privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

-

தொழிலாளர்களுக்காகப் போராடிய தோழர் சம்மனஸ் பொய் வழக்கில் கைது!
இராஜபாளையம் காவல்துறையா? ராம்கோவின் அடியாளா?

ராஜபாளையம் மில்ஸ் தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளுக்காக தொடர் போராட்டத்தை நடத்தியதால் தோழர் சம்மனஸ் அவர்கள் 13-01-2014 அதிகாலை 3 மணி அளவில் இராஜபாளையம் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜபாளையம் மில்லில் வேலை செய்யும் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைக்காக பு.ஜ.தொ.மு தொடர் பிரச்சாரங்களையும், போராட்டத்தையும் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்களின் அவல நிலையை விளக்கியும், சட்டப்படியான தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும், ஆலை வாயில் முன்பு பிரசுரம் வினியோகித்த போது, தோழர்கள் நிர்வாகத்தின் அடியாட்களால் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்தும் மில் நிர்வாகத்தின் ரௌடித்தனத்தை அம்பலப்படுத்தியும் தொழிலாளர்கள் மத்தியில் பிரசுரம் மற்றும் சுவரொட்டி மூலமாக வீச்சான பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. அடியாட்களை கொண்டு தாக்கினால் பயந்து விடுவோம் என்று நினைத்த நிர்வாகம் பு.ஜ.தொ.மு-வின் எதிர் நடவடிக்கையால் கலக்கமடைந்த்து.

தோழர் சம்மனஸ்
தோழர் சம்மனஸ்

தோழர்களைத் தாக்கிய மில் நிர்வாகத்தின் குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி, இராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரை பெற்றுக் கொள்ளாமல் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட மில் முதலாளிக்கே தன் விசுவாசமான ஆதரவு என வெளிப்படையாக அறிவித்து, காவல் துறை புகாரை நிராகரித்தது. இதனால் புகார் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

இரு மாதமாகியும் இது வரை கிரிமினல் குற்றமான கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் குண்டர்கள் மீது, எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறையை கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஆணையிடக் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் நீதிமன்ற ஆணை கிடைத்துவிடும் நிலை இருக்கிறது.

இவ்வாறான பு.ஜ.தொ.மு வின் எதிர் நடவடிக்கைகளை தாக்குப் பிடிக்க முடியாமல் பகுதியில் உள்ள தோழர்களின் வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவது, பணியா விட்டால் பின்பு சமாதானமாக பேசி பணம் கொடுப்பதாக சொல்லி விலை பேசுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது ராம்கோ நிர்வாகம். ’நக்சல்பாரிகளை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டு இதுவரை அச்சிடப்படவில்லை’ என்பதை பகுதி தோழர்கள் முகத்தில் அறைந்தாற்போல் பதில் கூறியுள்ளனர்.

75 ஆண்டுகால தனது மில் வரலாற்றில் கூழைக்கும்பிடு போடும் பிழைப்புவாத தொழிற்சங்கங்களையே பார்த்திருந்த மில் நிர்வாகம் முதன்முறையாக புரட்சிகர தொழிற்சங்கத்தின் வீச்சையும் வளர்ச்சியையும் கண்டு தூக்கமின்றி தவித்தது. தொழிலாளர்களும், நிர்வாகத்திற்காக வால் பிடிக்கும் துரோக தொழிற்சங்கங்களான INTUC, HMS, AITUC போன்றவற்றின் மீது அதிருப்தி அடைந்திருந்து, போராடுவதற்கு சரியான தலைமைக்காக ஏங்கியிருந்த நிலையில் பு.ஜ.தொ.மு -வின் தைரியமான நடவடிக்கைகளால் புத்துணர்வு பெற்று “இது தான் நமக்கான சரியான புதிய தொழிற்சங்கம்” என ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 30-12-2013 அன்று இராஜபாளையம் மில் முதலாளி ”குருபக்தமணி” ராம சுப்பிரமணியனை கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் இராஜபாளையம் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ”குருபக்தமணியின்” பெயரை உச்சரிக்க கூட பயந்திருந்த பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தால் உற்சாகம் அடைந்து, ராம்கோ முதலாளி சட்ட விரோதமாக அபகரித்திருக்கும் புறம்போக்கு நிலங்களையும் பறிமுதல் செய்ய போராடுங்கள் எனக்கூறி, ஆர்ப்பாட்ட்த்தை வாழ்த்திச் சென்றனர்.

தொழிலாளர்களிடையே பு.ஜ.தொ.மு வுக்கு பெருகி வரும் ஆதரவால் கலக்கமடைந்த நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல், தொழிலாளர்களை மிரட்டுவது, உளவு பார்ப்பது, கண்காணிக்க CCTV கேமரா பொருத்துவது, பொய் பிரச்சாரங்களை பரப்புவது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டது. இதுவரை தொழிலாளர்களின் கோரிக்கைக்காக எதுவும் செய்யாத அங்கிகரீக்கப்பட்ட துரோக தொழிற்சங்கங்களான INTUC, HMS, AITUC போன்றவற்றின் தலைவர்கள் களத்தில் இறங்கி தொழிலாளர்களிடம் முதலாளிக்கு நற்சான்றிதழ் வழங்கும் வேலையையும், பு.ஜ.தொ.மு என்பது தீய சக்தி எனும் பொய் பிரச்சாரத்தின் மூலம் தனது விசுவாசத்தை வெளிக்காட்டும் வேலையையும் செய்ததால் தானாகவே அம்பலப்பட்டு போயுள்ளனர். வாயிற் கூட்டம் நடத்தி முதலாளிக்கு சாமரம் வீசும் இந்த துரோக தொழிற்சங்க தலைவர்களை தொழிலாளர்கள் அந்தக் கூட்டத்திலேயே கிண்டல் செய்துள்ளனர்.

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் நிர்வாகத்தின் மீது அதிருப்தியையும் பு.ஜ.தொ.மு வின் மீது ஆதரவையும் வளர்த்தது. தான் செய்யும் எல்லா நடவடிக்கைகளிலும் தோல்வி அடைந்த இராஜபாளையம் மில் நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கான அடுத்த ஆப்பை தானே தயார் செய்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தோழர் சம்மனஸ் ஏதோ ஒரு தொழிலாளியிடம் தகராறில் ஈடுபட்டதாக பொய் புகாரை தயார் செய்து காவல்துறை மூலமாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நீதி மன்றங்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதை கணக்கில் கொண்டு திட்டம் தீட்டி, மற்ற நாட்களில் என்றால் அன்றே பிணையில் வெளிவந்து விடுவார்கள் என்பதால் பிணை கிடைக்கக் கூடாது என நினைத்து நீதிமன்ற விடுமுறை தொடங்கும் 13.01.2014 அன்று அதிகாலையில் தோழர். சம்மனஸை கைது செய்து, அன்று இரவு மதுரை மத்திய சிறையில் நீதி மன்றக் காவலில் வைத்துள்ளது.

கிரிமினல் குற்றமான கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் மீது கொடுத்த புகாரின் மேல் இரண்டு மாதமாகியும் வழக்கை பதிவு செய்யாத இராஜபாளையம் காவல்துறை, மில் நிர்வாகம் தூக்கியெறியும் எலும்பு துண்டிற்காக பொய் வழக்கை சோடித்து உடனடி கைது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.

பொய்வழக்கு, மிரட்டல், சதிச்செயல், பொய் பிரச்சாரம் போன்ற எத்தனை தடைகள் வந்தாலும் அவைகளை முறியடித்து இராஜபாளையம் மில்ஸ் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க, ஆலை வாயில் முன்பு புரட்சிகர தொழிற் சங்க செங்கொடி உயரும் நாள் தொலைவில் இல்லை. இறுதி வெற்றி தொழிலாளி வர்க்கத்திற்கே.

உழைக்கும் மக்களே!

  • ராம்கோ நிர்வாகத்தின் பண்ணையார் தனத்திற்கு முடிவு கட்டுவோம்!
  • ராம்கோ நிர்வாகம் மற்றும் இராஜபாளையம் காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து முறியடிப்போம்!
  • தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை விடாப்பிடியான போராட்ட்த்தின் மூலம் வென்றெடுப்போம்!

தமிழக அரசே !

  • தோழர் சம்மனஸை எவ்வித நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்!
  • ராம்கோ நிர்வாகத்தின் ஏவல் நாயாக செயல்படும் இராஜபாளையம் காவல்துறை மீது நடவடிக்கை எடு!

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு
இராஜபாளையம்
தொடர்புக்கு – 8344475144