ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 16 வயது மாணவியை கடந்த ஆகஸ்டு 15 அன்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வட இந்திய இந்துக்களின் ஆன்மீக குரு அசாராம் பாபு கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்காக ராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்றத்தில் இடைக்காலப் பிணை கேட்டு பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மாலினி வாதாடினார். அதில் அப்பெண்ணுக்கு ஆண்களை கவர்ந்திழுக்கும் நோய் இருப்பதாகவும், அவளது வயது பற்றி பொய்யான சான்றுகள் தரப்பட்டதாகவும், இப்போது அவள் மைனர் இல்லை என்றும் அவர் வாதாடினார். எனினும் நீதிமன்றம் அசாராமை பிணையில் விட மறுத்து விட்டது. தற்போது அவரது மகன் நாராயண் சாய் மற்றும் அசாராம் பாபு மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தவே அக்டோபர் 8-ம் தேதியும் ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் அசாராம் பாபுவை பிணையில் விட மறுத்து விட்டது.
அசாராம் பாபு கைதானபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிலையான மனநிலை இல்லை என்றெல்லாம் பேசி வந்த அசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதும் தற்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கடல் மற்றும் வான் வழியாக வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்கும் பொருட்டு அவருடைய ஆசிரமத்தில் கடந்த அக்டோபர் 8 அன்று போலீசார் நோட்டீசு வழங்கியுள்ளனர். குடியுரிமை அதிகாரிகளுக்கும் இது பற்றி தகவல்கள் தரப்பட்டுள்ளன.
சூரத்தை சேர்ந்த அசாராம் பாபுவின் முன்னாள் பக்தர்களான இரு சகோதரிகள் அசாராம் பாபுவும், அவரது மகனும் தங்களை சில ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாக அக்டோபர் 5 அன்று சூரத் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 1997-ல் 14 வயதில் ஆசிரமத்திற்கு சென்ற மூத்த பெண்ணை அப்போது முதல் 2007 வரை அசராம் பாபு அகமதாபாத் ஆசிரமத்திலும், இளைய சகோதரியை 2002-05 வரை நாராயண் சாய் சூரத் ஆசிரமத்திலும் மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி இருக்கின்றனர். அசாராம் பாபு மீதான மூத்த சகோதரியின் புகாரை குற்றம் நடந்த அகமதாபாத் காவல்துறைக்கு மாற்றி உள்ளதாக சூரத் நகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
நான்கு தனிப்படைகளை அமைத்துக் கொண்டு குற்றவாளி நாராயண் சாய்-ஐ தேடி சூரத் காவல்துறையினர் நாடு முழுக்க சென்றுள்ளனர். அவர் பீகார் வழியாக நேபாளத்திற்கு தப்பியிருப்பார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சூரத்திலுள்ள அசாராம் பாபுவின் ஜெகாங்கிபுரா ஆசிரமத்தில் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் நகர காவல்துறை ஆணையர் சிவானந்த் ஜா தலைமையில் காவல்துறை மற்றும் தடயவியல் துறையினர் அக்டோபர் 8 அன்று ஈடுபட்டனர். அங்கு ஒருவேளை நாராயண் சாய் பதுங்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படவே, முதலில் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது.
2002-ல் இளைய பெண் உள்ளிட்ட சில பெண்களை மத்திய பிரதேசத்திலுள்ள ஜாபுவா மாவட்டம் மேக்நகர் என்ற இடத்தில் நடந்த ஆன்மிக முகாமில் கலந்து கொள்ளச் செய்கின்றனர் ஆசிரம நிர்வாகிகள். அம்முகாமில் நாராயண் சாய் கலந்து கொள்கிறான். முகாம் முடிவடைந்த பிறகு தொலைபேசி மூலமாக அவளை அழைத்துப் பேசிய சாய், தானில்லாமல் அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா ? என்று கேட்டு விட்டு, வீட்டு வேலைகளைப் பார்ப்பதை விட தனக்கு சேவை செய்ய வரலாமே என்றும் அழைக்கிறான்.
பின்னர் அங்கிருந்து சில பெண்களுடன் பீகார் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் பாட்னா அருகில் உள்ள கிராமம் ஒன்றில் 45 நாட்கள் நடந்த ஆன்மீக முகாம் மற்றொன்றில் கலந்து கொள்கிறார். அந்த முகாம் முடிவடைந்த பிறகு தனது குடிலுக்கு அப்பெண்ணை அழைத்த சாய் அங்கு அவளிடம் பாலியல் வல்லுறவுக்கு முயற்சிக்கிறான். பிறகு முன்னர் கேட்ட அதே கேள்விகளை கேட்கிறான். பதில் ஏதும் சொல்லாமல் அதிர்ச்சியுடன் திரும்பிய அப்பெண் பயத்தில் நடந்தவற்றை யாரிடமும் சொல்லவில்லை.
பிறகு சூரத்தில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்து, தனது கையாள் ஒருவன் மூலமாக இறைவனைக் காணப் போவது போல சொல்லி அவளை கை, கால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு, குடிலின் பின்வாசல் வழியாக வலுக்கட்டாயமாக வரவைத்து அவளிடம் கட்டாய வல்லுறவு செய்கிறான். ஒவ்வொரு பெண்ணையும் பாலியல் வல்லுறவு செய்வதற்கு முன் தன்னை கடவுள் என்று அப்பெண்ணிடம் கூறி நம்ப வைப்பானாம் நாராயண் சாய். அப்போது கெஞ்சிய அவளிடம் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்கிறான். பலமுறை வல்லுறவை நிகழ்த்திய பிறகு அப்பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட காயங்களை க்ரீம் தடவி மறைக்க வேறு உபதேசிக்கிறான் அந்தப் பொறுக்கி. அந்த இரவு தன்னால் சிறிதும் உறங்க முடியவில்லை என்றும் அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளாள்.
பிறகு செல்பேசியில் அவளிடம் பேசிய நாராயண் சாய் யாரிடமாவது சொல்லி விட்டாளா என்பதை உறுதி செய்து விட்டு, மீண்டும் தனது குடிலுக்கு வரச் சொல்கிறான். அவளுக்கு அங்கு போகவே பயமாக இருக்கிறது. ஆனால் போகாத பட்சத்தில் அவனது பக்தர்களான தனது பெற்றோர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை கிளப்புவதுடன், தன்னைப் பற்றி அவதூறுகளையும் அவன் பரப்புவான் எனத் தெரியவே அவனது அழைப்புக்கு அடிபணிகிறாள் அப்பெண். மேலும் அவளை காத்மாண்டு வரை அழைத்துச் சென்ற அவன் அங்குள்ள ‘சுதந்திர பாலியல் உறவு’ வைத்துக் கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் பங்கேற்க வைத்து, அதுபற்றி கேட்டதற்கு அதனை சுதந்திர காதல் என்று வேறு சொல்லி வைத்திருக்கிறான்.
அப்பெண்ணிடம் தொடர்ந்து மிரட்டி தனது காரியத்தை சாதிக்கும் அவன் அப்பெண்ணுக்கு பின்னர் ஒரு ஆசிரமத்தின் பொறுப்பையும் கையளிக்கிறான். இரு ஆண்டுகளுக்குப் பிறகு 2005-ல் அங்கிருந்து 15 நாள் விடுப்பு கேட்டு வெளியே தப்பி வந்த அப்பெண் மீண்டும் ஆசிரமத்திற்கு திரும்பவில்லை. அந்த விடுப்பு பெறுவதற்கே தனது சகோதரனுக்கு யாருக்கும் தெரியாமல் செல்பேசி மூலமாக தகவல் கொடுத்தே முயன்றிருக்கிறார்.
சபர்காந்தா பகுதியிலுள்ள ஹிமாத் நகரில் உள்ள உறவினர்களிடம் அவளும், அவளது பெற்றோரும் அடைக்கலம் புகுந்திருந்தனர். அப்போது அவரைத் தேடி அங்கு வந்த நாராயண் சாய்-ன் பெண் பக்தர்கள் கூட்டம் ஒன்று அவரை ஆசிரமத்திற்கு திரும்பி வருமாறு வற்புறுத்தியது. அவர் மறுக்கவே, அக்கூட்டம் அவர் அடைக்கலம் புகுந்திருந்த வீட்டின் மீது சரமாரியாக கல்லெறிந்து தாக்கியதாம். மூத்த பெண்ணுக்கு தற்போது 31 வயதாகிறது. இளைய பெண்ணுக்கு இப்போது வயது 30. தகப்பனும் மகனும் ஏறக்குறைய பதின்ம வயது சிறுமிகளையே குறிவைத்து தங்களது காமவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தான் திருமணமாகாதவர் என்று இதுவரை ஏமாற்றி வந்த நாராயண் சாய்-க்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருப்பதாக கடந்த வாரம் அசாராம் பாபுவின் முன்னாள் செயலர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்திருந்தார். தற்போது பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரையும் அசாராமின் மனைவி லட்சுமியும், மகள் பார்தியும் மிரட்டி வருவதாக தங்களது புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அசாராமின் மனைவியும், அவரது மகளும்தான் எந்தெந்த பெண்கள், எந்தெந்த நேரங்களில், யார் யாருடன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்களாம்.
இதற்கிடையில் தனது வழக்கு பற்றிய விபரங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தை அக்டோபர் 8 அன்று அணுகியுள்ளார் அசாராம் பாபு. இதனால் தனது ஆசிரமத்தில் தங்கி பயிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அம்மனுவில் அசாராம் கூறியுள்ளார்.
முன்னதாக ராகுல் சர்மா என்ற முன்னாள் பக்தர் அகமதாபாத் மொடேரா ஆசிரமத்திலுள்ள அசாராம் பாபுவின் பிரத்யேகமான சாந்தி குடிலில் அவர் இரவு நேரத்தில் வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை படித்து கொண்டிருந்ததை பார்த்ததாகவும், அது பற்றி கேட்டதற்கு, ஆயுர்வேத மருத்துவத்திற்கு மிகவும் உதவும் என்று அசாராம் கூறியதாகவும் இணைய தளத்தில் கூறியுள்ளார். ராகுல் சர்மா ஓபியத்தை வழங்குவதற்காக அசாராம் பாபு விடம் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது குற்றஞ்சாட்டியுள்ள இரு பெண்களுமே அவரிடம் ஆயுர்வேத மருந்து தயாரிப்பவர்களாகவே முதலில் வேலை பார்த்து வந்தனராம். ராகுல் சர்மா ஒரு நாள் அசராம் பாபுவின் குடிலில் நிர்வாணமாக இருந்த 17 வயது பெண்ணை அசாராம் பாபு முத்தமிட்டுக் கொண்டிருந்ததை அக்குடிலுக்கு நேரில் சென்றிருந்த போது பார்த்தாராம். அத்துடன் அங்கிருந்து மொத்தமாக வெளியேறி விட்டாராம்.
மேலும் அஜய் குமார் என்ற இன்னொரு பக்தர் ஆசிரமத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தனது பெண் பக்தைகளுடன் அசாராம் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை செலவழித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி முன்னாள் பக்தர்கள் பலரே அசாராமின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் வேலையை செய்து விட்டதால் நாத்திகர்களுக்கு இத்தகையை கார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் வேலை குறைந்து விட்டது. எனினும் இன்னும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல பேர் அச்சத்தால் வெளியில் வந்து குற்றம்சாட்ட இயலவில்லை என்றும், அப்பெண்கள் பலரும் ஆசிரமத்திலிருந்து வெளியே வர அஞ்சுவதாகவும் பாதிக்கப்பட்ட இளைய பெண் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 15 பேர் சேர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள அசாராம் பாபுவின் ஆசிரமத்தை கடந்த அக்டோபர் 7 அன்று சூறையாடி விட்டனர். நாடு முழுக்க சூறையாடப்பட வேண்டிய கார்ப்பரேட் சாமியார்களின் மடங்கள் நிறைய இருக்கின்றன. இவர்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள் வரை இருக்கும் என்கிறார்கள். பாலியல் முறைகேடுகளோடு நிதி, நில மோசடிகளுக்காகவும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள குருகுலப் பள்ளியில் திபேஷ் வகீலா மற்றும் அபிஷேக் வகீலா என்ற 11 வயது மாணவர்கள் இருவர் 2008-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களை அசராம் பாபு நரபலி கொடுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களது பெற்றோரது தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னரும் கூட அசாராம் பாபு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து விசாரித்த டி.கே.திரிவேதி கமிஷசனின் அறிக்கையைக் கூட வெளியிடாமல் மோடி அரசு அசாராமைப் பாதுகாத்து வருகிறது. இரண்டு சிறுவர்களும் அசாராமின் ஆசிரமத்திற்காக தியாகம் செய்து விட்டனர் என்ற பாதகைகளுடன் நீதி கேட்டு அச்சிறுவர்களின் உறவினர்கள் தற்போது போராடி வருகின்றனர். தற்போது இவரை விமரிசிக்கும் காங்கிரசின் திக் விஜய சிங்கும் கூட இவரது பக்தர்தான். இவரது ஆட்சிக் காலத்தில்தான் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் அசாராமின் ஆசிரமத்திற்கு அரசு நிலம் ஒதுக்கியது.
பாபா ராம்தேவ், அமிர்தானந்த மாயி, பால் தினகரன், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சாயிபாபா என ஒரு பெரிய கூட்டமே கார்ப்பரேட் சாமியார் என்ற பெயரில் நில மோசடி, பண மோசடி, கிரிமினல் குற்றங்கள், ஹவாலா, வரி ஏய்ப்பு என பல்வேறு வகையான மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களை மறைத்துக் கொள்ள ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு த்ரி-இன்-ஒன் மோசடி வேலைகளை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்படி கார்ப்பரேட் சாமியார்கள் என்ற பெயரில் நடமாடும் கார்ப்பேரேட் பெருச்சாளிகளை ஒழிக்காமல் மக்களின் போராட்டங்களை கட்டியெழுப்புவது சிரமம்.
– வசந்தன்.
சொர்க்கத்துக்குப் போக குறுக்கு வழியை காட்டிய,
இந்துமத பாதுகாவலர்களுக்கு கைவிலங்கா?
ராம கொபாலா உனது ரத்தம் கொதிக்கவில்லையா?
இது போன்ற பக்கங்களுக்கு பையா வகையறா தப்பித்தவறியும் தவறாமல் வராமல் இருக்கிறார்கள்… போலீசு புனையும் பக்ருதீன் கொடூரச் சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுதமட்டும் தவறாமல் நம்மைச் சீண்டுவார்கள்…
எல்லாம் இங்க தான் இருக்கோம் ராகவ்நந்தன்…
என்னை நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்,நான் பிறப்பால் உணர்வால் ஓர் இந்து, அதை காசுக்காகவும் ஏன் வேறு எதற்க்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்…
ஆனால் போலி சாமியார்கள் என்றுமே இந்துத்துவத்திற்க்கு எதிரிகள்…அவர்களைநான் என்றுமே வழிபட்டதுமில்லை, ஆதரித்ததுமில்லை…அவர்கள் இந்த சமுதாயத்தின் எதிரிகள்…
போலி சாமியார்களும், பாதிரியார்களும் மற்றும் மதகுருமார்களும் ஒழிக்கப்படவேண்டியவர்கள்..
பையா…உங்களது கணக்கில்
ஜெயேந்திரன்
…நித்தி
எந்த நிலையில் இருக்கிறார்கள்?
னாய்டு காரு,
எனக்கு எந்த சாமியார் மீதும் நம்பிக்கைஇல்லை,,இந்த சாமியார்களால் அனைவரும் இந்து மதத்தைனை இழிவு படுத்தத்தான் செய்கின்றனர்…
//ஆனால் போலி சாமியார்கள் என்றுமே இந்துத்துவத்திற்க்கு எதிரிகள்…அவர்களைநான் என்றுமே வழிபட்டதுமில்லை, ஆதரித்ததுமில்லை…அவர்கள் இந்த சமுதாயத்தின் எதிரிகள்…//
Hi Payya,
Can you tell me at least one true prist [True சாமியார்] name?
பையன் இந்த கேள்வியை சாய்சில் விட்டுவிடுவார்…