privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்தரகு முதலாளிகளின் சேவைக்கு மோடி - ராகுல் போட்டி !

தரகு முதலாளிகளின் சேவைக்கு மோடி – ராகுல் போட்டி !

-

திர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி, “முதல்முறையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்கள் கவலைகொள்ளும் பிரச்சினை என்ன?” என்ற தலைப்பில் இந்தியா-டுடே இதழ் 28 மாநிலங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், 76.3 சதவீதம் பேர் நல்ல வேலையைத் தேடிக் கொள்வதை முக்கிய பிரச்சினையாகக் குறிப்பட்டுள்ளனர். 73.7 சதவீதம் பேர் கல்வியையும், 62.7 சதவீதம் பேர் வறுமையையும் முக்கிய பிரச்சினைகளாகக் குறிப்பிட்டுள்ளனர். இதே கருத்துக்கணிப்பில், “மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்சினை எது?” என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலில் விலைவாசி உயர்வு முதலிடத்தையும், வேலை வாய்ப்புகள், பெண்களின் பாதுகாப்பு, கல்வி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.

ராகுல் காந்தி
இந்தியத் தரகு முதலாளிகளின் சங்கமமான ஃபிக்கியின் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி. (கோப்புப் படம்)

இதே போன்று ஜூனியர் விகடன் இதழ் தமிழகம் முழுவதும் 4,490 பேர் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்பில், 1,867 பேர் விலைவாசி உயர்வையும், 1,411 பேர் பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வையும் அதிக பாதிப்பை ஏற்படுத்திய பிரச்சினைகளாகக் குறிப்பிட்டுள்ளனர். இவ்விரண்டு கருத்துக்கணிப்புகளும் மிகமிகக் குறைவான மக்கள் மத்தியில் எடுக்கப்பட்டிருப்பினும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, வறுமை, கல்வி, மருத்துவம், பெண்களின் பாதுகாப்பு ஆகியவைதான் அடித்தட்டு மக்களை மட்டுமின்றி, ஓரளவிற்கு நடுத்தர வர்க்கத்தினரைக்கூட வாட்டியெடுக்கக் கூடிய பிரச்சினைகளாக இருந்து வருவதை மறுத்துவிட முடியாது.

ஓட்டுக்கட்சிகள் ஒவ்வொன்றும் மக்கள் தங்களைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் வாழ்க்கையில் அளப்பரிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிடுவோம் என்றவாறு பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவீசி வருவதால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அக்கட்சிகளிடம் என்ன திட்டம் உள்ளது? அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? என்ற கேள்விகளை முன் வைப்பது அவசியமானதாக உள்ளது. குறிப்பாக, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா, மாயாவதி, ஜெயா உள்ளிட்ட மற்ற ஓட்டுக்கட்சித் தலைவர்களைவிடப் பிரதமர் பதவிக்குத் தகுதி வாய்ந்த ‘நாயகர்களாக’ ஊடகங்களாலும், முதலாளித்துவ அறிவுத்துறையினராலும் முன்னிறுத்தப்படும் ராகுல் காந்தி, நரேந்திர மோடி ஆகிய இருவரும் இந்தப் பிரச்சினைகள் குறித்துச் சொல்வதென்ன என்பதை அறிந்து கொள்வது இன்னும் முக்கியமானது.

‘‘100 புதிய நகரங்களை உருவாக்குவேன்; நதிகளை இணைப்பேன்; வர்த்தகம் (டிரேட்), தொழில்நுட்பம் (டெக்னாலஜி), சுற்றுலா (டூரிஸம்), திறன் (டேலண்ட்), பாரம்பரியம் (டிரேடிஷன்) ஆகிய ஐந்து “டி’’-களின் மூலம் இந்தியாவைச் சர்வதேச அளவிற்கு முன்னேற்றப் போவதாக’’த் தனது பொருளாதார திட்டத்தை அறிவித்திருக்கிறார், மோடி.

‘‘பஞ்சாயத்துக்களின் வறுமை என்பது தகவலின் வறுமையாகும். தகவல் பெறுவதற்கான வழிவகை இல்லாததுதான் உடல் நலம், கல்வி உள்ளிட்ட சேவைகளையும் ஆதாரங்களையும் பெறவிடாமல் தடுக்கிறது. பிராட் பேண்ட் இணைப்பைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் இதற்குத் தீர்வு” எனத் தனது திட்டத்தை முன்வைக்கிறது, ராகுலின் அணி. மேலும், அதிகாரப்பரவலாக்கம், திறன் மேம்பாடு, இரண்டாவது பசுமைப் புரட்சி ஆகியவற்றின் மூலம் வேறு எந்த நாட்டுக்கும் பின்தங்கிவிடாமல் உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது அவரின் தொலைநோக்காகக் கூறப்படுகிறது.

02-captionஇவர்கள் இருவரும் முன்வைத்துள்ள திட்டங்களுக்கும் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? கிராமப்புற விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்கக் கோரிப் போராடுகிறார்களா, இல்லை, பிராட் பேண்ட் இணைய தள இணைப்பைக் கேட்கிறார்களா? மோடி அறிவித்திருக்கும் 100 புதிய நகரங்கள் என்ற திட்டம் விவசாயிகளுக்கு இன்னொரு கொடுந்தீமையாகவே அமையும். ஏழை-நடுத்தர விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்யாமல், வானத்திலா 100 நகரங்களை உருவாக்க முடியும்? இந்தியாவை உலகின் பெரிய பொருளாதாரமாக, சர்வதேச அளவில் முன்னேறிய நாடாக மாற்றிவிட்டால், வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் ஒழிந்துவிடுமென நம்புவதைவிட, கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிடுவது” எவ்வளவோ உத்தமமானது. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்தால், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துவிடும் என்ற கருத்தின் மூலம் பெரும்பான்மையான மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதால், ராகுலால், மோடியால் இப்படிபட்ட மோசடியான, நயவஞ்சகமான தீர்வுகளை, வெவ்வேறுவிதமாக ஜோடனை செய்து முன்வைக்க முடிகிறது.

நரேந்திர மோடி
புது தில்லியில் நடந்த ஃபிக்கியின் பெண் தொழிலதிபர்கள் கூட்டத்தில் உரையாற்றும் நரேந்திர மோடி (கோப்புப் படம்).

கேட்பதற்கு வெவ்வேறாகத் தோன்றினாலும், ராகுலும் மோடியும் அறிவித்திருக்கும் இந்தத் திட்டங்கள் அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது என்பதைத் தாண்டி, வேறெதையும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாக முன்வைக்கவில்லை. இந்தத் தீர்வு கீறல் விழுந்த ரிக்கார்டுக்குச் சமமானது. பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பதற்கு விரைவுச் சாலைகள், அடுக்குப் பாலங்கள், நவீன விமான நிலையங்கள், நகரமயமாக்கம் போன்ற அடிக்கட்டுமான திட்டங்களில் அரசு முதலீடு செய்ய வேண்டுமென்று தனியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட காலத்திலிருந்தே இந்தியத் தரகு முதலாளிகள் கோரி வருகிறார்கள். குறிப்பாக, பொருளாதாரம் மந்த நிலையை அடையும்பொழுது இந்தக் கோரிக்கையை அவர்கள் வலுவாக அரசிடம் வைக்கிறார்கள். அந்நிய முதலீடு, வர்த்தகத்திற்கு உள்ள தடைகளை அறவே நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கம் முன்வைத்துள்ள இந்தத் தீர்வுகளைத்தான் ராகுலும் மோடியும் எதுகை மோனையோடு தமது சோந்த சரக்குகளைப் போல எடுத்துவிடுகிறார்கள். இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் பிரச்சினைகளை நாட்டின் பிரச்சினையாக, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதையே மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக மடைமாற்றும் வேலையைத்தான் ராகுலும் மோடியும் செய்கிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு கொழுத்த இலாபத்தை வாரிக் கொடுக்கும் அடிக்கட்டுமான திட்டங்களை உருவாக்கும்பொழுது ஒரு நூறு பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைப்பதில்லையா என இவர்கள் இதனை நியாயப்படுத்தி வருகிறார்கள். நெல்லுக்குப் பாயும் நீர் ஆங்கே புல்லுக்கும் புசிவது போல, முதலாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து அடித்தட்டு மக்களைச் சென்றடையும். அதுவரை காத்திருங்கள் என்பதுதான் இதன் மூலம் இவர்கள் விடுக்கும் செய்தி.

ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சிறு துளியாவது கசிந்து அடித்தட்டு உழைக்கும் மக்களின் கைகளில் விழுந்திருக்கிறதா? வாஜ்பாய் ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து வந்த ஐக்கிய முன்னணி ஆட்சியிலும் சாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 8 சதவீதப் பொருளாதார வளர்ச்சி அம்பானி, அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட கையளவேயான தரகு முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களாக உயர்த்திய அதேசமயம், கோடிக்கணக்கான மக்களை முன்னெப்போதும் இல்லாத வறுமையிலும் ஏழ்மையிலும்தான் தள்ளிவிட்டது. நாடெங்கிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைத்தான் தீவிரப்படுத்தியது. சிறுதொழில்களை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியது. கிராமப்புற ஏழைகளை, வேலை தேடி உள்நாட்டிலேயே அகதிகளாக அலையும்படி துரத்தியடித்தது. நிரந்தர மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்பு என்பதையே இல்லாது ஒழித்துக் கட்டியது.

02-caption-3

ராகுலும் மோடியும் அறிவித்திருக்கும் திட்டங்கள், இந்திய மக்களை மரணக் குழிக்குள் தள்ளிவிட்டுள்ள இந்த நிலையை மேலும் தீவிரமாக்குமேயொழிய, எள்ளளவும் அவர்களுக்கு நன்மை செய்துவிடப் போவதில்லை. இந்திய ஊடகங்களுள் பெரும்பாலானவை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், அவை இந்தத் திட்டங்களைப் பெயரளவுக்குக் கூட விமர்சிப்பதில்லை. இந்தத் திட்டங்களை விமர்சிப்பது தமது சொந்த நலன்களையே விமர்சிப்பதாகும் என்பதால், ஊடகங்கள் வௌக்குமாறுக்குப் பட்டுக்குஞ்சம் கட்டும் வேலையைத்தான் செய்ய்து வருகின்றன. மேலும், இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் மிகவும் வெளிப்படையாக ராகுல் கோஷ்டி, மோடி கோஷ்டி எனப் பிரிந்து நின்று கொண்டு, அவர்கள் இருவருக்கும் காவடி தூக்கும் வேலையையும் செய்து வருகின்றன. அவர்கள் இருவருக்கு மட்டுமே பிரதமர் பதவியில் அமருவதற்கான தகுதி இருப்பது போலவும்; அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளில் ஆயிரம் ஓட்டைகள் இருப்பினும், மோடியும் ராகுலும் அப்பழுக்கற்றவர்களாகவும் இந்தியாவை முன்னேற்றியே தீருவது என்ற இலட்சியத்திற்காகவே வாழும் கர்ம வீரர்கள் போலவும் ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்படுகின்றனர்.

மோடியும் ராகுலும் அறிவித்திருக்கும் திட்டங்களுக்கு இடையே மட்டுமல்ல, காங்கிரசு, பா.ஜ.க. என்ற இரு ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும் இடையேகூட எந்த வேறுபாடும் கிடையாது. காங்கிரசின் ஊழல்களை பா.ஜ.க. பட்டியல் இடும்பொழுது, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபொழுது நடந்த கார்கில் சவப்பெட்டி ஊழல், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல் மற்றும் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல்கள் நினைவுக்கு வருகின்றன. பா.ஜ.க. வெளிப்படையான இந்து மதவெறிக் கட்சி என்றால், காங்கிரசோ இந்து மதவெறியை மட்டுமல்ல, முசுலீம் மத அடிப்படைவாதத்தையும் தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் நயவஞ்சகக் கும்பலாகும். தனியார்மய-தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எப்படி அமல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் இவர்களுக்கு இடையே வேறுபாடு இருக்குமே தவிர, அந்தக் கொள்கைதான் இந்தக் கட்சிகளின் உயிர்நாடி.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயம் மற்றும் சிறுதொழில் நசிவு உள்ளிட்டு மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது இந்த நாசகார மறுகாலனியாதிக்கக் கொள்கைதான். இந்தப் பிரச்சினைகள் நாளும் நாளும் தீவிரமடைந்து வருவது இந்தக் கொள்கையின், இந்த அரசியல்-பொருளாதாரக் கட்டுமானத்தின் தோல்வியைத்தான் குறிக்கிறது. ஆனால், ஆளுங்கும்பலும், அவர்களது கைத்தடிகளான ஊடகங்களும், முதலாளித்துவ அறிவுஜீவிகளும் அதிகாரத்தில் ஆட்களை/கட்சிகளை மாற்றி உட்கார வைப்பதன் மூலம் இப்பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும் என்ற மோசடித் தீர்வையே மீண்டும் முன்வைக்கிறார்கள். பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றிக் கொடுப்பதைப் போல, ஏற்கெனவே அமலில் உள்ள கொள்கைகள்/திட்டங்களுக்குப் புதிய ஜோடனை செய்து, அதனைப் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வாகக் காட்டுகிறார்கள். இப்படி ஆளையோ, கட்சியையோ மாற்றிமாற்றி அதிகாரத்தில் உட்கார வைப்பதன் மூலம் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதற்கு கடந்தகால அனுபவங்கள் நம் கண் முன்னே உள்ளன. எனவே, இப்பிரச்சினைகளுக்கான தீர்வை, இந்த அமைப்பு முறைக்கு வெளியே, தேர்தல் அரசியல், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு வெளியே தேட வேண்டும் என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் வந்துவிட்டது.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

  1. காங்கிரசோ, பா.ஜா.காவோ யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார அதிகாரம் காப்பரேட் நிருவனங்களைன் கைகளில்தான் ! இந்த கட்டுரையில் சொன்ன அனைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் மறைமுக காரணம். உலகமயமாக்கலுக்கு மிஸ்டர்.பொதுஜனம் கொடுக்கும் விலையிது !

    இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமின்றி அனைத்துகட்சிகளுமே நன்கொடைக்காக இந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடம்தான் கையேந்துகின்றன. சுதந்திரமாக செயல்பட இன்னும் (!) வாய்ப்பிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் நினைத்தால் முறையான கட்டுபாடுகளின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என தோன்றுகிறது.

  2. சரி யார்தான் இந்தியாவை ஆள வேண்டும்?அதை பற்றி தனி பதிவு ஒன்றை போடுங்கள் விவாதிப்போம்!

Leave a Reply to saamaaniyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க