privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம்

மோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம்

-

மோடிக்கு பகிரங்கமாக பனிக்கட்டி ராகம் வாசிக்கும் ஜூவி இதழ், அதன் ஆசிரியர் திருமாவேலன் குறித்தும் வினவில் விரிவாக எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை ஆயிரக்கணக்கில் படிக்கப்பட்டதோடு, ஊடக உலகிலும் கவனிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. திருமாவேலனது நடுநிலைமை ஊடக தர்மமும் சந்திக்கு இழுத்து வரப்பட்டது.

ஜூவி சர்வே
சைவாள் கஃபேயின் ஊசிப் போன தயிர்சாதம்

விகடனின் சினிமா செய்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அதன் அரசியல் செய்திகள், கட்டுரைகளை இணையத்தில் படிக்கும் வாசகர்களை விட வினவின் கட்டுரைகளை அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பது எங்கள் மதிப்பீடு. குறிப்பிட்ட கட்டுரைகள் அந்தந்த வலைத்தளங்களின் இடத்திலிருந்து, சமூக வலைத்தளங்களில் பகிரும் எண்ணிக்கையை வைத்துக்கூட இதை கண்டுபிடிக்கலாம். இப்படி ஜூவியின் நாடி, காவிக் கும்பலின் வெற்றிக்காக துடிக்கிறது என்ற உண்மையை, அதன் மோசடியான நடுநிலைமையையெல்லாம் கேள்விக்குள்ளாக்கியும் கூட இவர்களுக்கு சூடு சுரணை வரவில்லை.

காசு வாங்கிப் படிக்கும் வாசகர்களை அவ்வளவு மடையர்களாக கருதுகிறது விகடன் நிர்வாகம். இடையில் தேமுதிக, பாமக கட்சிகளெல்லாம் முரண்டு பிடிக்கும் நிலையில் பாஜக கூட்டணி அமையாது போகுமோ என்ற நிலையில் கூட ஜூவி தனது தந்திரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது மோடிக்கு தாளமடிப்பதை கொஞ்சம் இடைக்காலமாக நிறுத்திக் கொண்டு பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கூட்டணிகள், கட்சிகள், கொள்கைகள் குறித்து அம்பலப்படுத்தி எழுதினார்கள்.

பிறகு அவர்கள் எதிர்பார்த்தது போல பாஜக கூட்டணி அமைந்து விட்டதுதான் தாமதம், திருமாவேலனும், ஜூவியும் தமது நாடிகளில் காவி லேகியத்தை ஏற்றிக் கொண்டு, ஊடக அதிகாரத்தை வைத்து மீண்டும் நரியின் மொழியில் இசைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போது நேரடியாக பாஜக கூட்டணியின் வெற்றிக்காக அண்ணாசாலையில் விகடன் வளாகத்தில் தேர்தல் அலுவலகம் திறந்து 24X7 சர்வீசில் வேலை பார்க்கிறார்கள்.

02.04.2014 தேதியிட்ட ஜூவி இதழில் “கிராமப்புற மக்கள் ஆதரவு யாருக்கு” என்று ஒரு சர்வே கட்டுரை. கூட்டணிகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூவி அணி தமிழக கிராமங்களில் 5,587 பேரை சந்தித்து எடுக்கப்பட்டதாம்.

சர்வே முடிவுகள் என்ன? சைவாள் கஃபேவுக்கு போய் விட்ட பிறகு போட்டி வறுவலையா எதிர்பார்க்க முடியும். அதே ஊசிப்போன தயிர் சாதம்தான்.

அடுத்த பிரதமராக யார் வர வேண்டுமென்ற ஜூவியின் கேள்விக்கு 41.49%பேர் நரேந்திர மோடி என்றும், ராகுலுக்கு 9.95%, ஜெயலலிதாவுக்கு 16.72%, சோனியா, மன்மோகன் சிங்கிற்கு ஐந்துக்கும் குறைவாகவும் பதிலளித்தார்களாம் நமது கிராம மக்கள். நரேந்திர மோடி எனும் பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் கூட அதிகம் தெரியாது என்பதே அதிக பதிலாக இருக்கும்.

ஜூவி கணக்கு
பாஜ கூட்டணிக்காக பல மாதங்களாக வேலை செய்த ஜூவி.

அதே போல யாருக்கு வாக்களிப்பீர்கள் எனும் கேள்விக்கு, பாஜக கூட்டணிக்கு 27.55%, அதிமுகவுக்கு 24.34%, திமுக கூட்டணிக்கு 19.56%, காங்கிரசுக்கு ஏழு, கம்யூனிஸ்ட்டுக்கு நாலு என மக்கள் பதிலளித்தனராம். இதன்படி ஐந்து கூட்டணிகள் மோதும் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் ஒரு கட்சி, இரண்டாவதிருக்கும் கட்சியை விட சுமார் மூன்று சதவீதம் அதிகம் வாக்கு வாங்கும் என்றால், அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அல்லது பெரும்பான்மை இல்லை பாதி என்று வைத்தால் கூட தமிழகத்தில் 20 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்ல வேண்டும். இது உண்மையென்றால் பொன் இராதாகிருஷ்ணனுக்கோ, இல.கணேசனுக்கோ பைத்தியம் பிடித்து விடாதா? விகடன் ரீல் விடுவதில் கூட ஒரு ‘நாகரிகத்தை’ கடைபிடிக்க தயாரில்லை. வாசகர்களை காட்டுமிராண்டிகளாக கருதும் போது அங்கே நாகரிகம் ஏது, நரம்போடு பேசும் நாக்கு ஏது?

இந்த முக்கிய கேள்விகளைத் தாண்டி ஜூவி தயாரித்திருக்கும் மற்ற பொருளாதார, வாழ்க்கை பிரச்சினை குறித்த கேள்விகளும் கூட மறைமுகமாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றே யதார்த்தமாக புனையப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டு மத்திய அரசில் விவசாயம் வளர்ச்சி எப்படி எனும் கேள்விக்கு வளர்ச்சி, மோசம், அப்படியே உள்ளது எனும் பதில்களை வைத்தால் மக்கள் மோசமென்றுதான் பதிலளிப்பார்கள். சரி, வாஜ்பாயி ஆட்சியில் இதே கேள்வி கேட்டாலும் மக்கள் மாற்றி கூறுவார்களா?

இன்னும் திமுக, அதிமுக ஆட்சிகளிலும் இதுவேதான். இருப்பினும் மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநிலத்தில் எதிர்ப்பலை இருப்பதாக படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கு புகட்ட நினைக்கிறது ஜூ.வி. இதற்குத்தான் இந்த நாட்டுப்புறக் கண்ணீர்.

சரி இதே விவசாயத்தை சீரழித்திருப்பதற்கு மாநில அரசுக்கு பங்கில்லையா? என்று ஜூவி கேட்கவில்லை. அடுத்து மாநிலத்தை ஆளும் அதிமுகவிற்கு, வாக்குகள் போடும் மனநிலையில் மக்கள் இல்லை என்று காட்ட நினைக்கிறது ஜூ.வி. குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து, சாலை, கல்வி அடிப்படை தேவைகள் எப்படி எனும் கேள்விக்கு நிறைவேறியிருக்கிறது, நிறைவேறவில்லை, அப்படியே இருக்கிறது என்று பதில்களை வைத்தால் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு இல்லை என்றோ, மாற்றமில்லை என்றோ கூறுவார்கள். முக்கியமாக பாராளுமன்ற தேர்தலுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற கேள்விகள் எதற்கு? கவுன்சிலர் அல்லது ஊராட்சி வேலைகளை எப்படி பாராளுமன்ற உறுப்பினர் செய்ய முடியும்?

அதிமுக மேல் மக்கள் நாட்டத்துடன் இல்லை என்பதால் உங்கள் பொன்னான வாக்குகளை மறந்து, மயங்கி இலைக்கு போடாமல் பாஜக கூட்டணிக்கு போடுங்கள் என்று நடுத்தர வர்க்கத்திற்கு மறைமுகமாக உத்திரவு போடுகிறது ஜூ.வி. இதே போல மின்வெட்டு கேள்வியும் இருக்கிறது. திருமாவேலன் மனது விரும்பியபடி மோடி ஆட்சி அமைத்து விட்டால் தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்து விடுமா? தீராது என்று விகடனுக்கு மட்டுமல்ல, விகடனை வாங்கி படிக்கும் வாசகர்களுக்கும் தெரியும். இருப்பினும் மின்வெட்டு குறித்த மக்களின் அதிருப்தியை வைத்து பாஜகவிற்கு ஆதாயம் தேடத்துடிக்கிறது விகடன் குழுமம்.

மோடி - ஜெயலலிதா
அதிமுக மேல் மக்கள் நாட்டத்துடன் இல்லை என்பதால் உங்கள் பொன்னான வாக்குகளை மறந்து, மயங்கி இலைக்கு போடாமல் பாஜக கூட்டணிக்கு போடுங்கள் என்று நடுத்தர வர்க்கத்திற்கு மறைமுகமாக உத்திரவு போடுகிறது ஜூ.வி

இதே கேள்வியை மாற்றிப் போட்டு மோடி ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் மின்வெட்டு தீரும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டால் மக்கள் என்ன கூறுவார்கள்? அல்லது பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்? பதில்களை முடிவு செய்து கேள்விகளின் வரம்பை குறுக்கி கேட்டால் எல்லா கணிப்பையும் கணினியே செய்து விடுமே?

ஓட்டுக்காக பணம் கொடுத்தால்? என்று கேட்டு விட்டு வாங்குவேன், வாங்க மாட்டேன், வாங்கி விட்டு பிடித்த கட்சிக்கு போடுவேன் என்று பதில்களை வைத்திருக்கிறார்கள். இதன்படி வாங்க மாட்டேன் என்று பாதிக்கும் மேற்பட்டோரும், முப்பது சதவீதம் பேர் வாங்கிவிட்டு பிடித்த கட்சிக்கு போடுவேன் என்றும் கூறியிருக்கிறார்கள். அதாவது அதிமுக மற்றும் திமுக அதிகம் பணம் கொடுத்தாலும் அது பாஜக வெற்றியை பாதிக்காது என்று மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு ஆறுதல் சொல்கிறது ஜூவி. இதே பதில்களில் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு கட்சிக்கு மாற்றி வாக்களிக்கும் நன்றி கெட்டத்தனம் எனக்கில்லை என்று வைத்தால் மக்கள் இதைத்தானே அதிகம் ஏற்பார்கள்?

இவர்களது நரி மூளையை அறுவை சிகிச்சை செய்து பார்ப்பதற்கு இங்கு யாருக்கும் அறிவில்லை என்று விகடன் முதலாளிகளும், ஆசிரியர்களும் எகத்தாளமாக நினைத்திருக்கிறார்கள். விகடனது இந்த பகிரங்கமான மோடி ஆதரவு என்பது வெறுமனே அதன் ஆசிரியர்களோடு முடிந்து விடும் விசயமல்ல. விகடன் முதலாளிகளும் சேர்ந்துதான் இப்படி ஒரு ஊடக யாகத்தை சிரமேற்கொண்டு வருகிறார்கள்.

ஜூவி இதழில் சில மாதங்களாக “மகாத்மா முதல் மன்மோகன் வரை!” எனும் தொடர் வருகிறது. இதை தேசபக்தன் எனும் புனைபெயரில் எழுதுவது, ஜூவியின் ஆசிரயரோ, இல்லை ஆசிரியர்கள் பெயரில் எழுதும் கோஸ்ட் ரைட்டர்களோ  தெரியவில்லை. ஆனால் இந்த தொடர் காங்கிரசு கட்சி மேல் வெறுப்பை வரவழைத்து பாஜகவிற்கு செல்வாக்கை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காவே திரைக்கதை எழுதி தயாரிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரசின் ஊழல்களை அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அம்பலப்படுத்தும் ஜூவி, “காந்தி கொலை முதல் குஜராத் கொலை வரை” என்று காவிக் கூட்டத்தின் கொலைகார வரலாற்றை இன்னொரு தொடராக எழுதியிருந்தால் அதன் நடுநிலைமையை மெச்சியிருக்கலாம். மாறாக தேர்தல் காலத்தில் மோடியின் இமேஜுக்காக மட்டுமே காங்கிரசு பெருச்சாளியின் ஊழல்களை பேசுகிறது என்றால் என்ன பொருள்?

அதே போன்று இதே இதழில் வைகோவின் விருதுநகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு, மூன்று பக்கத்தை ஒதுக்கியிருக்கிறது ஜூ.வி. டாஸ்மாக்கை மூட வேண்டுமென்று பாதயாத்திரை சென்ற வைகோ அதில் கட்சிக்கொடி, சின்னம் இல்லாமல் அரசியல் நோக்கமில்லாமல் சென்றதை பேசுகிறார். ஆனால் இந்த அரசியல் அற்ற நோக்கத்தை தேர்தல் கூட்டமொன்றில் வாக்களிக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக அவர் பகிரங்கமாக பேசுவதை ஒரு பத்திரிகை என்ற முறையில் கண்டித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் எப்படியாவது அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்காத குறையாக இருக்கிறது ஜூவியின் அந்த கவரேஜ்.

பாஜக கூட்டணி முடிவாவதற்கு முன்னர் இவர்கள் விஜயகாந்தை மிரட்டியது, அதற்கென்றே சர்வேக்களை வெளியிட்டதையெல்லாம் சென்ற முறை எழுதியிருந்தோம். இப்போது கூட்டணியை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டதால் மற்ற கூட்டணிக் கட்சிகள் குறித்து கிண்டலாகவும், எதிர்மறையிலும் எழுதும் ஜூவி, பாஜக கூட்டணிகளை மட்டும் மானே, தேனே போட்டு எழுதுகிறது.

“வெற்றி தோல்வியை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!” என்று சிபிஐ மகேந்திரன் பேட்டியைக் வெளியிட்டிருக்கும் ஜூவியின் நோக்கம் என்ன? எதற்கு அந்த கட்சிக்கு விரயமாக ஓட்டு போடுகிறீர்கள் என்பதே. இப்படித்தான் முழு ஜூவியும் தந்திரமான முறையில் ஆனால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் மலினமான முறையில் பாஜக ஆதரவைப் பேசுகிறது.

குஜராத்தில் ஜூ.விஇதற்காக இவர்கள் அம்மாவையும் நாசுக்காக கண்டித்து எழுத தயங்குவதில்லை. முந்தைய ஆனந்த விகடன் இதழில் அம்மா சொல்லும் வாக்குறுதிகளெல்லாம் சும்மா என்று ஜெயாவின் வரலாறு, உரைகளை வைத்தே திருமாவேலன் எழுதியிருந்தார். பாஜகவிற்காக ஜெயாவை செல்லமாக கண்டிக்கும் நிலையினை தினமலரும் கூட செய்து வருகிறது. ஜெயாவே கூட மோடியையும், பாஜகவையும் விமரிசிக்காமல் பேசி வருவதன் காரணம் தேர்தலுக்கு பிறகு மோடியின் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதே. அந்த காரணத்தை வைத்துக் கொண்டே  ஜூவி போன்ற தரகு வீரர்கள் அம்மாவையும் ‘தைரியமாக’ எதிர்க்கிறார்கள். ஆனால் என்ன, இதற்கும் அம்மா ஆசி இருக்கிறதே என்ன செய்ய!

நக்கீரன் திமுக ஆதரவு ஏடு, துக்ளக் அதிமுக ஆதரவு ஏடு போன்ற கட்சி சார்பு இல்லாமல் நடுநிலைமை என்ற பெயரில் உலா வரும் விகடன் குழுமம் இந்த தேர்தலில் அப்பட்டமான காவி ஆதரவு வேலையை செய்து வருகிறது. தற்போது குஜராத்தில் ஜூவி என்ற தொடரையும் தேர்தல் கருதி வெளியிட்டு வருகிறார்கள். மேலோட்டமாக மோடியை பற்றி விமரிசனங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, ஆழமாக மோடியை பூதாகரமாக ஆதரிக்கும் இந்த தொடர் ஒன்றே ஜூவியின் நோக்கத்தை கூறிவிடும்.

விகடன் ஏடுகளை அப்பாவித்தனமாக வாங்கி படிக்கும் வாசகர்கள், தாம் இத்தனை மலிவாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர வேண்டும். வாசகர்களிடம் விலையையும், முதலாளிகளிடம் விளம்பரத்தையும் வாங்கிக் கொண்டு  பத்திரிகை நடத்தும் இவர்களுக்கு என்று எந்த அறமும், நடுநிலைமையும் எப்போதும் இருந்தது கிடையாது.

இந்திய ராஜபக்சே மோடியின் தமிழக ஊடக துதிபாடியாக இருக்கும் விகடனை கண்டியுங்கள்!