privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !

கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !

-

கல்வி என்பது சேவையே! வியாபாரப் பண்டமல்ல!
தமிழ் என்றால் தன்மானம்! 
ஆங்கிலம் என்றால் அடிமை புத்தி!

  • அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து!
  • அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கு!
  • பொதுப்பள்ளி – அருகமைப் பள்ளி முறையை அமுல்படுத்து!
  • அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு!

கருத்தரங்கம் – பேரணி – ஆர்ப்பாட்டம்!
தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!

ன்பார்ந்த மாணவர்களே – பெற்றோர்களே,

போதிய வகுப்பறை இல்லை, வாத்தியார் இல்லை, கழிவறை, குடிநீர் வசதிகள் எதுவுமே இல்லை. இதுதான் அரசுப்பள்ளிகளின் இன்றைய அவல நிலைமை. சுமார் 1 கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் புகலிடமாக இருக்கும் இந்த அரசுப்பள்ளிகளை அழியவிடாமல் காப்பது நம் அனைவரின் கடமை.

தரமான கல்வி, ஆங்கிலவழிப் பயிற்சி எனும் விளம்பரங்களைக் காட்டி தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருகுவதால், அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால், உண்மை என்ன தெரியுமா? 2011 ம் ஆண்டு 10 – வது பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் (ஆதாரம் :  மே,27-2011,  தினமணி ).

விளையாட்டுத்துறை, கலாச்சாரத்துறை, மொழி ஆளுமை, விசயங்களைப் புரிந்துகொள்வது, பிரச்சனைகளை எதிர்கொள்வது என எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருபவர்களும் அரசுப்பள்ளி மாணவர்கள்தான். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்களின் கடுமையான உழைப்பினால் கீழ்நிலையில் உள்ள மாணவர்கள் தரம் உயர்வதோடு, முதல் மதிப்பெண்ணும் எடுக்கிறார்களே, இதுதான் உண்மையான சாதனை!

இத்தகைய அரசுப்பள்ளிகள் சீரழிவதற்கு யார் காரணம்? கல்வியைத் தனியார் மயமாக்கும் அரசின் கொள்கைதான். பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுமென்றே போதிய நிதி ஒதுக்குவதில்லை. இதன் காரணமாக சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் ஒரே வாய்ப்பான அரசுப்பள்ளிகள் நாள்தோறும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை தமிழக அரசு. மாறாக, தனியார் பள்ளிகள் கேட்கும் பணத்தைக் கட்டணமாக நிர்ணயித்து பகற்கொள்ளைக்கு காவல் நிற்கிறது.

சிறப்புப் பயிற்சிகள், ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மோசடி, தரமற்ற ஆசிரியர்கள், 10 ஆம் வகுப்பு பாடங்களை 9-வதிலும், 12ஆம் வகுப்பு பாடங்களை 11-ம் வகுப்பிலும் நடத்துவது, அரசு பொதுத் தேர்வின்போது டிஜிட்டல் பிளக்ஸ் பேனரில் விடைகளை எழுதிப் பிடிப்பது, இதுதான் தனியார் பள்ளிகளுடைய தரத்தின் யோக்கியதை. அரசுப்பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேடிப்பிடித்து, தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொண்டு அவர்களை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கும் தில்லுமுல்லுக்குப் பெயர் சாதனையா? வெட்கக்கேடு. இது பெற்றோர்களை ஒட்டச் சுரண்டுவதற்கான கிரிமினல் வேலை.

கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை அமுல்படுத்த விடாமல் முடக்க முயன்று தோற்றுப்போன பார்ப்பன பாசிச ’ஜெயா’, இன்று தமிழை மெல்ல மெல்ல அழிக்கும் சதித் திட்டத்துடன் ஆங்கிலவழிக் கல்வியை அரசுப்பள்ளிகளில் திணித்துள்ளார். ஆங்கிலவழியில் படித்தால் அறிவாளியாகலாம்; எங்கு போனாலும் வேலை கிடைக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. கணிதமேதை ராமானுஜம், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில் தழிழ்வழியில் படித்து புகழ் பெற்றவர்கள்தானே, இன்று அரசுத்துறையிலுள்ள அதிகாரிகள், பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் தமிழ் வழியில் படித்து வேலை பெறவில்லையா? ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, பொறியியல் பட்டம் பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி வீதிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என்ற செய்திகளை பார்க்கவில்லையா? ஆங்கில வழியில் படித்தால்தான் வேலை என்பது ஒரு மாயை என்பதை புரிந்துகொள்வோம்.

ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பது வேறு, ஆங்கில வழியில் கல்வி என்பது வேறு. ஒருபுறம் அமெரிக்கா மீதான அடிமை மோகத்தை பெருமையாக ஏற்றுக்கொள்ளச் செய்வது, மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆங்கிலம் படித்த தொழில் நுட்பக் கொத்தடிமைகளை அதிகமாக உருவாக்குவது, இப்படிப்பட்ட புதிய மெக்காலே கல்வித் திட்ட வழிகாட்டுதலின் கீழ் கல்வித்துறை இயக்கப்படுகின்றது. தாய் மொழியில் இன்றி ஆங்கில வழியில் கல்வி என்பது சுய சிந்தனை, நாட்டுப்பற்று, தாய்மொழிப் பற்று, சமூக உணர்வு ஆகியவற்றை அறுத்தெறியும் அபாயகரமானது என்பதை உணருவோம்.

பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, பின்லாந்து என உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற, பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நம் நாட்டில் இவை கல்வியாளர்களின் கனவாகவே மட்டுமே உள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரின் பிள்ளைகளும் ஒரே இடத்தில், ஒரே மாதிரியானக் கல்வி பெற பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறைதான் சிறந்தது, அதுதான் நம் அனைவரின் தேவை. ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்றுமுறை, ஒரே தேர்வுமுறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளைக் கொண்டு பொதுப்பள்ளி (அரசுப்பள்ளி) இயங்க வேண்டும். மாணவர்கள் சோர்வின்றி, விருப்பப் பூர்வமாக, பாதுகாப்பாகச் சென்று படிக்க ரேசன் கடையைப்போல் அந்தந்த வட்டாரத்திலேயே அருகமைப் பள்ளி முறையில் செயல்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வியில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் ஒழித்து சமத்துவமான கல்வியை அனைவருக்கும் வழங்க முடியும்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டில் புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக இன்று கல்வி பண்டமாக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. கல்வி தனியார்மயம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காசு உள்ளவனுக்கே கல்வி என்ற புதிய பார்ப்பனிய குலக்கல்வி முறை அமுலாக்கப்படுகிறது. அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வியை கொடுக்க வேண்டிய அரசு, தன் பொறுப்பில் இருந்து முழுமையாக விலகி வருகிறது. கல்வி தனியார்மயக் கொள்கையை வீழ்த்தாமல், ஏழை மாணவர்களின் இலவச கல்வி உரிமையை நிலைநாட்ட முடியாது. அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக்கவும், அனைவருக்கும் இலவசமாக – கட்டாயமாக தாய்மொழியில், விஞ்ஞானப்பூர்வமான கல்வியைத் தரமாக அரசே கொடுக்கப் போராடுவோம். இதனை சாதிக்க மாணவர்கள்-பெற்றோர்கள்- ஆசிரியர்கள் ஓர் அணியில் திரள்வோம்!

தமிழக அரசே!

  • தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டுமே அரசுப் பணியில் அமர்த்து!
  • வழக்காடு மன்றங்கள் முதல் எல்லா அரசு அலுவலகங்களிலும் முற்றிலும் தமிழிலேயே அலுவல்களை நடத்து!
  • மாணவர் சங்கங்களை எல்லாப் பள்ளிகளிலும் இயங்க அனுமதி!
  • மாணவர்களுக்கு உரிய ஜனநாயக உரிமைகளை வழங்கு!
  • மாணவர்களின் கலை, இலக்கிய, விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரவும், ஊக்கப்படுத்தவும் உரிய வசதிகளை செய்துகொடு!
  • மறுகாலனிய அடிமை மோகத்தை திணிக்கின்ற புதிய மெக்காலே கல்வி முறையை தூக்கியெறி!
  • மனித மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களும், நாட்டுப் பற்றும் கொண்ட விஞ்ஞானபூர்வமான கல்வியை வழங்கு!

மாணவர்களே !

  • தனியார் கல்வி நிறுவனங்கள் என்றால் தரமானக் கல்வி என்ற பித்தலாட்டத்தை தோலுரிப்போம்!
  • ஆங்கிலவழிக் கல்வி பயின்றால் அறிவு வளரும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற மடமையை கொளுத்துவோம்!
  • மாணவர்கள், இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நுகர்வுவெறி, ஆபாசச் சீரழிவு கலாச்சாரம், டாஸ்மாக் போதை வெறி ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவோம்!
  • நாட்டுப்பற்று, சமூகப்பற்று, ஜனநாயக உணர்வு ஆகியவற்றை ஓங்கச் செய்வோம்!
  • மாணவர் – ஆசிரியர் – பெற்றோர்கள் ஓர் அணியில் திரள்வோம்!
  • கல்வி வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
  • அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.