privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாதாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !

தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !

-

ப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி (வயது 49) கடந்த புதன்கிழமை இரவு தலிபான் மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். கொல்கத்தாவை சேர்ந்த இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜான்பஸ் கான் என்ற தொழிலதிபரைக் காதலித்து 1989-ல் திருமணம் செய்து கொண்டார்.

சுஷ்மிதா பானர்ஜி
சுஷ்மிதா பானர்ஜி

ஆப்கானிஸ்தானில் தனது கணவருடன் குடியேறிய அவருக்கு அங்கு சென்ற பிறகுதான் ஜான்பஸ் கானுக்கு ஏற்கெனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. மருத்துவரான சுஷ்மிதா பெண்களுக்கென தனியாக ஒரு டிஸ்பன்சரி-ஐ தனது வீட்டிலேயே தொடங்கி நடத்தி வந்தார். 1993-ல் தலிபான்கள் வரும்வரை வாழ்க்கை பிரச்சினைகள் ஏதுமில்லாமல் தான் போய்க் கொண்டிருந்ததாக பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சுஷ்மிதா பானர்ஜி, ஆப்கன் சென்ற பிறகு தனது பெயரை சயீத் கமலா என்று மாற்றிக் கொள்கிறார்.

1993-ல் தலிபான்கள் அவரது டிஸ்பன்சரியை மூடும்படி உத்திரவிடுகின்றனர். மேலும் அவரை ஒழுக்கம் கெட்டவள் என்றும் முத்திரை குத்துகின்றனர். 1994-ல் அங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக முயற்சித்த சுஷ்மிதாவை அவரது கணவரின் சகோதரர் நேரில் வந்து கூட்டிக் கொண்டு போய் தலிபான்கள் வசம் கொடுக்கிறார். அவரை விடுவித்து விடுவதாக முதலில் வாக்களித்த தலிபான்கள் பின்னர் அவரை வீட்டுச் சிறையில் வைத்ததுடன், தினமும் பலவாறாக துன்புறுத்துகின்றனர்.

1995-ல் வீட்டை விட்டு வெளியேறிய அவர் காபூலுக்கருகில் மீண்டும் தலிபான்களிடன் சிக்கிக் கொள்ளவே, தான் ஒரு இந்தியக் குடியுரிமை பெற்ற பெண் என்றும், வீட்டை விட்டு ஓடும் குற்றத்தின் கீழ் தன்னை கைது செய்யவோ, தூக்கிலிடவோ இயலாதென்றும் அவர்களிடம் வாதிட்டு பின் விடுதலையாகிறார். நாடு திரும்பிய அவர் பின்னர் கொல்கத்தாவில் தனது கணவருடன் வந்து இணைகிறார்.

1995-ல் இவர் எழுதிய ‘ஒரு காபூல்வாசியின் வங்காள மனைவி’ என்ற நாவல் தலிபான்களின் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசியதால் தலிபான்களின் எதிர்ப்பை மிகுதியாகவே சம்பாதித்துக் கொண்டார். தலிபான்களிடமிருந்து அவர் தப்பியது பற்றிய இந்நூல் பிறகு மணிஷா கொய்ராலா நடித்த இந்தி திரைப்படமாகவும் பாலிவுட்டில் 2003-ல் வெளியானது. இசுலாத்திற்கும் மதம் மாற அவர் மறுத்து விடவே தலிபான்கள் அவர் மீது மேலும் ஆத்திரமடைந்தனர்.

வடக்கு கொல்கத்தாவில் வசித்து வந்த அவர் இந்த ஆண்டு ஜனவரியில் தான் தனது கணவருடன் ஆப்கானிஸ்தானின் பாக்திகா பகுதியில் உள்ள கரானா என்ற இடத்திற்கு குடியேறினார். இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதுடன் எழுதவும், அப்பகுதி பெண்களின் வாழ்க்கையை படமாக்கவும் முயன்று கொண்டிருந்தார். தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கவும் திட்டமிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் பெண்களது வாழ்நிலைமையை முன்னேற்ற உறுதி பூண்ட அவருக்கு மட்டுமின்றி, அவரது கணவரின் குடும்பத்தாருக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே 1998-ல் அவுட்லுக் பத்திரிகையில் அவர் எழுதிய போது, தலிபான்கள் பெண்களை கடைக்கு கூட போக அனுமதிக்காததை, புர்கா அணிவதை கட்டாயமாக்கியதை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பாடல்கள் கேட்பதை தடைசெய்து ஆணை வெளியிட்டதை எல்லாம் அம்பலப்படுத்தியிருந்தார். சுஷ்மிதா பானர்ஜி உண்மையில் மிகவும் தைரியமாகவே இசுலாமிய அடிப்படைவாதிகளை ஆப்கனில் எதிர்கொண்டிருக்கிறார். அவர் வாழ்ந்த கிராமத்தில் எப்படி ஆயுதம் ஏந்திய வலதுசாரிக் கும்பலானது மக்களை தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்டிருந்தன என்பது பற்றியும் அவுட்லுக்கில் எழுதியிருந்தார்.

அவரது பால்ய கால நண்பரான தமல் பாசு கூறுகையில், சுஷ்மிதா உற்சாகமும், தைரியமும் உடைய பெண் என்றும், தங்களோடு நெருக்கமாக பழகியதாகவும், தனக்கு ஆயுதமேந்திய அடிப்படைவாத குழுக்களினால் விடுக்கப்படும் கொலை மிரட்டல்களைப் பற்றி அவ்வப்போது குறிப்பட்டதாகவும் கூறியுள்ளார். தலிபான்களைப் பற்றி மேலும் இரண்டு புத்தகங்களை சுஷ்மிதா எழுதியுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு 1.30 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிட்ட தலிபான்கள் அவரது குடும்பத்தினரை ஒரு கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர். பிணத்தை அருகில் இருந்த இசுலாமிய கல்விக்கூடத்தின் அருகில் போட்டுவிட்டு சென்றனர்.

எனினும் தாலிபான்கள் இந்தக் கொலையை செய்யவில்லை என்று மறுத்திருக்கிறார்கள். வேறு அமைப்புகளும் இக்கொலைக்கு பொறுப்பேற்கவில்லை. பொதுவில் இத்தகைய கொலைகள் ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தும் எதிர்மறைக் கருத்தை தவிர்ப்பதற்காகவே தாலிபான்கள் இதை மறுப்பதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.

கண்டனம்
சுஷ்மிதா கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வங்க மொழி எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் தங்களது அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். ஒரு எழுத்தாளருக்கு 21-ம் நூற்றாண்டிலும் இப்படி நேர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார் மகாஸ்வேதா தேவி.  எழுத்தாளர் நபனீத சென் கூறுகையில், இச்செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், நடந்த சம்பவத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

“அவர் எழுதிய பல விசயங்கள் தலிபான்களுக்கு உவப்பில்லாதவை. எனவே தான் அவர் இந்தியா திரும்ப நேரிட்டது. ஆனால் அவர் மீண்டும் ஆப்கன் திரும்ப முடிவு செய்தது அவரது தைரியத்தை காட்டினாலும், புத்திசாலித்தனமானதல்ல” என்று கூறிய சென், வேறு ஒரு கலாச்சாரத்தில் வாழ்ந்து அது பற்றி தனது கருத்துக்களை சுஷ்மிதா பானர்ஜி பதிவு செய்தமைக்காக ஒரு இந்தியப் பெண் என்ற முறையில் தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளர் சிருசேந்து முகோபாத்யாய கூறுகையில், “இரண்டாம்தர குடிமக்களாக, வீட்டு விலங்குகளாக ஆப்கானிஸ்தான் சட்டத்தின்படி நடத்தப்படும் பெண்கள், அப்படி இனி அவர்கள் வாழ முடியாது என்பதை விளக்கும் வகையில் சுஷ்மிதா எழுதியுள்ளார். அவர் ஒரு தைரியமான பெண்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“என்னைப் போலவே ஒவ்வொரு பெண்ணும் தலிபான்களை எதிர்த்து போராட வேண்டும்” என இருபது ஆண்டுகளுக்கு முன் சுஷ்மிதா பானர்ஜி கூறியுள்ளார். பெண்களால் வாழ முடியாத நிலைமையை இசுலாமிய அடிப்படைவாத குழுக்கள் பலவும் ஆப்கானிஸ்தானில் நடைமுறைப்படுத்துகின்றன. தற்போதைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக வாழ முடியவில்லை என்ற சூழலை இந்த ஆயுதக் குழுக்கள் கட்டியமைக்கின்றன. இந்த அடிப்படைவாத செயல்கள் அமெரிக்க ராணுவத்தின் செயல்களுக்கு ஒரு அடிப்படையை வழங்குகிறது. இசுலாமிய அடிப்படைவாதம் ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது சுஷ்மிதா பானர்ஜியின் படுகொலை. எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் சேர்ந்து இப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்தி வீழ்த்துவதன் முக்கியத்துவம், அமெரிக்காவை வீழ்த்துவதற்கான முக்கியத்துவத்துக்கு குறைந்த ஒன்றல்ல !