privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஜிம்பாவே கருப்பின மக்களின் நிலத்திற்கான போராட்டம் !

ஜிம்பாவே கருப்பின மக்களின் நிலத்திற்கான போராட்டம் !

-

முற்றுப் பெறாத ஒரு ஆப்பிரிக்க புரட்சியிலிருந்து அறிக்கைகள் – அமன் சேத்தி

ஜிம்பாவேவின் பூர்வகுடிகளான கருப்பின மக்கள் தமது தாய் மண்ணை, நிலங்களை, விவசாயத்தை ஆக்கிரமித்த வெள்ளையின பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றிய போராட்டத்தை இந்தக் கட்டுரை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதிபரின் முகாபேயின் கட்சியும் அரசும் இந்த போராட்டத்தை தமதாக்கிக் கொள்ள முயற்சித்தாலும் உண்மை அதுவல்ல. இது மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களினாலேயே சாத்தியமாயிருந்தது. மேலும் முகாபே அரசு இந்த போராட்டத்திற்கு பின்னர் கருப்பின மக்கள் விவசாயம் செய்வதற்கான எந்த உதவியும் செய்திருக்கவில்லை. நிலம் பெற்றாலும் அதில் கடன் வாங்கி செழுமையான விவசாயம் செய்வதற்கான வசதிகள் அம்மக்களுக்கில்லை. எனினும் காலனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தாய் மண்ணை மீட்கும் இந்த போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

வினவு

____________________________

வெள்ளை இன பண்ணையார்களுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு ஜிம்பாப்வேயின் விவசாயத் தொழிலாளர்கள் நாட்டின் அனைத்து விவசாய நிலங்களில் நான்கில் மூன்று பகுதியை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சுயேச்சையான இயக்கத்தை தனது கொள்கைகளின் பலன் என்று முன்நிறுத்துவது ZANU-PF கட்சியின் வெற்றியாக மாறியிருக்கிறது.

நினைவு தெரிந்த காலத்திலிருந்து, மொந்தொரோவின் ஷோனா இன மக்கள் சோளம் பயிரிடும் சுத்தமான சமூக நிலங்களை, வெள்ளை இனத்தவர் புகையிலை பயிரிடவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காட்டெருமை சுடவும் பயன்படுத்தினர். வெயிலில் காய்ந்து இறுகிப் போன தூசி பறக்கும் ஒரு பாதைதான் வேலியிடப்பட்ட பண்ணைகளையும் தனியார் வேட்டைக் களங்களையும் பிரிக்கும் எல்லையாகும்.

கறுப்பு சக்தி பண்ணை
கறுப்பின மக்களின் சக்தி.

ஜான் டெல், சாலிடிடுயூட், தம்வூரி போன்ற பண்ணைகளின் எல்லையை தாண்டி இளம் ஆண்களும் பெண்களும்  வேலை செய்யப் போனாலும், அத்து மீறி நுழைந்ததாக கைது செய்யப்படுவதை தவிர்க்க இருட்டுவதற்கு முன்பு அவசர அவசரமாக திரும்பி விடுவார்கள். சமூக நிலங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகள் வெள்ளை நிலங்களுக்குள் நுழைந்து பறிமுதல் செய்யப்பட்டு விடாமல் குழந்தைகள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். 1998-ம் ஆண்டு ஒரு இரவில், பணம் கொடுக்கும் விருந்தினர்களுக்கான காட்டு விலங்குகளை வேட்டையாடுகிறார் என்ற சந்தேகத்தில் ஜூலியஸ் என்ற இளைஞர் தம்வூரி வேட்டை ஒதுக்கிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் எல்லை உறவுகள் மோசமாக ஆரம்பித்தன என்கிறார்கள் கிராமவாசிகள்.

ஒரு ஆண்டுக்குப் பிறகு உலகெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாடு தழுவிய பண்ணை ஆக்கிரமிப்புகளின் ஒரு பகுதியாக மோந்தோரோவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் 32,000 ஏக்கர் பரப்பளவு வேட்டை ஒதுக்கிடமான தம்வூரிக்குள் கால் நடையாக நுழைந்தார்கள். அந்த நேரத்தில் நாடு முழுவதிலும் சுமார் 4,500 வெள்ளை இன பண்ணையார்கள் 1.2 கோடி ஹெக்டேர் நிலத்தை, அதாவது ஜிம்பாம்வேயின் அனைத்து விவசாய நிலங்களில் 35 சதவீதத்தை சொந்தமாக வைத்திருந்தார்கள். கறுப்பு இன மக்கள் சமூக நிலங்களில் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

“சுதந்திரமடைந்து இருபது ஆண்டுகள் கழித்தும் நாங்கள்  காத்துக் கொண்டிருந்தோம். நிலம் எங்களுடையது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்கிறார் மொந்தொரோவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர். இன்றைக்கு 181 குடும்பங்கள் தம்வூரியில்  குடியேறி, பயிரிட்டு, கால்நடை வளர்த்து வாழ்கிறார்கள். வேலிகள் உடைத்து எறியப்பட்டு, உள்ளூர் மதுபானக் கடை, விளையாட்டு மேசை மற்றும் மளிகைக் கடையைச் சுற்றி ஒரு புதிய சமூகம் உருவாகி வருகிறது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஜிம்பாப்வே முழுவதும் 1.7 லடசம் குடும்பங்கள் 1 கோடி ஹெக்டேர் நிலங்களில் குடியேறியிருக்கிறார்கள்.

இந்த கதையாடலை மறுப்பவர்கள்

விமர்சகர்களைப் பொறுத்த வரை, ஜிம்பாப்வேயின் துரிதமான நிலச் சீர்திருத்தம், வன்முறை நிறைந்தது, அரசு ஆதரவிலான சொத்துத் திருட்டு, தேசிய பொருளாதாரத்தை நாசமாக்கியது என்பதாகும். அது அதிபர் ராபர்ட் முகாபேயை இரக்கமற்ற கொடுங்கோலனாக சித்தரிக்கும் மேற்கத்திய சித்திரத்தை உறுதிப்படுத்தியது. 1980 முதல் ஜிம்பாப்வேவை ஆட்சி செய்து வரும் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் – தேசபக்த முன்னணி (ZANU-PF)யில் உள்ள அதிபர் முகாபேயின் அடியாட்களுக்காக அரசாங்கம் நிலத்தை பறித்தது என்று பலர் வாதிட்டனர்.

ராபர்ட் முகாபே
7-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் அதிபர் ராபர்ட் முகாபே.

நில வினியோகத்தின் வீச்சு முன்பு அனுமானிக்கப்பட்டதை விட அது  பரவலான அடிப்படையை கொண்டது, ஆக்கபூர்வமானதானது என்று கருத இடம் அளிக்கிறது. ஹராரேவில் முகாபே உள்ளிட்ட ஒரு சிறு கும்பல் நில ஆக்கிரமிப்புகளை திட்டமிடப்பட்டது என்று சொன்னாலும் கிடைக்கும் அறிவுத் துறை ஆய்வுகள் அதை  மறுதலிக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்களது நடவடிக்கைகள் சுயேச்சையானவை என்றும், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக நடத்தப்பட்டவை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். விடுதலைப் போராட்டத்தின் போது மக்களை ஒன்று திரட்டிய முழக்கத்திற்கு எதிராக அரசாங்கம் சமரசம் செய்து கொண்டதாக ஆக்கிரமிப்பாளர்கள் கருதினார்கள்.

“நிலப் பிரச்சனையில் ZANU-PF மறு புரட்சிகரமாக்கப்பட்டது அல்லது கீழிருந்து புரட்சிகரமாக்கப்பட்டது, நில வினியோக நடைமுறையை ஜனநாயக பூர்வமாக்கி அதன் இயல்பை அடிப்படையிலேயே மாற்றி அமைத்தது,” என்கிறார் ஹராரேவில் உள்ள விவசாய ஆய்வுகளுக்கான ஆப்பிரிக்க கழகத்தின் செயல் இயக்குனர் சாம் மோயோ. பேராசிரியர் மோயோ கடந்த 10 ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, பரவலான ஆக்கிரமிப்புகளும் நில வினியோகமும் பெரும்பாலும் சமத்துவ அடிப்படையிலேயே நடந்தன என்று முடிவு செய்திருக்கிறார். உதாரணமாக, ஜிம்பாப்வேயின் ஏழை உழவர்கள் அனைத்து விவசாய நிலங்களில் 79 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்று அவரது மிகச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது. 1980-ல் இது 49 சதவீதமாக இருந்தது.

“1890-ல் காலனியாக்கம் முதலாகவே எங்களது போராட்டங்களின் பொதுவான இழை நில விவகாரம் பற்றியதாகவே இருந்தது” என்கிறார் நீதித் துறை அமைச்சரும் ZANU-PF-ன் மூத்த உறுப்பினருமான பேட்ரிக் சினமாசா. இருப்பினும், நிலத்தைத் திரும்பப் பெறுவது, சுதந்திரத்தைத் திரும்பப் பெறுவதை போலவே கடினமானவே இருந்தது.

1979-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் ராபர்ட் முகாபேயின் விடுதலை போராளிகளுக்கும் இயன் ஸ்மித்தின் வெள்ளை குடியேற்ற அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை பேசி முடித்தது : இணங்கி வரும் விற்பனையாளர், இணக்கமான வாங்குபவர் என்ற அடிப்படையில் சொத்து உரிமைகள் 10 ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்படும்; கட்டாய கையகப்படுத்தல் எதுவும் செய்யப்படாது, நிலத்தை வாங்கி ஏழை உழவர்களுக்கு வினியோகிப்பதற்கு ஜிம்பாப்வே அரசாங்கத்துக்கு பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள் உதவி செய்யும். ஒரு ஆப்பிரிக்கத் தலைவர் பழிவாங்கலை கை விட்டு ஒத்துழைப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு சிறந்த உதாரணமாக இந்த ஒப்பந்தம் பரவலாக பாராட்டப்பட்டது.

டோனி பிளேர் - ராபர்ட் முகாபே
வெள்ளையின பண்ணையார்களுக்கு சாதகமாக நிலச் சீர்திருத்தம் செய்ய முயன்ற பிரிட்டன் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ராபர்ட் முகாபே வுடன்)

ஆனால், வெள்ளை பண்ணையார்கள் விளிம்பு நிலை நிலங்களின் துண்டிக்கப்பட்ட பகுதிகளை மட்டும்தான் விற்க முன் வந்தனர். அர்த்தமுள்ள மறு குடியமர்த்தல் கொள்கைக்கு ஏற்றவாறு அவற்றை இணைக்க முடியாததால், திட்டம்  நடைமுறையில் முடங்கிப் போனது என்கிறார் சினமாசா கூறுகிறார். இருப்பினும் 1980-களில் 75,000 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.

1990-ல் முகாபே அரசாங்கம் ஒரு தீர்மானமான திருப்பு முனையில் நின்றது. சுகாதாரத் துறையிலும், கல்வியிலும் செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் 90 சதவீதம் ஜிம்பாப்வேயினர் கல்வி அறிவு பெற்றிருந்தனர். ஊதிப் பெருத்த அதிகார வர்க்கம், ஊழல், தள்ளாடும் பொருளாதாரம் இவை அனைத்தும் சேர்ந்து அரசாங்கத்தை பெருமளவு பற்றாக்குறையில் இயங்க வைத்திருந்தன. 1991-ல் உலக வங்கி, ஐஎம்எஃப் மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி பரிந்துரைத்த ஐந்து ஆண்டு பொருளாதார கட்டமைப்பு சீர்செய்தல் திட்டத்திற்கு (ESAP) ஜிம்பாப்வே இணங்கியது.

ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் தரவுகளின்படி 1996-ல் ESAP முடிவடைந்த போது ஜிம்பாப்வேயின் நாணய மதிப்பு 50 சதவீதம் வீழ்ந்திருந்தது. வெளிநாட்டுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 44 சதவீதத்திலிருந்து 71 சதவீதமாக உயர்ந்திருந்தது, ஆரம்பப் பள்ளிச் சேர்க்கைகளும், கல்வி, மருத்துவத்துக்கான செலவழிப்பும் வீழ்ச்சியடைந்தன. தொழில் துறை 0.1 சதவீத வேகத்தில் வளர்ந்தது.

அதைத் தொடர்ந்து விரைவிலேயே ஜிம்பாப்வே, அங்கோலா, நமீபியா நாடுகள் காங்கோ ஜனநாயகக் குடியரசில் பற்றி எரிந்து கொண்டிருந்த ஒன்பது-நாடுகள் போருக்கு படை அனுப்ப முடிவு செய்தன. மோசமான அடிப்படையில் நடத்தப்பட்ட அந்த நடவடிக்கை நான்கு ஆண்டுகள் நீடித்து, ஏற்கனவே பெருமளவு கடன்பட்டிருந்த நாட்டுக்கு 1998-ல் மாதம் $13 லட்சம் என்ற அளவுக்கும், 1999-ல் மாதத்துக்கு $30 லட்சம் என்ற அளவுக்கும் பொருளாதார சுமையை அதிகரித்தது.

நாடு காங்கோ ஜனநாயக குடியரசில் பணத்தை இழந்து கொண்டிருந்த போது, விடுதலை போராட்டக் கால கொரில்லா வீரர்கள், முன்னாள் போர் வீரர் சங்கங்கள் ஏற்படுத்தி நிலம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான நீண்ட காலமாக நீடிக்கும் குறைகளை கையில் எடுத்தார்கள். பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதும் முகாபே பதவி விலக மறுத்ததை எதிர்த்து நகர்ப்புற இளைஞர்கள், தொழிற்சங்கங்கள், வெள்ளை இன பண்ணையார்கள் மற்றும் தன்னார்வ குழுக்களின் கூட்டணி ஒன்று ZANU-PF-க்கு எதிராக உருவானது.

1999-ல் இந்த குழுக்கள் ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கமாக உருப்பெற்றன. இந்த எதிர்க்கட்சி மேற்கத்திய சக்திகளின் முன்னணி அமைப்பு என்று ZANU குற்றம் சாட்டுகிறது. பிரிட்டன் நில கையகப்படுத்தலுக்கு நிதி அளிப்பதை தொடர மறுத்து, எம்டிசி-க்கு தன் ஆதரவை வழங்கியது. பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சிக்கான பிரிட்டிஷ் அமைச்சர் கிளேர் ஷார்ட் ஜிம்பாப்வே அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில், ஜிம்பாப்வேவில் நிலச்சீர்திருத்தத்துக்கு பிரிட்டன் எந்த சிறப்பு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னார். “என்னுடைய சொந்த அடையாளம் ஐரிஷ், உங்களுக்கே தெரிந்தது போல நாங்களே காலனியாக்கம் செய்யப்பட்டவர்கள்தான், காலனியாக்கம் செய்தவர்கள் இல்லை”

பிரிட்டிஷ் மக்கள் சபையில், தொழிலாளர் கட்சி உறுப்பினர் எர்னி ரோஸ், அரிதாக ஏற்படும் ஒத்த கருத்துக்காக பிரிட்டனின் அரசியல் கட்சிகளை பாராட்டினார். “அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு ஜிம்பாப்வேவில் ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்துக்கு முக்கியமான உதவியை செய்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். “… சுதந்திரம் கிடைத்த பிறகு முதல் முறையாக, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு முறையான எதிர்க் கட்சி கிடைத்திருக்கிறது.”

கலகம்

போரில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நடந்த முறைகேடு ஜிம்பாப்வே அரசின் ஊழலை சிறப்பாக சித்தரிக்கிறது. மூத்த ZANU-PF தலைவர்களும், அவர்களது உறவினர்களும் சந்தேகத்துக்குரிய நிவாரண கோரிக்கைகளின் மூலம் பெருமளவிலான நிதியை பெற்றார்கள். முகாபேவின் மச்சான் ரேவார்ட் மருஃபுவுக்கு இடது முழங்காலில் உள்ள ஒரு தழும்புக்காகவும், புண்களுக்காகவும் கிட்டத்தட்ட $70,000 வழங்கப்பட்டது. முன்னாள் போர் வீரர்கள் சங்கத்தின் தலைவர் செஞ்சேரை “ஹிட்லர்” ஹன்ஸ்வி, செவிக் குறைபாடுக்காகவும், “தொடையில் ஏற்படும் குடைச்சலு”க்காகவும் கிட்டத்தட்ட $50,000-ஐ ஆட்டையை போட்டார். இந்த தகவல்கள் மார்டின் மெரிடித் எழுதிய “முகாபே : அதிகாரம், கொள்ளை மற்றும் ஜிம்பாம்பவேவின் எதிர்காலத்துக்கான போராட்டம்” என்ற புத்தகத்தில் வெளியாகியுள்ளன.

பெண் விவசாயிகள்
நிலக் கைப்பற்றல் மூலம் நிலம் ஈட்டிய பெண் விவசாயிகள் பயிரிடுதலைக் குறித்து விவாதிக்கின்றனர். தலைக்கு சுமார் 6 ஹெக்டேர் நிலத்துக்கு சொந்தமானவர்கள்.

பொருளாதார ரீதியாக திவாலாகி, வெளிநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, உள்நாட்டில் பழிக்கப்பட்டு வந்த முகாபே, முன்னாள் போர் வீரர்கள் பண்ணைகளை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும் போது மிக பலவீனமான நிலையில் இருந்தார். அரசு அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தது, ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் கட்சியின் நீண்டகால பிழைத்திருத்தலுக்கு அத்தியாவசியமானவர்கள் என்று அரசாங்கம் உணர்ந்தது. இந்த பின்னணியில் பார்க்கும் போது நில ஆக்கிரமிப்புகள் முகாபேவுக்கு எதிரான கிளர்ச்சியாகவே தென்படுகின்றனவே தவிர அதிகாரத்தின் மீது அவரது உடும்புப் பிடியின் உதாரணமாக தென்படவில்லை.

தாம்வூரி வேட்டை பண்ணை, ஆறு முன்னாள் போர் வீரர்களின் ரகசிய குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டது. “முன்னாள் படைவீரர்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தனர். எந்த பண்ணையை எப்போது ஆக்கிரமிப்பது என்று அவர்கள் தீர்மானிப்பார்கள்” என்கிறார் ஒரு பங்கேற்பாளர்.

“ஒரு பண்ணையாரிடம் மூன்று பண்ணைகள் இருந்து, படைவீரர்கள் ஒன்றை கேட்டு, அவர் மறுத்து விட்டால் அவர்கள் மூன்றையும் எடுத்துக் கொள்வார்கள்” என்று ஒவ்வொரு பண்ணையும் எப்படி இலக்கு வைக்கப்பட்டன என்பதை விளக்கினார் இன்னொரு பங்கேற்பாளர். அதன் பிறகு மக்கள் முன்னாள் போர் வீரர்களை பின் தொடர்ந்து போக, உள்ளூர் கிராமத் தலைவர்கள் நிலத்தை பிரித்துக் கொடுப்பதற்கு உதவி செய்வார்கள்.

“1998-ல் எனது மகள் பிறந்த போது, எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, ஆனால் வேலை இல்லை, நிலம் இல்லை என்று உணர்ந்தேன்” என்கிறார் தாம்வூரியில் 6 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயியான டாம். “மேற்கு மாஷோனாலேண்டின் கிராமத் தலைவர்கள் நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள் என்று சந்தைகளில் பேசிக் கொண்டார்கள்”

டாம் ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து முறைசாரா நிலக் குழுவில் இணைந்து கொண்டார். அந்தக் குழு நிலங்களை பிளாட்டுகளாக பிரித்து உள்ளூர் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் பொறுப்பில் இருந்தது. “எங்களை வெளியேற்றுவதற்காக நிர்வாகம் போலீசை அனுப்பியது. போலீஸ் எல்லா வீடுகளையும் எரித்து விட்டது” என்று அவர் நினைவு கூர்கிறார். ஆக்கிரமிப்பாளர்களை வன்முறை மூலம் அரசாங்கம் அடக்க முயற்சித்த ஆரம்ப கால கட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். ZANU-PF-ன் இளைஞர் அணி உறுப்பினர் என்ற செல்வாக்கில் கவர்னரை சந்திக்க டாம் ஏற்பாடு செய்த பிறகு நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றப்பட்டது. ஆனால், இன்னொரு மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆதலால் அவருக்கு நிலம் கொடுக்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு தழுவிய ஆக்கிரமிப்புகள் ஆரம்பித்த போது, ஒரு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக அவர் தாம்வுரிக்கு போயிருந்தார். அப்போது வேட்டை பண்ணை சமீபத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை கண்டார். இந்த முறை மாவட்ட நிர்வாகி டாமை அங்கீகரித்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தார். “சில மாதங்களுக்குப் பிறகு எனக்கு 6 ஹெக்டேர்கள் கிடைத்தன” என்கிறார் டாம்.

“இது ஒரு நியாயமான அணுகுமுறை என்று நாங்கள்  முடிவு எடுத்தோம். ஆக்கிரமிப்பாளர்கள்தான் எங்களை விடுவித்தவர்கள், அரசாங்கமாக நாங்கள் தோல்வியடைந்த பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்தார்கள்” என்று ZANU-PF-ன் திடீர் கொள்கை மாற்றத்தை விளக்குகிறார் திரு சினமாசா. “நாங்கள் சட்டம் ஒன்றை  உருவாக்கி, ஆக்கிரமிப்புகள் தொடர்வதற்கு அனுமதித்தோம்” என்கிறார்.

இந்த திடீர் கொள்கை மாற்றம் அரசாங்கத்திலும் நிர்வாகத்திலும் நடந்து கொண்டிருந்த நிலக் கொள்கை குறித்த பரவலான விவாதத்தின் பிரதிபலிப்பாகும் என்கிறார் கிராசியன் முகோத்சோங்கி. அவர் மோந்தோரா எங்கேசியில் உள்ள ஒரு பகுதியில் நடந்த நிலச் சீர்திருத்தத்தை தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் பொருளாக எடுத்திருக்கிறார். “நில ஆக்கிரமிப்புகள் எவ்வளவுக்கெவ்வளவு தேசிய கொள்கையின் விளைவுகளாக இருந்தனவோ அவ்வளவுக்கவ்வளவு உள்ளூர் அதிகார அமைப்புகளுடனான போராட்டத்தின் வெளிப்பாடாகவும் இருந்தன” என்கிறார் அவர்.

பேரழிவும், சீரடைவும்

வெள்ளை இன வணிக பண்ணையார்கள் நில சீர்திருத்தங்களை அப்பட்டமான திருட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.

“ஆட்கள் திடீரென்று உள்ளே வந்து எங்களை துரத்தி அடித்தார்கள். நீதிமன்றங்களில் முறையிட முடியாது, இழப்பீடு எதுவும் இல்லை, பயிர்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கால்நடைகள் திருடப்பட்டன” என்கிறார் வணிக பண்ணையார்கள் சங்கத்தின் தலைவர் சார்லஸ் டஃப்ஸ்.

ஸ்டூவர்ட் மாவே
“ஒற்றை வெள்ளையரிடம் ஏன் அனைத்து நிலமும் இருக்க வேண்டும்” என்று கேட்கிறார் முதுவா பண்ணையில் தனது மனைவியுடன் புகையிலை பயிரிடும் 40 வயதான ஸ்டூவர்ட் மாவே.

நிலச் சீர்திருத்தம் பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கி விட்டது என்கிறார் டஃப்ஸ். “நாட்டில் கொடுக்கப்பட்ட கடன்களில் எண்பத்தி ஐந்து சதவீதம் நிலத்தின் மீது கொடுக்கப்பட்டவை. வங்கித் துறையில் மாபெரும் தாக்கம் ஏற்பட்டது, அதன் விளைவாக சேவைத் துறையிலும், உற்பத்தித் துறையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது”

1998-க்கும் 2008-க்கும் இடையே ஜிம்பாப்வேவின் பொருளாதாரம் 45 சதவீதம் குறுகியது. பண வீக்கம் உச்சத்தில் 23.1 கோடி சதவீதமாக இருந்தது. தேசிய நாணயம் பல நாணய கட்டமைப்பினால் மாற்றியமைக்கப்படும் போது பரிமாற்ற வீதம் 1 அமெரிக்க டாலருக்கு ஜிம்பாப்வே டாலர் 35 குவாட்ரில்லியனாக (1-க்குப் பின்னால் 15 பூச்சியங்கள்) இருந்தது. அதற்குப் பிறகு பொருளாதாரம் மீட்சி அடைந்து 2009-க்கும் 2011-க்கும் இடையே 20 சதவீதம் வளர்ந்திருக்கிறது. விவசாய ஏற்றுமதிகள் 101 சதவீதம் அதிகரித்திருக்கின்றன.

“புதிய விவசாயிகள் அவர்களது நிலங்களுடன் இணைந்து கொள்ள சில ஆண்டுகள் ஆனதாக தரவுகள் தெரிவிக்கின்றன” எனகிறார் பேராசிரியர் மோயோ. “ஆனால் இப்போது, நாம் உற்பத்தி அதிகரிப்பை பார்க்கிறோம்.” குறிப்பாக புகையிலை விவசாயிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பெரிய வாடிக்கையாளர்கள் நிலையான விலைகளை உத்தரவாதப் படுத்திக் கொள்வதற்காக சிறு விவசாயிகளுக்கு கடன் கொடுத்தனர். இந்த ஆண்டு 80,000-க்கும் அதிகமான விவசாயிகள் புகையிலை வளர்க்க பதிவு செய்திருந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் சமீபத்திய நிலச் சீர்திருத்தங்களில் ஆதாயம் அடைந்தவர்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட $60 கோடி மதிப்பிலான புகையிலை விற்பனை செய்யப்பட்டது என்று புகையிலை சந்தைப்படுத்தும் வாரியம் தெரிவிக்கிறது.

மற்ற பயிர்கள் இந்த அளவு சிறப்பாக விளங்கவில்லை. “அரசாங்கம் எங்களுக்கு விதைகள், உரம் போன்றவற்றை வழங்கி ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் இந்தத் திட்டம் தோல்வி அடைந்து விடும்” என்கிறார் தாம்வுரியின் பருத்தி விவசாயியான ஜோசப். குடியேறியவர்களிடம் நிலத்துக்கான பட்டாக்கள் இல்லை, குத்தகை உரிமை மட்டும்தான் இருக்கிறது. “குத்தகையின் அடிப்படையில் வங்கிகள் கடன் கொடுப்பது இல்லை என்பதால் நாங்கள் விதைகள், டிராக்டர் அல்லது வேறு எதையும் வாங்குவதற்கு கடன் பெறுவது சாத்தியமில்லை”. ஜோசப் அவரது வயல்களை கால்நடைகளை கொண்டு உழுகிறார். ஆறு ஹெக்டேர் நிலத்தையும் பயிரிட முடியாமல் உள்ளார், “கடன் கிடைத்தால் இன்னும் அதிகமான நிலத்தில் பயிரிடலாம்” என்கிறார் அவர்.

விவசாயிகள் குத்தகை நிலத்தின் பேரில் நிறுவன கடனை பெறுவதற்கான முறையை அரசு உருவாக்கி வருவதாக திரு சினமாசா சொல்கிறார். ஆனால், வறட்சி ஏற்படக்கூடிய இந்த பகுதியில் ஒரு மோசமான பருவம் வந்தால் ஜோசப் போன்ற விவசாயிகள் தமது நிலத்தை கடன் கொடுத்தவர்களிடம் இழக்க வேண்டி வரும்.

இந்த கோடைக் காலத்தில் முகாபே தொடர்ச்சியான ஏழாவது அதிபர் பதவிக் காலத்துக்கு போட்டியிட்டார். குழப்பமான, தன்னிச்சையான நிலத்துக்கான போராட்டத்தை ZANU-PF கொள்கையின் வெளிப்பாடாக சித்தரித்து வெற்றி பெற்றார்.

அவரது எதிரி எம்டிசியின் மோர்கன் ட்சாவின்கிராய், தேர்தலை “மாபெரும் மோசடி” என்று உருவகித்தார். தேர்தல் நடைமுறையின் அனைத்து பிரிவுகளிலும் அப்பட்டமான மோசடிகள் நடந்ததாக கூறினார். இருப்பினும் ட்சாவின்கிராய் நில பிரச்சினை தொடர்பாக குழப்படி செய்ததற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. “நில்ம்தான் போருக்கான காரணம்” என்கிறார் ஹராரேவைச் சேர்ந்த வாக்காளர் அமீனா. “நாங்கள் எங்கள் வாழ்க்கையின் எஜமானர்களாக இருக்க விரும்பினோம். ஏதோ ஒரு பண்ணையில் தொழிலாளியாக இருக்க விரும்பவில்லை.”

– அமன் சேத்தி,
தமிழாக்கம் – அப்துல்.

நன்றி: தி இந்து