்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள். ஈழ மக்கள் பிரதானமாக அங்கு இன ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதற்கு தீர்வு இலங்கை ஜனநாயகப்படுத்தப்பட்ட பிறகுதான் என்ற நிபந்தனை, ஈழத்தின் கடைசி தமிழனும் ஒழிக்கப்பட்டப் பிறகே என்ற பொருளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு ஒடுக்கப்படும் இனம் எந்த அடிப்படையில் போராட வேண்டும், ஒடுக்கும் இனத்தின் பாட்டாளிவர்க்கத்தின் கோரிக்கை என்னவாக இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டினை மார்க்சிய லெனினியம் நமக்கு வகுத்தளித்திருக்கிறது. அதை நாம் ஏற்கிறோமா அல்லது லெனினியம் காலாவதி ஆகிவிட்டது என்று தூக்கியெறியப் போகிறோமா என்பதே நமது கேள்வி. அதை எப்படிப் பொறுத்துவது என்பது அங்குள்ள சூழ்நிலைமையை ஆராய்ந்து சமூக நிலைமைகளுக்கு ஏற்றவாறு என்று கூறினாலும், அதன் அடிப்படையைப் புரிந்துகொள்ளக் கூட மார்க்சிய லெனினியம் எப்படி என்று போதிக்கிறது. அந்த அடிப்படையில் கீழ்க்கண்ட கட்டுரை தனி நாட்டுக்கான அடிப்படைக் கோட்பாட்டை நமக்கு வழங்குகிறது.
                      சமரன் வெளியீட்டின் தனிநாட்டிற்கான கோட்பாட்டினை விளக்கும் கட்டுரையை வழங்கியிருக்கிறது. அதன் தலைப்பு “தேசிய இனப்பிரச்சனையும் முதலாளித்துவ தேசியவாதமும்”
                      http://samaran1917.blogspot.in/2009/03/blog-post_17.html

                      இதில் பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு என்று தலைப்பிட்டு தொடரும் பு.ஜ.வில் தொடர்ச்சியாக வருகிறது.

                      ஆனால் “கோட்பாடில்லாமல் பாமரத்தனத்தை வெளிப்படுத்தும் பு.ஜ. குழு” என்பதை நீங்கள் அறியவேண்டுகிறேன்.

                      எதிலும் கோட்பாடில்லாமல் ஏதோ மார்க்சியமும் லெனினியமும் கோட்பாட்டையே வகுக்காதது போலவும் இனி இவர்கள் தான் கோட்பாட்டை வகுக்கப்போவதாகவும் நம்ப வைப்பது மார்க்சிய லெனினியத்தை குழிதோண்டி புதைப்பதாக மாறும். ஆகவே முதலில் எது குறித்தும் அந்த வரலாற்று நிலைமைகளில் மார்க்சிய லெனினியம் என்ன கூறுகிறது என்பதை அறிவோம். பிறகு அது பொருந்துமா பொருந்தாதா என்று விவாதிப்போம். என்னைப் பொறுத்துவரை பொருந்தும். இன்று வரை மார்க்சிய லெனினியம் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகள் பொருந்தும் என்றே உறுதிகூறுகிறேன்.

                      இது குறித்து மேலும் விரிவாகவும் விவாதிக்கலாம். ஆனால் முதலில் தனி ஈழத்தை ஆதரிப்பது சரியா இல்லையா. தனி ஈழம் என்பது பு.ஜ. ஏற்கிறதா இல்லையா என்பதை புரிந்துகொண்டு விவாதத்தை தொடங்கினால் அதிலிருந்து எது சரி என்பதை விவாதிக்கலாம். அதற்கான கட்டுரையாக மேற்கண்ட சமரன் கட்டுரையையும் கொடுத்திருக்கிறேன்.

                      தொடரும்….

            • அம்பி,சற்றேனும் நேரடியாக நேர்மையுடன் விவாதம் செய்யுங்கள்.வெட்டி சாமர்த்தியங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.இந்த வீம்பான அற்ப குணம் உங்கள் சொந்த குணாதிசயங்களில் ஒன்றாக ஆகி விட கூடாது என ஒரு எதிர்மறை நண்பன் என்ற முறையில் விரும்புகிறேன்.

              பாருங்கள்,இந்த விவாதம் எப்படி துவங்கியது.

              \\புலிகள் பாசிஸ்டுகள் அல்ல !போராளிகள் என்பதை ஏற்று கொள்விர்களா ?// என சேரன் கேட்டதிலிருந்து துவங்கியது,புலிகள் பாசிசவாதிகளே மேலும் பாசிசவாதிகளுக்கே உரிய கள்ளப்பரப்புரை கலையிலும் தேர்ந்தவர்கள் என சில எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டி நான் மறுமொழி இட்டேன்.அதை நீங்கள் கேள்விக்கு உள்ளாக்கினீர்கள்.மீண்டும் சற்று விரிவாக புலிகள் பாசிசவாதிகளே என ஆதாரங்களை சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறேன்.

              இப்போது உங்கள் பதிலை பாருங்கள்.இதன் மூலம் எனது வாதங்களை முறியடித்து புலிகள் பாசிசவாதிகள் அல்லர் என நீங்கள் நிறுவுவதாக நினைக்கிறீர்களா.

              பி.கு.
              உங்களுக்கு சரியாக தமிழ் தெரியாது என மறுபடியும் மெய்ப்பிக்கிறீர்கள்.குற்றச்சாட்டில் ஒரு தலை பட்சம் இரண்டு தலை பட்சம் என்றெல்லாம் கணக்கு கிடையாது..குற்றச்சாட்டில் மெய் அல்லது பொய் என்ற இரண்டு வகைதான் இருக்க முடியும்.எனது குற்றச்சாட்டு பொய் என மறுக்க முடியாமல் ஏதேதோ பிதற்றி வைத்தேனும் மறுத்து விட்டதாக கற்பனை செய்து கொள்கிறீர்கள்.இந்த மனப்போக்கு ஆபத்தானது.பார்த்து சூதானமாக இருந்து கொள்ளுங்கள்.

              பின் குறிப்புக்கு ஒரு பி.கு.
              இதற்கும் வழக்கமான வெண்டைக்காய்-விளக்கெண்ணெய் சூத்திரத்தில் ஒரு விளக்கம் கொடுப்பீர்கள் பாருங்கள்.மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த கொடுமை நிகழ்வதையும் காண காத்திருக்கிறேன்.

              • திப்பு, உங்கள் குற்றச்சாட்டுகள் எல்லாம் புத்தரும், ஏசுவும், காந்தியும் வைக்க வேண்டியவை.. மாற்று தரப்பு வாதங்களை மட்டம் தட்டிப் புறக்கணிப்பதால் பிரச்சினையின் மறுபக்கம் மறைந்துவிடாது..

                • அட இது நல்லா இருக்கே.யாராவது குற்றம்,குறை சொன்னால் நீ என்ன புத்தன்.ஏசு,, காந்தியா ,,பெருசா குற்றம் சொல்ல வந்து விட்டாய் என கேட்டு துரத்தி விடலாம்.

                  அம்பி,பழைய MGR பாடல்களை விரும்பி கேட்பீர்களோ.அதிலொன்றில்தான் இவர்கள் எல்லாம் பிறந்தது எதற்காக என்று வரும்.என்ன நகைமுரணாக காந்தியாரின் துரோகங்களை எல்லாம் விரிவாக அம்பலப்படுத்தும் ஒரு இடதுசாரி தளத்தில் வந்து இதை உளறிக் கொண்டிருக்கிறீர்கள்.

                  அம்பி,இந்த முறை வெண்டைக்காய் வதக்கல் கூட உங்களால் வைக்க முடியவில்லை என்பதால் உங்கள் புத்தர் சூத்திரத்தை பயன்படுத்தி நானே ,

                  காவல்துறை லஞ்சம் வாங்குவதால் லஞ்ச ஒழிப்பு பிரிவு என்ற ஒன்றே அதில் இருக்க கூடாது.

                  ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகளின் மேல் ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர்கள் ஆளுங்கட்சியின் மீது குற்றச்சாட்டு எதுவும் சொல்லக்கூடாது.

                  புரட்சிகர வன்முறையின் மேல் நம்பிக்கை கொண்ட மாவோயியவாதிகள் அரச பயங்கரவாத வன்முறை பற்றி பேச கூடாது.

                  பொது மக்கள் பெரும்பாலானோரிடம் ஏதாவது ஒரு குறை இருப்பதால் [விற்பனை சீட்டு -bill இல்லாமல் விற்கப்படும் பொருட்களை வாங்குவது ,தெருவில் குப்பை கொட்டுவது,வாக்களிக்க பணம் வாங்குவது,போன்றவை ] அரசின் குறைகளை பற்றி பேச கூடாது.

                  • // என்ன நகைமுரணாக காந்தியாரின் துரோகங்களை எல்லாம் விரிவாக அம்பலப்படுத்தும் ஒரு இடதுசாரி தளத்தில் வந்து இதை உளறிக் கொண்டிருக்கிறீர்கள். //

                    காந்தி துரோகி, பிரபாகரன் பாசிஸ்ட்.. அப்ப நீங்க யாரு, புத்தரா, ஏசுவா அல்லது இடதுசாரியா என்று கேட்கலாமா..?

                    // புரட்சிகர வன்முறையின் மேல் நம்பிக்கை கொண்ட மாவோயியவாதிகள் அரச பயங்கரவாத வன்முறை பற்றி பேச கூடாது. //

                    வன்முறையில் நம்பிக்கை வைத்த பிறகு, வன்முறையை எதிர்கொள்ளும் போது புலம்பக்கூடாது.. உங்களுக்கு துரோகியாகத் தெரிந்தாலும், காந்தி எல்லாவிதமான வன்முறைகளையும் மறுத்தார்.. அது சரி, இதையெல்லாம் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் திப்பு..?!

                    புலி முசுலீம்களை கடித்துவிட்டது, வெறி பிடித்துவிட்டது, இது ஒரு பாசிஸ்டு புலி என்று நீங்கள் கூப்பாடு போடும்போது, அதன் குட்டிகளை கிழக்கில் பிரியாணி போட்ட கதைகளையும் சேர்த்தே சொன்னால்தான் புலியின் வலியும், நிலைமையும் என்ன, யாருக்கு உண்மையில் வெறி பிடித்திருக்கிறது என்பதெல்லாம் தெரியும்..

                    // காவல்துறை லஞ்சம் வாங்குவதால் லஞ்ச ஒழிப்பு பிரிவு என்ற ஒன்றே அதில் இருக்க கூடாது. //

                    லஞ்ச ஒழிப்பு பிரிவில் நேர்மையான அதிகாரிகள் இருக்கவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அப்பிரிவு அர்த்தமற்றதாக மட்டுமல்ல லஞ்சத்தை பாதுகாக்கும் பிரிவாகவும் ஆகிவிடும்.. விவாதிக்கும் போது உங்கள் அரைகுறை உண்மைகளை ஏற்காமல் முழு நிலவரத்தையும் காட்டி விமர்சிக்கும் நேர்மையை வேண்டினால், உடனே நீங்கள் ஆவேசமாகி தனிமனித தாக்குதல்கள், நக்கல்களில் இறங்குகிறீர்கள்..

                    // ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகளின் மேல் ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர்கள் ஆளுங்கட்சியின் மீது குற்றச்சாட்டு எதுவும் சொல்லக்கூடாது. //

                    சட்டி அடுப்பைப் பார்த்து கருப்பு என்று சொல்லும் போது எரிந்து கொண்டிருக்கும் விறகுகூட வேதனையிலும் சிரிக்கிறதே..

                    • நல்லாவே நடிக்கிறீங்க அம்பி.விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல்.”நீ யார் இதை கேட்க ”என்ற கேள்வியையே கீறல் விழுந்த இசைத்தட்டாக கேட்டுக்கொண்டிருக்கும் உங்கள் அகந்தை மனதின் [ஈகோ] திருப்திக்காக விவாதிப்பது பொருளற்றது.இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

                    • அம்பி அவர்களே, நீங்கள் ”கொலைநிலம்: ஷோபா சக்தி-தியாகு: முரண் அரசியல் உரையாடல்” என்று புத்தகத்தைப் படியுங்கள். அதில் ஷோபா சக்தி புலிகள் பற்றிக் கூறும் விமர்சனங்களுக்கு தியாகு எப்படி நேரடியாகப் பதிலளிக்காமல் மழுப்புகிறார் என்பதைப் பாருங்கள். அதில் வடலி தியாகுவிடம் “பிரபாகரன் மரணம் பற்றி பல சர்ச்சைகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. பலபேர் அது பிரபாகரனின் உடலே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்துவிட்டார், உயிரோடு தான் இருக்கிறார் என்பதில் உங்கள் நிலைப்பாடு என்ன தோழர்?” என்று கேள்வியைக் கேட்கிறார். அதற்கு தியாகு ஒற்றை வார்த்தையில் “தெரியாது” என்று பதிலளிக்கிறார்.

                      அவர்களுக்கு உண்மையிலேயே அது தெரியாமல் இல்லை. அவர்கள் புலிகளை உணச்சிவசப்பட்டு நோக்குவதுதான் பிரச்சனை. அவர்கள் வெறுமனே பிரபாகரன் மரணத்தை மட்டும் மறைக்கவில்லை; இலங்கையின் கொடூரமான போர்க்குற்றத்தையே மறைக்கிறார்கள். பிரபாகரன் மரணம் பற்றிய கட்டுரை:

                      பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது
                      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5792:prabhananthikadal&catid=277:2009&Itemid=76

                      மேற்சொன்ன புத்தகத்தின் விவரம்: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1794&Itemid=139

                      இந்த புத்தகத்தில் பல விடயங்கள் விவாதிக்கப்பட்டுளன. எந்தத் தமிழ் தேசியவாதியும் சோபா சக்தியின்( அவர் மட்டுமல்ல, வினவு, ரயாகரன், கணேசன் ஐயர், கலையரசன், மற்ற போராளிகள் அனைவரது புலிகள் பற்றிய விமர்சன்மும் தமிழ் தேசியவாதிகளால் குயுக்தியுடனே எதிர்கொள்ளப் படுகின்றன.) புலி பற்றிய விமர்சனங்களுக்கு நேரடியாக, நேர்மையாக பதிலளிக்கமுடியாது. அது இது என்று மழுப்பத்தான் செய்வார்கள் அல்லது ஈழ எதிரி என்று முத்திரை குத்துவார்கள். இது தான் தமிழ் தேசியவாதியகளின், அவர்கள் கூறும் தமிழ் தேசியத்தின் அவலம்.

                      நாம் புலிகளை, அவர்களின் தவறான செயல்பாடுகளைக் கூறி பாசிஸ்டுகள் என்று விமர்சனம் செய்வது ஏதோ புலிகள் மீது அவதூறு செய்வதற்காக அல்ல. மாறாக பல்லாயிரம் மக்களைக் காவு வாங்கிய, பல லட்சம் மக்களை அகதிகளாக்கிய முப்பது ஆண்டு கால ஈழப்போரின் பின்னடைவுக்கு (சிங்களப்பேரினவாத அரசு, இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தவிர)புலிகளின் அணுகுமுறையும் முக்கியமான காரணமாக விளங்குகிறது.

                      எஞ்சியுள்ள மக்களைப் பாதுகாப்பது, இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்பது, 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் நிறைவேற்றிய தமிழீழம்தான் தீர்வு ஆகியவற்றில் the so called தமிழ்த் தேசியவாதிகள் முப்பது வருடமாகக் கடைபிடிக்கப்பட்ட அதே அரதப் பழசான அணுகுமுறையத்தான் கடைபிடிக்கிறார்கள். அமெரிக்காவை வைத்து ராஜபக்சேவைத் தண்டிப்பது, இந்தியாவை சுயேட்சையான தீர்மானம் நிறைவேற்று என்று கூறுவது, எப்படியாவது யாரை வைத்தாவது ஈழம் பெற்றுவிட வேண்டும் என்று சர்வதேச சூழல்களை உற்று நோக்காமல் உளறுவது, தமிழ்-சிங்கள்-முஸ்லீம்-மலையக மக்கள் ஒன்றுபடுவதை குறுகிய இனவாதப் பார்வையுடன் நிராகரிப்பது போன்ற தமிழ்த் தேசியவாதிகளின் நடைமுறையில் இதைத் தெள்ளத்தெளிவாகப் பார்க்க முடியும்.

                      இது மேலும் ஈழ மக்களைப் படுகுழியில் தள்ளிவிடும். ஆகவே தான் புலிகளைப் பற்றிய விமர்சனம் முக்கியமாகின்றது. புலிகளின் குறுகிய இனவாத பாசிசப் போக்கை நிராகரிக்காமல் ஈழ மக்களின் விடுதலைக்கான மாற்றுப்பாதையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இதன் அடிப்படையில் புலிகள் பற்றிய பிரச்ச்னையை நோக்குவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

                    • “கோட்பாடில்லாமல் பாமரத்தனத்தை வெளிப்படுத்தும் பு.ஜ. குழு”

                      தமிழீழத்தை ஆதரிப்பது என்பது அந்த இனத்தை தனி இனமாக அங்கீகரிப்பது ஆகாது. அது தனித் தமிழீழத்தை ஆதரிப்பதுவே. ஏனென்றால் அந்தப் பொருளிலேயே எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சி.பி.எம். உட்பட அனைத்து தேசியக் கட்சிகளும் தமிழீழத்தை ஆதரிக்கிறோம் ஆனால் அது இலங்கை என்ற ஒரே நாட்டிற்குள் என்ற நிபந்தனையடிப்படையிலேயே என்கிறார்கள். அதில் அளவு வேறுபாடுகள் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. அதேப் போல்தான் பு.ஜ.வும் தமிழீழம் என்பதை இலங்கை என்ற நாட்டிற்குள்ளே மட்டுமே வைத்துப் பார்க்கவேண்டும் என்கிறார்.

                      தனி நாட்டினை ஆதரிப்பது எந்த அடிப்படையில் என்று லெனினியும் கூறுகிறது என்பதாவது அறிந்துக்கொண்டிருக்கிறீர்களா. எந்த பொது வாக்கெடுப்பு எடுத்து காஷ்மீர் தனி நாட்டுக்கு ஆதரவளிக்கிறது பு.ஜ..

                      அடுத்ததாக மேலே தனி ஈழத்தை ஆதரிப்பதாக பல்வேறு மேற்கோள்கள் கூறியிருக்கிறீர்கள். அவையெல்லாம் ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு இனமாக அங்கீகரிப்பது என்ற அளவில் மட்டுமே. அதற்கு மேல் அங்கு ஜனநாயக நிலைநாட்டப்படுகிறதா இல்லையா என்றெல்லாம் கேள்வி இல்லை. அவை தனி ஈழத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்ற தெளிவான கருத்தையாவது இதுவரையில் தனது அணிகளுக்கு தெளிவாக கூறியிருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். பல்வேறு நபர்களிடம் நீங்கள் உரையாடினால் இதை எல்லோருமே தெரிந்துக்கொள்ளலாம். அதுதான் இந்த விமர்சனத்தின் பதிலிலும் இருக்கிறது.

                      பு.ஜ. தனித் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்பதற்கான சமீபகால மேற்கோள்களும், பழைய மேற்கோள்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
                      // பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பாசிஸ்டுகள் என்று மதிப்பிடுவதாலும் ஈழச் சிக்கலுக்குப் “பொதுவாக்கெடுப்பு” என்று ஒருபுறம் முழுங்கிக் கொண்டே, “தனி ஈழம்தான் ஒரே தீர்வு” என்பதை இப்பொழுதே முடிந்த முடிவாகக் கூறாதவர்களை, ஈழப் போராட்ட ஆதரவுக்கு எதிர்நிலைக்குத் தள்ளுகின்றனர்.// https://www.vinavu.com/2013/06/27/response-to-criticisms/ எதிர்கொள்வோம் !

                      //தேசிய இன ஒடுக்குமுறைக்குத் தேசிய இனத் தன்னுரிமைதான் சரியான, அவசியமான தீர்வு என்றாலும், தனியரசு அமைவது உள்நாட்டு மற்றும் உலக அரசியல் சூழ்நிலைமைகளைச் சார்ந்துள்ளது. வெறும் இராணுவவாத நோக்கில் தனியரசுதான் ஒரே தீர்வு என்று கொள்ளவும் முடியாது. தமிழீழத்துக்கும் இது பொருந்தும்// https://www.vinavu.com/2013/07/26/eelam-answer-to-criticisms/ எதிர்கொள்வோம் ! -2

                      9) தேசிய இனப் பிரச்சினையில் ம.க.இ.க. எடுத்த நிலைபாடு
                      சமரன் பக்கம் 218
                      1. “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
                      2. ஒரு தேசத்துக்கொ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் ‘நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக்கொள்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
                      3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 10)

                      தற்போது நான் படித்த இதழில் ஆகஸ்டு 2013 இதழில் பக்கம் 20
                      1. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம் (என்று பொது நிலைபாடு எடுத்தது)

                      //“ஆனால் சில மாணவர் குழுக்களின் தலைமை புலிகளும் புலி ஆதரவாளர்களும் செய்த அதே வகையிலான தவறுகளைச் செய்கின்றனர். இப்போது முன்வைக்கப்படும் இரண்டு கோரிக்கைகளை எவ்வாறு, எந்த வழிகளில் நிறைவேற்ற முடியும் என்பதை ஆழமாகப் பார்க்க மறுக்கின்றனர். இரண்டு கோரிக்கைகளில் ஒன்றான “பொது வாக்கெடுப்பு” என்பதைத் தமது குறுங்குழுவாத அகநிலைப் பார்வையைத் திணித்தும் திரித்தும் வியாக்கியானம் செய்து மாற்றி அமைத்துக்கொண்டு ஈழ ஆதரவு சக்திகளைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்களும் புலி விசுவாசிகளைப் போலவே “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றி அமைத்து ஈழ ஆதரவாளர்களைப் பிளவுப்படுத்தவும் செய்கிறார்கள்.”// பு.ஜ மார்ச் 2013 பக்கம் 7

                      //”ஆனால், “ஈழத் தமிழர்க்கு தன்னுரிமை” என்பது “மழுப்புவது, தனித் தமிழீழத்தை மறுப்பது, எதிர்ப்பது; அதை மூடிமறைக்கும் தந்திரம்” என்று சொல்லிக்கொண்டு சில மாணவர் குழுக்கள், “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றியும், குறுக்கியும் வியாக்கியானம் செய்கின்றனர். “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை இவ்வாறு திரிப்பது, “பொது வாக்கெடுப்பு”க்கான உரிமையைப் பெறுவதற்கு முன்பே மாற்றுக் கருத்துக்கான உரிமையை மறுக்கும் சர்வாதிகாரமாகும்….”// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 7

                      //தனித் தமிழீழம்தான் ஒரே முடிவு என்றால் அப்புறம் எதற்குப் “பொதுவாக்கெடுப்பு”?//
                      “பொதுவாக்கெடுப்பு” உரிமையைப் பெற்ற பிறகு நடைமுறைக்கு வரக்கூடியதே தன்னுரைமை. வாக்கெடுப்புக்கு முன்னரே முடிவைச் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் எதற்கு அக்கோரிக்கை, போராட்டம் எல்லாம்?// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 8

                      // ஒன்று, சர்வதேச சமூகம் எனப்படும் உலக நாடுகள் இலங்கைக்கு வெளியிலிருந்து சிங்கள் இனவெறி, கொலைவெறி பாசிச ராஜபக்சே கும்பலின் அதிகாரக் கோரப்பிடியிலிருந்து இலங்கையையும் ஈழத் தமிழர்களையும் மீட்கவேண்டும்; ஈழத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை ஏற்கும் ஜனநாயக அரசை இலங்கையில் நிறுவி இதைச் செய்யவேண்டும்.// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 8

                      //ஆக இராஜபக்சே மீது போர்க்குற்றவாளி, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு – ஆகிய இரண்டையும் நிறைவேற்ற வேண்டுமானால், இலங்கையில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தவிர்க்கவியலாத அவசியம்.// பு.ஜ. மார்ச் 2013 பக்கம் 8

                      2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
                      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=185:2008-09-04-19-46-03&id=6228:2009-09-13-10-03-12
                      இதில் பு.ஜ. குழு தனி ஈழத்தை ஆதரிக்கிறோம் என்றோ ஆதரிக்கவில்லை என்றோ எங்குமே கூறவில்லை. இது எவ்வகையான சந்தர்ப்பவாதம் என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்.
                      //தனி ஈழம்தான் தீர்வு என்பது வரலாற்றால் தீர்மானிக்கப்படவேண்டியது. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு ஒடுக்கப்படும் வர்க்கம், இனம் இராணுவ ரீதியாக பலம் பெற்ரு அறிவித்துக்கொள்வது மட்டும் இல்லை, ஒரு இனம் இராணுவ ரீதியாக பலம் பெறுவதன் மூலம் மட்டும் ஒரு தனிதேசம், சுதந்திரமான ஒரு தேசம் என்று சொல்வது இன்றைய சர்வதேச நிலையிலே சாத்தியமில்லை. அதற்கு சர்வதேச சமூகத்தில் குறைந்தபட்சம் எல்லா நாடுகளின் அரசுகள் இல்லாவிட்டாலும், அந்தந்த நாட்டு மக்கள் மத்தியிலே நெருக்குதல் தரக் கூடிய அளவுக்கு ஆதரவு இருக்க வேண்டும்// ஈழம்: தேவை – ஒரு நேர்மையான மீளாய்வு! ((புதிய ஜனநாயகம் வேளியீடு)) பக்கம் 78

                      இப்படி மேற்கண்ட மேற்கோளில் தனி நாட்டினை அங்கீகரிக்க அந்த நாடு சோசலிச நாடாக மலர வேண்டும் என்று நிபந்தனை வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி ஒரு நிலைபாடு லெனினியம் வைத்திருப்பதாக அறியமுடியவில்லை. மீண்டும் இங்கு நினைவு படுத்த விரும்புவது. லெனினிசத்தின் அடிப்படைகள் என்ற ஸ்டாலின் நூலில் தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனினியம் என்ன கூறுகிறது என்பதற்கான அடிப்படையை வழங்கியிருப்பார். அதையாவது அறியுங்கள். அதிலிலிருந்து அதை ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்பதையாவது தெளிவுப் படுத்துங்கள்.

                      புலிகளை வைத்து தனி ஈழம் என்று எந்த லெனினியவாதிகளும் முடிவு செய்யவில்லை. அங்கு தனி ஈழம் என்பது அங்குள்ள சமூக ஆய்வையே முதன்மையாக கொண்டு கூறுகிறது. இன முரண்பாடு பிரதான முரண்பாடாக அங்கு இங்கிலாந்துக்கு அயர்லாந்து போக் முன்நிற்கிறது. இந்த முரண்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள். ஈழ மக்கள் பிரதானமாக அங்கு இன ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதற்கு தீர்வு இலங்கை ஜனநாயகப்படுத்தப்பட்ட பிறகுதான் என்ற நிபந்தனை, ஈழத்தின் கடைசி தமிழனும் ஒழிக்கப்பட்டப் பிறகே என்ற பொருளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு ஒடுக்கப்படும் இனம் எந்த அடிப்படையில் போராட வேண்டும், ஒடுக்கும் இனத்தின் பாட்டாளிவர்க்கத்தின் கோரிக்கை என்னவாக இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டினை மார்க்சிய லெனினியம் நமக்கு வகுத்தளித்திருக்கிறது. அதை நாம் ஏற்கிறோமா அல்லது லெனினியம் காலாவதி ஆகிவிட்டது என்று தூக்கியெறியப் போகிறோமா என்பதே நமது கேள்வி. அதை எப்படிப் பொறுத்துவது என்பது அங்குள்ள சூழ்நிலைமையை ஆராய்ந்து சமூக நிலைமைகளுக்கு ஏற்றவாறு என்று கூறினாலும், அதன் அடிப்படையைப் புரிந்துகொள்ளக் கூட மார்க்சிய லெனினியம் எப்படி என்று போதிக்கிறது. அந்த அடிப்படையில் கீழ்க்கண்ட கட்டுரை தனி நாட்டுக்கான அடிப்படைக் கோட்பாட்டை நமக்கு வழங்குகிறது.
                      சமரன் வெளியீட்டின் தனிநாட்டிற்கான கோட்பாட்டினை விளக்கும் கட்டுரையை வழங்கியிருக்கிறது. அதன் தலைப்பு “தேசிய இனப்பிரச்சனையும் முதலாளித்துவ தேசியவாதமும்”
                      http://samaran1917.blogspot.in/2009/03/blog-post_17.html

                      இதில் பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு என்று தலைப்பிட்டு தொடரும் பு.ஜ.வில் தொடர்ச்சியாக வருகிறது.

                      ஆனால் “கோட்பாடில்லாமல் பாமரத்தனத்தை வெளிப்படுத்தும் பு.ஜ. குழு” என்பதை நீங்கள் அறியவேண்டுகிறேன்.

                      எதிலும் கோட்பாடில்லாமல் ஏதோ மார்க்சியமும் லெனினியமும் கோட்பாட்டையே வகுக்காதது போலவும் இனி இவர்கள் தான் கோட்பாட்டை வகுக்கப்போவதாகவும் நம்ப வைப்பது மார்க்சிய லெனினியத்தை குழிதோண்டி புதைப்பதாக மாறும். ஆகவே முதலில் எது குறித்தும் அந்த வரலாற்று நிலைமைகளில் மார்க்சிய லெனினியம் என்ன கூறுகிறது என்பதை அறிவோம். பிறகு அது பொருந்துமா பொருந்தாதா என்று விவாதிப்போம். என்னைப் பொறுத்துவரை பொருந்தும். இன்று வரை மார்க்சிய லெனினியம் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகள் பொருந்தும் என்றே உறுதிகூறுகிறேன்.

                      இது குறித்து மேலும் விரிவாகவும் விவாதிக்கலாம். ஆனால் முதலில் தனி ஈழத்தை ஆதரிப்பது சரியா இல்லையா. தனி ஈழம் என்பது பு.ஜ. ஏற்கிறதா இல்லையா என்பதை புரிந்துகொண்டு விவாதத்தை தொடங்கினால் அதிலிருந்து எது சரி என்பதை விவாதிக்கலாம். அதற்கான கட்டுரையாக மேற்கண்ட சமரன் கட்டுரையையும் கொடுத்திருக்கிறேன்.

  2. சமரன் வெளியிடு பக்கம் 218 ஒன்று பட்ட நடவடிக்கைக்கு தடை !என்ற தலைப்பில் பு ஜ மேல் வைத்துள்ள விமர்சனத்திற்கு பதில் சொல்லாமல் முன்னுரையை மட்டும் வைத்து கொண்டு விமர்சனம் செய்வது நழுவி கொள்வது போன்றது

  3. katturayin erudhiyil thodarum enru ulladhu melum thavaraana vivarangalilirundhu samaran katti ealuppiyulla kelvigal,adhan arasiyal ullnokkathai ammbalappaduththamal badhilai mattum soll enbadhu enna niyayam?

  4. நாங்களும் இருக்கோம்ல என்ற வெளிப்பாடுதான் சமரன் வெளியீட்டில் மகஇகவைப் பற்றி குறிப்பிடுவது.
    கானாமல் போனவர்கள் திரும்ப வந்து விட்டார்கள் போலும்…………

  5. //நாங்களும் இருக்கோம்ல என்ற வெளிப்பாடுதான் சமரன் வெளியீட்டில் மகஇகவைப் பற்றி குறிப்பிடுவது.
    கானாமல் போனவர்கள் திரும்ப வந்து விட்டார்கள் போலும்…………//நாங்கள் எங்கும் காணமல் போய்விட வில்லை!உங்கள் பார்வைக்கு அப்படி இருக்கலாம் அதற்க்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது .பூனை கண்ணை மூடி கொண்டால் உலகமே இருண்டது போல நினைத்து கொள்ளும?அது போல நீங்கள் …………………….

  6. //ஒரு பழமொழி சொல்வார்கள்.தங்க காப்பு இருந்தா வித்து தின்னலாம்.பொச்சு காப்பு இருந்தா….. அந்த மாதரிதான் சமரன்…………//சரி பு ஜ எப்படியோ ?

  7. தேசிய இன பிரச்சனையல் பு ஜ வின் நிலை நடு நிலை வகிக்க வேண்டும் என்பதுதான் !அதனாலதான் இப்படி தவறான நிலை எடுபதர்க்கு காரணம்.தன் அணிகளை காப்பற்றி கொள்ள சமரன் மீது அவதுரு செய்கிறது .அணு உலை பிரச்னை குறித்து எதிர்கொள்வோம் பகுதியல் பதில் சொல்லுங்கள் பார்ப்போம் ஏன் அது குறித்து ம ஜ இ க வைத்த விமர்சனம் குறித்து இது வரை பதில் சொல்ல வில்லை

  8. புள்ளி விபரங்களையே கோட்பாடுகளாக பேசும் பு ஜ வின் புளுகுநிதனம் நீண்ட நாள் எடுபடாது .

  9. ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ
    https://www.vinavu.com/2009/11/21/maruthaiyan-radio-discussion/

    மேற்கண்ட இணைப்பில் உள்ள உரையாடலில் தோழர் மருதையன் ஈழம் தொடர்பான அனைத்து பரிமானங்களையும் விளக்குகிறார்..

  10. ///இராஜபட்சேவை போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. அவை மூலம் தண்டிக்கவேண்டும் என்று போராடும் மாணவர்களை எள்ளிநகையாடும் ம.க.இ.க.வினர், “நூரம்பர்க்” போன்ற விசாரணைமன்றம் தேவை என புரட்சி வேடம் போடும் ம.க.இ.க.வினர், ராஜபட்சேவை தண்டித்தால் ஈழத்தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகின்றனர்.

    “அப்படி ஒரு நடவடிக்கை வந்தால் இராஜபட்சேவை போன்ற ஒரு நரித்தனமான பாசிஸ்டு அதை எப்படி எதிர்கொள்வான் என்பதை நாம் பார்க்கவேண்டும். அதை இலங்கையின் இறையாண்மை மீது தாக்குதலாக, சிங்கள மக்களுடைய கவுரவத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக அதை ராஜபட்சே சித்தரிக்கப் போகிறார். அதையட்டி மீண்டும் தேசவெறியும், இனவெறியும் தூண்டப்படும். ஏற்கனவே இலங்கையின் இறையாண்மையில் இந்தியா அல்லது அமெரிக்கா தலையிடுகிறது என்ற கோணத்திலேதான் அங்கேயிருக்கிற சிங்கள இனவெறியர்கள் அதை எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.”என்று ம.க.இ.க.வினர் எழுதுகிறார்கள்.

    அதாவது ராஜபட்சேவை தண்டிப்பதுகூட தமிழர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் வாதிடுகின்றனர். இதைவிட ராஜபட்சேவுக்கு ஆதரவாக யாராவது பேசமுடியுமா?

    ///

    திரித்துப் பேசுவது என்பதன் இலக்கணம் இதுதான். கீற்றில் இந்த மறுமொழியைப் பார்த்தபோதே மறுமொழி ஒன்றை அனுப்பியிருந்தேன். கீற்று பாணி ஜனநாயகத்தின் விளைவோ அல்லது வேறு ஏதேனும் “தொழில் நுட்பக்” கோளாறுகளின் விளைவாகவோ அது வெளியாகவில்லை.

    முதலில் ராஜபட்சேவை தண்டித்தால் ஈழத்தமிழர்களுக்கு இன்னல் அதிகரிக்கும் என்று மருதையன் குறிப்பிடவில்லை. இதை அவரது நேர்காணலைக் கேட்டு பொதுவாசகர்கள் உறுதி செய்து கொள்ளலாம் – https://www.vinavu.com/2013/03/13/eelam-maruthaiyan-interview/

    இனவாத அடிப்படையில் தமிழர்களைத் தனிமைப்படுத்தி ராஜபக்சேவை எதிர்த்தாலோ அல்லது உழைக்கும் சிங்களர்களைத் தனிமைப்படுத்தி ராஜக்சேவை எதிர்த்தாலோ அதை ராஜபக்சே எவ்வாறு எதிர்கொள்வான் என்பதைப் பற்றி மருதையன் பேசிய பகுதியிலிருந்து வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள்.

    மேலும் உழைக்கும் சிங்கள மக்களோடு ஐக்கியப்பட்டு அவர்களையும் உள்ளடக்கிய போராட்டங்களால் தான் ராஜபக்சேவைத் தண்டிக்க முடியும் என்றே மருதையன் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார்.

    இதை மருதையன் மட்டும் குறிப்பிடவில்லை. அவரது பேட்டி வெளியானதற்கு ஒரு மாத இடைவெளியில் தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ் போன்ற அமைப்புகளால் தி.நகரில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த அரங்கக் கூட்டம் ஒன்றில் போராட்டக்குழுவைச் சேர்ந்த திவ்யாவும், உங்களுக்கெல்லாம் ஞானகுருவாக விளங்கும் தியாகுவும் கூட இதே கருத்தை வலியுறுத்திப் பேசினர். வர்க்கப் பார்வையைக் கூட சொந்த முறையில் ஆய்வு செய்து பெற முடியாமல் மருதையனின் உரையிலிருந்து காப்பி அடித்த உங்கள் பங்காளிகளின் செயலை ம.க.இ.க கண்டிக்கவில்லை.

    அது போகட்டும்.

    இதில் ராஜபக்சேவை சிங்கள உழைக்கும் மக்களிடமிருந்து பிளவுபட்டு நின்று எதிர்ப்பதில் உள்ள சவால்களைப் பற்றித் தானே மருதையன் பேசியிருக்கிறார்? எங்கேயாவது ராஜபக்சேவைத் தண்டிப்பது ஆபத்து என்று சொல்லியிருக்கிறாரா? சமரன் குழுவில் சேர்ந்ததும் மூளையைக் கழட்டி வைத்து விடுவீர்களா?

    சரி, உங்களுக்குத் தான் ஈழம், தமிழர்கள் என்பதைப் பற்றி சுத்தமாக அறிவே கிடையாதே. நான் வேறு உதாரணத்தைக் கொண்டு விளக்குகிறேன்…

    ஆதிக்க சாதிவெறிக்கு எதிரான போராட்டங்களில் அந்த ஆதிக்க சாதிகளிலேயே உள்ள உழைக்கும் பிரிவினருக்கே சாதிஆதிக்க வெறி எதிரானது என்பதை உணர்த்தி ஜனநாயக சக்திகளான அவர்களையும் உள்ளடக்கி பரந்து பட்ட மக்களோடு நின்று ஆதிக்க சாதி வெறியை எதிர்க்க வேண்டுமா அல்லது சிறுபான்மை தலித் மக்கள் மட்டும் தங்கள் போராட்டத்தை தனியா நின்று பார்த்துக் கொள்ள வேண்டுமா? இதில் நீங்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால் ம.ஜ.இ.கவைக் கலைத்து விட்டு திருமா கட்சியில் சேருங்கள். இங்கே முதலாவதைத் தேர்ந்தெடுத்து விட்டு ஈழத்தில் இரண்டாவதைத் தேர்ந்தெடுப்பீர்களானால் கடைந்தெடுத்த சந்தர்பவாதிகள் என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.

    • மேற்கண்ட சமரன் வெளியீட்டு புத்தகத்தினை குறித்து விமர்சனமாக இரண்டு பகுதியாக வந்திருக்கிறது. அதில் முன்னுரை பகுதி குறித்து முதல் பகுதியிலும், அடுத்து சில வரலாற்று விசயங்கள் இரண்டாம் பகுதியிலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆண்டுகளும் சம்பவங்களும் வெவ்வேறானதாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அந்த பிழை திருத்தங்களை சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவிக்கவேண்டும். அத்திருத்தங்கள் நீங்கள் சுட்டிக்காட்டியவாறா என்பதை நான் என்னளவில் ஒப்பிட்டு சரியானதாக இருந்தால் ஏற்கவேண்டியதே. ஆனால் அந்த பிழைத்திருத்தங்கள் அரசியல் பிழையல்ல.
      முதல் விசயம். நீங்கள் குறிப்பிட்ட அந்த முதல் கட்டுரை விமர்சனம் முழுக்கவும் ஒரு பத்தியில் எழுதப்பட்ட விசயம். அதாவது அது தொடர்ச்சியாக இனப்படுகொலை நடந்தது என்பதற்கான நடப்புகளை சுட்டிக்காட்டவே விளக்கப்பட்டதாகும். அப்படி முப்பதாண்டுகளில் நடந்த பெரிய இனவெறியாட்டத்தை குறித்து கூறியதை அந்தக் விமர்சனத்தில் கூட எங்கும் மறுக்கப்படவில்லை. அவை வேறு ஒரு ஆண்டில் நடந்ததாகவோ அல்லது வேறு ஒரு பெயரில் நடந்ததாகவோதான் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொகுப்பாக பார்த்தோமானால் அப்படி இனவெறியாட்டமும், படுகொலையும் நடந்ததை பு.ஜ.வும் ஏற்கிறது என்பதையே அறிய முடிகிறது.
      முன்னுரை எழுதப்பட்டதும் கட்டுரையின் தொகுப்புகளில் உள்ள பல்வேறு காலகட்ட கட்டுரைகளும் தொகுப்பு என்று கூறுவதிலேயே வெவ்வேறானது என்று புரிந்துகொள்ள முடியும்.
      சமரன் குழு 2000 திலிருந்து 2010 வரை என்ன செய்துகொண்டிருந்தது என்ற ரீதியில் விமர்சனமும் பு.ஜ.வில் வைக்கப்பட்டுள்ளது. அவை முழக்கங்களாக வைத்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இயக்கம் எடுத்துள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் மாற்று அரசியல் நடவடிக்கையைக் கூட கவனிக்காமல் கடிவாளம் இட்டதைப் போல் இப்போதுதான் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது. இவையெல்லாம் தெரியாது என்று கூறுவது வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஒரு அமைப்பாக கூறுவது மிகவும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. மாற்று புரட்சிகர அமைப்பு என்ன கூறுகிறது, ஏன் முதலாளித்துவ அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள் என்ன கூறுகிறது என்பதைக் கூட கேட்கா நிலையில் கதவடைத்து இருப்பது ஆரோகியமானதுதானா? அல்லது தப்பிப்பதற்கானதா என்பதுதான் தெரியவில்லை.
      எடுத்துக்காட்டாக: 2001ஆம் ஆண்டிலிருந்து அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சு வார்த்தைக் காலக்கட்டம் நடந்துக்கொண்டிருந்த காரணத்தால் அது குறித்து அரசியல் தமிழகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டே இருந்தது. இந்நிலையிலும் ம.ஜ.இ.க. 2006ஆம் ஆண்டு ஒரு விளக்கப் பிரசுரத்தினை வெளியிட்டு அது சகிதமாக இயக்கம் மேற்கொண்டது.
      வட்டுக்கோட்டைத் தீர்மானம் குறித்து ஆகஸ்டு 2013 பு.ஜ. பக்கம் 34ல் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், எந்தவொரு நாட்டிலும் அந்த மக்களின் கருத்துக்கணிப்புகளை நடத்திய பிறகே அந்த நாட்டின் விடுதலையை ஆதரிக்கவேண்டிய முடிவு எடுக்கவேண்டும் போல் இருக்கிறது. அப்படி ஒரு மார்க்சிய வரையறையை இதுவரையில் நான் கேள்விப்பட்டது இல்லை.
      அந்த வாதத்தினைப் படிப்பார்த்தாலும் ஈராக்கில் இறுதியாக நடந்த தேர்தலில் சதாம் உசேன் நூறு சதவீதம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதே. ஆனால் சதாம் உசேனை நிபந்தனைக்கு உட்பட்டு பு.ஜ. ஆதரிக்கவில்லை, எதிர்த்தது. இது சுய முரண்பாடாக இருக்கிறது.
      பேச்சு வார்த்தை என்ற பெயரால் இலங்கை மக்கள் மீது புதிய காலனியாதிக்கத்தை நிலைநிறுத்தவும், ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை மறுக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்யும் சதிகளை முறியடிப்போம்!
       போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து ஐரோப்பிய அரசுப் பிரதிநிதிகளை வெளியேற்று!
       விஸ்தரிப்புவாத இந்திய அரசே!
       ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை நசுக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் அடுவருடியான இலங்கை அரசுக்கும் துணைபோகாதே!
       இலங்கை அரசுக்கு அளித்துவரும் இராணுவ, பொருளாதார உதவிகளை உடனே நிறுத்து!
       விடுதலைக்காகப் போராடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
       ஈழத்தமிழ் அகதிகளை கைதிகள் போல் நடத்தாதே! அனைத்து மனித உரிமைகளையும் வழங்கு!
       தமிழக மீனவர்கள் இலங்கை படையால் வேட்டையாடப்படுவதை தடுத்து நிறுத்து!
       ஈழவிடுதலைப் போருக்கு எதிரான அ.தி.மு.க – தி.மு.க கள்ளக் கூட்டணி ஒழிக!
       இந்திய அரசின் விஸ்தரிப்புவாதத்தை ஆதரிக்கும் நாடாளுமன்றவாத திருத்தல்வாதக் கட்சிகளின் துரோகத்தை முறியடிப்போம்!
       தமிழீழ விடுதலைப்போரை ஆதரிப்போம்!
       மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனை வெல்க!
      இருந்தும் விமர்சனத்திற்கு விமர்சனம் எழுதுவதல்ல தீர்வு என்பதால் அதற்கு இலக்கு என்ன? என்னளவில் விவாதிக்க ஆர்வம் கொண்டே கீழ்க்கண்ட கேள்விகளை வைக்கிறேன். இதில் நேரடியான பதில்களை முதலில் இட்டு பிறகு விளக்கத்திற்கு வருவீர்கள் என்று கருதுகிறேன். அப்போதுதான் என்னைப் போன்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
      1) ஸ்டாலின் அவர்களால் எழுதப்பட்ட நூலான “மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்கள்” என்ற நூலில் “தேசிய இனப் பிரச்சினை” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நிலைபாடுகளை ஒவ்வொருவரும் ஏற்கிறீர்களா இல்லையா என்பதை மார்க்சிய ரீதியாக தெளிவுப்படுத்த வேண்டும்.
      2) இன முரண்பாடு இலங்கையில் பகைமுரண்பாடாக இருந்தது, தற்போதும் தொடர்கிறது என்கிறீர்களா? மறுக்கிறீர்களா?
      3) தனி நாடு கோரிக்கையை மார்க்சிய லெனினிய வாதிகள் எப்போது ஏற்கலாம் எப்போது ஏற்கக் கூடாது என்பதற்கு வரையறைகள் உண்டா இல்லையா? அந்த வரையறையை என்னவென்று மார்க்சிய ஆசான்கள் துணைகொண்டு விளக்கமுடியுமா?
      4) காஷ்மீர் பிரிவினைக்கு போராடிக்கொண்டிருக்கிற இயக்கங்களை வைத்து அது தனிநாடு என்பதோ இல்லை என்பதோ தீர்மானிப்பீர்களா? இல்லை சமூக ஆய்விலிருந்து முடிவுசெய்து தீர்மானிப்பீர்களா?
      5) காஷ்மீர் மக்களுக்காக, வடகிழக்கு மாநில மக்களுக்காக என்று பல்வேறு போராட்டங்களை இதர இந்திய பகுதியில் உள்ள மக்கள் அல்லது இயக்கங்கள் போராடுகிறது என்பதை வைத்து காஷ்மீரி மக்களுக்கு தனி நாடு குறித்து தீர்மானித்தார்களா ம.க.இ.க.?
      6) தேசிய இனம் என்பது மத அடிப்படையை கொண்டதாக ஏற்கமுடியுமா?
      7) புலிகளின் கடந்த காலங்களை கருணாநிதிப் போல் பேசிவிட்டு அவர்களின் பிற்கால மாற்றங்களை ஏற்க மறுப்பது நேர்மையற்ற சந்தர்ப்பவாதமா? நேர்மையான சந்தர்ப்பவாதமா?
      8) புலிகள் பாசிச இயக்கமாகவே பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு தேசிய இன விடுதலைக்கு போராடும் பாசிச தன்மை கொண்ட அமைப்புகளை நிபந்தனைக்கு உட்பட்டு ஆதரிப்பீர்களா இல்லை மறுப்பீர்களா?
      (எடுத்துக்காட்டாக உமர் முக்தார், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சிராணி, வாஞ்சிநாதன், தற்போதைய காலத்தில் அமெரிக்க எதிர்ப்பினை வெளிப்படுத்திய சதாம் உசேன், வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஆப்கான் தலிபான்கள், ஈரான், சிரியா போன்றவை) (அமெரிக்கா நிதி உதவி கொடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கக் கூடிய, அரபு நாடுகளில் ஜனநாயகத்தின் பேரால் போராடிக் கொண்டிருக்கும் எடுபிடி அமைப்புகளின் கலகங்களை அரபு வசந்தம், மக்கள் புரட்சி, அது போல் இந்தியாவில் எழுப்ப வேண்டும் என்று கூறுவது தனிக்கதை – அது வேறொரு நேரத்தில் விவாதிக்கலாம்)
      9) தேசிய இனப் பிரச்சினையில் ம.க.இ.க. எடுத்த நிலைபாடு
      சமரன் பக்கம் 218
      1. “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
      2. ஒரு தேசத்துக்கொ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் ‘நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக்கொள்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
      3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 10)
      தற்போது நான் படித்த இதழில் ஆகஸ்டு 2013 இதழில் பக்கம் 20
      1. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம் (என்று பொது நிலைபாடு எடுத்தது)

      இந்தக் கேள்விகளின் பதிலிலிருந்து விவாதத்தினை தொடரலாம். அரசியல் ஆரோக்கியமற்றதாக இருப்பதைவிட அரசியல் விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கவே விரும்புகிறேன்.

      (குறிப்பு : மேற்கண்ட விவாதத்தினை நேரடியாக டைப் செய்ததால் எழுத்துப் பிழையோ, இல்லை சில வார்த்தைக் கோர்வைகள் கூட தவறாக இருக்கலாம். சுட்டிக்காட்டினால் நான் அறிந்துக்கொள்கிறேன். ஆனால் அதிலேயே உழன்றுவிட்டு மையமான அரசியல் பிரச்சினைகளை கைவிட்டுவிடாதீர்கள். இதில் அரசியல் விவாத்தினை மையமாக வையுங்கள். நேரடியான பதிலை குறிப்பிட்டு பிறகு விளக்க அளிப்பீர்கள் என்றே கருதுகிறேன். அதுவே என்னைப் போன்ற எளியவர்கள் புரிந்துகொள்ள வழி)

      தொடரும்…..

  11. // சிங்களப் பேரினவாத அரசின் ஆட்சியில் சிங்கள உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. சிங்கள ராணுவம் போராடும் சிங்கள மக்களையே கொடூரமாக ஒடுக்கத்தான் செய்கிறது. சிங்கள ராணுவமும், பேரினாவாத் சிங்கள அரசும் அனைத்து மக்களுக்கும் எத்ரி தான்.. இதை புரிந்து கொண்டு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு போராட்டத்தை முன்னெடுப்பதுதான் இன்று அவசியமானதாகும்//

    Vinavu team outlines a Fascist theory about “Prabhakaran” alias “Rajapaksa” which so far had destroyed and suppressed the working /oppressed classes of Sinhala-Tamils, and calls for an eventual class unity from both Sinhala-Tamil side which would naturally nullify Fascism and resolve the ethnic conflict. Well.

    In this backdrop its evident that ,Vinavu’s Fascist theory is almost identical with the following vision of Trotsky- The inventor of “Theory of Fascism” in 1933.

    Leon Trotsky
    “On the Future of Hitler’s Armies”
    Spring 1940

    “Hitler’s soldiers are German workers and peasants. After the betrayal of Social-democracy and the Comintern, these workers and peasants fell massively to the fumes of chauvinism after the unprecedented military successes.BUT THE REALITY OF CLASS RELATIONS IS STRONGER THAN CHAUVINISTIC INTOXICATION.

    The armies of occupation must live side by side with the conquered peoples; they must observe the impoverishment and despair of the toiling masses; they must observe the latter’s attempts at resistance and protest, at first muffled and then more and more open and bold.

    Besides, the German military and bureaucartic caste, after a series of victories and looting in Europe, will rise further above the people, will spread out more and more its powers, its privileges and will become demoralized as any caste of upstarts.

    The German soldiers, that is, the workers and peasants, will in the majority of cases have far more sympathy for the vanquished peoples than for their own ruling caste. The necessity to act at every step in the capacity of ‘pacifiers’ and oppressors will swiftly disintegrate the armies of occupation, infecting them with a revolutionary spirit”.

    Queries

    1.Whether the above Trotskyist vision about Fascism and class struggle is ideologically acceptable or unacceptable for Vinavu ?

    2. Also interested to know what is your ideology in defining MG Ramachandran as a”Fascist” baboon and Jayalailtha as Parapana “Fascist” etc etc ?

    • நீண்ட நாளைக்கு பிறகு இந்த பதிவை பார்க்க வேண்டியதாகி விட்டது. பாசிசம் குறித்த உங்கள் கேள்வி சரியானது. இது குறித்து நானும் பதிலை எதிர்ப்பார்க்கிறேன். இது குறித்து காரி அவர்கள் பதிவிட்டதற்கு நன்றி. இது குறித்து உங்கள் கருத்தையும் எதிர்ப்பார்க்கிறேன். வினவின் கருத்தையும் எதிர்ப்பார்க்கிறேன். இதில் பதிவிட்டவர்களும் இது குறித்து கருத்து அறியலாம்.

  12. few mistakes:
    “இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தப்படி குடியேற்றத் திட்டங்களில் தமிழருக்கு உரிமை, மாவட்ட சபைகளில் சுயாட்சி உரிமை, சிங்களத்தோடு தமிழையும் அரச கரும மொழியாகக் கொள்வது ஆகிய ‘சலுகைகள்’ கிடைத்தன. ”
    The agreement was only signed. It was never implemented. Banda Chelva pact did not agree your last point. Finally Banda (Bandaranayake) officially annouced that we will not implement the pact.

Leave a Reply to Ganesh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க