privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்

எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்

-

ராஜீவ் கொலை வழக்கு – எழுவர் விடுதலை: பார்ப்பன ஜெயாவின் கபடத்தனமும் பாசிச காங்கிரசின் தமிழின விரோதமும்!

ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இன்று எழுந்திருக்கும் அனுதாபம் – என்ற நேரெதிரான இரண்டு விசயங்களையும் தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. மூவர் தூக்கு மட்டுமல்ல, ஈழப் பிரச்சினை என்பதே ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அவர் விரும்பிய படியெல்லாம் ஆதாயங்களைக் கறந்து கொள்ளக் கிடைத்த காமதேனுவாகத்தான் அன்று முதல் இன்று வரை பயன்பட்டு வருகிறது. அவ்வாறு கறந்து கொடுக்கும் பணியைத் தமிழகத்தின் இனவாதிகள் செய்து வருகிறார்கள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும்.

ராஜீவ் கொலை வழக்கு - சிறையில் உள்ள எழுவர்
ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனே, அம்மூவர் உள்ளிட்டு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய இருப்பதாகவும், மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்கத் தவறினால், மூவரையும் தமிழக அரசு விடுவித்துவிடும் என்றும் அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா.

நோயாளியான தந்தையைப் பார்ப்பதற்குகூட நளினிக்கு பரோல் தரமுடியாது என்று அனுமதி மறுத்த “மனிதாபிமானி”யும், நளினியின் தூக்கு தண்டனையைக் குறைத்ததற்காகவும், நால்வரையும் தூக்கிலிடுவதைத் தாமதித்ததற்காகவும் கருணாநிதியைச் சாடிய “சுப்பிரமணிய மாமி” யுமான ஜெயலலிதா, மூன்றே நாளில் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கெடு வைத்து கர்ச்சிக்கிறார் என்றால், அதன் நோக்கம் நேர்மையானதாக இருக்குமென்று அரசியல் மூடர்கள் கூட நம்ப இயலாது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடனான தி.மு.க., தே.மு.தி.க.-வின் கூட்டணி வாய்ப்புகளை முறியடிப்பது ஜெயலலிதாவின் முதல் நோக்கம். மூவர் விடுதலைக்காகப் போராடிய – குரல் கொடுத்த அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதன் பெருமையையும் புகழையும் களவாடிக் கொள்வது இரண்டாவது நோக்கம். மூவர் விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு தருமபுரியில் மாணவிகளை எரித்துக் கொன்ற ரத்தத்தின் ரத்தங்களையும் விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்வது மூன்றாவது நோக்கம். தனது அதிரடி அறிவிப்பின் காரணமாக மூவர் விடுதலை தடைப்பட்டு விடுமோ என்ற கவலை ஜெயலலிதாவுக்கு இல்லை. ஏனென்றால், அவர்களை விடுவிக்கக் கூடாது என்பதும் தூக்கிலிட வேண்டும் என்பதும்தான் ஜெயலலிதாவின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த தீர்ப்புக்கும், எழுவரை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுச் செய்திருக்கிறது மத்திய காங்கிரசு அரசு. இம்மனுக்களை அனுமதித்திருக்கும் உச்ச நீதிமன்றம், “எழுவர் விடுதலை எனும் முடிவை மேற்கொள்வதற்கு முன்னர் பின்பற்றியிருக்க வேண்டிய வழிமுறைகளைத் தமிழக அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை” என்றும் கூறியிருக்கிறது. இவையனைத்தும் ஜெயலலிதா எதிர்பார்த்த எதிர்வினைகள்தாம்.

ஜெயலலிதாவின் தந்திரங்கள் ஒரு புறமிருக்கட்டும். ஈழப் போராட்டத்தைக் கருவறுத்ததுடன், இராஜபக்சேயுடன் இணைந்து இனப் படுகொலையையும் நடத்தி முடித்திருக்கும் காங்கிரசுக்கு, பழிவாங்கும் ரத்த வெறி இன்னமும் அடங்கவில்லை என்பதையே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் எற்றுக் கொண்ட மறுகணமே, காங்கிரசார் அதனை வெடிவெடித்துக் கொண்டாடி, தாங்கள் நசுக்கி ஒழிக்கப்படவேண்டிய நச்சுப்பூச்சிகள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றர்.

ராகுல் - சோனியா
ஈழப் போராட்டத்தைக் கருவறுத்ததுடன், இராஜபக்சேயுடன் இணைந்து இனப் படுகொலையையும் நடத்தி முடித்திருக்கும் காங்கிரசுக்கு, பழிவாங்கும் ரத்த வெறி இன்னமும் அடங்கவில்லை.

“கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் நடந்திருக்கும் கால தாமதம் என்ற காரணத்துக்காக தூக்கு தண்டனையை ரத்து செய்வதென்பது பிற வழக்குகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; ஒரு பிரதமரைக் கொலை செய்த வழக்கிற்குப் பொருந்தாது; அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது ராஜீவ் என்ற தனிநபரல்ல, இந்திய அரசு. எனவே, இந்தக் கொலை தனிநபருக்கு எதிரானது அல்ல, தேசத்துக்கு எதிரான குற்றம் என்பதால் இதனை மன்னிக்கவே கூடாது” என்பதுதான் காங்கிரசின் வாதம். சுப்பிரமணிய சாமி, சோ, பாரதிய ஜனதா உள்ளிட்டோரின் வாதமும் இதுவேதான்.

ஆனால், 1999-இல் 19 பேரை விடுதலை செய்து நால்வரின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, “இந்தக் கொலை ஒரு பயங்கரவாத நடவடிக்கையோ, தேசத்துக்கு எதிரான தாக்குதலோ அல்ல; ராஜீவ் என்ற தனிநபருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே” என்றும் கூறியிருக்கிறது. மேலும், சிறீபெரும்புதூரில் கொல்லப்படும்போது ராஜீவ் பிரதமரல்ல; தனது ஊழல்கள் மற்றும் பாசிச நடவடிக்கைகளின் காரணமாகத் தோற்றுப்போய் மதிப்பிழந்த ஒரு முன்னாள் பிரதமர். இந்த உண்மைகளையெல்லாம் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டுத்தான், “ராஜீவ் கொலை என்பது தேசத்துக்கு எதிரான தாக்குதல்” என்ற தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துகிறது பார்ப்பனக் கும்பல். ராஜீவால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் தோற்றுப்போய் மதிப்பழந்து திரும்பி வந்த பின்னரும், அந்த ஆக்கிரமிப்பையும் படுகொலையையும் “தேசத்தின் முடிவு” என்று கூறி நியாயப்படுத்துகின்றது.

இந்த அடிப்படையில்தான் “தூக்கு தண்டனையை ரத்து செய்த தீர்ப்பே தவறு” என்கிறார் அருண் ஜேட்லி. “இவர்களுக்கெல்லாம் கருணை காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார் ரவிசங்கர் பிரசாத். “அரசியல் சட்டப்பிரிவு 256-இன் கீழ் இம்முடிவை அமல்படுத்த விடாமல் தமிழக அரசை பிரதமர் தடுக்க வேண்டும்” என்கிறார் சு.சாமி. இவர்கள் அனைவரும் பாரதிய ஜனதாவின் தலைவர்கள். ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.இராதாகிருஷ்ணனோ, எழுவரை விடுவிப்பது என்ற ஜெ.அரசின் முடிவை பாரதிய ஜனதா ஆதரிக்கிறது என்று தைரியமாகப் புளுகுகிறார். ஜெயலலிதா நடத்துவது நாடகம் என்று தெரிந்தவரான ஒப்பனைக்காரர் சோ, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இதனை, “இதெல்லாம் அரசியல்” என்கிறார். திராவிட அரசியலுக்கு ஜெயலலிதா பலியாகி விட்டதாகவும், இத்தகைய அணுகுமுறை அவர் தேசிய அரசியலில் இறங்குவதற்கு உதவாது என்றும் அங்கலாய்த்துக் கொள்கிறது எக்ஸ்பிரஸ் நாளேடு.

மூவர் தூக்கு ஆகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், காஷ்மீர் பிரச்சினையாகட்டும் – இவையனைத்தையும் பொருத்தவரை காங்கிரசு, பாரதிய ஜனதா போன்ற வெறியர்கள் மட்டுமின்றி, வட இந்தியக் கட்சிகள், ஊடகங்கள் முதல் அரவிந்த் கேஜ்ரிவால் வரையிலான அனைவரின் கருத்தும் ஒன்றுதான். அமைதிப்படையை அனுப்பியது முதல் இனப் படுகொலையை உடனிருந்து நடத்தியது வரையிலான எல்லா நடவடிக்கைகளும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய மாநிலங்களில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவ ஒடுக்குமுறைகளும் சரியானவை, கட்சி அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவை, தேசிய நலனின் பாற்பட்டவை என்பதுடன், இவற்றை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசவிரோத சக்திகள் என்பதுதான் இவர்களது கண்ணோட்டம்.

பார்ப்பனீய தேசியம்
“பார்ப்பன இந்து தேசியமும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய நலனும், அரசியல் சட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டவை”

சுருங்கக்கூறின், பார்ப்பன இந்து தேசியமும், இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய நலனும், அரசியல் சட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டவை என்பதுதான் காங்கிரசு, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் கருத்து. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை என்ற பெயரில், ஆக்கிரமிப்பு முதல் இன அழிப்பு வரை எதையும் செய்யலாம் என்ற பாசிச அரசியலை அவர்கள் ஆணவமாகப் பேசுகிறார்கள்.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், எழுவரின் விடுதலை செய்வது என்ற ஜெ.அரசின் முடிவையும் வரவேற்று கொண்டாடுவோர் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இராஜபக்சேவின் இன அழிப்புப் போருக்குத் துணை நின்ற இந்திய அரசுக்கு எதிராகவும், அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் மற்ற சந்தர்ப்பங்களில் சண்டமாருதம் செய்யும் வைகோ, சீமான், நெடுமாறன், தமிழருவி மணியன் உள்ளிட்டோர், “ஈழத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் இராஜீவ் கொலை; ஆகவே, அது போர்க்குற்றவாளிக்கு எதிரான ஒரு நடவடிக்கை” என்று பேசுவதில்லை. இலங்கை அரசின் இறையாண்மை கொண்ட அதிகாரத்தின் பெயரால் இன அழிப்புப் போரை ராஜபக்சே நியாயப்படுத்துவதைப் போலத்தான், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் காட்டி இந்திய அமைதிப் படையின் போர்க்குற்றங்களை இந்திய அரசு நியாயப்படுத்துகிறது என்று பதிலடி கொடுப்பதில்லை.

ராஜீவ் கொலை என்பது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்த போதிலும், பயங்கரவாத தடை சட்டத்தின் (தடா) கீழ், போலீசே எழுதிக்கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் பித்தலாட்டம் செய்த தியாகராசனின் ஒப்புதல் வாக்குமூலமும் இப்போது வெளிவந்திருக்கிறது. இத்தனைக்குப் பின்னரும் தனது தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த மறுக்கும் உச்ச நீதிமன்றத்தின் நேர்மையை இவர்கள் கேள்விக்குள்ளாக்குவதில்லை. அப்சல் குரு முதல் வீரப்பன் கூட்டாளிகள் வரையிலான பலருக்கும் உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனைகள் அனைத்தும் அரசியல் ரீதியான முடிவுகளேயன்றி, சாட்சியங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளல்ல என்ற உண்மையை மூவர் பிரச்சினையுடன் இவர்கள் இணைத்துப் பேசுவதில்லை.

மாறாக, “ராஜீவைக் கொலை செய்தது தவறு; உண்மையான குற்றவாளிகளைப் பிடித்து தண்டியுங்கள்; மூவரும் நிரபராதிகள் என்பதால் விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சுகிறார்கள். அல்லது, “மூவருக்காக மட்டும் கேட்கவில்லை, மரண தண்டனையே கூடாது என்பதால் கேட்கிறோம்” என்று மேலும் ஒரு அடி பின்வாங்குகிறார்கள். மூன்று பேரின் உயிரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதுதான் தங்களது நோக்கம் போலவும், அதன் பொருட்டுத்தான் மேற்கூறிய கேள்விகளை எழுப்பாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது போலவும் இவர்கள் காட்டுவது வெறும் பம்மாத்து.

ஜெயலலிதா
ஜெயலலிதா இப்பிரச்சினையைத் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைக் கண்டு மனம் குமுறியபோதிலும், ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்க தமிழினவாதிகள் மறுக்கிறார்கள்.

இனவாத பிழைப்புவாதிகளைப் பொருத்தவரை, இது மூவரைக் காப்பாற்றுவது பற்றிய பிரச்சினையல்ல; தங்கள் சோந்த அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வது குறித்த பிரச்சினை. அதனால்தான் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறும் அருண் ஜெட்லிக்கு எதிராக வைகோ உள்ளிட்டோர் பேச மறுக்கின்றனர். இப்பிரச்சினையில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு தெரிந்தேதான் அனைவரும் கூட்டணி அமைக்கின்றனர். பொன். இராதாகிருஷ்ணன் பேசுவது பித்தலாட்டம் என்று தெரிந்தேதான் தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவரும் மோடிக்கு காவடி எடுக்கிறார்கள்.

ஜெயலலிதா இப்பிரச்சினையைத் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைக் கண்டு மனம் குமுறியபோதிலும், ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்க இவர்கள் மறுக்கிறார்கள். அவ்வாறு இவர்கள் அம்பலப்படுத்துவதன் காரணமாக ஜெயலலிதா தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிடவும் முடியாது என்பதையும் இவர்கள் அறிவார்கள். ஈழத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதாவுக்கு உதவியவர்களே இவர்கள்தான் என்பதுதான் இவர்கள் வாய் திறக்க முடியாத நிலையின் இரகசியம்.

1991-இல் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்கள், ஈழத் தமிழ் அகதிகள், தமிழ் உணர்வாளர்கள், புரட்சிகர அமைப்புகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் ஜெ.அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இன்று எழுவர் விடுதலையை ஓட்டு வங்கி அரசியல் என்று பேசும் பார்ப்பனக் கும்பல், அன்று ராஜீவின் மரணத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைத் தனது ஓட்டு வங்கியாக்கிக் கொண்டது. ஈழப் போராட்டத்தையும் ஈழத்தமிழ் மக்களையும் எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவத்திற்கு தமிழக மக்கள் ஆட்படுத்தப்பட்டிருந்தனர்.

ராஜீவ் மரணத்துக்கு மொட்டை போட்டு ஒப்பாரி வைக்கும் அளவுக்கு சீரழிந்திருந்த தமிழக மக்களின் மனோபாவம், குறிப்பிடத்தக்க அளவிற்கு மூவர் தூக்குக்கு எதிரானதாக மாறியிருக்கிறது என்று சொன்னால், அதனைச் சாதித்திருப்பது மரண தண்டனை ஒழிப்பு மனிதாபிமான அரசியல் அல்ல. “இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி” என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது. எழுவர் விடுதலை குறித்த ஜெ.அரசின் அறிவிப்பு என்பது அதன் விளைவுதான்.

இனவாத பிழைப்புவாதிகள் இந்த உண்மையை இருட்டடிப்பு செய்து தமிழக மக்களை அரசியல் மொன்னைகளாக மாற்றுவதற்கான நோக்கம், மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் காவடி தூக்கும் அவர்களது அரசியல் பிழைப்புவாதமே அன்றி, வேறல்ல. இந்த அரசியல் பிழைப்புவாதிகளும் பார்ப்பன பாசிஸ்டுகளும் இன்னொரு முறை ஈழப் பிரச்சினையைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்பதே நம்முன் இருக்கும் கேள்வி.

_____________________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2014
_____________________________________