privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?

கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?

-

தர்மபுரி திரைப்படம்
விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதை கைவிட்டது தமிழகத்துக்கு எத்தனை மகத்தான சேவை என்பதை உணராதவர்கள் நரகத்தில் தர்மபுரி படத்தை தொடர்ந்து பார்க்கும் தண்டனைக்கு ஆளாவார்கள்.

வாய்ப்பு பறிபோன கதாநாயகர்கள் வில்லனாக நடிப்பதுதான் தமிழ் சினிமாவின் மரபு. கிழடுதட்டிய நாயகர்கள் ரொமான்ஸ் பண்ணுவதைப் பார்த்து மக்கள் சிரிக்க ஆரம்பித்த பிறகு ‘கற்ப’ழிக்கும் பாத்திரத்துக்கு அவர்கள் தம்மை தகவமைத்துக் கொள்கிறார்கள். இதற்கு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகிய உதாரணங்கள் இங்குண்டு, சிவாஜி கணேசன் மாதிரியான விதிவிலக்குகளும் உண்டு. ஆனால் ஒரு கதாநாயகன் காமெடியனான சம்பவம் ஒரேயொரு முறைதான் நடந்திருக்கிறது. கிழக்கே போகும் ரயில் சுதாகர்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்.

அவருக்குப் போட்டியாக யாருமே வர விரும்பாத சூழலில் அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பது நமது கேப்டன் மட்டுமே. விஜயகாந்த் படத்துக்கு கதை பிடிப்பதைவிட கதாநாயகி பிடிப்பது பெரும் துயரமாக மாறிய சில காலத்துக்குள் அவர் சினிமாவில் நடிப்பதை கைவிட்டுவிட்டார். அது தமிழகத்துக்கு எத்தனை மகத்தான சேவை என்பதை உணராதவர்கள் நரகத்தில் தர்மபுரி படத்தை தொடர்ந்து பார்க்கும் தண்டனைக்கு ஆளாவார்கள்.

நமது சினிமா கதாநாயகர்கள் இயல்பில் கோழைகள், பேராசைக்காரர்கள் மற்றும் சோம்பேறிகள். இவர்கள் எல்லோருக்குமே ஏதாவது ஒரு விபத்தில் எம்ஜியாராகிவிட வேண்டும் எனும் அடங்காத ஆவல் உண்டு. அதாவது ஸ்ட்ரெய்ட்டாக முதல்வராகி விட வேண்டும். ஆனாலும் பாசிசமும், பாமரத்தனமும் கலந்து உருவான எம்ஜிஆர் செய்த ‘கட்டிப்பிடி கிழவி’ போன்ற பம்மாத்துகள் செய்வதற்கு கூட இவர்கள் தயாரில்லை. ஆனால் கேப்டன் இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர். அவர் தன்னை ஒரு திமுக அனுதாபியாக பல காலம் காட்டிக் கொண்டவர். நடிகர் சங்கத்தை பலகாலம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் (இப்போது போண்டாமணிகூட அவர் பேச்சுக்கு கட்டுப்படமாட்டார் என்பது வேறு விடயம்). ஒரிஜினல் எம்ஜியார் படத்தை முடித்துத் தராமல் பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர், கேப்டனோ படத்தை முடித்துத் தந்ததன் வாயிலாக பல தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர். இந்த தகுதிகளைக் கொண்ட இன்னொரு முன்னாள் கதாநாயகன் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லை. இனி வரப்போவதும் இல்லை.

கேப்டன் அடி
கேப்டன் அவர் கட்சிக்காரனை வெளிப்படையாக அடிப்பார்

தன்னை ஒரு அரசியல் நிலைப்பாடு கொண்டவனாக காட்டிக் கொண்டது (ஈழம் கிடைக்கும்வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்), அவ்வப்போது தையல் மிஷின் கொடுப்பது என பலவழிகளில் அவர் தன்னை அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். கிழவிகளை கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தியதில்லை என்பது ஒரு குறைதான், என்றாலும் அது கேப்டனின் குற்றமா அல்லது கிழவிகள் குற்றமா என கண்டறியப்படாதவரை நாம் அதில் குறைகாண இயலாது. ஆகவே கேப்டன் கருப்பு எம்ஜியார் எனும் அடைமொழிக்கு மட்டுமல்ல, பச்சை, மஞ்சள், வயலட், லைட்ப்ளூ என எந்த நிற எம்ஜியார் அடைமொழிக்கும் பொருத்தமானவர்.

கேப்டன் எப்போதுமே வித்தியாசமானவர். எல்லா கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியின் திட்டங்களை வெளிப்படையாகச் சொல்லுவார்கள். யாரையாவது அடிப்பதென்றால் அதை பூட்டிய அறைக்குள் செய்வார்கள். துணிச்சலின் திருவுருவான ஜெயாவே, ஆடிட்டரை வீட்டுக்குள் வைத்துத்தான் வெளுத்தார். ஆனால் கேப்டன் அப்படியல்ல, அவர் கட்சிக்காரனை வெளிப்படையாக அடிப்பார். திட்டங்களை மட்டும் ரகசியமாக வைத்திருப்பார். மின்வெட்டை தீர்க்கும் திட்டம் என்னிடம் இருக்கிறது. ஆனால் அதை இப்போது சொல்லமாட்டேன், சொன்னா காப்பி அடிச்சிருவாங்க என சொல்லும் மனத்துணிவு அகில உலகத்தில் விஜயகாந்த் ஒருவருக்கு மட்டுமே உண்டு.

கேப்டன், சுதீஷ்
கேப்டனின் மச்சான் கோடிகளில் புரள்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் பாதி காமராஜர் ஆட்சிக்கான தகுதிகூட விஜயகாந்துக்கு மட்டுமே இருக்கிறது.

அவர் தன் கட்சிக்கு வைத்திருக்கும் பெயரை கவனியுங்கள், அதில் தேசியம், முற்போக்கு, திராவிடம் என சகலமும் கொட்டிக் கிடக்கிறது. எல்லா தரப்பையும் திருப்திப்படுத்தும் ஒரு கட்சிப் பெயரை இதுவரைக்கும் யாராவது சிந்தித்ததாகவேனும் வரலாறுண்டா? இலக்கியவாதிகளையும் கவுரவப்படுத்தும் வகையில் பின்நவீனத்துவம், மேஜிக்கல் ரியாலிசம் போன்ற வார்த்தைகளையும் கேப்டன் பரிசீலித்திருப்பார். உச்சரிக்க கடினமென்பதால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன.

காமராஜரின் அம்மா சாதாரண வீட்டில் வசித்ததாகவும் அன்றாட செலவுகளுக்கே அவர் சிரமப்பட்டதாகவும் நம் கண்பார்வைக்கு திட்டமிட்டு இழுத்துவரப்படும் வரலாறுண்டு. காங்கிரசு கோமான்கள் இந்திய மக்களை வசியப்படுத்த இந்த காந்திய எளிமையை ஆரம்பத்தில் ஒரு ஆயுதமாக உருவாக்கியிருந்தார்கள். இன்றைக்கு அந்த ஆயுதம் தேவைப்படவில்லை என்றாலும் முன்னொரு காலத்தில் ஒரு பொற்காலம் இருந்தது, அதில் எளிமையாக தலைவர் இருந்தார் என்றெல்லாம் ஆட்டோகிராஃப் இலக்கியமாக இது உயிர்வாழ்கிறது. போகட்டும், சமகாலத்தில் ஒரு தலைவர் குடும்பத்துக்கு அப்படியொரு நிலை இருக்கிறதா? ஆனால் விஜயகாந்தின் சொந்த சகோதரர் மதுரையில் பரோட்டாக் கடையில் வேலைசெய்கிறார், சொந்த சகோதரி நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்துதான் இன்றைக்கும் சாப்பிடுகிறார். ஆகவே காமராஜர் ஆட்சி என்ற ஒன்று அமையவேண்டுமானால் அது கேப்டனால் மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கேப்டனின் மச்சான் கோடிகளில் புரள்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் பாதி காமராஜர் ஆட்சிக்கான தகுதிகூட விஜயகாந்துக்கு மட்டுமே இருக்கிறது.

கேப்டன்-தமிழருவி
2300 ஆண்டுகள் கழித்துப் பிறந்த இரண்டாம் சாணக்கியனும்… அறநெறி, அருள்நெறி மற்றும் குறள்நெறி ஆகியவற்றுக்கு ரத்த பாத்தியமும் சொத்து பாத்தியமும் உடையவருமான தமிழருவி மணியனின் வாக்குவங்கி சதவீதக் கணக்கில் இரண்டாமிடம் யாருக்கு?? கேப்டனுக்குத்தானே!!

2300 ஆண்டுகள் கழித்துப் பிறந்த இரண்டாம் சாணக்கியனும்… அறநெறி, அருள்நெறி மற்றும் குறள்நெறி ஆகியவற்றுக்கு ரத்த பாத்தியமும் சொத்து பாத்தியமும் உடையவருமான தமிழருவி மணியனின் வாக்குவங்கி சதவீதக் கணக்கில் இரண்டாமிடம் யாருக்கு?? கேப்டனுக்குத்தானே!! வாலிப வயோதிக ஆண் வாக்காளர்களைக் கவரும் உத்தி மோடிக்கே இப்போதுதான் கைவந்திருக்கிறது. கூட்டம் சேர்க்க கார்ப்பரேட் காசு மட்டும் போதாது மேக்னா படேல் கவர்ச்சியும் வேண்டும் எனும் ஞானம் அவருக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் இதையெல்லாம் ஆனஸ்ட்ராஜ் படத்திலேயே செய்தாயிற்று. அந்தப்படம் ஆனஸ்ட்ராஜுக்காக ஓடியதா இல்லை ஆம்னிக்காக ஓடியதா எனும் கேள்வி சிவபெருமானாலேயே பதிலளிக்க இயலாத கேள்வியன்றோ?

அவரை கொள்கையற்றவர், எதிர்காலம் பற்றிய திட்டமில்லாதவர் எனும் விமர்சனங்கள் அரசியல் வானில் சிறகடித்துப் பறக்கின்றன. சொல்பவர்கள் சில செய்திகளை நினைவில் கொள்வது நல்லது. எம்ஜியாரின் போர்ப்படைத் தளபதி பண்ருட்டி ராமச்சந்திரன் துறவறம் துறந்து முதலில் அடைக்கலமானது யாரிடம்? போயஸ் தோட்டத்தின் நெடுங்கதவுகள் மூடப்பட்டுவிடுமோ எனும் அச்சம் 2011 சட்டமன்ற தேர்தலில் உருவானபோது இடதுசாரிகள் அபயம் கேட்டு ஓடியது யாரிடம்? பேசியபடி நடப்பதில் எப்படியோ நடந்தபடியே பேசுவதில் வல்லமைமிக்க அரசியல் லெக்தாதா வைகோவின் ஒரே சொத்தான மூன்றாவது அரசியல் சக்தி எனும் பெயரை தட்டிப்பறித்தது யார்?

விஜயகாந்த்-பாஜக பேச்சுவார்த்தை
கசமுச வீடியோவைக் கூட வெளிப்படையாக பார்க்கும் வெளிப்படையானவர்களைக் கொண்ட பாஜகவிடம் ரகசிய இடத்தில் பேச்சு நடத்தும் கேப்டனின் சாமர்த்தியத்தை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

2001-ல் குஜராத் வளர்ச்சி பற்றிய எந்த திட்டமும் மோடியிடம் இல்லை. ஆனால் இன்றைக்கோ மோடியின் குஜராத்தில் மலச்சிக்கல் கணிசமாக குறைந்திருக்கிறது என்பதற்கும் ஏராளமானவர்களின் வழுக்கைத் தலையில் முடிவளர்ந்திருக்கிறது என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே திட்டமில்லாமல் இருப்பவனாலும் சாதனை செய்ய முடியும். மேலும் ஊடகங்கள் துணையிருந்தால் செய்தது எல்லாவற்றையும் சாதனையாக்கி விடவும் முடியும். ஆகவே கேப்டன் மீது வைக்க முடிகிற ஒரே குற்றச்சாட்டும் வலுவில்லாததுதான்.

எல்லாவற்றுக்கும் மேல், கேப்டனுக்கு கிட்டும் ஊடக முக்கியத்துவத்தை பாருங்கள். விஜயகாந்த், பாஜக ரகசிய இடத்தில் பேச்சுவார்த்தை என செய்தி போடுகிறது தினத்தந்தி. பக்கத்து வீட்டில் இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாட போனால் கூட கேப்டன் பாதாளசாக்கடை வழியாகத்தான் போவார். அவர் அரசியல் நடவடிக்கை ரகசியமாக இருப்பதில் என்ன தவறு? இருந்தாலும் கசமுச வீடியோவைக் கூட வெளிப்படையாக பார்க்கும் வெளிப்படையானவர்களைக் கொண்ட பாஜகவிடம் ரகசிய இடத்தில் பேச்சு நடத்தும் கேப்டனின் சாமர்த்தியத்தை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கம்பெனிகளுக்கு ஒரு ஐ.எஸ்.ஓ சான்றிதழைப் போல கட்சிகளுக்கு ஆனந்த விகடன் சான்றிதழ் முக்கியம். அந்தக் குழுமத்தின் ஜூவி கடந்த இரண்டு மண்டலமாக மோடி நாமாவை ஜபித்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த்
மக்களே கேப்டனுக்கு வாக்களிப்பீர், அண்ணியின் பொற்கால ஆட்சிக்கு வழிவகுப்பீர்

அப்பேர்பட்ட ஜூவி, பாஜகவை யாருடன் சேர்க்கப் போராடுகிறது?? கடந்த 2 மாதங்களாக கழுகாரின் முழுநேர மற்றும் பகுதிநேர வேலை என்பது பாஜக, தேமுதிக கூட்டணிக்கு உழைப்பதுதான். தொழில்ல பொறுமை ரொம்ப முக்கியம் என நன்கறிந்த தமிழருவியே கடுப்பாகி கேப்டனை மாட்டுத் தரகர் என சொல்லி கழன்று கொண்டு விட்டார். ஆனால் தமிழ் மக்களின் நாடித் துடிப்போ இன்றுவரை தன் முயற்சியில் தளராமல் போராடுகிறது. இதைவிடவா ஒரு தலைவனுக்கு நற்சான்றிதழ் வேண்டும்?? ஆகவே மக்களே கேப்டனுக்கு வாக்களிப்பீர், அண்ணியின் பொற்கால ஆட்சிக்கு வழிவகுப்பீர்.

நாக்கை மடித்து உரக்க சொல்லுங்கள் “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் சுதீஷ் ஆட்சி”

கொஞ்சம் சீரியசா பேசலாமா?

இந்தியாவின் தேர்தல் என்பது வீட்டுக்குள் புகுந்த பன்றியை இன்னொரு பன்றியை கொண்டு விரட்டுவதற்கு ஒப்பான காரியம். அடிப்படைக் கொள்கைகளற்ற ஒரு கட்சி, தனது திரண்ட சொத்து சாம்ராஜ்யத்தின் அடுத்த தொழிலாக ஒரு நடிகரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, தனித்து நின்று ஓட்டைப் பிரிப்பதைக் கூட ஒரு வருவாய் ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பதை தமிழ்மக்கள் உணர காரணமாக இருந்த கட்சி… தமிழகத்தின் மூன்றாவது பெரிய வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த், சோ, ஜெயலலிதா,மோடி
திமுக அதிமுகவை விட சகலவிதத்திலும் சீரழிந்த தேமுதிக தன்னை அவ்விரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இங்கே காட்டுகிறது.

திமுக அதிமுகவை விட சகலவிதத்திலும் சீரழிந்த தேமுதிக தன்னை அவ்விரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இங்கே காட்டுகிறது. அதற்கு ஒன்பதோ இல்லை ஐந்தோ சதவீதம் மக்கள் ஆதரவும் இருக்கிறது. புரட்சி செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டாலும் ஏழைகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று உச்சரிப்பில் மட்டும் கம்யூனிசத்தை ‘காட்டிக்’ கொள்ளும் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகள்கூட கூச்சமின்றி தேமுதிகவை அண்டியிருக்கும் நிலையில் இருக்கிறது நம் அரசியல் சூழல். எதற்கும் லாயக்கற்ற ஒரு கட்சியை, எந்த தகுதியுமற்ற ஒரு தலைவனை இந்தியாவின் பிரதான கட்சிகளும் தமிழகத்தின் பிரதான கட்சியும் தங்கள் வசம் இழுக்க போராடுகின்றன. அவர்களது பிராதானத்தின் தரத்தை அவர்களது செயல்களில் மட்டுமல்ல, கூட்டணி கைகோர்ப்பிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் கட்டுக் கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது, நாடு ஏறத்தாழ விற்பனை செய்யப்பட்டாயிற்று, அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்குலமும் ஊழலால் நிறைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்றியமைக்க மக்கள் வசமுள்ள மந்திரக்கோல் என கொண்டாப்படும் தேர்தலோ விஜயகாந்த் மாதிரியான ஆட்களின் சந்தை மதிப்பை கூட்டுவதைத் தவிர வேறெந்த விளைவையும் உருவாக்குவதில்லை. இவ்வளவு கேவலப்பட்ட பிறகும், இந்த தேர்தல் மூலம் மாற்றம் வந்துவிடும் என நீங்கள் நம்பினால் அது ஒரு விஜயகாந்த் ரசிகனாக இருப்பதைவிட இழிவானது இல்லையா?

–    வில்லவன்