privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?

ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?

-

ந்த ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுடைய பெற்றோர்களில் குறைந்தது 20 பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கில வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜெயலலிதா அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 3500 ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில் சுமார் 80,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பல பள்ளிகளில் அனைத்து பெற்றோர்களும் ஆங்கில வழிக் கல்வியையே தேர்வு செய்தனர். அதற்கும் முன்னரே மாகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கி விட்டது.

ஆங்கிலம் பயில ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை
ஆங்கிலம் பயில ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை

ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம்தான் தமிழ்நாடு முழுவதும் முளைத்திருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டி போட முடியுமென்றும், அரசுப் பள்ளிகளில் குறைந்து கொண்டே வரும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்றும் சொல்லி கல்வித் துறை அதிகாரிகள் இந்த முடிவை நியாயப்படுத்துகிறார்கள்.

“நாம் வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி முறையில் படித்தோம். நமது குழந்தையாவது ஆங்கில வழிக் கல்வி கற்று முன்னுக்கு வரட்டும்” “அடித்தட்டு மக்களும் தம் பிள்ளைகள் இங்கிலீசு பேசுவதைக் கண்டு மகிழட்டும்” “காசு பணம் இல்லாதவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைக்க கிடைத்த நல்ல வாய்ப்பு” என்றெல்லாம் இத்திட்டம் குறித்து மக்கள் கருதுவதாக துக்ளக் பத்திரிகை கூறுகிறது. மக்களிடம் இத்தகைய ஆங்கில மோகம் பரப்பப்பட்டிருப்பது உண்மைதான்.

தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டால் நல்ல வேலை கிடைத்து முன்னேறி விடலாம் என்ற மயக்கத்தின் காரணமாகத்தான் கடன் வாங்கியோ, சாப்பாட்டுச் செலவை குறைத்தோ, இருக்கும் சொற்ப நிலத்தை விற்றோ, நகைகளை அடகு வைத்தோ பல ஏழைப் பெற்றோர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.

அரசுப் பள்ளிகளை அரசே புறக்கணிப்பதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் வேகமாக சரிந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. 1976-ல் 25 ஆக இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை 1999-ல் 2000 ஆக உயர்ந்தது.

இப்போது தமிழ்நாடு முழுவதும் சுமார் 4600 தனியார் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சம் குழந்தைகளும், சுமார் 2000 மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவ, மாணவிகளும் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவே என்ற போதிலும், அரசுப் பள்ளிகளும் தமிழ் வழிக்கல்வியும் வீழ்ச்சிடைந்து வரும் போக்கை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகின்றன.
தமிழ் நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் சுமார் 50% மாணவர்கள் மட்டுமே 10-ம் வகுப்பு முடித்து மேல்நிலைப் பள்ளிகளில் சேருகிறார்கள். அதற்கு மேல் 15%-க்கும் குறைவான மாணவர்களே இளநிலை பட்டப்படிப்பில் சேருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே பட்ட மேற்படிப்புக்கும், அறிவியல் ஆராய்ச்சி துறைக்கும் போகிறார்கள். ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய தேவை ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை. பெரும்பான்மை மக்கள் தமது வீட்டிலும், சமூகத்திலும் தமிழ் மொழியிலேயே சிந்திக்கின்றனர், பேசுகின்றனர்.

ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் மேட்டுக்குடியினர் பொருளாதாரரீதியில் முன்னேறிய நிலையில் இருப்பதையும், அவர்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்குப் போவதையும் பார்த்த நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கில வழிக் கல்விதான் பொருளாதார உயர்வுக்கான திறவுகோல் என்று கணித்து தமது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.

மேட்டுக்குடி வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் பார்த்து அவர்களுடைய இடத்தையும், பண்பாட்டையும் எட்டுவதுதான் முன்னேற்றம் என்று புரிந்து கொண்டிருக்கும் ஏழை மக்கள், அவர்களுடைய பண்பாட்டின் மலிவுப் பிரதிகளைத் தேடுகிறார்கள். உடைகளிலும், அலங்கார சாதனங்களிலும், கைபேசிகளிலும் கிடைக்கும் மலிவுப் பதிப்புகள் போல, தாகம் தீர்க்க அம்மா வாட்டர் போல, ஆங்கில மோகம் தீர்க்க அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி. ஆனால் இந்தப் பள்ளிகளில் கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் ஏழைகளால் அப்படி ஒன்றும் வாய்ப்புகளை எளிதில் தட்டிக் கொண்டு போக இயலாது.

மேட்டுக்குடியினரின் உயர்வுக்கு காரணம், அவர்கள் ஏற்கெனவே பொருளாதார ரீதியில் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருப்பது, மேல்தட்டு வர்க்கத்தில் அவர்கள் பெற்றிருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொடர்புகள், இவற்றின் காரணமாக கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை தானே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. ஆங்கில வழிக் கல்வி அவர்களது வர்க்க நிலையின் ஒரு வெளிப்பாடு. வெறும் ஆங்கிலத்தின் மூலம் அவர்களது வர்க்க நிலை உயர்ந்து விடவில்லை.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அந்த மொழி வழியாக கல்வி கற்பது மட்டுமே உதவுவதில்லை. முதுநிலைப் பட்டப் படிப்பு வரை கூட ஆங்கில வழியில் படித்திருந்தாலும், எளிய ஆங்கில வாக்கியங்களைக் கூட பேச முடியாதவர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாட, எளிய ஆங்கில வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ள தேவைப்படுவது ஆங்கில மொழிக்கல்வியே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. வீட்டிலும், அலுவலகத்திலும், அன்றாட சமூக உறவுகளிலும் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகின்றனர்.
ஆங்கிலத்தில் பேச, எழுத, படிப்பதற்கான தேவையை 5-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக் கல்வியின் ஒரு பாடமாக ஆங்கிலத்தை கற்பிப்பதன் மூலம் சிறப்பாகவும், முழுமையாகவும் வழங்கி விட முடியும். அப்படி ஆங்கிலத்தை கற்பதற்கான அடிப்படை அறிவு பெறும் திறன் தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் கிடைக்க முடியும்.

ஆங்கில வழிக்கல்வி படித்தால் வேலை என்னும் மூடநம்பிக்கையினை விற்றுக் காசாக்கும் தனியார் பள்ளிகள் !
ஆங்கில வழிக்கல்வி படித்தால் வேலை என்னும் மூடநம்பிக்கையினை விற்றுக் காசாக்கும் தனியார் பள்ளிகள் !

“பைசா 2009” (Programme for International Student Assessment) என்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேட்டுக்குடி மாணவர்களின் அறிவுத் திறனை சோதனை செய்யும் நிகழ்வில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, இமாச்சல பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 74 பிராந்தியங்கள் கலந்து கொண்ட இந்தத் தேர்வில் இவ்விரண்டு மாநில மாணவர்களும் வாசித்தல், கணிதம் இரண்டிலும் 72,73-வது இடங்களையும், அறிவியலில் 73,74-வது இடங்களையும் பிடித்தனர்.

வாசிப்பு என்பதற்கு PISA கொடுத்த ’படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’ என்ற விளக்கத்தின் அடிப்படையில் இவர்கள் தற்குறிகளாகவே இருந்தனர். இவர்கள் மேட்டுக்குடி வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்பதுடன், ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள். வாசிப்பு, கணிதம், அறிவியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் சீனாவின் ஷாங்காய் மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். சீன மாணவர்கள் தாய் மொழி வழியில் படித்திருந்தாலும், தேர்வு பொருள் பற்றி அவர்களுக்கிருந்த அடிப்படை அறிவே ஆங்கிலத்தை சுலபமாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது.
தாய் மொழி என்பது, வெறும் மொழியாக அல்லது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் அடிப்படை அறிதல் திறனாகவும் அமைகின்றது. மற்ற எதையும், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும் ஒரு குழந்தை இந்த அறிதல் திறனின் வழியாகவே கற்றுக் கொள்கிறது.

குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப் போல் தாய் மொழியை கற்றுக்கொள்கின்றார்கள். தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை, கற்றுக்கொள்ளும் போது விதிகளை ஊகித்து உணர்கிறார்கள். வாக்கியக் கட்டமைப்பில் இருக்கும் விதிகளை குழந்தைகள் தாங்களாகவே முயன்று புரிந்து கொள்கிறார்கள். தாய் மொழியைப் பயில்வதை கற்றல் என்று சொல்வதை விட அறிவைக் கைக்கொள்வது என்று சொல்லலாம்.

இயற்கையாக அறிதலை தன் தாய் மொழியில் பயின்று வந்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் பாடங்களைக் கற்பிக்கும் போது அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகின்றது. இது குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை தான். தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் முயற்சியின் காரணமாக அவர்கள் அறிவைக் கைக்கொள்ளும் திறனை இழந்து விடுகின்றனர்; கற்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை நிறுத்தி விடுகின்றனர்.

புரியாமை என்பது மாணவனின் கற்கும் முயற்சியையே நிரந்தரமாக முடக்கி விடுகிறது. அதன் பிறகு மதிப்பெண்களை நோக்கிய பயிற்சி மட்டுமே நடக்கிறது. புத்தகங்களில் இருப்பதைப் மனப்பாடம் செய்வதற்கு கற்றுக் கொள்கின்றனர். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்து விடுகின்றன, அவ்வளவுதான்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்பதற்கே தடுமாறும் மாணவர்களுக்கு, ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக வகுப்பறைகள் சித்திரவதைக் கூடங்களாக மாறி விடுகின்றன. கணிசமான மாணவர்கள் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாமல் சில வகுப்புகளுக்குப் பின் வெளியேறி விடுகிறார்கள். ஆரம்ப வகுப்பிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்வதன் விளைவு 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குள் சுமார் 1 கோடி மாணவர்கள் சிந்தனை முடக்கப்பட்ட கல்வியைக் கற்றவர்களாகவோ, அல்லது கல்வியே இல்லாதவர்களாகவோ உருவாக்கப்பட்டிருப்பார்கள்.
ஆங்கிலம் படித்தால் வேலை என்பதும் ஒரு விதமான மூடநம்பிக்கை. இந்தி படித்தால் வேலை என்று கூறி இந்தித் திணிப்பை நியாயப்படுத்தும் ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல, வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வந்திருக்கும் தொழிலாளர்கள், இங்கே வந்து தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் பட்டம் பெற்ற பல லட்சம் மாணவர்கள் இன்று வேலை இல்லாமல் தவிக்கின்றனர் அல்லது தமது கல்வித் தகுதிக்குப் பொருத்தமில்லாத வேலையை குறைவான சம்பளத்தில் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அனைவருக்கும் வேலை கிடைக்கக் கூடாது என்பது உலக முதலாளித்துவத்தின் கொள்கை. அதனை ஆங்கிலப் புலமையால் முறியடித்து விட முடியாது.

“இந்த ஆண்டு பத்து பொறியாளர்கள் தேவை என்றால் உழைப்புச் சந்தையில் நூறு பொறியாளர்கள் அந்த வேலைக்குப் போட்டி போட வேண்டும். அப்படி ஒரு போட்டி நிலவினால் தான் ஊதியத்தைக் குறைக்க முடியும். நூறு பேரிலிருந்து திறமையான பத்து பேரைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மற்றவர்களைக் கழிவு என்று தள்ள முடியும்” என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள முதலாளி வர்க்கத்தின் பார்வை.
ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட அமெரிக்க ஐ.டி ஊழியர்களின் வேலையைப் பறித்து, அதனை இந்தியர்களுக்கு கொடுப்பதற்கு காரணம், அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது என்பதல்ல, அவர்களை விட இந்தியர்களின் கூலி குறைவு என்பது தான்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கை காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான வேலையாட்களை உருவாக்குவதற்கு ஏற்ப நமது நாட்டின் கல்விக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்படுவதும் தாய் மொழி வழிக் கல்வி புறக்கணிக்கப்படுவதும் வெறும் மொழி சார்ந்த பிரச்சினைகள் அல்ல.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை உற்பத்தித் துறையிலோ, சேவைத் துறையிலோ, அறிவுத் துறையிலோ தமக்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுப்பதற்கான ஊழியர்களை உருவாக்கித் தரும் பட்டறைகள்தான் கல்வி நிலையங்கள். மாணவர்களுக்கு தத்தம் மொழி சார்ந்த இலக்கியங்கள், பண்பாட்டு மரபுகளைக் கற்றுக் கொடுப்பது, சனநாயக உணர்வையும், சமத்துவக் கண்ணோட்டத்தையும், சமூக உணர்வையும் கற்றுத் தருவது, சுய சிந்தனையை ஊக்குவிப்பது போன்றவையெல்லாம் உலக முதலாளித்துவத்துக்கு தேவையில்லாதவை. சொல்லப் போனால் இடையூறானவை.

ஆங்கில வழிக்கல்வி - அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை !
ஆங்கில வழிக்கல்வி – அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை !

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் 2000 ஆண்டில் அம்பானியும் பிர்லாவும் இணைந்து வெளியிட்ட கல்வித்துறை சீர்திருத்தத்திற்கான கொள்கைச் சட்டகம் என்ற அறிக்கையில் காணப்படும் கருத்துகள் இவை – கல்வியை சமூக முன்னேற்றத்தின் ஒரு கருவியாகப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தை அடிப்படையிலேயே மாற்றியமைக்க வேண்டும். .. புதிய திறமைகளை விரைந்து கற்றுக் கொள்ளக் கூடிய, சந்தையின் போட்டி போடக் கூடிய, நிலைமைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கூடிய தொழிலாளிகளை நாம் உருவாக்க வேண்டும். .. அமெரிக்காவுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முதலிடத்தில் இருப்பது விமான ஏற்றுமதியோ, ஆட்டோமொபைல் ஏற்றுமதியோ அல்ல; பொழுதுபோக்கு சாதன ஏற்றுமதிதான். .. மூளை உழைப்பாளர்களை உருவாக்குவதில் கல்விக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது

இதுதான் கல்வி குறித்த ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டம். இந்திய மக்களின் மூளை உழைப்பையும், உடல் உழைப்பையும் மலிவு விலைக்கு உலகச் சந்தையில் விற்று காசு பார்க்கும் இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்கும், ஏகாதிபத்தியங்களின் அடிமையாக தன்னைப் பிரகடனம் செய்துகொள்வதற்கு கூச்சப்படாத இந்திய அரசுக்கும் தாய்மொழிக் கல்வி வேப்பங்காயாய் கசப்பதில் வியப்பில்லை.

நாட்டுப் பற்றோ, மக்கள் நலனில் பற்றோ இல்லாத, சொந்த மண்ணைச் சேர்ந்த மக்களுடைய மொழியையோ, வாழ்க்கையையோ, மரபையோ அறியாத, பண்பாட்டு ரீதியாக இந்த மண்ணோடும், மக்களோடும், அவர்களுடைய உணர்வோடும் எந்த விதத்திலும் ஒட்டாத தெர்மாகோல் மனிதர்களை உருவாக்குவதே தாய்மொழிக் கல்வி அழிப்பின் நோக்கம்.

தாய்மொழி வழிக் கல்வி என்பதுதான் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கான ஒரே வழி. தாய்மொழிக் கல்வி மறுப்பு என்பது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்றது. அவர்கள் மத்தியிலிருந்து உருவாகக் கூடிய திறமைசாலிகளை கருவிலேயே கொலை செய்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு கல்வியை மறுத்த மனுநீதியை வேறு வடிவத்தில் மீண்டும் அமலாக்குகிறது.

ஆங்கில வழிக் கல்வி என்பதும், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் போன்றவையும் இந்திய சமூகம் “ஒளிரும் இந்தியா – வாடும் இந்தியா” என்று இரண்டாகப் பிரிந்து கிடப்பதற்கான நிரூபணம். ஒளிரும் இந்தியா ஆங்கிலத்தில் பேசுகிறது. உலகளாவிய வாய்ப்புகளை பெறும் நிலையில் உள்ளது. வாடும் இந்தியா இந்திய மொழிகளில் பேசுகிறது, கடுமையாக சுரண்டப்படுகிறது.

பல்வேறு வர்க்கங்களையும் சேர்ந்த குழந்தைகள் சேர்ந்து படிக்கும் பொதுப் பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் இப்போது இல்லை. வீட்டுக்கு அருகில் நடந்து போகும் தொலைவில் அரசுப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ இருந்தாலும் தம் பிள்ளைகளை நடுத்தர வர்க்கத்தினர் அங்கே சேர்ப்பதில்லை. தம் தகுதிக்கு ஏற்ப ‘தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளிலேயே’ சேர்க்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட, தம் தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளை இத்தகைய பள்ளிகளில் தான் சேர்க்க விரும்புகிறார்கள்.

இந்தப் பள்ளிகள் மறுகாலனியாக்கம் உருவாக்கி வரும் நவீன அக்கிரகாரங்களாகவும், அரசுப் பள்ளிகள் எனப்படுபவை நலிந்து வரும் சேரிகளாகவும் மாறி வருகின்றன. “அருகமைப் பள்ளிகள் – இலவசக் கல்வி – தாய்மொழி வழிக் கல்வி” என்பதை அமல்படுத்துவது தான் இந்தப் பிரிவினையை ஒழிப்பதற்கான வழி. மாறாக, சேரிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதன் மூலம் அவற்றையும் அக்கிரகாரங்களாக்கி விட முடியும் என்று ஆசை காட்டுவதுதான், அம்மா அறிவித்திருக்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற இந்தத் திட்டம்.

-பண்பரசு
___________________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
___________________________________________________________