privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமைக்ரோசாப்டின் தலைவர் சத்ய நாதெல்லா - பெருமையா சிறுமையா ?

மைக்ரோசாப்டின் தலைவர் சத்ய நாதெல்லா – பெருமையா சிறுமையா ?

-

மைக்ரோசாப்டின் சி.இ.ஓவாக சத்ய நாதெல்லா தெரிவு செய்யப்பட்டிருப்பதால் இந்தியர்களுக்கு அப்படியொன்றும் பெருமையில்லை..! –    அருண் குப்தா

ஜான் க்வெஸ்ட் - ஹட்ஜி
ஜான் க்வெஸ்ட் – ஹட்ஜி

ழுபதுகளில் வாஷிங்டனுக்கு அருகில் வளர்ந்த எனக்கு ஜான் க்வெஸ்ட் தொலைக்காட்சி தொடரில் காட்டப்பட்ட “நன்றாக பேசக்கூடிய… கல்கத்தாவின் தெருக்களில் தனது திறமைகளில் வளர்த்துக் கொண்ட அநாதை”யான ஹட்ஜி என்ற சிறுவன் தான் ஒரு இந்தியனுக்கான வெகுஜன கலாச்சார அடையாளம். ”மூத்திரம் குடிக்கும் பழக்கம் உடைய இந்திய பிரதமரை” போலவும்,  ‘இவன் இந்தியாவிலிருந்து திரும்பியதிலிருந்து மந்தமாக இருப்பதற்குக் காரணம் ஊரில் இவனுக்கு பத்து வயதிலேயே திருமணம் செய்து வைத்திருக்க கூடும்’ என்று எனது ஆசிரியர் என் வகுப்புத் தோழர்களிடம் சொல்வது போலவும் அது அவமானகரமான அடையாளம்தான்.

தங்களில் ஒருவர் மேற்கத்திய உலகில் வெற்றிகளின் உச்சத்தைத் தொடும் போது இந்தியர்கள் பெருமிதம் அடைகிறார்கள். அந்த வெற்றி புலிட்சர் பரிசாகவோ, மிஸ் அமெரிக்காவாகவோ, கவர்னர் பதவிகளாகவோ அல்லது தொழிலதிபர்களாகவோ இருக்கலாம். இந்தியர்கள் என்பவர்கள் “குரங்கு மூளையை சாப்பிடும் அன்னியர்கள்” என்ற பொதுப்புத்தியின் மீதான அவர்களது எரிச்சலும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு தனிநபரின் வெற்றி தேசத்தின் கூட்டு அறிவுத்திறனுக்கும், பணி நேர்த்திக்கும்  திறமைகளுக்கும் நிரூபணமாக கருதப்படுகிறது.

சத்ய நாதெல்லா
சத்ய நாதெல்லா

மைக்ரோசாப்டின் தலைமைச் செயல் அலுவலராக சத்ய நாதெல்லா தெரிவு செய்யப்பட்டிருப்பது இத்தகைய தருணங்களில் ஒன்று. ஹைதராபாத்தில் பிறந்த, இந்தியாவில் படித்த, கிரிக்கெட்டை விரும்பும் நாதெல்லா ஒரு பரிசுத்தமான ’தேசி’. அவர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தின் சாரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கிறார்.

இந்தியாவில் இதற்கான எதிர்வினைகள் ஆனந்த பரவசமாக வெளிப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு “மைக்ரோசாப்டின் உயரதிகாரியாக சத்யா நாதெல்லா அறிவிக்கப்பட்டதை இந்தியா கொண்டாடுகிறது” என்று பீற்றிக் கொண்டது. “இந்தியாவின் பிராண்டு மதிப்பு இப்படித்தான் அதிகரிக்க வேண்டும்” என்று அறிவிக்கிறார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி. “இந்தியர்கள் தங்களது ‘சாதி மத மற்றும் பிரதேச’ வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டுமென்பதற்கு சத்யா நாதெல்லா ஒரு உதாரணம்” என்கிறார் இன்னொரு பத்தி எழுத்தாளர்.

சத்தியா நாதெல்லாவின் வெற்றியை  கொண்டாடும் விதமாக இந்தியாவின் தேசிய சரக்கான ஜானி வாக்கர் பிளாக்கை குடித்து களிக்கும் இந்தியர்கள் தேசத்தின் கூட்டுத்துவ சாதனையை போற்றவில்லை; மாறாக ’வெற்றி பெறுபவருக்கே எல்லாமும்’ என்ற அமெரிக்க தனிநபர் சித்தாந்தத்தில் தங்களது வாய்ப்புகளை  உத்திரவாதப்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி குறித்து அவர்கள் கொண்டிருக்கும் அளவுகோலானது, தொழில் நிறுவன உயரதிகாரிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், அமெரிக்க அரசதிகாரிகள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் போன்றோரின் ’வெற்றிகளை’ முன்மாதிரியாக கொண்டது.

பாபி ஜிண்டால்
பாபி ஜிண்டால்

இந்த வெட்டிப் படாடோபம் பெரும்பாலும் ’தேனீர் விருந்து பிற்போக்குவாதிகளை’  (அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் டீபார்ட்டி குழுவினர்) ஒத்த கொச்சையான தேசிய பெருமிதத்தின் அடிப்படையிலானது. பாபி ஜிண்டாலை அவரது பாரம்பரிய பின்னணிக்காகவே பல அமெரிக்க இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், அவரது அரசியலைக் கூர்ந்து கவனித்திருந்தால், இனவாதிகளிடம் வாலைக் குழைப்பதற்காக தனது பெயரையும் மதத்தையும் மாற்றிக் கொண்ட  அவருக்கு “குங்கா ஜிண்டால்” என்ற பட்டப் பெயரைச் சூட்டியிருப்பார்கள்.

அவமானத்தை முகத்திரையிட்டு மறைத்துக் கொண்டு, இயல்பு நிலையை தேடும் குழந்தைத்தனமான விருப்பங்களாக இனப் பெருமை வெளிப்படுகிறது. பெண் சிசுக் கொலை, இன அழிப்பு, கூட்டு வல்லுறவு மற்றும் கொத்தடிமைகள் இவற்றின் நாடு இந்தியா என்ற பிம்பங்களை இந்தியாவின் பெருமை உடைத்து விடும் என்பதற்கு இந்த வெற்றி இன்னொரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இது போன்ற போலித்தனமான முகமூடிகளைக் கடந்து செல்லும் முதிர்ச்சியை அடைவது தான் இந்தியர்களின் மெய்யான சாதனையாக இருக்க முடியும்.

முதலாவதாக, மைக்ரோசாப்டில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? பலரைப் பொருத்தமட்டில் அது இரண்டாந்தரமான பொருட்களையும், திருட்டுத்தனமான ஏகபோக வியாபார உத்திகளையும் கொண்டிருக்கும் நிறுவனம். மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை பொதுக் கல்வியை ஒழிப்பதும் அபாயகரமான புவிமாற்ற தொழில்நுட்பங்களுக்கு நிதி அளிப்பதும்தான் அதன் கோடீசுவர முதலாளியின் பொழுது போக்கு.

அருந்ததி ராய்
அருந்ததி ராய்

முக்கியமாக, இந்தியாவில் தூய்மையான குடிநீர் கிடைக்காத ஒன்றரை கோடி மக்களில், மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் நாற்பது கோடி மக்களில் யாரும் நாதெல்லாவின் வெற்றியை கொண்டாடப் போவதில்லை. ஆனால், அவர்கள் இந்த வெற்றியை பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. இந்த வெற்றிக்கான விலையை அவர்களது வீடுகள் இடிக்கப்படுவதன் மூலமும், தண்ணீர் திருடப்படுவதன் மூலமும், நிலம் அபரிக்கப்பட்டு ஐ.டி நிறுவனங்களும் அப்பார்ட்மெண்டுகளும் அமைக்கப்படுவதன் மூலமும் அவர்கள் செலுத்துகிறார்கள்.

நாதெல்லா குறித்த பெருமிதம் ஒரு சிலரை முழு தேசமாக அடையாளப்படுத்துகிறது. மே 1998-ல் இந்தியா அணு ஆயுத சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து நடந்த தேசியவாத களிவெறியாட்டத்தை ஒத்தது அது. அந்த நேரத்தில் அருந்ததி ராய்  “அந்த குண்டு இந்தியா. இந்தியா தான் குண்டு. வெறும் இந்தியா மட்டுமல்ல, இந்து இந்தியா. எனவே எச்சரிக்கையாய் இருங்கள், அதைக் குறித்த எந்த விமர்சனமும் தேச விரோதம் மட்டுமல்ல, இந்து விரோதமும் கூட” என்று எழுதினார்,

அவரது விமர்சனம் இனப் பெருமிதம் என்ற இருபுறமும் கூர்மையான கத்தியை சரியாக அம்பலப்படுத்தியது. ’சின்ன விஷயங்களின் கடவுள்’ குறித்த பெருமிதத்தில் உப்பும் இந்தியர்கள் அதை எழுதிய அருந்ததி ராயிடம் “நீங்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்” என்று சொல்வது வழக்கம்.  அந்த பெருமிதம் இந்தியாவின் சாதி, வர்க்க மற்றும் பாலியல் வன்முறையை அந்த நாவல் தோண்டியெடுத்து அம்பலப்படுத்தியது குறித்தது அல்ல  – அந்த நாவலுக்காக  அருந்ததி ராய் இங்கிலாந்தின் புக்கர் பரிசை வென்றதற்கானது. எனினும் அந்தப் பெருமிதம் திரிந்து போனது. “மேற்கத்திய விஞ்ஞானத்தின் அபாயகரமான கண்டுபிடிப்பான” அணு ஆயுதத்தை இந்தியா பரிசோதித்திருப்பது இந்தியாவின் சுதந்திரத்தை பாதிப்பதாகவும், பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் இந்நாட்டை நிரந்தரமாக ஆழ்த்தி விடும் என்றும் அவர் சொன்னதும் அவரது இந்தியத்தன்மையும் அவரது நம்பகத்தன்மையும், பின்னணியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து இந்தியா சுதந்திரச் சந்தையையும் மின்னணுவியல் புரட்சியையும் வரித்துக் கொண்டது இது 65 பில்லியனர்களை உருவாக்கியுள்ளது. ஆனால், இதற்கான விலையை பெரும்பான்மை விவசாயிகளாக உள்ள மக்கள் திரளே செலுத்துகிறது. தொழிற்சாலைகளுக்காகவும், பெரும் நீர்த்தேக்கங்களுக்காகவும், சுரங்கங்களுக்காகவும் தமது பாரம்பரிய நிலங்களில் இருந்து  அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ஆக, ஒரு தலைமைச் செயல் அலுவலருக்காகவோ பில்லியனருக்காகவோ இந்தியர்கள் பெருமிதப்பட்டுக் கொள்ளும் போது  இப்படியானவர்கள் உருவாவதற்காக பலியிடப்பட்டுள்ள கோடிக்கணக்கானவர்களை அவர்கள் புறந்தள்ளுகிறார்கள். இந்தியர்கள் தங்களில் ஒருவரை போற்ற விரும்பினால், அவர்களது சிறப்பான பாரம்பரியமான அனைத்தும் தழுவிய அறங்கள் மற்றும் நீதிக்கான தேடலை பிரதிபலிக்கும் அருந்ததி ராயைப் போன்றவர்களையே பரிசீலிக்க வேண்டும்.

அருண் குப்தா
கட்டுரையாளர் அருண் குப்தா

அமெரிக்காவிலேயே கூட சியாட்டிலின் நகர கவுன்சில் உறுப்பினரான ஷாமா சாவந்த், மைக்ரோசாப்ட் அலுவலகத்திற்கு மிக அருகிலேயே இருக்கிறார். முதலாளித்துவத்தில் மூழ்கித் தவிக்கும் ஒரு நாட்டில் சோசலிச நடைமுறைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார். அல்லது, பல பத்தாயிரக்கணக்கான நியூ யார்க் வாடகைக்கார் ஓட்டுனர்களை ஒருங்கிணைக்கும் பைரவி தேசாய் இருக்கிறார். அல்லது புலம்பெயர்ந்தவர்களின் குடியுரிமைகளுக்காக பணியாற்றி வரும் கனடாவைச் சேர்ந்த ஹர்ஷா வாலியா இருக்கிறார்.

தமது பூர்வீக தேசங்களின் சமூக நீதிக்கான போராட்டங்களால் உந்தப்பட்ட தெற்காசியாவைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் ஏராளமானவர்கள் வட அமெரிக்காவில் இருக்கிறார்கள். ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக கலாச்சாரம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கார்ப்பரேட்டுகளின் தலைமைச் செயல் அலுவலர்களை விட இவர்களே கவனிப்புக்கு அருகதையானவர்கள்.

தமிழாக்கம்: தமிழரசன்

நன்றி: அருண் குப்தா – தி கார்டியன்