privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத் கோபமெல்லாம் உண்மையல்ல !

அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத் கோபமெல்லாம் உண்மையல்ல !

-

இரண்டு தனிச்சிறப்பான செய்திகளின் கதைமாதவன்குட்டி பிள்ளை

மும்பையில் பெண் பத்திரிகையாளர் மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவத்துக்கு அடுத்த நாள், தொலைக்காட்சி நிலையங்களில் ஒலித்த ஆவேச குமுறல்களுக்கும், இடி முழக்க கண்டனங்களுக்கும் நடுவே, டைம்ஸ் நவ் சேனலில் ராஜ் தாக்கரே அவரது “குற்றச் செயல்களுக்கான இரு மாநில கோட்பாடு” பற்றியும், என்டிடிவி சேனலில்அமிதாப் பச்சன் இந்த சம்பவத்தின் “கொடூரத்தை”ப் பற்றியும் பேசுவதை பார்க்க நேரிட்டது.

அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத்
அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத்

ராஜ் தாக்கரே வாயை திறக்கும் போதெல்லாம் வந்து விழும் திட்டமிடப்பட்ட வெறுப்பும், வாய் வீச்சும் யாரையும் ஆச்சரியப்படவோ, கோபப்படவோ செய்ய முடியாத நிலையை அடைந்திருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியுடனான நேர்முகத்தில் அவர் மும்பையில் நடக்கும் குற்றச் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் உத்தர பிரதேசம், பீகாரிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது சுமத்தினார். முந்தைய நாள் நடந்திருந்த பாலியல் வன்முறை சம்பவத்தின் குற்றவாளிகள் அந்த மாநிலங்களை சேராதவர்களாக இருந்தால் என்ன செய்வது என்பதற்காக தான் அந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பாக பேசவில்லை என்ற வாக்கியத்தையும் சேர்த்துக் கொண்டார். “அவர்களை” கட்டுப்படுத்துவதற்கு மகாராஷ்டிராவை ஆளும் பொறுப்பை தன்னிடம் தர வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால், இதை ஒரு தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்தவில்லை என்றும் சொல்லிக் கொண்டார். அது ஒரு விசித்திரமானதொரு நேர்முகமாக இருந்தது.

பொதுவாக தனது விருந்தினர்களின் ஒவ்வொரு கருத்துக்கும் 40 உணர்ச்சிகளையும், எதிர் கருத்துக்களையும் கொட்டும் அர்னாப் கோஸ்வாமி, அவரை விட பெரிய அடாவடி பேர்வழியை நேருக்கு நேர் சந்தித்த போது ஒரு சுண்டெலியைப் போல பயந்து, பூனையைப் போல கமறிக் கொண்டிருந்தார். இந்த நேர்முகத்தின் நோக்கம் பாலியல் வன்முறை குற்றம் பற்றி விவாதிப்பது அல்ல என்பதும் தனது கட்சியின் இரத்தத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும் மாற்று இனத்தவர் மீதான வெறுப்பை கொட்டுவதுதான் ராஜ் தாக்கரேவின் நோக்கமாக இருந்தது என்பதும் தெளிவானது. பின்னர் அந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. தாக்கரே அதை எதிர்பார்த்து தப்பிக்கும் வாக்கியத்தை சேர்த்துக் கொண்டிருந்தாலும், கோஸ்வாமி இது குறித்து கேள்வி கேட்டு அவரை ஒரு போதும் குடையப் போவதில்லை.

பாலியல் வன்முறை சம்பவம் நடந்த அடுத்த நாள் அமிதாப் பச்சன் என்டிடிவியில் பர்கா தத்துக்கு நேர்முகம் அளித்தார். பர்கா தத்தின் “த பக் ஸ்டாப்ஸ் ஹியர் (பொறுப்பு இங்கு நிற்கிறது)” நிகழ்ச்சியின் சிறப்பு பகுதியில் அமிதாப் பச்சனின் நேர்முகம் ஒளிபரப்பானது. 45 நிமிடங்களுக்கு பர்கா தத்தும் அவர் திரட்டியிருந்த விவாதக் குழுவினரும் பாலியல் வன்முறை குறித்து வெளிப்படுத்திய கோபத்துக்கும், கொதிப்புக்கும் பிறகு இந்த நேர்முகம் ஒளிபரப்பானது. அமிதாப் பச்சன் திரைக்கு வந்த பிறகு, ஆரம்பத்திலிருந்தே பர்கா தத்தின் எல்லா கேள்விகளும் ‘சத்யாக்ரஹா’ என்ற சொல்லோடு கோர்க்கப்பட்டிருந்தன என்பதை கவனிக்க முடிந்தது. அது அமிதாப் பச்சன் நடித்து வரவிருக்கும் திரைப்படத்தின் பெயர் என்பது தற்செயலானதில்லை.

அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளின் பகுதிகள் இவை :

“அமிதாப் பச்சன், திரைப்படத்தின் மைய பாத்திரமான நீங்கள்….”

“டெல்லி கூட்டு பாலியல் வன்முறையைப் பற்றி பேசும் போது சத்யாக்ரஹா எப்படி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று குறிப்பிட்டீர்கள். இப்போது உங்கள் நகரத்தில் ஒரு 22 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவர் தன் பணி நிமித்தமாக வெளியில் சென்ற போது இது நடந்திருக்கிறது. மக்கள் மத்தியில் கோபம் பொங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது சத்யாக்ரஹத்தை நடத்துகிறார்கள் என்று கருதலாம். மும்பையில் நேற்று இரவு நடந்ததற்கும் உங்கள் சினிமாவில் நீங்கள் சொல்ல வருவதற்கும் ஒரு இசைவு இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா…”

‘‘உங்கள் திரைப்படம் ஆய்வு செய்யும் சாதாரண மனிதரின் கோபத்தை இப்போது நீங்கள் சமூகத்தில் பார்க்கிறீர்களா? அது ஆரோக்கியமானதா அல்லது அராஜகமானதா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவது அதன் வசூலை அதிகரிப்பதற்கான சந்தை நடவடிக்கை. அதன்படி சத்யாக்ரஹா திரைப்படத் தயாரிப்பாளர்களின் லாப வேட்டையை, பாலியல் வன்முறைக்கான செய்தி விவாதத்துடன் இணைப்பதுதான் நடந்திருக்கிறது. இது புரிந்தவுடன், அதுவரை வழக்கமான ஒரு நேர்முகமாக தோற்றமளித்தது கேவலமான ஒன்றாக மாறி விட்டது.

இவை நியாயமான ஆசிரியர் குழு முடிவுகள் என்று அர்னாப் கோஸ்வாமியும், பர்கா தத்தும் கருதியிருக்கலாம். மற்ற எந்த சமயத்திலும் அது உண்மையாகவும் இருந்திருக்கலாம். ராஜ் தாக்கரேவை நேர்முகத்துக்கு வர வைப்பது ஒரு ஆங்கில சேனலுக்கு சிரமமான வேலைதான், அவர் என்ன சொன்னாலும் அது பரபரப்பான செய்தியாகும் என்பதும் இருக்கிறது. அது போல, சூப்பர் ஸ்டார்கள் அவர்களது திரைப்படங்கள் வெளியாகும் போது மட்டும், அதைப் பற்றி பேசுவதற்கு மட்டும்தான் கிடைப்பார்கள். இந்த இரண்டு ஆளுமைகள் தமக்கு ஆதாயம் இருந்தால்தான் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வார்கள். அது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஆனால் இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் பாலியல் வன்முறையை தொடர்ந்த நாட்களில் சமூகம், அறம், தர்மம் என்று கதறிக் கொண்டிருந்தவர்கள். ஒவ்வொரு நிமிடமும் தார்மீக குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தமது சுயநலம் என்று வந்தவுடன், தமக்கு மட்டுமான பிரத்தியோகமான செய்தி என்ற வாய்ப்புக்கு முன்பு அந்த தார்மீக அறங்களை பின் தள்ளியிருக்கிறார்கள்.

இது போன்ற உணர்ச்சி பூர்வமான சூழலில், ஒரு தார்மீக ஆவேசத்துடன் பேசுவதை செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் செய்வதில்லை. அதிர்ச்சி, அவலம், கோபம் ஆகியவற்றின் நிழலில் சமூகமே சொத்தையாக தெரியும் போது உங்களுடைய தனிப்பட்ட குறைகளை நீங்கள் எப்படி உணர முடியும்?

சமூக கோபத்தின் குரலாக நீங்கள் இருக்கும் போது, பாலியல் வன்முறை மீதான விவாதம் என்ற போர்வையின் கீழ் ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்த முயற்சிப்பது வேறு எதையும் விட கேவலமானது. ஒரு வேளை அப்படி இல்லையோ? புலம் பெயர்ந்த தொழிலாளர்களை குற்றப் பிரிவினர் என்று முத்திரை குத்தும் அரசியல்வாதிக்கு தளம் ஏற்படுத்திக் கொடுப்பது அதை விட கேவலமானது என்று வைத்துக் கொள்ளலாம்.

நன்றி: மாதவன்குட்டி பிள்ளை – ஓபன் மேகசீன்
தமிழாக்கம்: அப்துல்