privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !

அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !

-

ட இந்திய இந்துக்களின் ஆன்மீக குரு அஸ்ராம் பாபுவை கடந்த சனிக்கிழமையன்று இரவு 12 மணிக்கு காவல்துறையினர் ஒருவழியாக கைது செய்துள்ளனர். ஜோத்பூர் குருகுலத்தில் பயின்ற 16 வயது நிரம்பிய உத்திர பிரதேச மாணவியை  ஆகஸ்டு 15 அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுதில்லி கமலா மார்க்கெட் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நேரில் வந்து ஆஜராகுமாறு அஸ்ராம் பாபு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு நரம்புக்கோளாறு இருப்பதாகவும், அது சரியானவுடன் நேரில் வருவதாகவும் போலீசாரிடம் கதை விட்ட அஸ்ராம் பாபு எப்படியாவது தப்பிக்கலாமென்று பார்த்தார்.

அஸ்ராம் பாபு
பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வது ஆணாதிக்க பொறுக்கிகளின் கைவைந்த கலை

இதற்கிடையில் உமாபாரதி போன்ற பாஜக தலைவர்கள் பலரும் அஸ்ராம் பாபுவுக்காக ஆதரவுக்கரம் நீட்டினர். தெருவோர கிரிமினல்கள் ரேப் செய்தால் அறம் பொங்கும் இந்துஞான மரபின் அரசியல் வாரிசுகள் அதே குற்றத்தை ஆன்மீக குரு செய்தால் மட்டும் அந்த குருக்களைக் காப்பாற்றுவதற்கு கொதித்தெழுகிறார்கள். அஸ்ராம் பாபுவின் மகனான நாராயண் சாய் அப்பெண்ணுக்கு நிலையான மனநிலை கிடையாது என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார். குற்றமிழைக்கப்பட்ட பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வது ஆணாதிக்க பொறுக்கிகளின் கைவைந்த கலை என்பதற்கு இது ஒரு சான்று. வேறு வழியில்லாத நிலையில் அஸ்ராம் பாபுவை கைது செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினார் அப்பெண்ணின் தந்தை.

போலீசார் கடந்த வெள்ளியன்று இரவுக்குள் வந்து விசாரணையில் கலந்து கொள்ளுமாறு உத்திரவிட்டனர். இந்தூரிலுள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சாமியார் வியாழன்று இரவு விமான நிலையத்துக்கு வருவது போல காட்டிக் கொண்டு, ஆனால் வேண்டுமென்றே தாமதமாக வந்து விமானத்தை தவற விட்டார். அவர் நேரில் ஆஜராகாமல் தவிர்க்க நினைத்த அந்த சூழலில் விமான நிலையத்தில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மீது அஸ்ராம் பாபுவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

உடனடியாக ராஜஸ்தான் மாநில போலீசார் மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு விரைந்து சென்று சனிக்கிழமை நள்ளிரவில் சாமியாரை கைது செய்தனர். அதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். சாமியாரை கைது செய்ய விடாமல் தடுக்க ஆசிரமத்திற்குள்ளே ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடியிருந்ததுடன், தடுப்பரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. வெளியில் இருந்தும் சில நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து கூடி பாலியல் வன்முறைக்கு ஆதரவான சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கினர்.

அஸ்ராம் பாபு, மகன்
அஸ்ராம் பாபுவும், மகன் நாராயண் சாயும்.

கைது செய்த போலீசார் அவரை மருத்துவர்களிடம் அனுப்பி பரிசோதனை செய்ததில் அவருக்கு நரம்பு கோளாறு எதுவும் இல்லை என்றும், உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனால் நரம்புக்கோளாறுக்காக ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதால் ஆஜராக முடியாது என முன்னர் அஸ்ராம் பாபு கூறியது வடிகட்டிய பொய் எனத் தெளிவாகியது. மேலும் அவருக்கு ஞாயிற்றுக் கிழமை ஆண்மை பரிசோதனையும் செய்யப்பட்டது. 72 வயது நிரம்பிய சாமியார் அந்த தேர்விலும் பாஸாகவே அவரை ஜோத்பூர் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரை எப்படி குற்றம் நிகழ்ந்தது என நடித்து காண்பிக்க கேட்டுக் கொள்ளவே அதனையும் செய்து காண்பித்திருக்கிறார் அவர்.

அஸ்ராம் பாபு பற்றி எல்லாம் வெட்டவெளிச்சமாகவே, சங் பரிவாரங்களின் சுருதி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் துவங்கியது. சட்டம் தன் கடமையை செய்யும், அதற்கு முன் அனைவரும் சமம் என சுஷ்மா சுவராஜும், ரவிசங்கர் பிரசாத்தும் கூறத் துவங்கினர். மோடியோ பெண்களை தாயாக மதிக்க வேண்டும், காட்டுமிராண்டிகள் தான் அப்படி மதிக்க மாட்டார்கள் என்றும், சாமியார்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும் கூற ஆரம்பித்து விட்டார்.

இந்தூர் - டெல்லி விமானம்
இந்தூர் – டெல்லி விமானத்தில் அஸ்ராம் பாபு

அத்துடன் அஸ்ராம் பாபு சூரத் நகரில் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்திற்கு 1996 முதல் 2010 வரை கட்ட வேண்டிய வாடகைத் தொகையை அபராதங்களுடன் வசூலிக்க உத்திரவிட்டுள்ளார். அந்த தொகை மட்டும் ரூ.18 கோடி. இப்படி மோடி ஓரளவு பல்டியடித்தாலும் முன்னர் அவரது ஆசிரமத்தில் நடந்த சிறுவர்கள் மரணம் குறித்து அமைக்கப்பட்ட திரிவேதி விசாரணை கமிசன் அறிக்கை வந்த பிறகும் அதனை வெளியிடாமல் தவிர்க்கிறார். மேலும் 2002 குஜராத் கலவரங்களின் போது இதே அஸ்ராம் பாபு கொலைகார மோடிக்கு ஆதரவாக கருத்து சொன்னவர். அதற்கு ஆதாயமாக சில பல சொத்துக்களை பெற்றார். மோடிக்கும் இவருக்கும் உள்ள நட்பு ஊரறிந்த ஒன்று.

வி.எச்,பி-ன் அசோக் சிங்கால் மட்டும்தான் இன்னமும் சாமியாருக்கெதிராக சதி நடந்து விட்டதாக வக்காலத்து வாங்குகிறார். ஆனால் குற்றவாளிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளன. ஒரு நாள் போலீசு காவலிலேயே அனைத்து ஆதாரங்களும் கிடைத்து விட்டன. இனி சிங்காலும் சுருதியை குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கொலைகார ஜயேந்திரனையே இன்னும் கும்பிட்டு வருபவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் எனும் போது அஸ்ராம் பாபுவின் ரேப்பெல்லாம் எம்மாத்திரம்?

திங்களன்று நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்ட பிறகு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ஆன்மீக குரு அஸ்ராம் பாபு. அவர் மீதான வழக்கு சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

அஸ்ராம் ஜோத்பூர்
ஜோத்பூரில் அஸ்ராம்

தற்போது சிறையில் இருக்கும் அஸ்ராம் பாபு கங்கை நீரை மாத்திரம் தான் குடிப்பேன் எனக் கூறி விட்டார். தனது கைதுக்கு பத்திரிகைகள் தான் காரணம் என்றும், பத்திரிகை செய்திகளால்தான் அவசரகதியில் போலீசு விசாரணை நடைபெற்று, தான் கைது செய்யப்பட்டதாகவும் அஸ்ராம் பாபு குற்றம்சாட்டினார். ஆரம்பத்தில் சோனியா, ராகுல் காந்தி இருவரும் சேர்ந்து சதி செய்தாக பாஜக குரலில் பேசியது இந்த கிழட்டு நரி. இன்னும் பாகிஸ்தான் சதி என்று பேசாததுதான் பாக்கி.

இதற்கிடையில் அஸ்ராம் பாபுவுக்கு வழங்கப்படும் அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உச்சநீதி மன்றம் விமரிசித்துள்ளது. ஒரு குற்றவாளிக்கு எதற்கு விஐபி பாதுகாப்பு என நீதிபதி சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். திங்களன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய வல்லுறவுக்குள்ளான இளம்பெண் “அஸ்ராம் தண்டிக்கப்படுவதற்காக நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆன்மீக குருவை குழந்தைகளுடன் பழக அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்றால் இந்து மத ஆசிரமங்கள் மற்றும் இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்தால்தான் சாத்தியம். ஏனெனில் தெருவோர கிரிமினல்கள் செய்யும் பாலியல் வன்முறைக்கு அதிகார பலத்தின் ஆதரவும், அரசியல் கட்சிகளின் அருளும் கிடைக்காது. ஆனால் சாமியார்களுக்கு அது அளவில்லாமல் கிடைக்கிறது. எனவே நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!