செப்டம்பர் 29 – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் 105-வது பிறந்த நாளை ஒட்டி
நாடு கொள்ளை போவதைத் தடுக்க
மறுகாலனியாக்கத்தை மாய்க்க
புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வு
என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள துண்டறிக்கை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
அன்று
ஆங்கிலேயே காலனியாக்கவாதிகளின் அடக்குமுறை, சுரண்டல்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்தார்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் !
இன்று
இந்தியாவின் அன்னியக் கடன் மட்டும் ரூ 24 லட்சம் கோடி! ஆனால் முதலாளிகள் அடித்த கொள்ளையோ –
- 2ஜி அலைக்கற்றை கொள்ளை 1.75 லட்சம் கோடி!
- நிலக்கரி கனிமக் கொள்ளை ரூ 10 லட்சம் கோடி!
- கிரானைட் கொள்ளை பல லட்சம் கோடி!
- தூத்துக்குடி கனிம வளக் கொள்ளை மட்டுமே ரூ 60 லட்சம் கோடிக்கு மேல்!
தரகு அதிகார வர்க்க முதலாளிகளான டாடா, அம்பானி, விஜய் மல்லையா போன்றவர்கள் அரசு-பொதுத்துறை நிறுவனங்களிடம் ரூ 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
- இவர்களை எப்படி பாதுகாப்பது என்று சிந்திக்கிறது மன்மோகன் அரசு!
- இதனை எதிர்த்து பேச மறுக்கிறது பா.ஜ.க.!
- ஆனால் மாணவர்கள் கல்விக் கடன் ரூ 5000 கட்டாமல் இருந்தாலும், விவசாயிகள் கடன வாங்கி திருப்பிக் கட்ட இயலவில்லை என்றாலும் அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்துகிறது இந்த அரசு!
- ஆனால் மோசடி செய்த முதலாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறது!
தூ… மானங்கெட்ட சுதந்திரம்!
- சிறுதொழில் முனைவோருக்கு மின்வெட்டு – இதனால் சிறுதொழில்கள் நசிந்து சிறுதொழில் முனைவோர் கூலி வேலைக்கு செல்லும் அவலம்!
- உழைக்கும் மக்கள் மீது காய்கறி, டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு என பல மடங்கு விலைவாசி உயர்வு!
- விவசாயிகளுக்கு உத்திரவாதமான விலை இல்லை – விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற்றம்!
- தொழிலாளர்கள் சங்கம் வைக்க உரிமை இல்லை – நவீன கொத்தடிமைகளாக உழலும் அவலம்!
- மாணவர்களுக்கு கல்வி தனியார் மயம் – இலவசக் கல்வி என்பது கானல் நீரானது!
ஏரி, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள், காற்று, மருத்துவம், கல்வி, விவசாய நிலம் என உயிராதாரமான எல்லா பொருட்களும் தனியார் மயம்!
- தற்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமான முதலாளிகளுக்கு மேலும் வரிச்சலுகை, மானியங்கள் – அதாவது இதற்கு காரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது!
- இதனால் ஏற்படும் பாதிப்புகளோ உழைக்கும் மக்களான விவசாயிகள், சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள் மீது!
- இப்போது இருக்கின்ற நெருக்கடிகள் மட்டுமல்ல… ஆதார் அட்டை, உங்கள் பணம் உங்கள் கையில், உணவுப் பாதுகாப்புச் சட்டம், உணவு தரக் கட்டுப்பாட்டுச் சட்டம், தேசிய நீர்க் கொள்கை என்று தொடர்கின்றன இந்த தாக்குதல்கள்…!
குஜராத்தை சுடுகாடாக்கி, தொழிலாளர்கள் உரிமைகளை ஒடுக்கி, விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து நாட்டை மறுகாலனியாக்குவதில் முன்மாதிரியான மாநிலமாக குஜராத்தை மாற்றிய இந்து மதவெறி பாசிஸ்ட் மோடியை அடுத்த பிரதமராக ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன – ஆம், மக்களை ஒடுக்க மேலும் கொடூரமான பாசிஸ்ட்டை ஆளும் வர்க்கங்கள் தேர்ந்தெடுத்துள்ளன!
- மாற்றுத் திறனாளிகளை போலீசு குண்டர்களை வைத்து தாக்குகிறது தமிழக போலிசு!
- கூடங்குளம் மக்கள் ஒடுக்குகிறது இந்திய அரசு!
- கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடுபவர்களை கடலோரக் காவல் படை ஒடுக்குகிறது!
- தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கொல்கிறது!
- உரிமை என்று பேசுபவர்களை மிரட்டியே கொல்கிறது அதிகார வர்க்கம்!
- தேசத்தின் பாதி இடங்களில் இராணுவ ஆட்சி! மீதியுள்ள இடங்களில் போலீசு ஆட்சி! –
இதுதான் பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் கூட்டாட்சி – மறுகாலனியாக்க ஆட்சி
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசியலமைப்பே நாட்டைக் கொள்ளையடிக்க துணை நிற்கிறது. போராடும் மக்களை ஒடுக்குகிறது.
நாட்டை மீண்டும் அடிமையாக்கும் ஓட்டுச் சீட்டு அரசியலை நிராகரிப்போம்! மக்களே அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்