privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்

பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்

-

5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. வாக்கு எண்ணப்பட்ட நாளான ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 8, 2013) நிலவரங்கள் வெளியாக ஆரம்பித்ததும், ‘இது நாடாளுமன்ற தேர்தல் எனும் இறுதிப் போட்டிக்கான அரை இறுதிப் போட்டி, அதில் மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி வாகை சூடுகிறது’ என்று ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தனர் மோடியின் இணைய பிரச்சாரப் படையினர். இந்துத்துவ தளங்களில், ‘2004-ம் ஆண்டு வரை நடந்த வாஜ்பாயி ஆட்சி என்ற நிழலை புறக்கணித்து அடுத்த 10 ஆண்டுகள் வெயிலில் காய்ந்த மக்களுக்கு புத்தி வந்து மீண்டும் இந்து தர்மத்தின் புத்திரர்களை வரவேற்க தயாராகியிருக்கின்றனர்’ என்று தீர்ப்பு எழுதினர்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சியை தனிப் பெரும்பான்மையுடன் பிடித்திருக்கிறது. சட்டீஸ்கரிலும் ஆட்சியை மீண்டும் பிடித்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும், அவரது சூறாவளி பிரச்சார சுற்றுப் பயணங்களும்தான் என்று நம்ப வைக்கும் வேலையை இந்துமதவெறி அமைப்புக்களின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

ஆனால், ஊடகங்கள் மோடியின் இந்தத் திருவிழாவில் பெய்த மழையாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு ஆம் ஆத்மி பார்ட்டியின் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆட்ட நாயகனாக அறிவித்து கொண்டாட ஆரம்பித்து விட்டன. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தலில் வெறும் 8 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, 28 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ‘மோடி நடத்திய கூட்டங்களில் கூடிய அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்தாலே அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி விடும்’ என்ற அளவுக்கு பில்ட்-அப் கொடுத்தும், காங்கிரஸ் மீதான மக்களின் கடும் அதிருப்தியை தனது ஆதரவாக மாற்றிக் கொள்ள முடியாமல் 70 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 31 இடங்களை மட்டும் பிடித்தது பாஜக (1 இடத்தில் கூட்டணி கட்சியான அகாலி தளம் வெற்றி பெற்றது). இவ்வாறாக, எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சிக்கலில் டெல்லி மாட்டியுள்ளது.

இன்னும் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில், தமது இமேஜை தக்க வைத்துக் கொள்வதற்காக குதிரை பேரம், சந்தர்ப்ப வாத கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு போன்ற ‘ஜனநாயக’ நடைமுறைகளை பாஜகவும், ஆம் ஆத்மி பார்ட்டியும் ஒத்தி வைத்திருக்கின்றன. வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் மறு தேர்தல் நடக்கவிருக்கும் சூழலை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனையாக வெங்காய விலை முதல் மின் கட்டணம் வரை விண்ணைத் தொடுவதில் ஆரம்பித்து மக்களுக்கு பொருளாதார நெருக்கடியும் நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் ஊழல்களும் மக்களை கடும் வெறுப்படைய வைத்துள்ளது. அந்த வெறுப்பை அறுவடை செய்ய வேண்டிய வேலை மட்டும்தான் மோடிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்தது. ஆனால், பாரம்பரியமாக வலுவான தளம் உடைய டெல்லி போன்ற சிறு பகுதியில் கூட அவர்களால் அதை முழுமையாக செய்ய முடியாமல் நேற்று முளைத்த காளான் போன்ற அன்னா ஹசாரேவின் முன்னாள் தளபதியான அர்விந்த் கேஜ்ரிவால் குழுவினரிடம் வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கிறது பாஜக. மொத்த வாக்கு சதவீதத்தில் அதன் பங்கு 2 புள்ளி சரிந்து 34 சதவீதத்துக்கு வந்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 30 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது.

மக்களுக்கு வேறு புகலிடம் இல்லாத சத்தீஸ்கரில் கூட பாஜக கடந்த தேர்தலை விட இரண்டு இடங்கள் குறைவாக பெற்று ஆட்சி அமைக்கிறது. மகேந்திர கர்மாவின் மரண அனுதாபத்தை வைத்து காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தலை விட 2 இடங்களை அதிகமாகப் பிடித்திருக்கிறது. வேறு நாதியில்லாத வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் மூன்றில் இரண்டு இடங்களை பிடித்திருக்கிறது. மோடி அலையில் மிதந்த பாஜக போட்டியிட்ட 16 தொகுதிகளிலும் நூறுகளிலும் பத்துகளிலும் வாக்குகளை குவித்து டெப்பாசிட் இழந்திருக்கிறது.

‘நகர்ப்புற  நடுத்தர வர்க்கத்தின் நம்பர் ஒன் நாயகன் மோடி’ என்று இணையத்தில் பல லட்சம் முறை ஸ்டேட்டஸ் போட்டும் டெல்லி நடுத்தர வர்க்கம் கேஜ்ரிவால் பின்னால் போய் விட்டதை மோடியின் இணைய மார்க்கெட்டிங் ஊழியர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மோடியை தூக்கி நிறுத்த எத்தனை கோடிகள் செலவு, எத்தனை முறை லட்சங்களில் ஆள் திரட்டல், இந்த உழைப்பெல்லாம் கடைசியில் இந்த கேஜ்ரிவால் என்ற சிறு மனிதரின் கட்சியின் தாக்கத்துக்கு முன் எடுபடாமல் போய் விட்டதே என்ற விரக்தி காவிக் கும்பலுக்கு.

காங்கிரசை தூக்கி எறிய நினைக்கும் மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்கும் போது அதன் கடந்த கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஊழல்கள் முதல், குஜராத்தில் மோடியின் ‘நல்லாட்சி’,  கர்நாடகா சுரங்க ஊழல்கள் வரை லீலைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனாலும் வேறு என்ன தீர்வு என்பதற்கு பதில் இல்லாத போது இராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் கழுதைக்குப் பதில் நாயை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. டெல்லியில் இன்னும் என்ன விலங்கு என்று அடையாளம் தெரியாத புதிய கட்சியின் பின் மக்கள் போயிருக்கின்றனர்.

யோகேந்திர யாதவ்
யோகேந்திர யாதவ்

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக யோகேந்திர யாதவ் போன்ற திறமை வாய்ந்த தேர்தல் ஆய்வாளரும் இருப்பது அதன் திட்டமிட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. டெல்லி போன்ற பல ஆயிரம் வாக்குகளை மட்டும் கொண்ட தொகுதிகளில் தெருத் தெருவாக திட்டமிட்டு ஊழியர்களை அமர்த்தி, பிரச்சாரம் நடத்தியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ‘வீடுகளின் மின்சார செலவு பாதியாக குறைக்கப்படும்’, ‘ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 200 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்’ என்று மோடியின் மேட்டுக் குடி படைகளால் வெறுக்கப்படும் இலவசங்களையும், மானியங்களையும் வாக்குறுதியாகக் கொடுத்திருந்தது ஆம் ஆத்மி கட்சி.

இப்படி வாக்குறுதி கொடுக்க முடியும் எந்தக் கட்சியும் உழைக்கும் மக்களிடம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்திடமும் வாக்குகளை குவித்து விட முடியும் என்பதற்கு இந்த டெல்லி தேர்தல் ஒரு உதாரணம். மேலும் நடுத்தர வர்க்கத்தின் தேவதையாக இருந்த காங்கிரசின் ஷீலா தீட்சித்தை அகற்றிவிட்டு நாங்கள்தான் அடுத்த தேவன் என்று நிரூபிக்கும் வேலையை ஆம் ஆத்மி கச்சிதமாக செய்திருக்கிறது.

வாக்குறுதிகளும், திட்டமிடலும் மட்டும் போதாதுதான், கணிசமான பண பலமும் தேவை. நன்கொடைகள் மூலமாக உலகெங்கிலும் ரூ 20 கோடி தேர்தல் நிதி திரட்டியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அண்ணா ஹசாரே இயக்கத்தின் மூலம் இணையத்தில் பிரபலமாயிருந்தது இதற்கு பெரிய அளவு பலனளித்திருக்கும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே ஆம் ஆத்மி கட்சியின் சவாலை குறைத்து மதிப்பிட்டதும் ஓரளவுக்கு உதவியது. நம் ஊரில் கேப்டன் விஜயகாந்த் முதல் தேர்தலில் தனித்து நின்று ஒரு தொகுதியிலும், இரண்டாவது தேர்தலில் ஜெயலலிதாவையே ஏமாற்றி கூட்டணி அமைத்து எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆகி விடவில்லையா என்ன?

கேப்டன் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக சட்டமன்றத்திலும், வெளியிலும் சீக்கிரமே அம்பலப்பட்டு விட்டார். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும். மக்கள் விரோத  பொருளாதாரக் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட இந்த அமைப்பிற்குள் எதையும் மாற்றி விட முடியாத காகிதப் போராளிகள்தான் அவர்களும் என்று நிரூபிக்கப்படும்.

உலக மயம், தனியார் மயம் தாராள மயத்தை ஒழித்துக் கட்டாமல் மின் கட்டணம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டு போவதையும், தண்ணீர் மேலும் மேலும் பணம் படைத்தவர்களின் உரிமையாக குறுக்கப்படுவதையும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. முதலாளிகளின் லாபம் சம்பாதிக்கும் உரிமையை உறுதி செய்ய அரசு அதிராக அமைப்பும், நீதி மன்றங்களும் பக்கபலமாக இருக்கையில், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை ஊழல் படுத்தும் அளவுக்கு பெருகிப் பாயும் பண வெள்ளமும் இருக்கும் போது அக்கட்சி விஜயகாந்த் வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் கொண்டு கொடுப்பதைப் போன்ற திட்டங்களை காட்டி சில காலம் காட்சி நடத்துவதோடு அந்தக் கனவு கலைந்து போகும். மேலும் அண்ணா ஹசாரே பீக்கில் இருந்து போதும் இவர்களது ஊழல் எதிர்ப்பில் கார்ப்பரேட்டுகள் இல்லை என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள்
வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள்

டெல்லியை ஒட்டிய கேஜ்ரிவாலின் மாநிலமான அரியானாவையும் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களையும் அடுத்த இலக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தரப்பினர் கருதுகின்றனர். இந்தியாவின் இதயம் வாழும் கிராமப் புறங்களிலும், தமிழ் நாடு போன்று அழகிரி ஃபார்மூலா ஊக்கமாக செயல்படும் இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சியின் நடுத்தவர்க்க ஆதரவுப் பிரச்சாரம் எடுபடாது.

கேஜ்ரிவாலின் முன்னாள் குரு அன்னா ஹசாரே, தான் மட்டும் தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தால் கேஜ்ரிவாலை முதலமைச்சர் ஆக்கிக்  காட்டியிருப்பேன் என்று மார் தட்டி விட்டு, ஊழலுக்கு எதிரான தனது அடுத்த உண்ணா விரதத்தை ராலேகான் சித்தியில் ஆரம்பித்திருக்கிறார்.

வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள், இந்தத் தேர்தலை பக்கவாட்டில் இருந்து வேடிக்கை பார்த்தனர். ராஜஸ்தானில் கைவசம் இருந்த 3 தொகுதிகளும் பறிபோனது வருந்தத்தக்கது என்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். காங்கிரசை தூக்கி எறியும் ஆர்வத்தில் மக்கள் பாஜகவின் அலையை உருவாக்கி விட்டார்கள், அதில் சிபிஎம்மும் அடி பட்டு விட்டது என்று வருத்தப்பட்டிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் தேர்தலில் நின்று காம்ரேடுகள் சாதித்தது இவ்வளவு பெரிய காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் கூட கரையேற முடியாத அவலத்தைத்தான்.

அதே நேரம், ஏற்காடு தேர்தலில் அதிமுகவின் அபார வெற்றி, ஜெயலலிதா மீது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்றும் உருகியிருக்கின்றனர். அதன் மூலம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா தயவில் போட்டியிடுவதை உறுதி செய்து கொள்ள முயன்றிருக்கின்றனர்.

இந்தத் தேர்தல்கள் அனைத்துமே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை,  தம்மையும், தம் நாட்டு வளங்களையும் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு சேவை செய்து கமிஷன் வாங்கும் குழுவை மக்கள் தேர்ந்தெடுக்கும் கூத்துக்கள்தான். பழைய செட்டு ஆடினாலும் சரி, புதிதாக பக்கத்து ஊரு செட்டை கூட்டி வந்தாலும் சரி, திருவிழாவில் ஆதாயம் பார்க்கப் போவது ஊர் பெரிய மனிதர்களான முதலாளிகள்தான். உழைக்கும் மக்களுக்கு நவீன சவுக்கடியும் சாணிப்பாலும் கிடைப்பது மட்டும்தான் இந்த அமைப்பு தரும் உத்தரவாதம்.

செழியன்