privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பதில் போட்டி !

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பதில் போட்டி !

-

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : ஆளும் வர்க்கப் பிரிவுகளுக்கிடையே பொறுக்கித் தின்பதில் போட்டா போட்டி !

ந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு உறுதி செய்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்படும் தெலுங்கானா மாநிலமும், ஆந்திராவின் கடலோர கிழக்கு மாவட்டங்களும் தெற்கேயுள்ள ராயலசீமா மாவட்டங்களும் அடங்கிய எஞ்சிய பகுதியாகிய சீமாந்திரா எனப்படும் மாநிலமும் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஐதராபாத்தை பொதுத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா போராட்டம்
தனித் தெலுங்கானாவுக்காக பற்றியெரிந்த போராட்டம் – அரசு சன்மானங்களை பங்கு போடுவதற்கான போட்டா போட்டியில் இறக்கி விடப்படும் மக்கள் (கோப்புப் படம்)

கடலோர கிழக்கு மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா – என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா பிராந்தியம் ஒப்பீட்டளவில் பெரியது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால் தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது.  கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு தெலுங்கானா இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தாலும், கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்தோர் பெரும்பான்மையாக இருப்பதாலும், தெலுங்கானா பிராந்தியத்தின் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினர் தனி மாநிலக் கோரிக்கையை இப்பிரச்சினைக்குத் தீர்வாக வைத்துப் போராடி வந்தனர். குறிப்பாக 1969-ல் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் தீவிரமடைந்து, ஏறத்தாழ 300 பேர் கொல்லப்பட்டு கடும் அடக்குமுறைக்குப் பின்னர் அப்போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

பின்னர், தனியார்மய – தாராயமயத்தைத் தொடர்ந்து தெலுங்கானா பிராந்தியத்தில் கருங்கல் குவாரி, நிலக்கரி, சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத் துறை,  சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் சூறையாடலுக்கான புதிய வாய்ப்புகள் திறந்து விடப்பட்டதும், ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கப் பிரிவுக்கும் தெலுங்கானாவின் ஆளும் வர்க்கப் பிரிவுக்குமிடையிலான போட்டா போட்டியின் காரணமாக மீண்டும் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் 2010-ம் ஆண்டில் தீவிரமடையத் தொடங்கியது. அதற்கெதிராக தெலுங்கானாவைப் பிரிக்கக் கூடாது என்று ஆந்திராவின் இதர பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. பின்னர் காங்கிரசு கூட்டணி அரசு தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டதோடு, 2014-க்குள் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதியளித்தது.

அதன்படியே இப்போது தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு உறுதி செய்துள்ளது. பெரிய மாநிலங்களை உடைத்துச் சிறிய மாநிலங்களாக உருவாக்குவதை பா.ஜ.க. ஏற்பதால், தெலுங்கானா தனி மாநிலப் பிரிவினையை ஆதரிக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒ.எஸ்.ஆர். காங்கிரசு  கட்சியோ இப்பிரிவினையை எதிர்க்கிறது. தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள காங்கிரசு கட்சியினர் தனி மாநிலப் பிரிவினையை ஆதரிக்கும் அதே சமயம், சீமாந்திரா பிராந்தியத்தின் காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசக் கட்சியினர் இப்பிரிவினையை எதிர்த்து போராட்டங்களை நடத்துகின்றனர். வலது கம்யூனிஸ்ட் கட்சி தனித் தெலுங்கானாவை ஆதரிக்கும் அதே சமயம், மார்க்சிஸ்ட்  கட்சியோ பிரிவினையை எதிர்க்கிறது.

தனிமாநில அறிவிப்பைத் தொடர்ந்து, கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதி நீரில் கூடுதல் பங்கு கோருவதோடு, கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமாவில் பிறந்து தற்போது ஐதராபாத்தில் பணியாற்றும்  அரசு ஊழியர்கள் அனைவரும் தெலுங்கானா தனி மாநிலம் உருவான பிறகு வெளியேறிவிட வேண்டுமென்று எச்சரிக்கிறார், தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவரான சந்திரசேகர் ராவ்.  அவரது அறிவிப்பை எதிர்த்து, கடலோர ஆந்திரம்  மற்றும்  ராயலசீமாவின் அரசு அலுவலர்கள் போராட்டங்களில் இறங்கி தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதை எதிர்க்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் அரசு அலுவலகங்களும், பள்ளி – கல்லூரிகளும், சாலை போக்குவரத்தும் முற்றாக முடங்கிப் போயுள்ளன.

வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாகவும், பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தெலுங்கானா பிராந்தியத்தை இத்தனை காலமும் சீமாந்திரா பிராந்தியத்தினர் ஒடுக்கிச் சுரண்டியதாகவும் தெலுங்கானா தலைவர்கள் நியாயவாதம் பேசுகின்றனர். ஆனால் தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச்சுரங்கங்கள், காட்டு வளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்தும் புதுப் பணக்கார மாஃபியாக்களுக்கு எதிராக இத்தலைவர்கள் மக்களைத் திரட்டி இதுவரை எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை.

தெலுங்கானாவைப் போலவே கோர்க்காலாந்து, போடோலாந்து தனி மாநிலக் கோரிக்கைகள் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உத்திரப் பிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டுமென்று அம்மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அசாமிலுள்ள கர்பி மக்கள் தாங்கள் செறிவாக நிறைந்துள்ள அங்லாங் மாவட்டத்தைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்கின்றனர். மகாராஷ்டிராவில் விதர்பா, குஜராத்தில் சௌராஷ்டிரா, கர்நாடகத்தில் கூர்க், ஒடிசாவில் கோஷலாஞ்சல், பீகாரில் மிதிலாஞ்சல் – எனத் தனி மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.

தனியார்மய – தாராளமயமாக்கத்தைத் தொடர்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நான்குவழிச் சாலைகள், மேம்பாலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், புதுப்பணக்கார மேட்டுக்குடியினர் – என ஒரு சில நகர்ப்புற பகுதிகள் மினுக்குகின்றன. நாட்டின் சில பகுதிகளில் திடீர் ‘வளர்ச்சி’யையும், இதர பெரும்பாலான பகுதிகளின் பின்தங்கிய நிலையையும் மறுகாலனியாதிக்கம் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான காரணத்தைப் பரிசீலிக்காமல், பிராந்திய ஏற்றத்தாழ்வை மட்டும் வைத்து தனி மாநிலக் கோரிக்கையை சந்திரசேகர ராவ் போன்ற ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் தூண்டுகின்றனர். பொதுச்சொத்துக்களைச்  சூறையாடுவதிலும், அரசு  சன்மானங்களைப் பங்கு போட்டுக் கொண்டு பொறுக்கித்  தின்பதிலும்  நடக்கும்  போட்டா போட்டியே தனி மாநிலக் கோரிக்கையாக வெளிப்படுகின்றன.

பிரிவினைக்கு எதிராக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்த தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்

இந்த யதார்த்தத்தைக் காண மறுத்து, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது பிராந்திய அடிப்படையிலோ அல்லது பழங்குடியினத்தின் தனித்த அடையாளமாகவோ எந்த வடிவிலும் வெளிப்படலாம் என்றும், இது அம்மக்களின் நியாயமான ஜனநாயக உரிமைக்கான கோரிக்கையாக உள்ளதால், இத்தகைய தனி மாநிலப் பிரிவினையை ஆதரிக்க வேண்டுமென்றும் சில முதலாளித்துவ அறிவுத்துறையினர் வாதிடுகின்றனர். இதன் மூலம் மக்களை மாயையில் மூழ்கடிக்கின்றனர்.

தெலுங்கு தேசிய இனத்தின் தாயகமான ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பது சரியல்ல என்றாலும், தனி மாநிலம் கோரி தெலுங்கானா மக்கள் நீண்டகாலமாகப் போராடி வந்துள்ளதால், மக்களின் உணர்வுகளை மதித்து அதனை ஆதரிக்க வேண்டும் என்றும், ஒரே தேசிய இனத்தின் மக்கள் பிராந்திய அடிப்படையில் தனித்தனி மாநிலங்களாகப் பிரிவது தவறானதல்ல என்றும் சில தமிழினவாதிகள் தனித் தெலுங்கானாவை ஆதரிக்கின்றனர். மறுபுறம், இதேபோல தமிழகத்தையும் பிரிக்க வேண்டுமென சில சாதிய அரசியல்வாதிகள் கோருவதை ஆதரிக்க முடியாது என்றும், ஏனெனில் இது மக்கள் கோரிக்கையல்ல என்றும் விளக்கமளிக்கின்றனர். எந்த ஒரு கோரிக்கையும் ஒரு வர்க்கத்தின், சாதியின், இனத்தின் அல்லது பிராந்தியத்தின் அரசியல் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டு, பின்னர்தான் அது மக்கள் கோரிக்கையாக உருமாற்றம் பெறுகிறது. அந்த கோரிக்கையின் தன்மை என்ன என்பதிலிருந்து சரி  – தவறை பரிசீலிப்பதுதான் சரியான அணுகுமுறையாகும்.

ஆனால், தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை என்பது பிராந்திய ஏற்றத்தாழ்வை வைத்து ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஆட்சியதிகாரத்தில் பங்கு கோரும் போட்டா போட்டிதானே அன்றி, அது மக்களுக்கான அரசியல் – பொருளாதார கோரிக்கைகளின் அடிப்படையிலான போராட்டமோ, முற்போக்கான ஜனநாயகக் கோரிக்கையோ அல்ல. ஆளும் வர்க்கப் பிரிவுகளிடையே பொதுச் சொத்தைச் சூறையாடவும்,  அரசாங்க சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும் நடக்கும் போட்டா போட்டிக்காக தெலுங்கானா ஆதரவு – எதிர்ப்புப் போராட்டங்களில் மக்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும். நேற்று வரை பல்வேறு ஓட்டுக் கட்சி பதவிகளில் இருந்துவரும் பிழைப்புவாதிகளில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு பிரிவினர்தான் இப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்குகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதால் மக்களின் வாழ்வில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும் என்பது மிகப் பெரிய மோசடி. இதற்கு ஜார்கண்டும், சட்டிஸ்கரும் எடுப்பான சான்றுகளாக உள்ளன. வளர்ச்சி என்ற பெயரில் உள்நாட்டு – வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலும், மக்கள் மீது அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சியும்தான் அங்கு நீடிக்கிறது. இந்த உண்மைகளைக் காண மறுத்து தனி மாநிலக் கோரிக்கையைக் குருட்டுத்தனமாக ஆதரிப்பது அடிப்படையிலேயே தவறானதாகும்.

– குமார்.
__________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
__________________________________

  1. மாவொயிஸ்டுகள் இதை ஆதரிக்கிறார்கள் என்ற நியாயத்தை ஏன் எழுதவில்லை?

  2. எதுக்கு போராட்டம்…
    கடிதம் எழுதுவோம்,
    தந்தி அடிப்போம்….
    அரை மணிநேரம் உண்ணாவிரதம் இருப்போம்…..

Leave a Reply to Ramakrishna பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க