privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பாரதி அவலம்

-

( பாரதி திரைப்படம் குறித்து தோழர் மருதையன் எழுதிய இந்த விமரிசனக் கட்டுரை 2000-ம் ஆண்டு அக்டோபர் மாத புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. )

வெற்றியின் ரகசியமாக தமிழ்த் திரையுலகத்தினர் பயபக்தியுடன் உச்சரிக்கும் சென்டிமென்ட் எனும் மந்திரச் சொல்லை நாராக வைத்து பாரதியின் வாழ்க்கையைத் தொடுத்திருக்கிறார் ஞான. ராஜசேகரன்.

பாரதி திரைப்படம்ஏதோ ஒரு அநாதையின் மரணத்தைப் போலப் புறக்கணிக்கப்பட்ட பாரதியின் மரணம் – இந்தப் புறக்கணிப்பு தோற்றுவிக்கும் அவலம் – இந்நிலைக்கு பாரதியை ஆளாக்கிய ச­மூகத்தின் மீது குற்றச்சாட்டு – என்று தெளிவான முன்னுரையுடன் தொடங்குகிறது படம்.

முன்னுரையின் கூற்றை உறுதி செய்வதற்கு ஏற்ற முறையில் கட்டுரையின் – அதாவது திரைப்படம் எனும் கட்டுரையின் – உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

“நான் காலத்தை மீறிக் கனவு கண்டேன்; அதன் விளைவை அனுபவித்தேன். நீ அவ்வாறு சிந்திக்காதே” என்று தந்தை தனயனுக்குக் கூறும் அறிவுரையுடன் தொடங்குகிறது படம். அறிவுரையைக் கேட்கத் தவறிய பாரதி அதன் விளைவுகளை அனுபவிக்கிறான். வறுமை, குடும்பத்தில் சச்சரவுகள், சாதிப் புறக்கணிப்பு, போலீசு தொல்லை… என்று துன்பங்கள் தொடர்கின்றன.

முறுக்கிய மீசையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பாரதி, துயரத்திற்கும், கோபத்திற்கும், சமரசத்திற்கும் ஆட்படுகின்ற சாதாரண மனிதனாகவும் இருந்தான் என்ற சித்தரிப்பு, பாத்திரத்தின் மீது ஒரு வகையான நம்பகத் தன்மையையும் அதை விஞ்சுகின்ற அளவு அனுதாபத்தையும் ரசிகனிடம் தோற்றுவிக்கின்றது. இதில் ஷிண்டேயின் நடிப்பு கூடுதல் பங்காற்றுகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் இடுகாடு; பாரதியை வேட்டையாடிய ச­மூகத்தின் மீது மீண்டும் சாடல், “உங்கள் மத்தியிலும் பாரதிகள் இருக்கக் கூடும்; அவர்களைப் பின்பற்றா விட்டாலும் அங்கீகரியுங்கள்” என்ற கோரிக்கையுடன் படம் முடிகிறது.

****

ரலாற்றில் பாரதி இடம்பெறக் காரணம் அவனது கவிதை. கவிதைக்கும் கவிஞனுக்கும், கவிதைக்கும் ச­மூகத்திற்கும், கவிஞனுக்கும் ச­மூகத்திற்கும் இடையிலான உறவை ஆய்வு செய்வதன் ஊடாக அவனது வாழ்க்கை கூறப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் கவிஞனின் வாழ்வுக்கும் அவனது படைப்பு ஆளுமைக்கும் இடையிலான உறவை பரிசீலிப்பதுதான் மிக முக்கியமானது.

ஆனால் காலவரிசைப்படி பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களின் ஊடாக அவன் வாழ்ந்த காலத்தைச் சித்தரிக்கிறது திரைப்படம். இதன் விளைவாக பாரதி அதிமனிதன் ஆகிறான். ச­மூகமோ வில்லனாகிறது.

பாரதியின் குழந்தைப் பருவ நடவடிக்கைகளாகட்டும், பூணூல் அறுத்த பாரதியை அவனுடைய அக்காள் கணவரும், மன்னரும் ஞானியென்று வியப்பதாகட்டும், நண்பன் ஆர்யாவின் புகழுரை ஆகட்டும் அனைத்தும் பாரதியை ஒரு “அவதார புருசனாக” உயர்த்துகின்றன. படத்தைப் பொறுத்தவரை பாரதி தன் கவிதை ­மூலம் “மகாகவி” ஆகவில்லை; மகாகவியாகவே பிறக்கிறான்.

“எப்பேர்ப்பட்ட மனுசனுக்கு இந்த நிலைமை பாரு” என்று படம் முடிந்தவுடன் பேசிக் கொண்டார்கள் இரண்டு மாமிகள். ஒரு மாமனிதன் சராசரிகளால் வேட்டையாடப்படும் போது பிறக்கும் அவலம்தான் படம் உருவாக்கும் உணர்ச்சி.

இதனால் தேசத்தின் அவல நிலையைக் காட்டிலும் தேசிய கவியின் அவல நிலை பெரிதாகி விடுகிறது. தீண்டாமை எனும் ச­மூகக் கொடுமையைக் காட்டிலும், அதை எதிர்க்கும் கதாநாயகனின் மீதான கொடுமை பெரிதாகி விடுகிறது.

பாரதிபாரதியின் அவலம் என்று ஒன்று உண்டா? உண்டென்றால் அதற்கு அவனை ஆளாக்கியது அவன் வாழ்ந்த ச­மூகமா? “சாதியை எதிர்த்தான், பெண் விடுதலையைப் பாடினான்; தேச விடுதலையைப் பாடினான் – கம்பீரமான கவிஞனாக இறந்தான்” என்று சொல்ல முடியாமற் போன காரணமென்ன?

அவன் வாழ்ந்த காலத்திலேயே அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் காரணமா? அல்லது சாவுக்குக் கூட ஆயிரக் கணக்கானோர் திரளவில்லை என்பதா? அல்லது சொந்த சாதிப் பார்ப்பனர்களால் துன்புறுத்தப்பட்டான் என்பதா – இவையெல்லாம் அவலத்தின் காரணங்களாகி விடுமா?

கொண்ட கொள்கைக்காக நஞ்சருந்திச் செத்தான் சாக்ரடீஸ்; தூக்கில் தொங்கினான் பகத்சிங்; போர் வீரர்களுடன் வீரனாக செத்துக் கிடந்தான் திப்பு சுல்தான். கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான் நக்சல்பாரிக் கவிஞன் சரோஜ் தத்தா. இவர்களது மரணம் எதுவும் அவலமாகக் கருதப்படவில்லை; சித்தரிக்கப்படுவதுமில்லை.

வாழும் காலத்திலேயே மக்கள் அங்கீகாரம் கிடைத்ததா, சாவுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பதெல்லாம் அவலத்தை அளக்கும் அளவு கோல்களல்ல; “காலத்தை மீறி” கனவு காணும் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்து மக்களால் புறக்கணிக்கப்படுவதையும், ஏளனம் செய்யப்படுவதையும் எதிர்பார்த்துத்தான் அவ்வாறு கனவு காண்கிறான்.

பாரதியிடம் நாம் காணுகின்ற பிரச்சினை அவனுக்கும் ச­மூகத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் விளைந்ததல்ல; தன்னுடைய கவிதையின் உணர்வில் அவனால் ஏன் வாழ முடியவில்லை என்பதுதான் விடை தேட வேண்டிய கேள்வி. கவிதையின் கனவுலகில் வாள் சுற்றிய பாரதி அரசியலின் நனவுலகில் சரணடைகிறான். அவன் எழுதிய கவிதை வரிகளால் மற்றவர்கள் எழுச்சி பெற்ற தருணத்தில் அவன் எதிரிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.

இந்தச் சுயமுரண்பாட்டையே அவலமாகவும், அந்த அவலத்திற்குக் காரணம் அவனைப் புறக்கணித்த ச­மூகம் என்றும் வியாக்கியானம் செய்கிறார்கள் பாரதி அபிமானிகள். திரைப்படமும் அதைத்தான் செய்கிறது.

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்று பாரதி பாடியவுடனே தருப்பைப் புல்லை பார்ப்பனர்களும், துப்பாக்கியை வெள்ளைக்காரனும் கீழே போட்டுவிட வேண்டுமோ?

பாரதிஅல்லது திரைப்படத்தின் முடிவுரை கோருவது போல கவிஞனைப் “பின்பற்ற முடியாவிட்டாலும் அங்கீகரிக்க” வேண்டுமோ? இல்லையென்றால் கவிஞர்கள் “அவலநிலைக்கு” ஆளாகி விடுவார்களோ?

பாரதியின் முரண்பாட்டை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்று கூறும் கவிஞர்களும் அறிஞர்களும் உண்மையில் தங்களுடைய இரட்டை நிலையை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் இப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறார்கள்.

அவலச் சுவை ததும்பும் இந்த “மனநிலையை’ நீங்கள் மேலும் சீண்டினால் அதிகாரத் தொனியில் கவிஞர்களின் “பகுத்தறிவு” பேசத் தொடங்கும்.

“கவித்துவத்தை மட்டும் வைத்துத்தான் கவிஞனை மதிப்பிட வேண்டும். “உன் கவியுணர்வுக்கு நீயே விசுவாசமாக இல்லாதது ஏன்’ என்றெல்லாம் கேட்கக் கூடாது. படைப்பு வேறு – படைப்பாளி வேறு” என்று அகந்தையுடன் சீறுவார்கள்.

கவித்துவ மனநிலையில், கவிதையில் வெளிப்படும் கவிஞனின் அகந்தைக்கும், கவிதை முடிந்தபின் யதார்த்த வாழ்க்கை குறித்து எழும் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும்போது அவனிடம் வெளிப்படும் அகந்தைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

“வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்றி நினைத்தாயோ” என்ற கவிதை வரியில் “விழமாட்டோம்” என்று கூறும் ஒரு வர்க்கம்/ச­கக் குழுவின் மனவுணர்வு கவிஞனின் வழியாகப் பேசுகிறது.

“ஏன் விழுந்துவிட்டாய்” என்று பிறகு கவிஞனை நோக்கி கேள்வி கேட்கப்படும்போது அவனிடமிருந்து வரும் பதில் அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உணர்வு நிலையிலிருந்து வருவதில்லை. அவனது தனிப்பட்ட உணர்விலிருந்து வருகிறது. தனிநபரின் அகந்தையாக வருகிறது. “படைப்புக்கு படைப்பாளி விசுவாசமாக இருக்கத் தேவையில்லை” என்று பதில் வருகிறது.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் விசுவாமித்திரன் உருவாக்கிய கள்ளக் குழந்தையாகி விடுகிறது கவிதை. அதை வாசகர்களாகிய மேனகைகள்தான் தூக்கித் திரிய வேண்டும்.

“வெட்டி வீழ்த்த வா” என்ற கவிஞனின் வரிகளை நம்பி (அதாவது அந்த மன உணர்வுக்கு ஆட்பட்டு) நீங்கள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், கவிஞர் எதிரிக்கு முதுகு சொறிந்து கொண்டிருக்கலாம். கனவில் எழும்பும் முனகல் போல அவர் வெளிப்படுத்திய கவிதையை, அழகிய கண்கொண்டு ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் கண்கொண்டு அதற்கு கவிஞனிடம் விளக்கம் கோரக் கூடாது.

இது சாத்தியமா? அப்படி என்னதான் சிறப்புத் தகுதி கவிஞனுக்கு? காட்சி அனுபவத்தையும் மனவுணர்வையும் வார்த்தைகளில் சிறைப்பிடிக்கும் நுட்பம்தான் கவிஞனின் சிறப்புத் தகுதியா? எனில் அத்தகைய கவிஞனை “வார்த்தை வித்தகர்” என்று அழைக்கலாமே!

பாரதிதனது கவித் திறனும் படைப்பின் அழகியலும் போற்றப்படும் இடத்தில் தனது கவிதையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கவிஞன்,

வேறு வார்த்தைகளில் சொன்னால் தன் பலத்துக்காக மீசையை முறுக்கும் கவிஞன், பலவீனம் குறித்துப் பேசும்போது “விட்டு விடுதலையாகி நற்பது’ ஏன்?

தனது கவியுணர்வில் ஒரு கவிஞன் தொடர்ந்து வாழ முடியாமல் போவதும், தான் கூறிக்கொண்ட கொள்கை வழியில் ஒரு மனிதன் செயல்பட முடியாமல் போவதும் பலருக்கும் ஏற்படும் அனுபவம்தான். இந்த முரண்நிலை குறித்த கேள்விக்குச் சாமானியர்கள் கூட ச­மூகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிஞர்களும், கவிஞர்களும் ச­மூகத்திற்குப் பதில் சொல்வதுடன் தமக்குத் தாமே விடைதேடும் சுயபரிசீலனையிலும் ஈடுபட வேண்டும்.

தம்மை அதிமனிதர்களாகக் கருதிக் கொள்ளும் கவிஞர்கள் இதற்கு விடை சொல்லாமல் மவுனம் சாதித்தாலோ அவர்களது “ஆளுமை’ உடைந்து நாெறுங்கி விடும். எனவே “ச­மூகம்தான் தனது வீழ்ச்சிக்குக் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஞான. ராஜசேகரனும் இதைத்தான் செய்கிறார். பாரதியின் சுய முரண்பாடுகள் குறித்து இயக்குநரின் மனதில் ஐயமிருந்திருப்பினும், திரைப்படத்தில் அவற்றைச் சித்தரிக்கும் துணிவு அவருக்கில்லை. எனவே, ஆளும் வர்க்கங்களாலும், பாரதி அபிமானிகளாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பாரதியின் தோற்றத்திற்கு  பக்க வாத்தியம் வாசிக்கிறது திரைப்படம்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,

ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை.

உண்மையான எதிரியாகிய வெள்ளையனிடம் சரணடைந்த கோழைத்தனத்தை மறைத்து, “காலா… உனைக் காலால் உதைப்பேன் வாடா” என்று கற்பனை எதிரியை எட்டி உதைக்கும் இறுதிக் காட்சி பாரதியின் அவலமாக ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும், சினிமாத்தனமான மோசடியின் சிகரமாக அது அமைகிறது.

***

திரைப்படம் பாரதியை அதிமனிதனாகச் சித்தரித்த போதிலும் பாரதியின் முரண்பாடுகள் குறித்த விவாதம் இலக்கிய உலகில் ஏராளமாக நடந்துள்ளது. இருப்பினும் பண்டித நடையிலிருந்து தமிழை மீட்டதும், தேச விடுதலையைப் பாடியதும், கவிதைகளின் வீச்சும் இனம்புரியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி “என்ன இருந்தாலும்…” என்று பலரை இழுக்க வைக்கிறது. “இப்படி இருந்திருக்கக் கூடாதா” என்று சிலரை ஏங்கவும் வைக்கிறது.

பார்ப்பன இந்து தேசியத்தைக் கனவு கண்ட கவிஞன் என்று பாரதியைப் பற்றி நாம் கூறினால் அது துடுக்குத்தனமான அரைவேக்காட்டுத்தனமான மதிப்பீடு என்று எரிச்சலடைவோர் உண்டு. அப்படியானால் பார்ப்பானை எதிர்த்ததும், சாதியை மறுத்ததும், பெண் விடுதலையைப் பாடியதும் இந்து தேசியவாதி செய்யக் கூடிய/பாடக் கூடிய விசயங்களா என்று மடக்குவோரும் உண்டு.

இந்து தேசியவாதிகள் எனப்படுவோர் இராம. கோபாலனைப் போலவோ, அசோக் சிங்காலைப் போலவோதான் இருக்க வேண்டும் என்று கருதுவோர் வரலாற்றையும், தனி நபரையும் மதிப்பிடத் தெரியாதவர்கள். “தவறான கட்சியில் சரியான நபரா – எப்படி?” என்று வியக்கும் தி.மு.க.வினருக்கு ஒப்பான அறிவாளிகள். ஆரிய சமாஜத்தின் பார்ப்பன எதிர்ப்பு, விவேகானந்தரின் பார்ப்பன எதிர்ப்பு, காந்தியின் அரிசன முன்னேற்றம் என்று பலவிதமான வண்ணச் சேர்க்கைகளில் அன்றைய காலகட்டத்தில் பிறந்த இந்து தேசியவாதம் பாரதி எனும் கவிஞன் ­மூலமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

இந்து தேசியத்தைக் கனவு காணும் வாய்ப்புப் பெற்ற பார்ப்பனச் சாதியில் பிறந்த, சமஸ்கிருதக் கல்வி கற்ற பாரதி, ஆங்கிலக் கல்விக்கும் ஷெல்லி, விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளுக்கும் அறிமுகமாகின்றான். காலனியாதிக்க எதிர்ப்பென்பது கருத்தளவில் மட்டுமின்றி, வெள்ளையனால் ஏமாற்றப்பட்ட தந்தையின் மரணம் எனும் சொந்த அனுபவத்தினூடாகவும், நாம் இன்னதென்று அறியாத பிற காரணிகளாலும் அவனிடம் உணர்ச்சி வேகம் பெறுகிறது.

அவனுக்குள் இருந்த முரண்பட்ட எதிர்த் துருவங்களான பார்ப்பனியமும் ஜனநாயகக் கருத்துகளும் ஒன்றுடன் ஒன்று கணக்குத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மாறாக வேதமரபு, பழம் பெருமை ஆகியவற்றைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்துகின்ற சிந்தனைதான் பாரதியிடம் மேலோங்குகிறது. ஜெர்மனியின் நிலை குறித்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிடுவது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

“ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துக்களைத் தமது பண்டைய தத்துவவியல் மனச்சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்வதெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்து விடாமல் பிரெஞ்சுக் கருத்துக்களைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கி விடுவதாகியது.”

சிதைந்து கொண்டிருந்த பார்ப்பனப் பழமையிலிருந்து அன்று வீறு கொண்ட கவிதைகள் பிறக்க வாய்ப்பே இல்லை. கையறு நிலையையும் அவலத்தையும் பிழிந்து தருகின்ற, கவிநயமில்லாத, இசையில் சரணடைந்த பார்ப்பனியத்தின் மனவுணர்வை தியாகய்யரிடம் காணலாம்.

பாரதியின் உள்ளே நுழைந்த புதுமை, கவிதைக்கான உள்ளுணர்வைத் தோற்றுவிக்கப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் கவிஞனுக்குள்ளே கனவு போலப் பாய்ந்து பெருகும் கவிதையுடன் அவன் வாழ்வு முடிந்து விடுவதில்லை. கவிதை முடிந்த பின்னும் கவிஞன் இருக்கிறான். அவனுக்கு வசப்படாத, அவனுடைய விருப்பத்துக்கு எதிராக இயங்குகின்ற புற உலகை அவன் சந்தித்தாக வேண்டும். அதன்மீது அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டாக வேண்டும்.

ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பாரதி வெளியிட்ட அரசியல் கருத்துக்களும், அவனது வாழ்க்கையும் பரிசீலிக்கப்பட்டால் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

முற்போக்கான கவிதைகள் என்று கூறப்படும் கவிதைகளைப் பாடிய போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்து தேசியம்தான் அவனது அரசியலாக இருந்தது. மிதவாதத்தை எதிர்த்த போதும் திலகருடன் அரசியல் களத்தில் பாரதி இறங்கவில்லை. வங்காளத்துத் தீவிரவாதிகளின் பாதையையும் பாரதி நிராகரித்தான். பிறகு மிதவாதத்திற்கு மாறினான். இறுதியில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கூடக் கண்டிக்குமளவுக்கும், பூரண விடுதலை கோரவில்லை என்று கூறும் அளவுக்கும் கீழிறங்கினான்.

தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்தார்; முஸ்லீம் கடையில் டீ குடித்தார்; சுருட்டு பிடித்தார்; மீசை வைத்தார்; பூணூலை அறுத்தெறிந்தார்; அல்லாவுக்குப் பாட்டு எழுதினார்… என்று பாரதியின் மேன்மைகளைப் பட்டியலிட்டு பாரதியின் வாழ்வும் அவனது படைப்பு ஆளுமையும் பிசிறின்றி ஒன்றிணைந்திருந்தன என்று நிரூபிக்க முயல்வது பாமரத்தனம் அல்லது ஏமாற்று வித்தை.

கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய பாரதி வருண தருமத்தை மீண்டும் நிலை நாட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்ட வ.வே.சு. ஐயருடன் நண்பனாக இருந்தார். காந்திக்காகத் தனது கூட்டத்தை ஒரு நாள் கூடத் தள்ளி வைக்கச் சம்மதிக்காத “கம்பீரமான’ பாரதி மகளின் திருமணத்திற்காகப் பூணூலை மாட்டிக் கொண்டார். சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி என்றெழுதிய பாரதி, “என்னைப் போன்ற (பார்ப்பன) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது” என்று பிரிட்டிஷ் ஆளுனருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். “இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிணையில் வெளிவந்த பாரதி எட்டையபுரம் போய் “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார்.

இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தத் தராசைக் கொண்டு எடை போடுவது? வியந்து கூறத்தக்க சில சம்பவங்களையும் முகம் சுளிக்கத்தக்க சில சம்பவங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பதை விட, இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆளுமையை இயக்கிச் சென்றது எது என்ற கேள்விக்கும், அவனது ஆளுமை முன்னோக்கிச் சென்றதா வீழ்ந்து கொண்டிருந்ததா என்ற கேள்விக்கும்தான் நமக்கு விடை வேண்டும்.

முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருந்த இந்தக் கவிஞன் தனது சுய முரண்பாட்டைத் தானே எதிர்கொள்ளும் மனநிலையில் எத்தகைய கவிதையைப் படைத்தான்?

பாரதிக்கு வெளியே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கிய தருணத்தில் பாரதி மிதவாதத்தைத் தன் அரசியலாகத் தேர்ந்தெடுத்தான். தனது நலனுக்கு உகந்த பாதையே இத்தேசத்தின் நலனுக்கு உகந்த பாதை என்று கூறுமளவு தாழ்ந்தான். மிதவாதிகளை “நடிப்பு சுதேசிகள்’ என்றும் “பயக்கட்சி’ என்றும் “விண்ணப்பக் கட்சி’ என்றும் சாடிய பாரதி பஞ்சதந்திரக் கதையைக் காட்டித் தன் நிலையை நியாயப்படுத்தினான்.

பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் பாரதியின் கவிதை மாயாவாதத்தில் ­மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தது. மாயாவாதக் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?

பாரதியுடைய கவிதையின் சீற்றத்தையும் அவனது தடுமாற்றத்தையும் அனுதாபத்துடன் பரிசீலிப்பதாயின், காந்தியின் அரசியலையும் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டியிருக்கும். உணர்ச்சித் தளத்தில் இயங்கும் கவிதை மேக ­மூட்டம் போன்றது. எத்தனை ஊடுருவிப் பார்த்தாலும் ஒரு வரம்பிற்கு மேல் பார்வை செல்லாது.

இருப்பினும் நமக்கு உதவும்படியாக, பாரதி விட்ட இடத்திலிருந்து காந்தி தொடங்குகிறார். பாரதியின் சக்தி காந்தியின் ராமனாகவும், கனகலிங்கம் அரசனாகவும், அல்லா பாட்டு “ஈசுவர அல்லா தேரே நாம்’ ஆகவும், பாரதியின் போல்ஷ்விக் எதிர்ப்பு – சோசலிச ஆதரவு காந்தியின் தர்மகர்த்தா முறையாகவும் மறுபிறப்பெடுக்கின்றன. கவிஞனின் “அவலம்” அரசியலுக்கு மொழி பெயர்க்கப்படும்போது அது காந்தியின் தந்திரமாகி விடுகிறது. மகா கவியைத் தொடர்ந்து ஒரு மகாத்மா வருகிறார்.

தங்கள் அவலத்தை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட சாதாரண ஆத்துமாக்களோ மகாகவியின் அவலத்திற்கும் மகாத்துமாவின் அவலத்திற்கும் கண்ணீர் சிந்துகிறார்கள்.

“என்னதான் இருந்தாலும் பாரதியின் ஆளுமை இதுவல்ல” என்று கூறுவோர் முன், மார்க்ஸின் மேற்கோள் ஒன்றை மீண்டும் சமர்ப்பிப்போம் :

“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். மாறாக, 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவன் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தான். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பான்”

– மார்க்ஸ் அடிக்கடிக் கூறுவார் என்று அவரது மகள் எலியனார் மார்க்ஸ் கூறியது.

நாம் இவ்வாறு கூறலாம். பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.

ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!

— மருதையன்
____________________________________
புதிய கலாச்சாரம் , அக்டோபர் 2000

____________________________________