வியாபாரிகள் ஒற்றுமையை கட்டி அமைப்போம்! போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்!
அன்றைக்கு ‘ எனக்கு கப்பம் கட்டு, பொழச்சிக்கோ’ என்றான் வெள்ளைக்காரன். இதனை ஏற்று, ஆங்கிலேயனுக்கு அடிமையாயிருந்து, சுகபோகமாக வாழ்ந்தான் எட்டப்பன், உரிமை பேசிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். ஆனால், மக்கள் எட்டப்பனை ‘துரோகி, கோழை’ எனத் தூற்றியும், கட்டபொம்மனை ‘ தியாகி, வீரன்’ எனப் போற்றியும் பேசி வருகின்றனர்.
இன்றைக்கு ‘ எனக்கு மாமுல் கட்டு, பொழச்சுக்கோ! உரிமை பேசினால் ஒழித்து விடுவேன்’ என்கிறது கோட்டை போலீசு. சிலர் இதனை ஏற்றுக்கொண்டு அடிமை வாழ்வு வாழ்கின்றனர்.
திருச்சியில் பத்தாண்டுகளுக்கும் முன்னதாக, பெரியகடை வீதி, தேரடி கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, நந்திகோவில் தெரு தரைக்கடை வியாபாரிகளை மொத்தமாக அப்புறப்படுத்தியது மாநகராட்சி. திக்குத் தெரியாமல் தவித்த வியாபாரிகளுக்கு சரியான தலைமை தந்தது, அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்.
‘தரைக்கடை போடுவது என் உரிமை’ என வியாபாரிகளைத் திரட்டி போராடி நந்திக்கோயில் தெருவில் கடை போடும் உரிமையை பெற்றுத் தந்தது சங்கம். சங்கத்தை ‘ நேருக்கு நேராக நின்று அதிகாரத்தைக் காட்டி பணிய வைக்க முடியாது’ என்பதைப் புரிந்து கொண்ட போலீசு நரித்தனமாக சிந்தித்து, ‘ அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தில் இல்லை என எழுதிக் கொடுத்து விட்டு NSB ரோட்டில் கடை போட்டுக் கொள்’ என்று ஒரு சில வியாபாரிகளை அனுமதித்தது.
பின்பு ‘புரோக்கர்களிடம் பணம் கொடுத்தால் மட்டும் கடை போட முடியும்’ என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
செய்வதோ அடிமைச் சேவகம்! பேசுவதோ வீர வசனம்!!
மக்களைத் திரட்டி போராடி உரிமைகளைப் பெற்றுத் தருவதே கம்யூனிஸ்டுகளின் கடமை. இதை உணராமல், போலீசுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்து கடைபோட வைப்பதே பெருமை என பீற்றித் திரிகிறார்கள் சிஐடியு சங்கத்தினர். இவர்களிடம் இருந்து பிரிந்து போன த.மு.மு.க சங்கமும் சிஐடியு-விற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்து வருகின்றனர்.
புரட்சிகர சங்கத்தின் போராட்டமும் போலீசின் நயவஞ்சகமும்
தெப்பக்குளம் தென்கரை காலியாக இருந்த போது, அதில் ‘ கடை போட அனுமதியுங்கள்’ என முதலில் மனு கொடுத்தது அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், நமக்கு எந்த பதிலும் சொல்லாமலேயே, சிஐடியு-காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, கடை போடச் சொன்னார் அப்போதைய கோட்டை காவல் ஆய்வாளர் பர.வாசுதேவன்.
‘எங்களுக்கு இடம் வேணும்னு ம.க.இ.க காரங்க கேப்பாங்க, அதனால் கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் எடுத்திடு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆலோசனையும் சொன்னார். நாம் போராட்டத்தை அறிவித்தவுடன் பெயரளவில் ஒரு சில இடங்களை மட்டும் ஒதுக்கியது போலீசு. அதிலும் நமது சங்க வியாபாரிகள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதற்காக, சிஐடியு-வினரைத் தூண்டிவிட்டு, அடிதடி, வழக்கு, ஆர்.டி.ஓ. விசாரணை என இன்று வரை தகராறு தொடர்கிறது. இதற்காக பலமுறை மனு கொடுத்தாலும், நடவடிக்கை எடுப்பத்தில்லை, இன்று, நாளை என அலைக்கழித்து வருகிறது கோட்டை போலீசு.
ஆக மொத்தத்தில், வியாபாரிகளின் ஒற்றுமையைக் குலைப்பது, சங்கத்தை ஒழிப்பதற்கான வேலைகளை அன்றைய உதவி ஆய்வாளர் சுகுமார் முதல் அவருக்கு பின் வந்த ஆய்வாளர் பர.வாசுதேவன், இன்றைய ஆய்வாளர் ஞானவேலன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு வரை அனைவரும் செய்து வருகிறார்கள். இவர்களின் எண்ணம் எக்காலத்திலும் ஈடேறாது! சங்கத்தை ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போனதே வரலாறு!
தரைக்கடை வியாபாரிகளே!
- NSB ரோடு, தெப்பக்குளம் பகுதிகளில் தரைக்கடை வியாபாரம் செய்வது நமது உரிமை!
- இதை போலீசு தடுப்பது, மாமூல் கேட்பது, பொய் வழக்கு போடுவது அநீதி, போலீசிடம் அஞ்சி, கெஞ்சி வாழ்ந்தது போதும்!
- போலீசின் சூழ்ச்சி, சதித்தனத்தை புரிந்து கொள்வோம்!
- ஒன்று பட்டு போராடுவோம்! உரிமைகளை பெறுவோம்! வாரீர்!
- என அனைத்து தரைக்கடை வியாபாரிகளிடமும் பரவலாக பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில்
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 17.10.2013 காலை 10 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் சங்கத்தின் செயலாளர் தோழர். பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.சேகர் தனது உரையில், “NSB ரோடு, தெப்பக்குளத்தில் தரைக்கடைகள் போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, அதனால் தரைக்கடைகள் போட அனுமதி மறுக்கிறோம் என்று மாநகராட்சியும் போலீசும் சொல்வது, பச்சைப் பொய். போலீசுக்கு பொய் வழக்கும், மாமூலும் தேவை என்ற அடிப்படையில் தரைக்கடைகள் போட அனுமதி மறுக்கிறார்கள், மாமூலும், பொய்வழக்கும் தருகின்றவர்களுக்கு கடைபோட அனுமதி அளிக்கிறது. இது எந்த வகையிலும் நியாயம் இல்லை” என்று விளக்கி பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசுகையில் தரைக்கடை வியாபாரிகளுக்கும் மக்களுக்குமான நெருங்கிய உறவு பற்றியும் தரைக்கடைகள் போடுவது சட்டப்படியான உரிமை என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் போலீசு கடைபோட கூடாது என சொல்லுவதற்கும் மாமூல் கேட்பதற்கும், பொய்வழக்கு போடுவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை, இது சட்டவிரோதமான செயல் என்று பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கி பேசினார். வியாபாரிகள் ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் சிலருக்கும் மட்டும் கடை போட அனுமதித்து சிலருக்கு மறுத்தும் வருகிறது போலீசு என்பதை அம்பலப்படுத்தும் விதமாகவும் ஆர்ப்பாட்டம் அமைந்தது.
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் இலியாஸ் நன்றி கூறினார்.
போலீசை அம்பலப்படுத்தும் விதமாக ‘ ஏழை மக்கள் பாதுகாக்க போலீசு வராதது, ஏய்ச்சி பொழைக்கும் கூட்டத்தையே பாதுகாக்கும் ‘ என்ற பாடல்களை பாடி ஆர்ப்பாட்த்தில் கலந்துக் கொண்ட தோழர்கள், வியாபாரிகளை உற்சாகப்படுத்தினார்கள். ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட வியாபாரிகள் போலீசின் சூழ்ச்சியை புரிந்துக் கொண்டு அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றார்கள்.
முழக்கங்கள்
அனைத்து தரைக்கடை பாதுகாப்பு சங்கம்! வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாழ்க!
போராடுவோம்! போராடுவோம்!
ஒன்றுபட்டு போராடுவோம்!
உரிமைகளை மீட்டெடுப்போம்!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
போலீசின் சதித்தனத்தை
புரிந்து கொள்வோம்! முறியடிப்போம்!
NSB ரோடு பொதுச் சொத்தா?
போலீசு, புரோக்கர்கள் சொத்தா?
தரைக்கடை வியாபாரிகளே!
தெப்பக்குளம், NSB ரோட்டில்
தரைக்கடை போடுவது நமது உரிமை!
போலீசை பார்த்து அஞ்சுவதும்,
புரோக்கர்களிடம் கெஞ்சுவதும்
அவமானம்! அவமானம்!
ஒன்றாய்த் திரண்டு போராடி
உரிமை பெறுவதே தன்மானம்!
காவல் துறையே! காவல் துறையே!
தரைக்கடை வியாபாரிகளிடம்
மாமூல் கேட்பதை உடனே நிறுத்து!
பொய் வழக்கு போடாதே!
தெப்பக்குளம, NSB ரோட்டில்
இடத்தை பிடித்து விற்கும்
பொறுக்கிகளை, புரோக்கர்களை
கைது செய்! கைது செய்!
காசு கொடுத்து கடை போடும்
தரைக்கடை வியாபாரியே!
நம்பாதே! நம்பாதே!
புரோக்கர்கள், போலீசை
நம்பாதே! நம்பாதே!
புடுங்கித் திங்கிது போலீசு– அதுல
பொறுக்கித் திங்கிறான் புரோக்கரு
ஒன்றுபட்டு போராடுவோம்!
புரோக்கர்களை விரட்டியடிப்போம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி:
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம்
இணைப்பு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.