privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !

கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !

-

னியார்மயத்தை நியாயப்படுத்துவதற்கு நம் நாட்டு முதலாளிகளும், அரசும் அதிகம் சிரமப்படத் தேவையில்லாத சூழலை உருவாக்கிக் கொடுத்த பெருமை அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையே சாரும். தொலைபேசி, மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் போன்ற சேவைத் துறைகள் தொடங்கி கல்வி வரையில் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை.

ஒருபுறம் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதன் மூலம் அரசுப் பள்ளிகளை அரசே திட்டமிட்டு ஒழித்து வருகிறது. அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு அந்தப் பணியை பல ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். துணைத் தொழில்கள், வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன், தாமே தனியார் பள்ளிகளைத் துவங்கி நடத்துவது என்று அனைத்து வகை அயோக்கியத்தனங்களையும் கூச்ச நாச்சமின்றி செய்பவர்களாக ஆசிரியர்கள் பலர் உருவாகியிருக்கின்றனர். தமிழ் வழிக் கல்வியாகட்டும், சமச்சீர் கல்வியாகட்டும், கல்விக்கான மானிய வெட்டாக இருக்கட்டும் எந்த ஒன்றையும் எதிர்த்து பெயரளவுக்குக் கூட ஆசிரியர் சங்கங்கள் போராடுவதுமில்லை.

இத்தகைய பாலைவனத்தில் சோலைகளைப் போல ஆங்காங்கே சில அற்புதமான மனிதர்கள், ஆசிரியப் பணிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். பணமில்லாதவனுக்கு கல்வி இல்லை என்பது ஒரு விதியாகவே மாறி வருகின்ற இன்றைய சூழலில், அதனை மறுப்பதற்கான நம்பிக்கையை இத்தகைய ஆசிரியர்கள்தான் நமக்கு வழங்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல. அத்தகைய நம்பிக்கை நட்சத்திரங்களை நாடறியச் செய்வதன் மூலம் கல்வி தனியார்மயத்துக்கு எதிரான போராட்டத்திற்கு வலுச் சேர்க்க இயலும் எனக் கருதுகிறோம்.

மிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளின் நிலைமை பல ஆண்டுகளாக எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்த நோயாளிகளைப் போல் பரிதாபகரமானதாகவே உள்ளது. இந்த நம்பிக்கையற்ற சூழலில், இருண்ட கானகத்தின் மத்தியில் மருத்துவ உபகரணங்களோ வசதிகளோ இன்றி இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிகரானதொரு சாதனையை சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள். அத்தகையதொரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம்.

சுமார் 150 குடும்பங்களைக் கொண்ட கவரப்பட்டு கிராமம் சிதம்பரம் நகரில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வாண்டையார் குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு மாளிகைகளைத் தவிர பெரும்பாலும் ஓலைக் குடிசைகளே கண்ணில் தட்டுப்படுகின்றன. வளமாக விவசாயம் நடக்கும் பகுதி. பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். வேலை இல்லாத நாட்களில் அரசின் நூறு நாள் வேலைக்கும் செல்கிறார்கள். ஊரில் இரண்டு மளிகைக் கடைகள். கொஞ்சம் பெரிதாகத் தெரிந்த கடையின் ஒரு நாள் வியாபாரம் 300 ரூபாயாம். இதுதான் அவ்வூர் மக்களின் பொருளாதார நிலைமை.

கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் உள்ள வீரன் கோவில் திட்டு, சிவபுரி, அம்பிகாபுரம், வடுகத்திருமேடு கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்த உயர்நிலைப் பள்ளிக்குத்தான் படிக்க வருகிறார்கள். தலைமையாசிரியர் பழனிவேல் இந்தப் பள்ளிக்குப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆவதாகச் சொன்னார். திருத்தமான கட்டிடங்கள் அழகாகப் பராமரிக்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது. ஒவ்வொரு வகுப்பறையும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரத்தோடு கடமை முடிந்தது என்று கருதி கூலிக்கு மாரடிக்கும் பல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்தியில், கவரப்பட்டு தலைமையாசிரியர் பழனிவேல் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

வகுப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பண்பை மாணவர்களுக்கு கற்றுத் தர சுழற்கோப்பை ஒன்றை அவர் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாதமும் தூய்மையான வகுப்பு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வகுப்புக்கு சுழற்கோப்பை பரிசளிக்கப்படும். சுழற்கோப்பையைப் பரிசாகப் பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாதந்தோறும் ஒட்டப்படும். சுழற்கோப்பை பரிசு பெற்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பழனிவேல் தனது சொந்த முயற்சியில் மாணவர் அடையாள அட்டை ஒன்றை வழங்குகிறார். இந்த அடையாள அட்டையைப் பெறுவதோடு, கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஆசையில் எல்லா வகுப்புகளும் அவ்வளவு தூய்மையாக மாணவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாலையில் பள்ளி முடிந்த பின் துப்புரவுப் பணிக்கான நேரம் தொடங்குகிறது. வகுப்பறைத் தூய்மை மாத்திரமல்ல, மாணவர்களும் நேர்த்தியாக சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பதில் பழனிவேல் கவனமாக இருக்கிறார்.

“எங்க பசங்க நல்லா விளையாடும் ஆர்வம் கொண்டவங்க சார். விளையாட்டிலே சில நேரம் சட்டை பொத்தான்கள் அறுந்து விடும், அல்லது கால் சட்டை கிழிந்து விடும். அதற்காக இங்கே ஒரு பழைய தையல் இயந்திரத்தை நானே பழுது பார்த்து வைத்திருக்கிறேன். கால் சட்டை கிழிந்து தைக்க நேர்ந்தால், இடைப்பட்ட அந்த நேரத்தில் அணிந்து கொள்ள மாற்று உடைகளும் ஒரு தனியறையில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். மாணவர்கள் அவர்களே தங்கள் உடைகளைத் தைத்துக் கொள்ளலாம்”

தனது பள்ளியின் சின்னச் சின்ன செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும் போதும் பழனிவேல் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகத்தோடு பேசுகிறார். மாணவிகளின் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, பள்ளியில் ஒரு பெண் ஆசிரியையின் பொறுப்பில் இலவச சானிடரி நாப்கின்கள் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளன.  மாணவர்களுடைய சைக்கிள் சக்கரத்தில் காற்று போய் விட்டால் காற்று நிரப்ப அடி பம்ப் ஒன்றும், பஞ்சராகி விட்டால் பழுது பார்த்துக் கொள்ள தேவையான உபகரணங்களும் பழனிவேலின் சொந்த முயற்சியில் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளன.

“பசங்களுக்கு பஞ்சர் ஒட்டத் தெரிஞ்சிருக்கணும் சார். சொந்தமா ஒரு வேலை கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு, தன்னோட சைக்கிளை தானே சரி செய்த மாதிரியும் ஆச்சு. தங்களோட கிழிந்த சீருடைகளைத் தைக்க எளிமையாக தையல் போடவும் கற்றுக் கொள்கிறார்கள் சார். நானே எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்ல மாட்டேன் சார். பசங்களுக்கு வழியைக் காட்டிட்டா அப்புறம் அவங்க கற்பூரம் போல பிடிச்சுக்குவாங்க” என்று சொல்லும் பழனிவேல், பள்ளி நேரம் முடிந்த பின்னும் இரவு எட்டு, ஒன்பது மணி வரை பள்ளியிலேயே தான் இருக்கிறார்.

”கல்வி போதிப்பது மட்டுமல்ல, மாணவர்களுக்கு அறிதலின் மேல் ஒரு ஆர்வமும், அக்கறையும் வரவழைப்பது தான் பள்ளியின் கடமை” என்கிறார் பழனிவேல். கவரப்பட்டு பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிற்கும் மாணவர் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பொறுப்பில் செய்திப் பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. தினசரி தமிழ் நாளிதழ் ஒன்று தலைமையாசிரியரின் ஏற்பாட்டின் பேரில் எல்லா வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் மாணவர்கள் செய்தித் தாளில் இருந்து சில முக்கியச் செய்திகளை வாசிக்க, மாணவர் தலைவர் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திக் குறிப்புகளை செய்திப் பதிவேட்டில் குறித்துக் கொள்கிறார்.

பள்ளியில் அறிவியல் மன்றம், தமிழ் மன்றம், கணித மன்றம், சமூக அறிவியல் மன்றம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளில் பாட நூலில் இல்லாத ஒரு கேள்வி அன்றாடம் கேட்கப்படுகிறது. இதற்கான பதிலை மாணவர்கள் நூலகத்திலிருந்து தேடி எடுத்து, அதற்கான கரும்பலகையில் எழுத வேண்டும். சரியான பதிலை முதலில் எழுதுபவரின் பெயர் அடுத்த நாள் காலை மாணவர் கூடலின்போது அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

இது தவிர, ‘நூலகத்தில் இன்று நான் அறிந்து கொண்டது’ என்கிற வகையினத்தில் கரும்பலகை ஒன்றும், ‘இன்றைய செய்தியிலிருந்து’ என்கிற வகையினத்தில் இன்னொரு கரும்பலகையும் பள்ளியில் பராமரிக்கப்படுகிறது. மாணவர்கள் அன்றைக்கு கற்றுக் கொண்டதிலிருந்து சில குறிப்புகளை அந்தக் கரும்பலகையில் எழுதலாம். மேலும் புகார் பெட்டியும், ஆலோசனை பெட்டிகளும் மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. நல்ல குறிப்புகளை எழுதும் மாணவர்களுக்கும், நல்ல ஆலோசனைகளைச் சொல்லும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பள்ளியில் தவற விடப்பட்ட பொருட்கள் கிடைத்தால் ஒப்படைக்கும் மாணவர்களுக்கும் கூட காலைக் கூட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தலைமை ஆசிரியர் பழனிவேல் அளிக்கும் பரிசு 50 பைசா மிட்டாயாக இருக்கலாம், அல்லது பள்ளியின் இலச்சினை பொறிக்கப்பட்ட சின்ன பேட்ஜாகவும் இருக்கலாம். அதை எல்லோர் முன்னிலையிலும் அறிவித்து மனம் நிறைந்த பாராட்டுக்களோடு வழங்குகிறார்.

“விலை மதிப்பு ஒரு பிரச்சினை இல்லை சார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் பாராட்டுக்களைப் பெறுவதும், அங்கீகாரம் கிடைப்பதும் தான் முக்கியம். பசங்க தங்களை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று தாங்களே கருத வேண்டும்.  அதற்காக நான் செய்வதெல்லாம் சின்னச் சின்ன ஊக்குவிப்புகள், அவ்வளவுதான்” என்கிறார் பழனிவேல்.

நாங்கள் பள்ளி முடிந்ததும் அங்கேயே அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த சில மாணவிகளிடம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் தங்கள் பள்ளியையும் ஆசிரியர்களையும் உணர்வுப்பூர்வமாக நேசிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அவர்கள் ஏழு  அல்லது எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவிகள். பொது அறிவைச் சோதிக்கும் சில கேள்விகளோடு, இறுதியாக ”வாழ்க்கையில் நீங்கள் எல்லோரும் என்னவாக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டோம். சிலர் மருத்துவராகப் போவதாகவும், கலெக்டர் ஆகப் போவதாகவும் சொன்னார்கள்.

கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள்
உற்சாகமாய் கவரப்பட்டு மாணவிகள்

இன்னும் சில மாணவிகள் ஆசிரியைகள் ஆவோம் என்றனர். அவர்களிடம் காரணம் கேட்டோம், “நானும் டீச்சர் ஆகி, எங்க ஹெச்.எம் போல யாரையும் அடிக்காம நல்லா பாடம் நடத்துவேன் சார்” என்பதாக இருந்தது அவர்களின் பதில்கள்.

மாணவிகளோடு பேசி விட்டு தலைமையாசிரியர் பழனிவேலின் அறைக்கு வந்தோம். சரியாக அந்த நேரம் பார்த்து ஒரு மாணவி தனது தந்தையோடு வந்திருந்தாள்.

“சார், இந்த பாரத்தை நிரப்பத் தெரியல. கொஞ்சம் நிரப்பிக் கொடுக்க முடியுமா?” அந்தப் பெண்ணின் தந்தை தயங்கியவாரே அறை வாசலில் நின்றார்.

“உள்ளே வாங்க சார்” என்றவர், “இவள் பெயர் மன்மதா. எங்க பள்ளியின் மாணவி தான். இந்த வருசம் நடந்த பொதுத்தேர்வில் எங்க பள்ளியிலேயே அதிக மதிப்பெண் வாங்கிய பெண் இவள் தான். இப்போ பதினோராம் வகுப்பில் சேர சிதம்பரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விண்ணப்பிக்கப் போறாங்க” என்று எங்களிடம் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணின் தந்தையிடம் இருந்து விண்ணப்பப் படிவத்தை வாங்கி விவரங்களைக் கேட்டு நிரப்பத் துவங்கினார்.

நிமிர்ந்து பார்த்தோம். தலைமை ஆசிரியர் நாற்காலிக்கு மேல் “இந்த ஆண்டின் சாதனையாளர்கள்” என்ற தலைப்பிட்டு பெரிய வழவழப்பான தாளில் மாணவி மன்மதாவின் புகைப்படமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த மற்ற மாணவர்களின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் பெண்ணின் ஏழைத் தந்தை தனது மகளின் பெயர் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு கண்ணில் நீர்மல்க நின்று கொண்டிருந்தார். நாம் அவரை நோக்கித் திரும்பியதும் நாம் ஏதும் கேட்காமலேயே பேசத் துவங்கினார்.

“சார், நான் சிதம்பரத்தில் ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கேன். நம்மள மாதிரி கஷ்டப்படாம நம்ம பிள்ளைங்களாவது நல்லா இருக்கணும் சார். எங்க ஹெச்.எம் வந்த பின்னாடி தான் இந்தப் பள்ளிக்கூடமே இவ்வளவு நல்லா நடக்குதுன்னு எழுதிக்கங்க சார்”. மன்மதா 96 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். இரண்டாம் இடம் பிடித்திருந்த ராபின் ராஜ், அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.

தலைமையாசிரியர் பழனிவேல், மன்மதா, ஆட்டோ ஓட்டுநரான தந்தை
தலைமையாசிரியர் பழனிவேல், மன்மதா, ஆட்டோ ஓட்டுநரான தந்தை

பழனிவேல் இந்தப் பள்ளிக்கு வருவதற்கு முன்னர் வேலை பார்த்துக் கொண்டிருந்த பள்ளியிலும் இதே போன்ற முன்முயற்சியோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். பணிமாற்றம் செய்யப்படுகிறார் என்ற செய்தி பரவியதும் மாணவர்கள் கண்ணீருடன் அவரைத் தடுத்திருக்கிறார்கள். பெற்றோர்கள் சாலை மறியல் செய்திருக்கிறார்கள். பின்னர் பழனிவேல் தானே தலையிட்டு அவர்களை சமாதானம் செய்திருக்கிறார். மக்களால் கண்ணீரோடு விடையளிக்கப்பட்டு இங்கே வந்திருக்கிறார்.

மெல்ல இருள் கவியத் தொடங்கி விட்டது. கவரப்பட்டிலிருந்து சிதம்பரம் செல்வதற்கான கடைசிப் பேருந்தைப் பிடிக்க வேண்டும்.

“நீங்க கிளம்புங்க சார். இங்கே பத்தாவது படிச்ச பசங்க இப்ப வேற பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்கிறவங்க டியூசனுக்கு வருவாங்க. நான் அடிப்படையில் அறிவியல் ஆசிரியர்” என்றார் பழனிவேல். இந்த இலவச டியூசனுக்குப் பின்னர், இரவு ஒன்பது மணிக்குத்தான் அவரது வேலை நாள் முடிவடைகிறது.

“இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமான ஆர்வம் எப்படி சாத்தியமாயிற்று?” என்ற கேள்விக்கு லேசாகப் புன்னகைத்துக் கொண்டார்.

“நீங்க பெரிய வார்த்தைகள் எல்லாம் போடறீங்க. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; அவ்வளவு தான். எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை. அதைச் செய்கிறேன். அவ்வளவு தான்”  என்றார்.

அவர் சொல்வது எளிய உண்மையாகத்தான் இருக்கிறது. எனினும் அது தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அளவுக்கு அரிதாக இருக்கிறதே!

–    புதிய கலாச்சாரம் செய்தியாளர்
________________________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
________________________________________________________________

புகைப்படத் தொகுப்பு [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

  1. அரசு பள்ளிகள் குறித்து வரும் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். நிச்சயமாக ஏற்கனவே வெங்கடேசன் தமிழ்மொழி குறித்து எழுதிய அருமையான விமர்சனம் போல ஒரு குற்ற உணர்வு தான் மனதில் உருவாகின்றது. நான் இருக்கும் திருப்பூரில் உள்ள காந்தி நகர் வேலம்பாளையம் உள்ள பகுதிகளில் கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு குழந்தைகளை சேர்க்கச் சென்ற போது எப்படி பாதுகாப்பு அற்ற கட்டிடங்களும் சுகாதாரமற்ற நிலைமையும் இருந்ததோ அப்படித்தான் இன்று வரையிலும் உள்ளது. ஆனால் நம்பிக்கை வெளிச்சம் என்பது இங்கே கணபதிபாளையம் என்ற பகுதியில் உள்ள அரசுபள்ளிக்கூடம் இதே போல தனிப்பட்ட நபர்கள் மற்றும் ஒற்றுமையினால் மிக அற்புதமாக வருடந்தோறும் நூறு சதவிகிதம் மற்றும் நல்ல எண்ணங்களுடன் நிர்வாக வழிகாட்டுதல் உடன் நடந்து கொண்டும் வருகின்றது.

    சகோதரி அரசு பள்ளியில் தலைமையாசிரியாக இருப்பதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிக்கூடங்களைப் பற்றி ஒவ்வொரு முறையும் பேசி தெரிந்து கொள்வதுண்டு. ஏற்றமும் தாழ்வும் மகிழ்ச்சியும் சோகமும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் ஏராளமாக கலந்துள்ளதை கேட்கும் போது இன்னமும் நம்பிக்கை உள்ளது.

    தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 1000 பேர்கள் படித்த ஒரு பள்ளியில் இன்று ஆறாம் வகுப்பு முதல் 12 வரையிலும் உள்ள வகுப்பறையில் மொத்தம் 300 பேர்கள் மட்டுமே படிக்கின்றார்கள். ஆனால் அங்குள்ள ஆசிரியர்களின் மொத்த மாத சம்பளம் 10 லட்சம் அளவுக்கு வருகின்றது. 10 ஆசிரியர்களின் இரண்டு மோசமான ஆசிரியர்கள் இருப்பதால் ஒரு பள்ளியின் வளர்ச்சி மொத்தமாக பாதிக்கப்படுகின்றது.

    ஏரியூர் அருகே இருக்கும் ஒரு பள்ளியில் கணக்கு பாடத்திற்கென்று ஆசிரியரை கடந்து நான்கு வருடமாக அரசு நியமிக்கவில்லை. ஆனால் அந்த பள்ளியில் மாணவர்கள் பத்து மற்றும் பனிரெண்டு வகுப்பில் நூறு சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைகின்றார்கள். காரணம் ஒரு பெண் ஆசிரியர் மற்றொரு பாடம் எடுத்துக் கொண்டு இந்த பாடத்தையும் சுய ஆர்வத்தின் மூலம் எடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்.

    60 சதவிகித அரசுபள்ளியில் இன்னமும் அர்பணிப்பு உணர்வோடு இருக்கும் ஆசிரியர்கள் அதிகமாகவே இருக்கின்றார்கள். அரசாங்கம் உதவி எதுவும் செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதுமானது.

  2. மனிதருள் மாணிக்கம் என்று சொல்வதோ அல்லது ஆசிரியப் பெருந்தகைகளில் குன்றா விளக்கு என்று சொல்வதோ இவருக்குப் பொருந்தாது. இவற்றை விட சிறந்தது ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். படித்து முடித்ததும் உடல் சிலிர்த்து விட்டது – இன்றைய நாளில் இப்படியும் உளத் தூய்மையுடன் பணியாற்றுபவர்கள் இருக்கிறார்களா? என்ற ஆச்சரியத்தில்.

  3. உத்வெகம் அலிக்கும் உன்னத அசிரியர். இது பொன்ர படைப்புகல் தன் தெவை

  4. படிக்கும் போது உணர்ச்சி வயப்பயக்கூடாதுன்னு நினைச்சி தான் இதை படிச்சேன். ஆனால் முடியல.
    தரமான பள்ளிகள் உருவாகினால் தான் தரமான மாணவர்கள் உருவாவார்கள், தரமான மாணவர்கள் உருவாகினால் தான் தரமான சமுகம் உருவாகும். தரமான சமுகம் உருவாகினால் தான் தரமான மனிதர்கள் உருவாவார்கள். இந்த தரங்கெட்ட சமூகத்திற்கும் இடையில் இப்படி ஒரு தரமான ஆசிரியர் உருவாகியிருப்பது அரிதினும் அரிதான செயல்.

    தரங்கெட்ட அரசுகளையும், தரங்கெட்ட அரசுகள் உருவாக்கிய தரங்கெட்ட கொள்கையும் தீயிலிட்டு கொளுத்துவது தரமான மனிதர்களை பயிர்செய்வதற்கான முதல்படி.

  5. இளைய தலைமுறை பல திக்குகளிலிருந்தும் தொடர்ந்து சந்தர்ப்பவாத அரசியல்-பொருளாதார-சமூக-கலாசாரத் தாக்குதல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தலைமை ஆசிரியர் திரு.பழனிவேல் போன்ற நல்லாசான்களே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள்.. வணக்கம் ஐயா..

  6. தரமான கல்வியை வழங்கவேண்டிய மத்திய மாநில அரசுகள் இன்று கல்வி வியாபாரத்தை நோக்கி செல்வதற்கு காரணமாக அமைந்து விட்டது. அவர்கள் செயல்படுத்தி வரும் கல்வி நிறை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆக்க வழியில் அல்ல. அரசு பள்ளிகளின் அழிவுப் பாதையில் தான். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதற்கு உண்டான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்.அரசு அதிகாரிகள் என்று அமைச்சர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை மாற்றிக் கொள்கிறார்களோ! என்று கடமையை உணர்ந்து பணியாற்றுகிறார்களோ, அன்றுதான்அனைத்து அரசு பள்ளிகளின் நிலை நிச்சயம் மாறும். அதுவரை நாம் நம் பள்ளி அளவிலாவது கடமையை உணர்ந்து பணியாற்றுலாமே!!!

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க